This entry is part 9 of 22 in the series 28 டிசம்பர் 2014

 

 

 

புத்தாண்டு இரவு மணி இரண்டு

 

விரையும் வாகனங்கள்

அதிரும் பட்டாசுகள்

உற்சாகக் கூக்குரல்கள்

எதையும் கண்டு களிக்காது

கருமமே கண்ணாய்

குளிரிலும் வியர்வை வழிய

மூன்றடிச் சிறுவன் மற்றும்

அரும்பு மீசை ஒருவன்

 

 

மாநகர நடைபாதை

ஓரமெல்லாம் காலிப் போத்தல்கள்

கணக்கில்லா பிளாஸ்டிக் பைகள்

 

போத்தல்களின் மூடிகள்

பிளாஸ்டிக் கோப்பைகள்

அட்டை டப்பாக்கள்

எலும்புத் துண்டு

கறித்துண்டுகள் மீந்த

பிரியாணிப் பொட்டலக் குப்பைகள்

 

தன் உயர மூட்டை

இரண்டை சாலையோரம்

கிடத்தி

மூன்றாம் மூட்டை

அள்ளும் போது

காயலாங்கடை தரப்போகும்

வரவை எண்ணி

முகம் மலர

வாண்டு கேட்டான் விடலையை

“அண்ணே அடுத்த மாசம்

எப்போ இப்புடி ராத்திரியெல்லாம்

கொண்டாடுவாங்கோ?”

 

“மாசாமாசம் வராதுடா இது”

என்று அவன் தலையில் தட்டினான்

பல குப்பிகளில்

மீந்தவற்றை அருந்திய

போதையுடன்

விடலை.

 

Series Navigationகட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்