கடைசிக் கனவு

This entry is part 11 of 28 in the series 12 ஏப்ரல் 2015

சோழகக்கொண்டல்

இலக்கின்றி

எல்லையுமின்றி

மிதந்து மிதந்தேறி

மெல்லப் பறக்கிறேன்

சூரியன் சென்று மறைந்த பாதையில்

 

காத்திருக்கும்

பொறுமையற்ற மனம்

காற்றில் சருகாய் அலைகிறது

விடியல் கூடாத திசைகளில்

 

நான் ஏங்கியலைந்த

பூக்களெல்லாம்

பழுத்துக் கிடக்கின்றன

தூங்காது கிடந்து

துரத்திய இலக்குகள்

காலாவதியாகிவிட்டன

 

ஏற்றிவந்த இறகுகளையும்

எண்ணி எண்ணி

உதிர்க்கிறேன்

 

கற்று வந்த எதையும்

கசந்து காற்றில்

கரைக்கிறேன்

 

தூரத்து திசைகள் எங்கிலும்

துளி நீலமும்

எஞ்சவில்லை

 

இருண்டு சூழ்கிறது

எல்லா திசைகளிலும் வானம் –

ஒளி மிஞ்சாத வானில்

நிறம்தான் ஏது?

கண்களும்தான் எதற்கு?

 

வலித்து சிதையும்

சிறகுகளுக்கு

வாழ்வின் தூரம்

முடிவிலியென சலிக்கிறது

 

என் மோட்சத்திற்கான மரத்தடி

இந்த வாழ்வின் பாலையில்

எங்குதான் இருக்கிறது?

 

எத்தனை இனியது மரணம்

கைகளில் கொண்டுவந்தும்

கடைசிவரை திறக்க முடியாத

பரிசுப்பெட்டி

 

எத்தனை அரியது மரணம்

யாருக்கும் கிடைப்பதில்லை

இரண்டாம் வாய்ப்பு

 

மீண்டும் மீண்டும்

இறக்கும் இன்பதிற்காகவா

மீண்டும் மீண்டும்

பிறக்க வருகிறோம்?

இலக்குகள் ஏதும் தெரியவில்லை

எஞ்சிய இறகுகளும் உதிர்ந்து

இருளுக்குள் விழுகின்றன

என்ன செய்ய?

இனி நான்

விழித்துக்கொண்டு வீழ்வதா ?

ஆழ்துயில் கொண்டு மீள்வதா?

Series Navigationசேதுபதி கவிதைகள் ஒரு பார்வைவிதிவிலக்கு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *