This entry is part 18 of 25 in the series 17 மே 2015

 

 

நீ

மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.

 

அதற்குள்

ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.

 

நீ

தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.

 

உன் வனப்பில் இருக்கும் கண்டிப்பில் யாரும் உன்னை பலவந்தப்படுத்தி விட முடியாது.

 

யார் மேலான அவநம்பிக்கையிலும் அதைரியத்திலும் உன் நம்பிக்கையையும் தைரியத்தையும் நீ அமைத்துக் கொள்ளவில்லை என்பது தெரியும்.

 

காதலை வெளிப்படுத்துவது பலவீனமில்லையென்பதில் நீ யதார்த்ததை எதிர்கொள்வது புரிகிறது.

 

அதற்காகக் கலைந்து போகாத மேகம் போல் அது உன்னைச் சூழ்ந்து சூறையாடி விட முடியாது என்கிறாய்.

 

நீ

நெருங்கி வருமுன் உன் நிழல் எச்சரிக்கிறது.

 

உன்னிடம் பேசுவதற்கு நிச்சயித்திருந்த கற்பனையான வார்த்தைகள் நழுவி விழுகின்றன நெஞ்சுக் குழிக்குள்.

 

கலங்காது நதி கடப்பது போல் கரையில் நின்று முகம் காணும் விருட்சமாய் நிற்க வைத்து விட்டு என்னைக் கடந்து போகிறாய்.

 

நட்புடன் இயல்பாய் அடுத்த முறை உன்னோடு பேச முடியுமென்ற நம்பிக்கையை அளித்துச் செல்கிறாய் பெண்ணே நீ.

 

 

கு.அழகர்சாமி

 

 

 

 

 

 

Series Navigationசுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழாமே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா