நான் கவிஞன் இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை நிறைய படித்து இரசித்துள்ளேன். அவை பெரும்பாலும், ” The Golden Treasury ” என்னும் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்துதான் என்று கூறலாம். உலகப் புகழ்மிக்க இந்த நூலைத் தொகுத்தவர் Francis Turner Palgrave என்பவர். இதில் மொத்தம் 517 கவிதைகள் உள்ளன. அதை நான் சிங்கப்பூரில் ரேபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பாட நூலாக பயன்படுத்தினேன். ( இப்போதும் அது சென்னை ஹிக்கின்பாத்தம் புத்தகக் கடையில் விற்பனையில் உள்ளது.)
நான் ஷேக்ஸ்ப்பியர், ஷெல்லி , கீட்ஸ், வொர்ட்ஸ்வோர்த் , பைரன், டென்னிசன், மில்ட்டன், ஹார்டி ராபர்ட் ஃப்ராஸ்ட் , யீட்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த கவிஞர்கள் எழுதிய ஆங்கிலக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்துள்ளேன். அதுபோன்றே தமிழில் பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் படித்து இரசித்துள்ளேன்.
ஆனால் ஏனோ தெரியவில்லை, இவற்றில் ஏதும் என் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் இடவில்லை – ஒருவர் எழுதிய கவிதையைத் தவிர! ஒருவேளை அந்தக் கவிதை என் உள்ளம் கவர்ந்த ஒருவருக்காக உருக்கமாக எழுதப்படட இரங்கற்பா என்பதால் இருக்கலாம்.
ஆம். அது ” இதயத்தைத் தந்திடு அண்ணா ” என்று அண்ணா மறைந்ததையொட்டி 9.2. 1969 அன்று சென்னை வானொலியில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலிதான்!
அண்ணன் நினைவாக கலைஞரின் கண்ணீர் ( கவிதை ) மழை இதோ:
பூவிதழின் மென்மையிலும் மென்மையான
புனித உள்ளம் – அன்பு உள்ளம் –
அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும் –
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும் –
விழிமலர்கள் வேலாகும், வாளாகும்
தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால் !
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது ;
கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!
அம்மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்!
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப் பூ மணக்க
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே – தினம்
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்.
உனக்காக எனைத் துறப்பேன்; என –
ஒரு கோடித் தமிழ் இளைஞர்
பாடி நின்ற பாட்டுக்குப் பெருந் தலைவன்…
முறுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு சனி வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியும்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொருதடக்கை வாளெங்கே; மணி மார்பெங்கே?
போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
தம்பியரைக் கேட்டதனைக் கேண்மின்!
கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் தொலைந்த
களப் போர் பாடத் திறமினோ என்று
மயல் கொண்ட மாதர்தமைத் துயில் எழுப்பச்
செயங் கொண்டார் பாடினார்,
களப்பரளி … கலிங்கத்துப் பரணி
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி – யான்
கவிப்பரணி யேறி, காஞ்சிபுரப் பரணி
பாடி நின்றேன் இன்று
அவலப் பரணி பாடுகின்றேன்…!
கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமெனக்
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையெனக்
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!
வெள்ளம்!
வெள்ளம்!
மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எடடாம் ஆண்டு
தாயகத்தில் மொழிப் புரட்சி தோன்றுதற்கு
வித்திட்டார் சிலபேர் என்றால்; ஈரோட்டு
நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்
எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சி பூண்டு!
இரு மூன்று திங்கள் வரை சிறையில் வாடி,
தரும் ஊன்றுகோலாகத் தமிழைத் தந்து
அரு மூன்று எழுத்தாலே அண்ணாவானார்….
அன்றொரு நாள் ஐம்பத்திரண்டுதனில்
சென்னையிலே சொன்னேனே
நினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு
முத்தமிழ் மணமுண்டு …..
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முரசார்ந்தவர் தமிழர் – அவர் வாழ்ந்த
தமிழ் ‘ வாழ்வுக்கு ‘ மூன்றெழுத்து – அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் ‘ அறிவு’க்கு மூன்றெழுத்து…
அறிவார்ந்தோர் இடையிலெழும், ‘ காதலு ‘ க்கு ‘
மூன்றெழுத்து…
வீரம் விளைக்கின்ற ‘ களம் ; மூன்றெழுத்து …
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து
அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொன்மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா எனில்,
ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம் …. புதுமை மணக்குதங்கே …
” ஏடா தம்பி எடடா பேனா …. ! “
” கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு “
கருத்துப் பேழை கற்பூரப் பெட்டகம்!
” மரக்கிளையிலே பிணம் ;
வெந்த புண்ணிலே வேல்! “
மறந்திடப் போமோ ; மனங்கவர் வாசகம் ?
” சாலை யோரத்திலே வேலையற்றதுகள் –
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் –
வேந்தே ! அதுதான் காலக்குறி! “
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை? அறிவு நடை !
” கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது “
தமிழகம் மறவாத் தலையங்க மன்றோ!
” இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் ? “
” தம்பியுடையான் படைக்கஞ்சான்! “
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் – நம்
மனத்தில் பதித்தவர் அண்ணாவன்றோ !
” மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் “
அரசியல் பண்பினைப் போதிக்கும் அழகே!
” மறப்போம் – மன்னிப்போம் “
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே! “
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
அதனை மறுத்து
நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்
அவர் கண்டு சிரித்திடடார் அண்ணா!
அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க
வயிறு தாங்காக் காரணத்தால்
தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே ! என அழைத்துக்
கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டிப்
பனி மலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக் கொண்டார்.
சொலல் வல்லார் சேதுப் பிள்ளைதனைச்
சோமசுந்தர பாரதியைச் சொற் போரில்
சொக்க வைத்தார் – பாவம் ; சிக்க வைத்தார்!
நீதிக் கட்சியென்று நெடிய மதில் சுவருக்குள்ளே – பணச்
சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும் கொள்கையாலே – அதனை
வீதிக்குக் கொண்டுவந்தார்!
வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று
சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார் – அண்ணாவின் போர்க்
கோலத்தை எதிர்க்க மாட்டாமல்
கோலற்ற குருடர் போலக் கொள்கையற்றோர் வீழ்ந்து போனார்!
தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும் பெயர் மாற்றத் தீர்மானம்
வீரர் கூடிய மாநாட்டில் கொண்டுவந்தார்!
அண்ணல் காந்தியார் அறவழி கண்டு
ஆங்கில ஆட்சியை அகற்றியபோது
துன்ப நாளென்னும் பெரியார் அறிக்கையை மறுத்துத்
தொடங்கினார் போரை!
இன்ப நாளிது!இனிய நாளிது!
என்பு தோலாய் ஆன இந்தியர்
அன்புறு காந்தியின் அருளால் இன்று
எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து!
முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து
என்றே அண்ணா, அன்றே சொன்னார்….
அன்று முதல் அண்ணன் – அய்யா – உறவினிலே கீறல் விழ
அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய் மாறி
முகில் கிழித்து வெளிக் கிளம்பும் முழு மதியாய்
முன்னேற்றக் கழகத்தை முகிழ்க்கச் செய்தார்!
தலைவருடன் கூடி வாழ முடியாமல்
பெரும்பான்மைத் தோழருடன்
வெளியே வந்தவுடன்,
நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார்
அது ,
நேற்று சொன்னது போல் இருக்குதம்மா!
தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு – என்
தலைவர் இருந்த நாற்காலி, காலியாக இருக்கும்! அதில்
தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்…
அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.
பூத்திருக்கும் மலர்த் தோட்டம்
காலைப் பனிநீர் வடிப்பது போல்
காத்திருந்து கூட்டம் கேட்டோர்? கண்ணீர் வடித்தார்.
கண்ணீர்த் துளிகளே ! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச்
செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்!
யாரேனும் கேட்டதுண்டா?
பாரேனும் பகர்ந்ததுண்டா ?
பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்
பதுங்கிப் பாயும் வேங்கையெனப் – பாராள வந்த கதை ?
ஈராண்டு முடியவில்லை என் அண்ணா ஆட்சியேற்று –
சீரார்ந்த செயல் பலவும் செய்கலுற்றார்!
ஏரார்ந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து
எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி.
உலகத் தமிழ் மாநாடு தொடங்க வந்த
ஓங்கு புகழக் குடியரசுத் தலைவரவர்
‘ இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்
இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை ‘யென
ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!
ஆந்திரத்துப் பிரம்மானந்த ரெட்டிகாரும்
ஆகா – நீர் தாமே அசல் காந்திய வாதியென்று
ஆராதனை செய்திட்டார் – ஆண்டொன்று கழியவில்லை!
மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல
மாநிலத்தில் கை கழுவிக் கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே!
மகாத்மாவின் தோன்றல் நீர்தாம் என்று.
கிரியென்றால் மலையன்றோ – அந்த
மழைதழுவும் முகிலானார் நம் அண்ணா !
வி.வி.கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் – அன்று
தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர்
அண்ணன் பற்றி
என்ன சொன்னார்- ?
பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் – அண்ணா
பழத்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். அந்த
மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்.
பசுமலை பாரதி – பாண்டியன் தோற்றம் – அவரை
நாவலர் என்று நாடே அழைக்கும் – அவர்
சழக்கரால் வீழ்ந்த தமிழ் நிலம் காக்க – மன
அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே
அண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டுபல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரைதான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே
எனப்போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் – நம்
கண்பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போலப்
பண்பட்ட தமிழர் வாழ்வில் – முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ !
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்
பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும் !
அறிவு மணங் கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய்
ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் – தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார்; பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல்போல மாறிற்று தமிழர் மனம்.
அழுக்காறு – அவா – வெகுளி – இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்!
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில் – இன்று
இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை – சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை; சுடுநெருப்பில்
ஆடினாள் தமிழன்னை….
ஓடினாள் … ஓடினாள்… ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழ்கின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்!
ஆண்டு சென்று, ‘ அருமை மகனே!
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் ‘ என்றாள் .
‘ என்னம்மா ? ‘ என்றான் குறளோன்.
‘ தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டு ‘மென்றாள்.
‘ தங்கம் எடுக்கவா? ‘ என்றான்.
‘ தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க ‘ என்றாள் .
‘ இன்றென்ன ஆயிற்’ றென்றான் .
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றமையக் குடில் இல்லை ஏழைக்கென்றான் ;
கடிதோச்சி மெல்ல ஏறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள் .
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்;
தொழுத மகன் உச்சிமோந்து ஆல
விழுதனைய கைகளாலே … . அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது.
இனிமேல் என எண்ணி
மனமகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரித்துத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள் .
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக.
பொதிகை மலைத் தென்றலாய்ப்
போதாகி மலர்கின்ற
தமிழ் உணர்வின் புதுமணமாய்ப்
பதிகத்துப் பொருளாய்ப்
பழந்தமிழர் [புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் – கீழ்
வானுதித்த கதிர்போல –
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை –
தலைவ ரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார்,
அன்னையென்பார் அருமொழிக் காவல் என்பார்,
அரசியல் வாதி என்பார் – அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் – நெஞ்சத்து அன்பாலே
‘ அண்ணா ‘ என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை
பெயரும் தந்தார் .
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும் ,
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை,
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் , போப்புக்கும் சிலை
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்பத் திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததனால் – அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய; அந்த
அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது …
ஆள்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்…
ஆணையிடுகின்றார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ, இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஒரு விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா… இதய மன்னா…
படைக்கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும்பயணம் ஏன் தொடர்ந்தாய்…?
உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே !
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய் ?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய் ; நியாயந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல ;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக்
கடற்கரையில் உறங்குதியோ ?
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே: அந்த
விரலை ஏன் மடக்கிக்கொண்டாய்?
கண்மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் … இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய் ;
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா … நீ
இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா …
நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா…
( தொடுவானம் தொடரும் )
Series Navigation இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15