கவிதைகள்

This entry is part 9 of 16 in the series 9 ஜூலை 2017
அருணா சுப்ரமணியன் 
தடயங்கள்… 
 
நீலம் தெளித்த
வான்வெளியில்
சிறகசைத்து பறக்கும்
நினைவுகளோடு
மரங்கள் சூழ் மலைகளில்
நெளிந்து திரியும்
நீர்ச்சுனையில் நீந்தி
பாறைகளில் தெறித்து
வீழும்  அருவியில்
எழும் அருவமாய்
அத்துவானத்தில்
அலைகிறேன்
தடயங்களை
அழித்துச்  சென்ற
விரல்களின்
தடங்களைத்  தேடி…
 
 
**************************
அழையா விருந்தாளி..
 
அழைப்புமணி அழுத்தவில்லை
அனுமதி கோரவில்லை
தாழிட்ட கதவை மீறி
எப்படியோ உள்நுழைந்து
ஆக்ரமித்து கொள்கின்றன
யாருமற்ற தனிமையில்
தினமும் என்
தூக்கத்தை துரத்திடும்
கவிதைகள்!!
 
********************************
 

யாருமற்ற…


இவ்விரவு மிகவும்

அச்சுறுத்துகிறது..

அறையின் மறுபாதியில்

வராத குறட்டை ஒலி

தூக்கத்தின் நடுவே

மேலே விழாத

பிஞ்சுக் கால்கள்

ஓயாமல்  சுழலும்

காற்றாடியின் ஓசை

எதுவுமற்ற

நிசப்தத்தின்

பேரிரைச்சலில்

நித்திரையும்

பயந்து விலகிவிடுகிறது…

Series NavigationEnglish translation in poetical genre of Avvaiyaar’s poemsஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *