This entry is part 2 of 13 in the series 24 செப்டம்பர் 2017

 ஆதியோகி

 

குழந்தைகளுக்குக் கதை
சொல்வதினும் அவர்களிடம்
கேட்டலே அலாதி சுகம்..!

அவர்களின் கதைகளில்தான்
பறவைகளுக்கு மனிதர்களின்
பாஷை புரிகிறது.
மனிதர்களுக்குப் பறவைகளின்
சிறகுகள் முளைக்கிறது.

 

பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால்

கடலுக்கடியில் என்று

மனிதர்கள் வாழும் சூழலோடு
இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன.
சக்திவாய்ந்த மந்திரவாதிகள் ஏனோ
ஏழு மலை ஏழு கடல்களுக்கப்பால்
எளிதாய் அணுகமுடியாது வசிக்கிறார்கள்.

குழந்தைகளின் குரலுக்குக்
காதுகளைத் தீட்டிக்
காத்துக் கிடக்கிறார் கடவுள்

தீமை புரிவோருக்கு
உடனுக்குடன் தண்டனை

கடவுளையே தண்டிக்கும்
வலிமையும் வல்லமையும்
அம்மாக்களுக்கு இருப்பதுதான்
அனைத்தினும் உச்சம்..!

– ஆதியோகி

Series Navigationசொற்கள் புகழோடு தோன்றுகின்றனகாலைப் புகை!