Posted in

சந்திப்போம்

This entry is part 12 of 14 in the series 3 ஜூலை 2022

 

 

அமீதாம்மாள்

உன்னைப்போல்

நீ மட்டும்தான்

புரிந்திருக்கிறாய்

சந்திப்போம்

 

உன்னை ஒதுக்கி

உறவுகளுக்காய் அழுகிறாய்

சந்திப்போம்

 

ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன்

ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன்

சந்திப்போம்

 

பழங்கள் தரும்போது

நீ இருக்கப்போவதில்லை

ஆனாலும் நீர் வார்க்கிறாய்

சந்திப்போம்

 

உளிவலி தாங்கி

சிற்பமானவன் நீ

சந்திப்போம்

 

சுளை காக்கும் முள் நீ

அறிவேன்

சந்திப்போம்

 

ஒரு வலியில் பிறந்து

யாருக்கும் வலிக்காமல் வாழ்பவன் நீ

சந்திப்போம்

 

குருத்துக்காக

வாழை நீ சாய்ந்தாய்

சந்திப்போம்

 

கறையான் வேகம் நீ

சிலந்திப்பூச்சி முயற்சி நீ

ஆமை பொறுமை நீ

சந்திப்போம்

 

சந்திரனின் கறைகள்

வெறுக்கப்படுவதில்லை

சந்திப்போம்

 

இலக்குகளென்று

நீ நினைத்ததெல்லாம் பொய்

உண்மை இலக்கு நானே

சந்திப்போம்

 

அழக் கண்ணீர் வேண்டும்

அமைதிக்கு நான் வேண்டும்

சந்திப்போம்

 

கடலில் கலந்த நதி

முகவரி இழந்தாலும் நிரந்தரம்

சந்திப்போம்

 

உன்னைத் தொட்ட மழைத்துளி

எங்கிருந்து வந்ததென்று நானறிவேன்

சந்திப்போம்

 

நான் சந்திக்குமுன்

உன் பயணங்களை முடித்துவிடு

எனக்குப்பின்  உனக்கென்று

பயணங்களில்லை

நான் பெருநெருப்பு

நீ சுடர்

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationகவிதைஎழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *