This entry is part 2 of 3 in the series 12 மே 2024

ஜெயானந்தன்

முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம்

ஆனந்தமாய் இருந்தது.

அம்மா ,அவித்தசோறு சட்டியை

ஆவிபறக்க, பெரிய கூடத்தில் 

வாழைத்தண்டு சாம்பாரும்,

கத்திரிக்காய் கூட்டோடு 

கூப்பாடு போடுவாள். 

காக்கை கூட்டம்போல், 

நானும்,அண்ணாவும்,

அக்காவும் தம்பியுமாய், 

அத்தை பிள்ளைகளோடு, 

பதினான்கு உருப்படிகள்,

தட்டில்தாளமிட, 

பாட்டி அன்போடு பரிமாறுவாள். 

கடைக்குட்டி தம்பிக்கு,

கதைசொல்லி, அன்பையும் பால்சோறு அன்னத்தை,

ஆடிப்பாடி ஊட்டிடுவாள். 

இன்று,

வயதான பருவத்தில்,

புதுமைப்பித்தன் துணையாக 

காலம் என்னை நகர்த்த,

ஆர்டர் கொடுத்த, 

ஐந்து நிமிடத்தில், 

ஸ்வக்கி சோமட்டோ,

டப்பாவில் பீட்சா பர்கர் 

வயிற்றை நிரப்ப வாழ்வாய் போனது.

போட்டோவில் தொங்கும் 

பாட்டியும் அம்மாவும், 

மெல்ல எனைப்பார்த்து, 

கள்ளப்புன்னகை,

புரிந்ததும் புரிந்தது 

அவர்கள் அவர்களே!!!.

        – ஜெயானந்தன் 

Series Navigationவிழிகளிலே வெள்ளோட்டம்கனடா, ரொறன்ரோவில் கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு