மருள் விளையாட்டு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 9 in the series 30 மார்ச் 2025

 வசந்ததீபன்

ஞானஸ்தானம் பெறுகிறார்கள்

தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம்

தரித்திரம் வாசற்படியில்

படுத்துக் கிடக்கிறது

நொய்யல் அரிசியை

கஞ்சி வைக்கிறாள் கிழவி

நீண்ட நாள் பட்டினி முடிவாகும்

நாயுக்கு கொஞ்சம்

ஊற்ற நினைத்தாள்

பூசணிக்கூடால் ஆன தம்பூரா

மீட்டி வருகிறான்

குறி சொல்லி பண்டாரம்

தெருக்களில் இரந்து பாடுகிறான்

தோளில் ஊசலிடும்

துணித்தொங்கலில்

காற்றுதான்நிரம்புகிறது

ஆட்டை உரிக்கிறார்கள்

தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது

ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள்

பக்குவமற்ற அவனால் பிரச்சனை

பக்குவமான இவனால் குழப்பம்

அலைகள் ஓய்வதில்லை

பலாப்பழங்கள்

பழுத்துத் தொங்குகின்றன

மந்திகள் சுளையெடுத்துத் தின்கின்றன

சிதறும் கொட்டைகளை

அணில்கள் பொறுக்கின்றன

தாழப் பறக்கும் தைலான் குருவிகள்

புற்றுக்குள்ளிருந்து ஈசல்கள் வெளியேறுகின்றன

பிரம்புப் புதருக்குள் வலியோடு முட்டையிடும் ராஜநாகம்

நாணற் பூக்கள் சிரிக்கின்றன

நதி சுதியோடு பாடுகிறது

நண்டுகள்

கைவிரித்து கால்விரித்து ஆடுகின்றன

மர மல்லிகைகள் மணக்கின்றன

பால் ஒழுக குட்டியைத் தேடும்

மிளா மான்

மூங்கில் குருத்துக்களைத்

தின்னும் மரநாய்கள்

நெருப்பு மலர்ந்திருக்கிறது

முள் முருங்கைகள் சுடர்கின்றன

தேனெடுக்கின்றன தேனீக்கள்

சுழி காற்றால் காடுகள் இசைக்கின்றன

இலைகள் நர்த்தனமிடுகின்றன

பாறைப் புடவிலிருந்து

கதுவாலிகள் தலைநீட்டுகின்றன

மழைக் காடுகள் சிலிர்க்கின்றன

மஞ்சி மெல்ல மூடுகிறது

குளிர்ச்சுனை வாடையாய்

வாய் திறக்கிறது

பாவத்தைப் பிதுக்கித் தள்ளினாள்

தினமும் தன் சதையை நாய்களுக்கு தின்னக் கொடுப்பவள்

பிள்ளைகளாய் பெருகுகிறது கள்ளம்

அற்பத்தினுள் சுழல்கிறது தாய்மை.

🦀

வசந்ததீபன்

Series Navigationசாளரத்தின் சற்றையபொழுதில்வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *