மக்களே! 

This entry is part 1 of 7 in the series 11 மே 2025

ஓடும் நதியில்தான் 

எல்லா அசடுகளும் ஓடுகின்றன.

கற்பை எண்ணி 

எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். 

யோனிக்கழுவ 

ஒரு கை 

நீர் போதும் 

கண்ணகிக்கும், மாதவிக்கும் .

கோவலன்தான் 

யாழை வாசிக்கின்றான்

பெண்துணை தேட. 

பூத்துக் குலுங்கும் 

மலர்ச்சோலை 

வருணப்பாக்களில் 

கவிதை படுவதில்லை. 

பாடும் வண்டும் 

பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும் 

அருவிகளும் 

காலடிச்சுவடுகளில் 

ஜாதகம் தேடுவதில்லை. 

ஆணோ பெண்ணோ 

அனைத்து மகிழ 

காமதேவன் பாடலில் 

கறுப்பு வெண்மை 

நிறங்கள் இல்லை. 

மனோரத தேரில் ஏறி 

பயணம் செய்ய 

விசாலமான சக்கரங்கள் தேவை. 

காடு எங்கும் 

காத்துக்கிடக்கின்றன 

வயோதிக்கத்தை தின்ன.

அதற்குள் வாழ்ந்து விடு 

பூமியெங்கும் 

உனக்கான 

பள்ளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பட்டினத்தார் 

அடுத்த சந்தில் 

சங்கை ஊதிவிட்டார். 

அரிச்சந்திரன் 

கங்கை அருகே 

காத்துள்ளான் 

மக்களே!

Series Navigationஎழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *