மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1

This entry is part 24 of 41 in the series 13 மே 2012


மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்
          
(முதலாம் அங்கம்)
                   
அங்கம் -1  பாகம் – 1


நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின்  தொழில் (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறியல்ல !  ஆடவரின் ஆதிக்க வெறியல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession)


மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[ தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

நாடகத்தின் அடிப்படைக் கரு இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப் படுவதாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையின் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான்.  அவளுக்கு விவியன் என்றொரு புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறி பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  தர்க்கத்தின் முடிவில் உடன்பட யாரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் அப்படி இல்லை விவியன்.  அவள் ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கிக் கிடந்தது.  பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபர் லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழில் பற்றி காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப்படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் லண்டன் நாடக அரங்குகள் நடித்துக் காட்ட முன்வந்தன.

 


பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து அவளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த கதைக் கருவே நாடகத்தின் ஆணிவேராய் உள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக அமைந்துள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்டவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள் எதுவும் வசனத்தில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் காணப் படவில்லை.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் குறிக்கோள் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறியல்ல !  ஆடவரின் ஆதிக்க வெறியல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

 

 

நாடக உறுப்பினர்:

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)

2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)

3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 52)

4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)

5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் கூட்டாளி

6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் தோழன்.

 

************************

மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்
          
(முதலாம் அங்கம்)
                   
அங்கம் -1  பாகம் – 1


இடம் :  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து

நிகழும் ஆண்டு : 1893

நேரம்:  வேனிற் காலப் பிற்பகல்/

அரங்க அமைப்பு :  தோட்டத்தில் அமைந்திருக்கும் வேனிற் குடில் மாளிகை. பின்புலத்தில் மரம் செடிகள் நிறைந்த ஒரு குன்று.  மரம் ஒன்றில் ஒரு சைக்கிள் சாத்தப்பட்டிருக்கிறது.  மர நிழலில் கட்டி யுள்ள ஒரு தூரியில் இள நங்கை ஒருத்தி கையில் புத்தகத்தைப் படித்த வண்ணம் ஒருபுறம் சாய்ந்து படுத்திருக்கிறாள்.  குடிசையின் பின்புறத்தி லிருந்து ஒரு நடுத்தர வாலிபர் (Praed] இளமாதை நோக்கி வருகிறார்.  வழி தவறிய வாலிபர் வாசல் அருகில் நின்று இள நங்கையிடம் பேசுகிறார்.  வாலிப கோட் சூட் அணிந்து குறுந்தாடியோடு காணப் படுகிறார்.  இள நங்கையின் வயது 20 மேல் இருக்கலாம். கவர்ச்சி அழகி, உறுதியான உடற்கட்டு, எடுப்பன தோற்றம். நளின மோடு பேசும் நடு வகுப்பு மங்கை. விஞ்ஞானம் படித்த கல்லூரிப் பட்டதாரி.

 


(நாடகத் துவக்கம்)

 

நடுத்தர வயது வாலிபர்:  (தலைத் தொப்பியை எடுத்து)  ஹலோ ! உன்னைத்தான் கேட்கிறேன்.  மிஸிஸ் ஆலிஸன் இல்லத்துக்குச் சற்று வழி காட்டுவாயா ?

இளநங்கை: (புத்தகத்திலிருந்து முகத்தைத் திருப்பி)  ஈதோ இந்தக் குடிசைதான். (குடிலைக் காட்டி மீண்டும் படிக்கிறாள்)

வாலிபர்:  ஒரு வேளை நீ !  நீதான் மிஸ். விவியன் வார்ரனா ?

இளநங்கை:  (நபரை ஆழ்ந்து நோக்கி) ஆமாம் !  நானேதான் !

வாலிபர்:  நான் உன்னைத் தொந்தரவு செய்ய வரவில்லை.  என் பெயர் பவல், வில்லியம் பவல்.

மிஸ். விவியன்: (எழுந்து சென்று வாசல் கம்பிக் கதவைத் திறந்து வரவேற்கிறாள்)  வாருங்கள் உள்ளே.  உங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி எனக்கு.  (வில்லியத்துடன் கைகுலுக்கிறாள்)

வில்லியம் பவல்:  எனக்கும் மகிழ்ச்சிதான் மிஸ் வார்ரன்.  உனது தாயார் வந்து விட்டாரா ?

மிஸ். விவியன்:  (வெடுக்கெனத் துடுக்காக)  என் தாய் இங்கு வருவது எனக்குத் தெரியாதே !

வில்லியம் பவல்:  (வியப்புடன்)  நாங்கள் இன்று இங்கு வருவதை நீ எதிர்பார்க்க வில்லையா ?
மிஸ். விவியன்:  இல்லை !  நீங்கள் வருவதோ, என் தாய் வருவதோ எனக்குத் தெரியாது.

வில்லியம் பவல்:  அட கடவுளே !  எனக்கு ஞாபக மறதி கிடையாது.  ஆம் இன்றுதான், இன்றைய தினம்தான், உன் தாய் லண்டனிலிருந்து வருவதாகவும், அதே சமயம் நானும் இங்கு வர வேண்டும், உன்னிடம் என்னை அறிமுகம் செய்ய வேண்டுமென்று உன் தாய்தான் ஏற்பாடு செய்தார்.  அவரே இன்னும் வரவில்லையா ?

 

மிஸ். விவியன்:  (வெறுப்போடு) அப்படியா அம்மா ஏற்பாடு செய்தாள் ? இப்படி என் தாய் என் கண்ணைக் கட்டி காட்டில் விட்டு விடுவாள்.  நான்தான் தேடிப் பிடிக்க வேண்டும்.  புதிர்களை விடுவிக்க வேண்டும்.  எப்படி இம்மாதிரிச் சிரமங்களை நான் கையாளுகிறேன் என்று  சோதனை செய்வது என் தாயிக்கு ஒரு பொழுது போக்கு.  தர்ம சங்கடமான நிலையில் நான் மூழ்கினாலும் சரியென்று தனியே என்னை நடுக் கடலில் விட்டுச் செல்வாள்.  யாரை அழைத்தாலும் எனக்குச்  சொல்வதில்லை.னதை என்னிடம் பகிர்ந்து கொள்ளும் நற்பழக்கமும் இல்லை.  இன்று நீங்கள் வரும் செய்தியை நீங்களே எனக்கு அறிவிப்பது விந்தையாய் இருக்குது.

வில்லியம் பவல்: (தடுமாற்றமுடன்) நான் வருந்துகிறேன்.

மிஸ் விவியன்:  அது உங்கள் தவறில்லை.  நீங்கள் இன்று வந்ததில் எனக்கொரு தொல்லையும் இல்லை.  உங்களை அழைத்து வரும்படி நான் முன்பு அன்னையிடம் ஒருமுறைக் கேட்டுக் கொண்டதுண்டு.  நீங்கள் என் தாயின் அன்புக்குப் பாத்திரமானவர் என்பதை நான் அறிவேன்.

வில்லியம் பவல்: கேட்பதற்கு இனிதாய் உள்ளது மிஸ். விவியன் ! நீ இப்போது என் அன்புக்குப் பாத்திரமானவள் என்று தெரிந்து கொண்டேன்.

மிஸ் விவியன்:  இல்லத்துக்குள் வருகிறீரா ?  அல்லது வெட்ட வெளியில் உரையாடுவோமா ?

வில்லியம் பவல்:  குளிர்ந்த மர நிழலில் அமர்ந்து பேசுவது இனிமை அல்லவா ?

மிஸ். விவியன்:  சரி ஈதோ நான் போய் ஒரு நாற்காலி எடுத்து வருகிறேன்.  (உள்ளே போய் ஒரு மடிப்புத் துணி நாற்காலியைக் கொண்டு வருகிறாள்) கவனம், மடிப்பு நாற்காலியில் பார்த்து அமருங்கள்.  அது சாய்ந்து விழுவது.

வில்லியம் பவல்:  எனக்கு மடிப்புத் துணி நாற்காலி பிடிக்காது.  அந்த கட்டை நாற்காலியை நான் எடுத்துக் கொள்கிறேன்.

மிஸ். விவியன்:  எனக்கும் கட்டை நாற்காலிதான் பிடிக்கும். துணி நாற்காலி தொய்ந்து போகும். நீங்கள் துணி நாற்காலியில் உட்காருங்கள்.

(இருவரும் நாற்காலிகளில் உட்காருகிறார்)

வில்லியம் பவல்:  இங்கு அமர்ந்து பேசுவதற்குப் பதிலாக நாம் இரயில் நிலையத்துக்குப் போய் உன் தாயை அழித்து வரலாமா ?

மிஸ். விவியன்: (வெடுக்கென)  ஏன் ? என் அன்னைக்கு வழி நன்றாகத் தெரியும்.

வில்லியம்:  ஆமாம், வழி தெரியாமல் இருக்குமா ?

 

மிஸ். விவியன்:  மிஸ்டர் பவல் !  நான் நினைத்துபோல்தான் நீங்கள் இருக்கிறீர்.  என் தாயின் நண்பர் எனக்கும் நண்பர்தான்.

வில்லியம்:  மிக்க நன்றி மிஸ். வார்ரன் கண்மணி !  உன் தாய் உன் மனதைப் பாழ் செய்ய வில்லை என்று மகிழ்ச்சி அடைகிறேன்!

மிஸ். விவியன்:  எப்படிப் பாழ் செய்யவில்லை ?

வில்லியம்:  நல்ல வேளை !  உன் அன்னை ஒரு புறம்போக்கு மரபுப் பெண்ணாய் உன்னை வளர்க்க வில்லை.  நானொரு புரட்சித் தலைவன்.  ஆதிக்க வன்மையை நான் வெறுப்பவன்.  பெற்றோருக்கும், பிள்ளைக்கும் உள்ள பிணைப்பை முறிக்கிறது அது.  தாயிக்கும் மகளுக்கும் உள்ள உறவைத் தகர்க்கிறது.  உன்னை ஒரு மரபுப் பெண்ணாய் மாற்ற உன் அன்னை முற்படுவாள் என்பது எனக்குத் தெரியும்.  நீ அப்படிச் செதுக்கப் படவில்லை என்று ஆனந்தம் அடைகிறேன்.

மிஸ். விவியன் :  நான் மரபு மீறிய பெண்ணாய் நடக்கிறேனா ?

வில்லியம்:  இல்லை கண்மணி !  நீ மரபற்ற ஒரு மரபுப் பெண்ணாய் நடக்கிறாய் !  நளினமாகப் பேசுகிறாய் !  நாகரீகப் பெண்ணாய் பழகுகிறாய் !  இப்போது உன்னைப் போன்ற நவீனப் பெண்டிர் கவர்ச்சியோடு பகட்டாகவும் உள்ளார்.

மிஸ் விவியன்: (வியப்புடன்)  என்ன சொன்னீர் ?  நான் கவர்ச்சியாய், பகட்டாய்க் காட்சி அளிக்கிறேனா ?

 

(தொடரும்)

***********************

Source  :


Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)

(g)  A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(h) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

 

Series Navigationசுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்வளர்ச்சி…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *