நீட்சி சிறுகதைகள் – பாரவி

author
0 minutes, 6 seconds Read
This entry is part 35 of 43 in the series 24 ஜூன் 2012

ரேவதி வர்மா
இயல் வெளியீடு
34/ 98     நாட்டு
1 சுப்பராயன் தெரு,
மயிலாப்பூர் சென்னை.4

இவ்வுலகையும், அதன் மனித மனங்களையும் சொற்களின் ஆழங்கள் பெயர்ச்சிகளும் சொற்களிலே பிரித்துப் பகுத்து வெளிப்படுகின்றன. சுதந்திரங்களும், ஆழங்களும் வெளிமுழுவது அர்த்தங்களைத் தேடியலைகின்றன. பாரவிக்கு தன் படைப்புகளின் வழியே நிகழும் அகம் சார்ந்த அல்லது சுயம் சார்ந்த இடப்பெயர்ச்சி தான் பிடித்த மானதாயிருக்கிறது. நீட்சி அவரது நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வின் தொகுப்பு என்னும் அர்த்தங்களின் நீட்சியையும், தனிமையின் நெருக்கடிகளையும்,மௌனங்களின் ஆழங்களையும் பரிசோதனைக்குட் படுத்தும் முயற்சியின் விளைவுகளே.

வெறும் அழகியலை மட்டுமே நம்பி இலக்கிய படைப்புகள் வாழ்வை விட்டு விலகிப் போகின்ற போக்கும், சுயம் சார்ந்த இருப்பின் அடையாளங்களற்று, நேரடி அனுபவமில்லாத  வாழ்வினை கதைகளாக்குவதும், ஞானத்தினால் புனைவு செய்வதும் நிகழ்ந்துவரும் சூழலில் பாரவியின் கதைகள் முற்றிலும் வேறானவை. ஒரு கதைக்கான அடையாளங்களாக வழக்கமான சட்டகங்களிலிருந்து விலகித் தனித்துவமான பார்வையை வடிவத்தை பெற்றவைகளாக பெரும்பாலான கதைகள் உள்ளன. ஒரு படைப்பு என்பதற்குள் வெறும் படைப்பாளியின் புலமை மட்டுமே வெளிப்படுமானால் வாசக அனுபவத்தை தராது. நீட்சி வாசகனுக்குப் புதுவிதமான வாசக அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆழ்மனதில் எழுகின்ற தவிப்பு, தேடல், தாகம், போன்று இவ்வனுபவம் இருக்கக்கூடும். புனைவின் எந்த நகாசுமின்றி அப்படியே அள்ளிய ஈரமண்ணில் விரல்களின் பதிவுகள் தெரிய முன் வைக்கப்படுகின்றன.

கதைகள் எல்லவாற்றிலும் வாழ்க்கையோடு, அதன் நிதர்சனங்கோடு, அவலம் நிறைந்த சமூகத்தோடு அவர் நிகழ்த்தும் உரையாடல்களில் பிறந்தவர்கள் பாத்திரங்கள் . மொழுதியப்பன், குமாரசாமி, இளங்கோ, கல்பா, வரதன் என்பவை வெறும் பெயர்கள் மட்டுமா? 70 முதல் இன்று   வரை விவசாயம் சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தும் கதைகளின் நாயகன் மொழுதியப்பன். இங்கே இந்த மண்ணில் குழந்தைகள் பிறந்து தங்காது போய்விட்ட நிலையில் அல்லது பெண்களாய் பிறந்து வெறுத்தவிட்ட நிலையில் பெயர், குப்பன், குப்புசாமி, குப்பம்மாள், மண்ணில் புரட்டி புழுதியப்பன், வேம்பு, வேம்பாயி என்று பெயரிடுவது மண்ணின் மரபு. மண்ணாங்கட்டி போய் புழுதியப்பன் ( அ ) மொழுதியப்பன்.

மொழுதி முதல் கதையிலேயே அறிமுகமாகிறான் அறுவடை செய்யும் கூலியாக, பின்னர் தெரிகிறது. நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிடுவன். வேலை செய்த கொண்டே பாலியல்ரீதியாக வம்பளக்கும் அறுவடையாட்கள். ‘பொண்டாட்டிய இன்னாடா செய்வே பேமாயிப் பையா?’ ‘இது லின்னா கேழ்வி வாரத்துக்கு வுட்டுட்டு ஜம்மனு ஒக்காந்கினு சாப்டுவேன்.  இந்த அறுப்பு ரோதனை இல்லாம.! நிலம் இங்கு பெண் வடிவம் கொள்கிறது ‘டே, டே அறப்ப கிள்ளிக்கினே பேசுடா. எங்கனா ஒம்மனையிலே முடிச்சிருக்கியா பாரு’ என்பவன் தான் மொழுதி. அறுவடையின் மேஸ்திரி ( அப்பாவு ) இளங்கோ யாரும் வரம்பு மீறிப் போய்விடவில்லை. அறுத்து கட்டி களத்தில் அடுக்கி மொழுதி நெல்கட்டுகளை மேல்தலைப்பின்னாலால் இணைத்தான். ஈரமண்ணை அங்கங்கே பிடிப்பிடியாய் வைத்து வந்தான் இளங்கே முத்திரையில் அடையாளம் வைத்தான். குத்தகைதாரனோ, அறுவடையாட்களோ அப்பாவுவோ வரம்பு மீறவில்லை. அது ஒரு காலம் ( 70 )

சொந்த மண்ணில் கிணறு தோண்டி, மின் மோட்டார் வைத்து உயர்ந்த மொழுதியைப் பார்க்கிறோம். மின்சார வார அதிகாரிகளின் ஊழல் பெருக்கத்தால் அவதியுறுகிறான் மொழுதி. ‘ அந்த சிறு நெற்பூ காயாகப் பார்த்தபோது பாளமாய் வெடி நெஞ்சை மண்ணில் மாண்டது’. ஒரு நெல்லின் மரணம் அப்போதே வாசக நெஞ்சங்களை கசியச் செய்த கதை. விவசாயத்தின் துயர்களை வேறு இரு கதைகள் வளமை. ஒரு விடியாதகதை. வளமையைப் பார்க்கலாம். ‘இனிமேல் போய் பிடித்து உத்தியோகம் பார்க்க முடியாதவர்களும், மாடுகன்னு வீடு மனை காடு கரம்பு சொந்த பயிரென்று இருப்பவர்களும் தான் கிராமத்தில் இருக்கிறார்கள்… உழறவன் கணக்குப் பார்த்தா உழவுக் கூலிகூட மிஞ்சாது… எல்லவாற்றுக்கும் பணத்தை முதலில் வைக்க வேண்டும் என்றால், கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு காகிதத்திற்கு எங்கே போவது? கூலி முதற்கோண்டு ரூபாயகத் தர வேண்டுமென்றால் சம்சாரிகளால் முடியாத காரியம்… வர வர இந்த ஆட்கள் ஆபிசிற்கு போகிறவர்கள் போல் பத்து மணிக்கு இறங்குகிறான். மத்தியானம் ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறான். எப்போதுடா வெயில் இறங்குமென்று பார்த்துக் கொண்டே கரையேறிவிடுகிறான். எப்படி இப்படியிருந்தால் உருப்படுவது. இவ்வளவு நேரம் கண்டிப்பாய் வேலை செய்ய வேண்டுமென்று சட்டத்தைக் காணோம் மீதிக்கு மட்டும் நான் முன்னே என்று வந்து விடுகிறார்கள்’ என்ற மொழுதியின் ஒட்டு மொத்த விவசாயிகளின் குரல்.

‘ கிராமம் என்றால் எல்லோரும் வளமையாக யிருந்கிறதென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். டவுனிலிருப்பவர்களாவது காசு கொடுத்து வேண்டியதை எப்படியாவது வாங்கிக் கொள்ளும். இங்கே பணமும் இருக்காது. இருந்தாலும் எதையும் வாங்க முடியாது.  மாடும் மனிதர்களும் குன்றிப்போய் உலவி வருவதே பெரும்பாடு. தண்ணீருக்கும் படும் அவஸ்தை. வாயில்லாத ஜீவன்கள் பாடு மிகவும் கேவலம். இரண்டு பேர் உடம்பிலும் வலு குன்றி விட்டது, தாலி கட்டின பொண்டாட்டி மாதிரி. விற்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் கௌரவப் பிழைப்பு. சேரியே காலியிகிவிட்டது. எங்களைப் போல் சம்சாரி ஓட மடியாமல் இருந்தது போல மற்றவர்களுக்கு இல்லை. மொழுதியின் குமறலும் கதறலும் கேட்க வேண்டியவர்களுக் கேட்டதில்லை. அரசு விளம்பர கதியில் செயல்படுகிறது. சாப்பிட்டுப்போ வெனும் இளங்கோவிடம் ‘எங்கள் வீட்டிலேயே நான் பழையது சாப்பிடுவதில்லை உடம்பு ஒத்துக்கொள்வதில்லை’ என்று சுயமரியாதை நிறைந்த மொழுதியை பதிவு செய்கிறார் பாரவி.

ஒரு வலிமையை மென்மையாக, மௌனத்தை அக அதிர்வுகளின் எளிமைகளை ஒரே மொழியில் ஒரே அலையில் அகத்தின் குறுக்கீடாக சொல்ல வலியோடு முயல்பவை பாரவியின் எழுத்துக்கள். உணர்த்துதலில நுட்பங்கள் நிறைந்தது மனச்சாயல்களின் நீட்சியாக தனித்த அர்த்தங்களையும் குறியீடுகளின் விழுமியங்களின் ஒரு குவிமையமென உணர்த்துகின்றன.

விடியாத கதையில் சில பகுதிகளைக்  காண்போம். பக்கத்தில் முன்பிருந்த உயிரோட்டம் இப்போது காணாமல் போய்விட்டது. எல்லாமே வறண்டு வருகிறது வறட்சி – இருக்கும் நான்கைந்து தெருக்களில் பாதி வீடுகள் பூட்டப்பட்டுக் கிடந்தன அவற்றில் சில மண் சுவர்கள் சரிய  சிதிலமடைந்து விட்டன. பாறைகளின் வெப்பமும் வறண்ட மரங்களின் அனலும் சரசரக்கும் முட்புதர்களின் வேலிக்காத்தான்களின் அசைவும் ஊரை மேலும் வசிக்க இயலாத இடமாக மாற்றிக் கொண்டிருந்தன. சுற்றிலும் இருந்த வயல்களால் ஊரின்னும் மூச்சு சிட்டுக் கொண்டிருந்தது . நிலத்தின் மீது மண்ணின் மீது ஆதிக்கம் மூலம் ஊரை நாட்டை ஆண்ட அதிகாரத்தின் மிச்ச சொச்ச குணம் இன்னமும் பாக்கத்தின் சிலரை நிலத்துடன் கட்டிப் போட்டிருந்தது… நீரை விட மண் நெருக்கத்தை தந்தது, தருவது . கொலைக்களன்களின் மண், ஊசிமுனை மண், செவ்விந்தியர்களின் மண், என எந்தப்புலத்திலும் எந்த மண்ணுமே அதிக அழிவு தந்தது, பெருமூச்சு. அந்த மூச்சில் கருகுவன பல.

நவரை என்பது ஏரி மதகடியின் உள்ளடி நிலக்காரர்களுக்குத் தான்… நீர் இறைக்க யந்திரங்களுக்கு மின்சாரமும் என யந்திரங்களும் பாக்கம் எட்டிப்பார்க்க நேர்ந்திருப்பது வேடிக்கை தான் வேடிக்கையில்லை வேதனைதான்… இரு வரப்புகளைக் கரையோரமாக கொண்ட மண் வாய்க்கால்கள் சிமெண்ட் கால்வாய்களாக மாறியிரந்தன. எப்படி வெட்டுவது மடைமாற்றுவது அடைப்பது. வரப்புயருமா.

பழங்கதையில்லை என்றார் ஆதி ( மொழுதி ) ‘ கடன் பயிரில்லை, மீண்டும் கடன், வேறு பிழைப்பு இல்லை. விட்டுவிட்டு  எங்கு ஓடுவது. நீ அங்கே வந்து எந்த வீட்டிலாவது திடீரென்று நுழைந்தாயானால் திணறி விடுவோம். முண்டக்கா தண்ணி சோத்துக்கு தொட்டுக் கொள்ளக் கூட இரக்காது. கடனை உடனை வாங்கி ஏதோ இரக்கிறோம். மானத்துக்காக துணி உடுத்தி’

‘குளத்து நீரும் காய்ந்து , ஏரியும் வற்றி குடிப்பதற்கு சித்தாறு தண்ணீர்தான் இப்போது அதுவும் சுவை மாறிவிட்டது. ஆனால் உனக்குத் தெரியுமா, வயக்காட்டு கிணறுகளின் நீரை விற்கிறோம் இப்போது’ மொழுதி.

‘ முன்பு பால், காய்கறி, கீரை, முட்டை, தயிர், வெண்ணெய் சொசைட்டிக்காரனுக்கு இல்லையென்றால் முன் பணம் என்ற பெயரில் கடன் கொடுத்த மேலத்தெருவின் மூலம் பெரிய சந்தைக்கு சாயந்திரமும் காலையிலும் எல்லாம் போயிடும். உன்னைப்போல் கூட்டாளிகள் திடீரென வந்துவிட்டால் நாளைக்கு திருப்பித்தரேன் என்று சொல்லக்கூட பக்கத்து அண்டையில் அவசரத்துக்கு வாங்க முடியாது’. விவசாயிகளிடம் சுரண்டல் அரசு மட்டுமல்ல, அரசியல் வாதிகளின் லாபத்துக்காக சிமெண்ட் கால்வாய். உழைப்பவனின் உழைப்பை சுரண்டுபவர்கள் வணகிச் சமூகங்கள் என்ன மிஞ்சும்?.‘ இப்போ வெளச்சலும் இல்லே கிணறு எடுத்து மோட்டாரும் போட்டதில் கடன் நிலத்து மேலே கடன் கரண்டுபில் கட்டக்கூட தம்பிடி கிடையாது’.

‘வேடிக்கையா இருக்குதா எங்க பாடு. இப்பல்லாம் யாருப்பா சினிமா பார்க்க, ஓட்டலில் தின்ன வருகிறார்கள், அது ஒரு காலம். அதான் வீட்டுக்கு வீடு நேரம் காலம் இல்லாமல் கேபிள் டிவிக்காரன் இந்த டிவி, அந்த டிவின்னு 24 மணி நேரமும் டான்சும் பாட்டுமாய் கூத்தடிக்கிறானே. அது அது விட்டிலேயே முடங்கி விடுகிறது. கடன்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் தண்ணீரை விற்கிறோம். ஒரு மணி நேரம் மோட்டார் ஓடினால் இவ்வளவு ரூபாய் என்று மாதத்திற்கு கரண்ட் பில்லும் போக காசு நிற்கிறது. வெளைச்சல் இல்லையென்றால் நெல்லை விற்று வருவதைவிட லாரிகாரன்களுக்கு தண்ணீரை விற்பது லாபம்தான்’.

‘எல்லோரும் பம்ப் போட்டு உறிஞ்சிட்டால் தண்ணீர் கீழே போய் விடுமே’ ‘ போய்விடுமே என்ன? போய்விட்டது. அவனவன் அஞ்சு  எச்பி  எல்லாம் போய் பத்து எச்பி என்று போயிட்டுயிரக்கிறான். இன்னும் 100 அடி கீழே இறக்கி ஆயிற்று மழையில்லை. புஞ்சை ஆக்கவும்  ஊர் ஓத்துவரவில்லை. ஆற்றிலும் மணல் எடுக்கிறேன் பேர்வழின்ன மம்மட்டியும் கையும் போய்  அஞ்சடி பத்தடி ஆழத்துக்கு  அப்படியே அள்ளுகிறது பொக்லின் கை. ஆத்துலே நீரோட்டம் தான் இல்லை என்று ஆகிவிட்டது, என்றால் இப்போ ஊத்தோட்டமும் போய்  அடிவறண்டு மடியிலும் கால் வைத்துவிட்டார்கள். யார் கேட்பது மனசாட்சி வேண்டாமா’

‘மனமாவது சாட்சியாவது’

‘யாருக்கு மணல் இப்போ கப்பலிலே வெளிநாட்டுக்குக்கூட போகிறது தெரியுமா?’

‘பாட்டில் கேன் தண்ணியாய் திரும்ப வந்து இப்ப நாங்களே வாங்கிறோம்’ யார் சொல்கிறார்கள், யார் கேட்கிறார்கள் எனப் புரியாத போன நிலையில் என்று முடிகிறது.

எல்லா நிச்சய மின்மைகளுடனான இவ்வாழ்வின் நிகழ்காலம், இறந்த காலத்தைவிட மிக முக்கியமானதாகவும், எல்லா இடர்களிட மிருந்தும் வண்ணங்கள் மாறியபடியே தன் சுயம் சார்ந்த பிரக்ஞையுடன், தன் முனைப்புடன். அந்நிகழ்காலத்தின் வலியுடன் பங்குபெரும் தெளிவுடன் படைத்துக் காட்டியிருக்கிறர். தற்கால இந்திய தேசிய தமிழக அரசியலின் வேடிக்கைகளை, போலிமைகளை கோபம் வெளிப்படாது சற்று எள்ளல் உணர்வுடன் படைப்பாளியின் சுதந்திரமான தர்க்கங்களோடு எளிமையாக எழுதிச் சொல்கிறார்.

கிராமங்கள் சார்ந்து எழுதும் பலரிடம் காணக்கிடைக்காத கிராமிய பொருளாதாரப் பார்வை பாரவிக்கு முக்கியம் . தமிழக மணல் ஏலக்கொள்ளை யாருக்கு பயனளிக்கிறது. கட்சிகள் சார்ந்தவர்கள் தானே, துணை போகும் அதிகார வர்க்கம் தானே பயனடைகிறது . பல லட்சம் விவசாயிகளின் பொருளாதாரம் சிதைந்து போக சில கொள்ளையர்களுக்கு துணை போகத்தான் அரசியலா? பாலாறு போராட்டம் மணற்கொள்ளைப் போராட்டம் கூட அதிகாரத்தின் முன் தலைகுனிந்து விடுகிறது .

‘வரப்பு’ எழுதப்பட்ட காலத்தில் ஒரு மூட்டை நெல்லும், ஒரு பவுன் தங்கமும் ஒரே விலை. அன்று ஒரு எழுத்தர், ஆசிரியரின் ஊதியமும் ரூ210 தான். இன்று ஒரு பவுன் விலை 70 மடங்காக உயர்ந்திருக்க ஒரு மூட்டை நெல்லின் விலை 2.5மடங்குதான் உயர்ந்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களால் உந்தப்பட்டு தங்களுக்குள் அறுந்து போன ப.சீனிவாசனின் கதைகளை ( திருமணம் ) போல்  பாரவியின் கதைகள் பேசுகின்றன.

ஒரு வங்கி அதிகாரி அய்யர் ஒரு குடியானவனுக்கு கடன் தருகிறார். கள ஆய்வு செய்து குடியானவன் நாலைந்து இடங்களில் கிணறு தோண்டிப் பார்த்தது தான் மிச்சம். வங்கி அதிகாரி கிணற்றை பாக்க வீட்டில் குந்தச் சொல்ல நீர் பெருக்கெடுக்கிறது. பொருளாதார பலம் பெறுகிறான். ஆனால் கடனை முழுவதுமாக செலுத்துவதில்லை. ஏதேனும் கொஞ்சம் மிச்சம் பிள்ளைகளை படிக்கவைத்து வேலைக்கனுப்பி. பேரன் பிள்ளை எடுத்த பிறகு கூட கடன் வங்கி அதிகாரி வருவார். குடியானவன் வீட்டில் விருந்து கடன் மட்டும் இருந்து கொண்டேயிருக்கும் வங்கி அதிகாரியின் கால்கள் தன் கிணற்றடியில் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் எனும் மனித வாஞ்சை. பொ.ச.ராவுடைய எழுத்து ஞாபகம் வருகிறது. பாரவி தார்மீக கோபம் நிறைந்து எழுத்து .பாரவியின் சிறப்பான எழுத்து மீட்சியென்றே கொள்ளலாம். குமாரசாமி என்ற பாத்திரம் இளைஞனாகவும், முதியோனாகவும். மீண்டும் இளைஞனாகவும் உருமாற்றம் அடையும் விந்தை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு சமூக விரோதக் கும்பலின் சாலையின் வாகனங்களை நிறுத்தி பண வசூல் செய்யும் காட்சியின் சாட்சியாய் அறிமுகமாகிறார் குமாரசாமி. பிறகு அவரது நினைவோட்ட மகா கதை நீள்கிறது. புதுமைப்பித்தன் மகாமாசானத்தில் சாலையோரம் இறந்து கொண்டிருக்கும் மனிதனைப்போல் இங்கு முதுமையும் நோயும் விட்டும் மனிதன் சாலையோரம் விழுந்து கிடக்கிறான்- ஒரு மனித உடம்பின் மீது ஏற்றி விட்டுச் செல்ல தங்களுக்காக பயப்படுகிறார்கள்  ஆதலால் , அவன் இன்னும் உயிரோடு கிடந்தான். ( அவனைத் தொட்டுத் தூக்கிவிட ) அரசாங்கம்இருப்பதாக மனிதர்களும் , சமூக சேவர்கள் இருப்பதாக அரசாங்கமும், கடவுள் மட்டுமே இருப்பதாக அவனும் கருதுவதாக ஒரு ஆள் அந்த வேகத்திலும் கருத்து சொல்லி விட்டுப்போனான் சாட்சியாக இருந்த நிருபன் குமாரசாமியிடம் பேட்டியெடுக்கிறான். ‘உங்கள் இத்தனை வருடப்பொது வாழ்வில் அறுநூற்று ஐம்பத்தேழு கிலோ முப்பது கிராம் பொடி போட்டிருக்கிறார்கள்’ அம்பையின் இட்லி, சப்பாத்திக் கணக்கும் ( வீட்டின் மூலையில் ஒரு சமையறை ) வந்தனா அலமேலுவின் குடும்பத் தலைவியின் வீட்டு வேலைகளின் உழைப்புக்கான ஊதியக் கணக்கும் இதற்குப் பின் தான் எழுதப்பட்டன. செம்மூக்குச் செல்வரான அவர் பெண்கள் பொடி போட எதிர்ப்பவர். ‘பொடி இல்லாமல் புரட்சியில்லை’

அடுத்து செம்மூக்குச் செல்வர் ஆட்சியதிகாரத் தலைவராக குமாரசாமி உயர காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. ‘ புதிதாக வந்து ஐம்பத்தேழு வாரங்களே ஆகியிருந்த படத்திற்கு மீண்டும் பார்க்க டிக்கட் கிடைக்காமல் சலிப்புடன் நிற்கும்  குமாரசாமி.

குமாரசாமி கட்சித் தொண்டனாகி மேடையில் பேசும் பேச்சு ஞானக்கூத்தனின் கால வழுமைதியைப் போன்றது. கால வழுமைதியில் காணமுடியாத கோபம் நிறைந்த அங்கதம் நிறைந்தது. – புளியம்பழம் உலுக்கிய புனிதத் தலைவருக்கு எங்கள் தொன்னூறாம் வட்டம் முப்பதேழாம் கிளை மன்றம் சார்பாக இந்த மலர் மாலையை பொன் மாலையாக – வருங்கால கலகக் கண்மணிகளே – ஆகையால் என்னருமைத் தாய்க்குப் பிறந்தவர்களே –

சுயாட்சி முழுக்கமிடும் குமாரசாமியிடம் மீண்டும் பேட்டி – நீங்கள் செய்துள்ளதாகக் கூறியவற்றில் பௌதிகமான பாதிப்பு ஒன்றும் உணரப்படவில்லையே – அந்தக் கிழவனைத் தூக்கிவிட்டீர்களா – அந்தச் சாலையில் நானின்னும் போகவில்லை. எனினும் எங்கள் ஆட்களில் ஒருவர் நிச்சயம் தூக்கி விட்டிருப்பார். மேலும் நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு தனிப்பட்ட ஆட்களைத் தூக்கிவிடுவதில் பயனேதுமில்லை என்பது எங்கள் கருத்து.கல்லூரி மாணவனாய் வரும் குமாரசாமி சகிக்க வேண்டிவரும்  என்று நினைத்து நோயுற்ற மனிதனை இரு கைகளையும் பிடித்து தூக்கி நிறுத்தினான். மறுவிநாடி கூடத் திரும்ப விழுந்து விடலாம். சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும். அடுத்த அவதாரம் தீவிரவாதி ஏன் ஆரம்பிப்பவர்களாய் இருக்கக்கூடாதா?அடுத்து வருகிறது ரயில்வே பெட்டியில் அரசி கடத்தல் – ரயில்வே ஸ்குவாடினர்  அவர்களிடம் நடத்தும் பேரம். ஜெயந்தனின் ‘ நினைக்கபடும்’நாடகத்தில்அரங்கேறும் அரசி கடத்தல் போன்றது. ‘ நீ நெனைக்கிறதைத்தான் வாசல மாத்திக் கூட்டறதை விட்டுட்டு வீட்டையே இடிச்சுக்கட்டு’குமாரசாமியின் இளமைக் காலம் பேசப்படுகிறது – கும்பப் போராட்டத்தில் ஜெயிக்காதது தான் இன்னும் விடியவேயில்லையென அரங்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பேராட்டம் என்பதை இன்னமும் கொச்சையாகவே புரிந்து கொண்டிருப்பது தான் வேதனை என்றான் குமாரசாமி உள்ளும் புறமுமாகப் போராட்டம்.

கதைசொல்லியாய் குறிசொல்லியாய் எப்போதும் நீட்சி பெறுகின்ற புனைவுகளுக்குள் தன் ஆன்மாவை உலவ விட்டுவிடுவதின் வழி ஆதி மனிதர்கள் சிலரைக் கண்டு அடைந்து மீட்டுத்தர முயற்சிக்கையில் மொழுதியப்பனாக குமாரசாமியாக, வரதனாக தொன்மங்களின் சாட்சியாக  உருமாற்றம் பெறுகின்றனர் நிகழ்காலம் செரிக்க வியலாத ஒரு துயரமாகவே இருப்பதால், இயல்பான படைப்பு மனம் எங்கெங்கோ சுற்றியலைந்து விட்டு உறங்க மறுத்த மிருகமாய் மீண்டும், மீண்டும் அந்நிலம் நோக்கித் தம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் நிலம் பிடுங்கி எறியப்படும் துயரத்தில் கட்டற்ற வெறி கொள்ளும் அடைபட்ட மனிதர்களின் உடலை நிதானமாக சுவைப்பதில் குரூர மனங்கொண்ட அதிகார மையங்களும் கிறீtமீக்ஷீ மீரீஷீ என தங்களைப் பற்றின மனப்பதிவில் திளைப்பவர்கள் உருவான பூமியிது ‘சமகால மனித இனத்திற்கான உணர்நிலையில் பங்கு கொள்ளாத தன்மை நம்மிடம் உள்ளது. இதனால் இன்றைய மனிதரின் வலிதெரியாத பரிதவிப்பு தேடல் ஆகியவற்றை நம் இலக்கியத்தில் பிரிதிபலிக்கச் செய்யாத நிலையில் உள்ளோம்’ பாரவ ( பிரக்ஞை 16 )

படைப்பாளியின் கோபம் வெளிப்படையாகத் தெறிக்கும் கதை நிறம் கதை என்னவோ எருமைகளைப் பற்றியது தான் ‘எருமை மாட்டுத்தனம் எனப்படுவது ஒரு தேசிய குணமாகியுள்ளது. வருத்தப்படக்கூடிய ஒன்றா அல்லது மகிழ்ச்சிக்ரிய நிலையா எனினும் சில எருமைகள் பல எருமைகளை அடக்கி ஆள்வது தொடர்ந்த நிகழ்வாய் உள்ளது. தாங்களும் எருமை அவர்களும் எருமை எனப் பன்மையின் சகதிக்குளியலில் மந்தம் தினைக்கும் மகிழ்ச்சி. தடித்த தோலுடையன சேற்றில் திளைப்பதை அல்லது சேற்றை உண்டாக்கி திளைப்பதை வழியாகக் கொண்டுள்ளனவாய் தோன்றுகிறது’ எருமை இங்கு குறியீடு தாங்கள் புனைந்த கதைகளைக் கண்டு தாங்களே அஞ்சி மற்றவற்றையும் பயமுறுத்தி பயம் நீக்க தேவதைகளை ரத்தத்தில் குளிப்பாட்டி, குளிரவைக்க கத்திக்கும் சூலத்திற்கும் மாண்ட எருமைகள் எண்ணப்பட்ட இயலாதன. பத்து, பதினாறு  எருமைக் கடாக்களை  வரிசையாகக் கட்டி ,கழுத்த ஒரே வீச்சில் வீழ்த்துவதால் கொட்டும் ரத்தத்தை அப்படியே வாய்  வைத்து  உறிஞ்சிக் குடிக்கும் ஒரு கூட்டத்தின் வழிபாடு பற்றி அறிந்தபோது சிறு வயதில் அச்ச உணர்வு மேலோங்கியது – தற்போது ? வாசகனை நோக்கி வைக்கப்படும் கேள்வி

‘எல்லை நாய் குறியீடாகிறது. மண்ணில் உயிர்ப்பட்ட நொடி என்பது முதல் எரியும் பசியைத் தணிப்பது முடிவென வாழும் வரை நடப்பது . நிலம் நீர்வெளி முழுவதையும் கவந்தக் கைகளால் உட்படுத்தி விழுங்கிடும் ஆத்திரம். முடியாத தன்மையில் கண்படும் தொலைவரை கால் ஓடிக் களைக்கும் வரை உட்படுத்தி உள்ளே விளையும் இரை தனக்குத்தான். தனக்கு மட்டும் தான் என்பது உறுதிப் பட்டதும் மற்ற ஆதிக்க உணர்வுகள் அரசாள்வதும் அடிபணிய வைப்பதும்  முறையாகிறுது. தன் எல்லைக்குள் இரைத்தட்டுப்பாடு ஏற்பட்டாலே, ஏற்படுலண்பதைத் தவிர்க்கவோ, ஏற்படாமலிருக்கவோ அடுத்த எல்லைக்குள் நுழைவதும் அடிமைப்படுத்துவதும் அடிமையாவதும். வாழ்வதும் பின் அழிவது எப்படியும் இரைதேடல் எல்லைகளை வகுத்தது . உடைத்தது புதிய எல்லை. குறுகிய வட்டம் புதுப்புது உத்தி ஆதிக்கம். இரை எல்லை புது வலை’

தமிழக அரசியல் மட்டுமல்ல தேசிய அரசியல் காலனியாதிக்கம் பின்னை காலனியாதிக்கம் என களங்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. அரசியல் தந்திரங்கள், யுக்திகள் நாய்களின் செயல்கள் மூலம் சொல்லப்படுகின்றன.

தீனி இருவகை குறியீட்டுத் தளங்களில் இயங்குகிறது. இந்திரகாந்தியின் அவசர நிலைப் பிரகடணம் – அதன் மூலம் உரவான இருபது அம்சத்திட்டங்கள் நிறைவேற்றத் திணறல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அரசின் நலத்திட்டங்கள் அடையும் நிலை.

மரணம் ஒரு மனிதனின் கணக்கு வழக்கினை அவனுக்கு உரைக்காமல் பேசும். மனதின் சிதைவுகள் எத்தகைய கொடூரமானதாக இருந்தாலும் அதிலிருக்கும் வீச்சம் பிறருக்கு அருவருப்பை உண்டாக்குவதில்லை. பாரவியின் நீட்சியில் இரு கதைகள் சிலுவை, உயிரி மரணம் பற்றி பேசுகின்றன. சிலுவையின் மனிதமனதின், பொருளாசை எவ்வளவு குரூரமான நிலைக்கு தள்ளப்படுகுறது மனிதம். மரணம் நெருங்கி துளசித் தண்ணீர் வரை செல்லும் குமாரசாமி, இறந்துவிடவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் ஆசுவாசம். போகப்கோக காத்திருப்பே வலியாகிறது. அகவுணர்வுகளைச் சித்தரிக்கும் அழகான கவிதை இறுதியில் மரணம், மகன்,பேரன் விடுதலை உணர்வில் சிரிக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகள் முழுவதுமே இன்று அரசியல் விழிப்புணர்வை கொண்டிருக்கின்றன. அவை படைப்பிலக்கியத்தில் வெளிப்படும் முறைகள், நிகழ்தளம் குறித்துப் பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அரசியல் செயல்பாடு உரத்த குரலால் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை. நுண் செயலாக நிகழ்த்திக் காட்டுகிறார் பாரவி. மரணம் பற்றிப் பேசும் உயிரி, ஒரு கற்பித்திலிருந்து தற்காலச் சூழலில் மக்களின் இயக்கம் பற்றி பேசுகிறது. நெடும்பயணம் ஈழத் தமிழப் பற்றி பேசுகிறது. தீவிரம் மிகுந்தவொரு வேட்டையாளனாய் தம் வேட்கையை ஆளுமையை, இந்நிலத்தில் தொன்மத்தில் புதைந்து கிடக்கும் மறுக்கப்பட்ட வரலாறுகளை தேடித்தேடி பேச விழைகின்றன பாரவியின் கதைகள் சராசரி தமிழ் வாசக மனங்களில் அதிர்வேற்படுத்தி, புரிதலை உண்டாக்கி தெளிவுறச் செய்யும் எழுத்துக்கள் பாரவி யுடையவை.

கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று
( கானல்காடு பற்றிய ஓராய்வு )    இரா. குணசேகரன்.
நடவு வெளியீடு,
269 காமராஜ் நகர்,
ஆலடி ரோடு,
விருத்தாசலம் – 606 001

நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் நாவல். கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் மாபெரும் ஆளுமையாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒற்றை ஆளுமைகளின் காலம் முடிந்துபோனது. இது எல்லோருக்குமான காலம். சமுதாயத்தில் மதிப்பீடுகள் எந்த அளவுக்கு ஆழமாக ஊன்றியிருக்கின்றன என்பதும் முக்கியம்.

ஆறுமுகம் தன் தந்தை வழியில் சமூக மதிப்பீடுகளைப் பெற்றவர். தந்தை வழியிலேயே நடக்க முயன்று தோற்றவர். அன்பு, நட்பு, பாசம் எல்லாம் நம்மைப் போன்றவர்களுக்கு விலைமதிக்க முடியாத அம்சங்கள். நவீனத்துவத்தின் ஆன்மாவான தன்னிரக்கம் அல்லது தாழ்வுணர்ச்சி என இரண்டுமே பிடிக்கவில்லை. ஆறுமுகம் தன்னிரக்கம் கொண்டு கதறும் ஒரு நிகழ்வு கானல் காட்டில் உண்டு. எழுத்தாளன் ஆறுமுகத்தை கழிவிரக்கத்திலிருந்து விடுவித்து, மீட்டெடுக்கும் நிகழ்வு கதைசொல்லலில் சிறப்பான ஒரு தருணம்.

கானல் காட்டில் காட்டப்படும் உலகம் தமிழ்ச்சூழலுக்கு முகவும் புதியது. புதியது என்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வுதான். கால மாற்றத்தில் நாம் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட தமிழ்வாழ்வு. இதில் சொல்லப்படும் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள், சொலவடைகள், திணைதொடர்பான வழக்கொழிந்த சொற்கள் தமிழ் இலக்கிய உலகம் அறியாதது. என்று மார்க்வெஸ் சொல்வதை நினைவூட்டுகிறது. அப்படிப் பார்க்கும்போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் இந்நாவல்.

கானல்காடு நாவல் ஒரு நிறுவனம் சார்ந்த ஒடுக்குமுறையையும் அதனுடன் இணைந்து செயல்படும் அமைப்பு ரீதியான வன்முறைகளையும் தெளிவுபடுத்துகிறது. இரண்டு மூன்று சாதிகளுக்கிடையிலான சிக்கலாகவோ அல்லது சில மேல்சாதியினரின் ஒடுக்குமுறையாகவோ சித்தரிக்கப்டவில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் அதன் பலதரப்பட்ட சாதிப் பின்புலத்திலிருந்து உருவாகும் மனிதர்கள் எவ்வாறு சாதி அதிகாரத்தை ஒரு இயந்திரமாகச் செயல்படுவார்கள் என்று சித்தரிக்கிறது. இந்த அதிகார இயந்திரம், அதன் பாகங்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காததோடு, அந்தக் அமைப்பைக்கடந்து போகத் தூண்டும் உந்துதல்களையும் வேரறுக்கிறது.

ஆங்கிலேயர் இந்த தேசத்தை ஆட்சி செய்யும்படி வைத்தது எது? முதல் காரணம் கெட்ட அகங்காரம்.இருளில் மூழ்கியிருக்கிற மக்களை திருத்தப் போகிறோம் என்ற அகங்காரம். எனவே மக்கள் தங்கள் தலைமீது ஏற்றிவிட்ட சுமையாகக் கருதினார்கள், வெள்ளைக்காரர்கள்.  காலங்காலமாக மக்களின் விரோதியாய் சிவில் நிர்வாகத்தை நடத்திவந்த பிராமண, வேளாள சக்திகளிடமே சிவில் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். இச்சக்திகள் மக்களை ஒடுக்குவதை கண்டும் காணாமல் இருந்தனர் அல்லது துணைபோயினர். ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் அவமதிக்கப் படுவதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. இரண்டாவது காரணம் பேராசை. இந்நாட்டின் உணவுப்பெருக்கமும், வனச்செல்வமும், கனிம வளமும் கண்ணை உறுத்தியது. எல்லாவற்றையும் தானே, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை. அதிகார வர்க்கத்துக்கு துணைபோக இந்த ஆசைதான் காரணமாயிருந்திருக்க முடியும். ‘வர்க்க விரோதிகளை கட்டுக்குள் வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்து அரசு தோன்றியதால் அதுமிகவும் வலிமை வாய்ந்த பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாக அமைகிறது’ என்பார் ஏஞ்சல்ஸ்.

நாட்டார் வன்னியர் எனினும் சைவ சித்தாந்த முறையில் வளர்க்கப்பட்டவர். சைவ உணவுக்காரர். அவரப்பா அசைவ உணவு சமைத்த தன் மனைவியையே ஒதுக்கி வைத்தவர். சைவ உணவு முறையே வன்முறைக்கான விதையென்று அவர் அறிந்திருக்கவில்லை. தலைமுறைகளாக வந்த பழக்கங்களுக்கு அடிமையானவர். பழக்க வழக்கங்களை மீறும் துணிவு அவரிடம் இல்லை. வாழும் சமூகம் உருவாக்கி வைத்திருந்த மதிப்பீடுகள் வழியில் வாழ்ந்தவர். இது அவரின் ஒருபக்கம்.

நாட்டார் வீரன், துணிச்சலானவர், நேர்மையான நிர்வாகி, சாதுரியமாக செயல்படும் வீரர், கூர்ந்தறிவு கொண்டு நடுநிலை தவறாது தீர்ப்பு வழங்குபவர். எல்லாவின மக்களோடும் கலந்து பழகி நட்புணர்வோடு வாழ்ந்தவர் என்பதெல்லாம் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்து போன பிம்பங்கள். நாவலிலும் அவ்வாறே இடம் பெறுகிறார்.

நாட்டார் என்பது அதிகாரத்தின் மையம். ஒரு கிராமத்தின் தலைவர் என்றாலும் கூட அவர் வழங்கும் நியாயத் தீர்ப்புகள் நேர்மையானவை. மற்றவர்களால் பாராட்டுதலுக்கு உள்ளானவை. அதிகாரமும் போதை, புகழும் போதை. வெகுமக்கள் காவலனாக ஒரு ஒடுக்கப்பட்டவன் வருவதை சிறுபான்மை  ஆதிக்க வர்க்கம்.  அதிகார அமைப்பு ஏற்றுக் கொள்ளுமா? உள்ளூரில் வாழும் இனங்களிடையே பகைமையில்லைதான். வெளியூர் மேல்தட்டு வர்க்கம், மையத்திலிருந்து நாட்டாரை விலக்கவே விரும்புகிறது. மையத்தை விட்டு விளிம்புக்கு விலக நாட்டார் தயாரில்லை. தன்னையே மையப்படுத்தி வாழ்ந்த நாட்டாருக்கு சாதியின் அடையாளமான கோபத்தில் இரைந்து விடுகிறார். பொறி கிடைத்துவிட்டது. அவரைச்சுற்றி பின்னப்படுகிறது வலை. தான் தவறிழைக்கவில்லை என்று கருதினாலும் மக்கள் மதிப்புக்கு தலைவணங்கி சிறை செல்லத் தயாராகிறார். அவர் சிறைபடும் நாளிலிருந்து தொடங்குகிறது, நாவல்.தன்னகங்காரச் சிறைக்குள் முடங்கி உள்சுருங்கி போன தந்தை தன் மகனை மீட்க முனையாமல், தன் குடும்பப் பாரம்பரியம் குலைந்து விட்டதே என்று ஓடி ஒளிகிறார். அவருக்கும் மையத்தை விட்டுவிலக மனமில்லை.

மன உலகை எதிர்கொள்வதும் புறவுலகை எதிர்கொள்வதும் நல்ல கலைஞனுக்கு ஒன்றுக்கொன்று எதிரான குணங்களல்ல. படைப்பாளி தன் மன உலகத்துக்குள் இயங்கினாலும் புறவுலகை எதிர்கொள்ளும் போது மனவுலகத் தேடலை ஒதுக்கி விடுவதில்லை. மனவுலகிலேயே உழன்று கொண்டிருக்கும் நாட்டாருக்கு புற உலக யதார்த்தத்தைப் புரியவைப்பவர்கள் குற்றவாளிகளான சிறைச்சாலை நண்பர்கள். பாளையக்காரர்கள் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வுக்காக உழைக்கும் மக்களின்,நாவல்.

உரிமைகளைப்பறிப்பது, சிவில் சமூகமான கிராம நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் உழைக்கும் மக்களை எப்படி சுரண்டுகிறார்கள். அதே நேரம் நிர்வாகத் தலைமைகளை தந்திரமாக ஏமாற்றி எவ்வாறு நிலவுடைமையாளர் ஆனார்கள். ஆட்சியாளர்களின் வரிக்கொடுமை, வரிகொடுக்க முடியாமல் கொள்ளையர்களாக மாறும் ஜமீன்தார், சுட்டுக் கொல்லும் ஆங்கில அரசு, எதிர்த்துக் குரல் கொடுக்கும் இனத்தினரை குற்றப்பரம்பரையாக்கி நசுக்கும் உத்திகள் உப்புக்கு வரியிட்ட போது தாங்கள் காய்ச்சிய உப்பை சகோதர கமூகத்துக்கு பரிமாற்றம் செய்ததனால் குறவர்கள் குற்றப்பரம்பரையினர் ஆக்கிய கொடுமை, காட்டிக்கொடுக்கும் சிறுபான்மையினருக்கு ஆங்கில அரசு வழங்கிய நிலக்கொடைகள், சர்தார் பட்டம் என புற உலக யதார்த்தத்தை பலபலவாக உணர்த்துகிறார்கள்.சட்டப்படி திருட, அரசாங்க அதிகாரி இருக்காங்கப-79 சட்டப்படி திருடுறவன் குற்றப்பரம்பரையில்லே. வயித்துப் பசிக்கு திருடியவன் குற்றப்பரம்பரை. இவனது அரசாங்கத்துக்கு எதிரான குரல். அவனது அரசோட எணைஞ்ச போற குரல்ப-80 சனங்க எப்போதும் நல்லவங்க. மாத்தினது அரசு நிர்வாகம். ஏன் திப்புவும் சரி, கும்பெனிக்காரனும் சரி வேற்று மொழிக்காரனை அதிகாரத்துக்கு கொண்டு வரணும். சிறுபான்மை பேரிட்டே கொடுத்தா தான் தனக்கு லாபமின்னு நெனைச்சான். வெகுசனம் அடிமாடா போறதிலே தான் இருவருக்கும் ஆதாயம்.ப-81

‘உம், இவ்வளவையும் தாங்கிகிட்டு எப்படி சும்மா இருக்க முடிஞ்சுது? நாம இன்னும் வேட்டுவச் சமூகந்தான். அதனாலேதான் இன்னும் இறைச்சி மீனுன்னு அலையிறோம். ஒங்க அப்பா தன்னை பார்ப்பான்னு நினைச்சிட்டுருக்காருபோல. அவன் ஆயுதம் எடுக்க மாட்டான். அவனுடைய ஆயுதம் தந்திரம், வஞ்சகமின்னு புரிஞ்சுக்காம வெளியே போயிடலாம். எதிர்த்து நின்னுதாம் சமாளிக்கணும்.ப-90 அதிகாரத்துக்கு கட்டுப்படுறவன், எதிர்த்து நிக்காதவன் எல்லோரும் திருடன்தான்.ப-107 ‘அதிகாரத்துக்கு எதிராதிரெண்டெழும் கூட்டத்தை ஒழிக்க எப்போதும் திருட்டுப் பட்டமிடு. வன்முறைகாரன்னு சொல்லு, கலவரக்காரன்னு சொல்லுங்கிறது மேல்ஜாதி மனோபவம். சரியா புரிஞ்சிக்கிற சக்தி நமக்கில்லாம அடிச்சுட்டாங்க.ப-108

இன்னும் கனமான வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றி புரியவைக்கிறார்கள். அவர்களிடம் இரக்கம் ஏற்பட்டாலும் நாட்டாரின் மனம் பழகிப்போன விழுமியங்களிலேயே திளைத்து நிற்கிறது. நாட்டார் தப்பிக்க முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் ஆசிரியர் சொல்லும், நண்டுபிடிக்கும் உவமானம் நன்று. பாராம்பரிய சமூக மதிப்பீடுகள் ஒருகாலின் மேற்பகுதியென்றால், கீழ்ப்பகுதி காசியும் நண்பர்களும் காட்டும் வாழ்வின் யதார்த்தங்கள்.

‘தன் வெதுவெதுப்பான தசைகளைப் பிராண்டி, காயமாக்கி, இரத்தம் குடிக்கவும், தன் அழுகிப்போன இறக்கைகளைப் பிடுங்கி எறியவும், எஞ்சி உள்ள தோலைக்கூட தங்களுக்காக குளிர்காய எடுத்துக்கொள்வார்கள் அவர்கள். உடலில்லா உயிரை பூமியின் கர்ப்ப வயிற்றில் புதைத்துவிடத் தவிக்கிறார்கள். தன் உயிர்ப் மூச்சுப் பறிக்கப்படுமுன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு’ என்கிறான் காசி, ஆறுமுகத்தின் மனவோட்டத்தை நேர்த்தியாகப் படம்பிடிக்கிறார் ஆசிரியர்.

கதை சொல்லும்போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி பின்தொடர்கிறோம். ஒருகதை சொல்லிக்கு சொல்லப்படுவதன்  முக்கியத்துவத்தைப் போலவே சொல்லும் முறையும் முக்கியமாகிவிடுகிறது. அவ்வளவு ரசித்து சிந்திக்கத் தூண்டி கதையைச் சொல்லிச் செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும். சிறுகதைகள், கட்டுரைகளில் கையாளப்படும் மொழியை விட கானல்காட்டின் மொழி சுவையானது, எளிமையானது.

ஆறுமுகம் என்ற தனிமனிதனின் கதையாக இல்லாமல், ஆறுமுகம் சார்ந்த சமூகத்தின் வரலாறு கானல்காடு. ஆறுமுகம் ஒரு குறியீடு மட்டுமே. ஆறுமுகம் தப்பிய பிறகு அவரை, குற்றவாளியாகப் பார்ப்பது அரசியல் பார்வை. தங்களின் ஒருவனாகக் கருதி, அடைக்கலம் தந்து ஆதரவுக்கரம் நீட்டுபவர்களுடையது சமூகப்பார்வை.  சாதிப்பேதமில்லை. இறுதிவர அவரது மெய்க்காப்பாக திகழும் காசிநாதன் என்ற குறவன், ஊரில் நடப்பதை அத்தனையும் தேடிவந்து சொல்லும் கணேசன் – அவரது சொத்தை, ரகசியமாக பாதுகாக்கவும் செய்கிறான். தந்தையின் நண்பராக அறிமுகமாகி நாட்டானின் பாதுகாப்பு கருதியே செயல்படும் முத்துசாமி கொத்தனார், தாயின் மரணத்தின் போது தான் அறிமுகம் ஆகும் சொக்கலிங்க உடையார். இரு அத்தியாயங்களில் வந்தாலும் அவர்காட்டும் மனிதநேயம். உற்ற நண்பனாய் இருந்து, அரணாக விளங்கி ஆவினங்குடி துப்பாக்கி சூட்டில் காலில் குண்டு பாய்ந்து காலம் முழுக்க விந்திவிந்தி நடக்கும் குழந்தைவேலு (இறப்பு 2003), மௌனமாய் இருந்து நண்பனின் பெயரைக் காவல்துறையில் சொல்ல மறுத்து காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சுழிவேலன் (1916) எந்த எதிர்ப்புமின்றி பாதுகாக்கும் வேட்டக்குடி சின்னதம்பி, பொன்னுசாமி.

சிறையில் ஒரு சகோதரனாய் பழகி, நண்பனாய் நெருங்கி மரம்வெட்டும் குழிக்குள் வைத்துக் காப்பாற்றும் தென்னூர் குமாரசாமி. குற்றப்பரம்பரையாயிருந்த குமாரசாமி காட்டும் உலகம்தனி, ஆறுமுகத்தின் நட்பு கிடைத்தவுடன் தனது தொழிலையே மாற்றிக் கொண்டவர் குமாரசாமி. பணிக்கனாக மரம் அறுக்கும் தொழிலாளியாக தச்சனாக தன்னை மாற்றிக் கொள்கிறார். வயது அதிகமிருந்தாலும் தோழனாக, ஆலோசகனாக, தந்தையைப் போல் நடந்து கொள்கிறார். அவரது பேச்சு மிகவும் சாமர்த்தியமானது மட்டுமல்ல. உலக நடப்பை புரிந்துகெண்ட ஒருவனின் நிதானம் காத்திருக்கிறது.

ஆசிய வகைப்பட்ட சமூகங்களில் அதன் உறுப்பினர்கள் தனிமனிதர்களாக இல்லாமல், ஏதோவொரு கூட்டு அடையாளத்தின்( ) குறிக்கப்படுகின்றனர். உடைமை சார்ந்த உறவுகளில் மட்டுமல்லாமல் சமூகக் கட்டமைப்பிலேயே, அத்தகைய கூட்டு அடையாளங்கள் முன்னுரிமை பெறுகின்றன. கூட்டுக் குழுமம் என்ற அமைப்பு உடைமை உறவுகளால் உருவான ஒருவிளைவாக இல்லாமல் எல்லாவகைச் சமூக உறவுகளுக்குமான முன் நிபந்தனையாகக் கூட அமைகிறது. (  ) இவ்வகைச்  சமூகத்தில் பொருளாதார உற்பத்தியின் இலக்கு வணிகமோ, பணப்பரிமாற்றமோ அல்ல. மாறாக கூட்டுப் பயன்பாட்டு மதிப்புகளை உற்பத்தி செய்வது மட்டுமே என்பார் கார்ல் மார்க்ஸ்.

கானல்காடு நாவலில் கீழணை, வெள்ளாற்றில் பெலாந்துறை அணை, தொழுதூர் அணை, வெலிங்டன் ஏரி, மணிமுத்தாற்றில் விருத்தாசலம் அணை தோற்றுவிப்பது கூட்டுக் குழும உறவுகளாலாலேயே  சாத்தியப்பட்டது. மக்களின் உழைப்பு கூட்டுப் பயன்பாட்டு மதிப்புகளை உற்பத்தி செய்வதற்கே பயன்பட்டது. சமூக உறவுகளே முன்னுரிமை பெறுகிள்றன. தப்பித்து வந்த காசி, ஆறுமுகம், தோழர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது சமூக உறவுகளிலிருந்து அவர்களால் தனித்திருக்க முடியாத தன்மைதான். இது ஒருவகையான மாற்றுலகக்கட்டமைப்பு.நீர்வளப் பெருக்கத்தாலேயே பொட்டாங் காட்டிலிருந்து வளம்தேடி குடியேறுகிறார்களே ஒழிய, நாட்டாரோ, அவரைச் சார்ந்தவர்களோ விரட்டியடித்தார்கள் என்பதில்லை. ஆனால் பாமரசனங்கள் அப்படித்தான் கூறித்திரிகிறார்கள். 1990 வரை பிள்ளைமார்கள் தங்கள் நிலங்களை, வீடுகளை விற்கவில்லை. அவற்றில் பயிரிட்டு கொடுக்கூர் மக்கள் குத்தகையை ஒழுங்காகக் கொடுத்து வந்திருக்கிறார்கள். சமூக உறவுகளில் குழப்பம் எழவில்லை.

உண்மையில் நாவல் வெறும் கதை சொல்லல் மட்டும் தானா? ஆறுமுகம் என்ற நாட்டாரின் கதையை மட்டும் கூறிவிட்டுப் போய்விடலாம்தான். கானல்காடு இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கால மக்களின் வாழ்நிலையை, சமூக பொருளாதார நிலையை, திணைக்கூறுகளின் நிலைமையை தெளிவாகச் சொல்லுகிறது. யதார்த்தவாத நாவல்கள் நாட்டார் கலை வடிவங்களின் சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. இங்கே சிலம்பாட்டம், புலியாட்டம், காளியாட்டம், நாட்டார் பாடல்கள், விடுகதைகள் அவற்றின் தனித்தன்மையோடு இயைந்து வருகின்றன. தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் நாட்டாரை தப்பவைக்க முகமூடிகளாக மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். வேர்களைத் தேடிப்போகும் பண்பாக இவற்றை கருதலாம். தமிழ்வாழ்வை மக்களின் உணர்வுகளோடும், வலியோடும்கட்டுக்கோப்போடும் இரசனையோடும் பேசுகிறது நாவல்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை மிகுந்த வலிமையோடு பேசுகிறது நாவல். நாட்டார் தீர்த்து வைக்கும் சில வழக்குகளில் உறவுச்சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள் போலத் தோன்றலாம். அவற்றினடியே புதைந்து கிடக்கும் சமூகச் சீரழிவு, பொருளாதார பிரச்சினைகளோடு புரிந்துகொண்டு தீர்க்கும்போது வாசகன் நெகிழ்ந்து போகலாம். நாவலின் மொழி அதுவல்ல. ஒரு நல்ல வாசகனால் எதிர்காலம் குறித்த கருத்தியல்களையும் புரிந்து கொள்ளலாம்.இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழியை, கதை மாந்தர்களின் பேச்சு வழக்கில் மட்டுமே காணமுடியும். நாவல் முழுக்க நாட்டான் நடமாடும் திணை சார்ந்தே பேசப்படும். நாட்டார் ஒடுக்கப்பட்ட ஒரு இனக்குழுவின் அடையாளம் எனினும், இனக்குழுவின் பெருமை ஓரிடத்திலும் இல்லை. அவ்வினக்குழுவின் வீழ்ச்சிக்கு இனக்குழுச் சமூகமே காரணம் என்பதை நாவல் முழுக்க ஆய்வுக்குட்படுத்துகிறார். அவற்றை புரிந்துகொண்டாலே தெளிவு பிறக்கும்.

பதிமூன்று ஆண்டு  கால தலை மறைவு வாழ்க்கையில் நாட்டான் சந்திக்கும் தனிமை, அச்சம், பயத்தின் விளைவாகத் தோன்றும் கோபம், சூழ்ந்திருக்கும் வெறுமை மிக நுட்பமாக விவரிக்கப்படுகிறது. அவர் எதிர்கொள்ளும் மக்கள் ஆறுமுகத்தை உயர்வான இடத்தில் வைத்தே பேசுகின்றனர், நடத்துகின்றனர். உழைக்கும் மக்களின் மனப்பாங்கு தங்களின் ஒருவனாகவே கருதச்செய்கிறது. ‘போடா, ஒனக்குன்னு தனி ஓலையா வைக்கிறோம்’ இந்த ஒட்டுதல் தான் தலைமறைவு வாழ்க்கையைச் சலிப்பில்லாமல்  நடத்த உதவுகிறது.

நாட்டானை நாட்டானாகவே பார்க்க முடிந்தவர்கள், நாட்டான் என்று அதிகார மையத்தை சிதற வைப்பவர்கள் வெளியுலகப் பெண்களே. கலாவின் சமவயதுத்தோழன். இளம் பருவ காய்ச்சலுக்கு உள்ளாகிறாள். மணமாகி விட்டது தெரிந்ததும் மதம் மாறிவிட்டாள். ஆனால் நாட்டான் கலாவை எழுத்தறிவித்த குருவாகவே எண்ணுகிறான். நாட்டார் வம்சக்கொடி அவன் உடலைப் பின்னிப் பிணைத்துவிடுகிறது. சுந்தரவல்லி வயதில் பெரியவள். பாலா ஒருசில ஆண்டு மூத்தவள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வழித்தவறிப் போகும் பாலா, ஆறுமுகத்திடம் உலக நடப்புகளைப் பற்றி பேசும் பேச்சுக்கள் வலிநிறைந்தவை. முள்ளால் கீறிய இரத்தகசிபவை. அவளுக்கு ஆறுதலாக உடலை தட்டிக்கொடுப்பதில் காமம் இல்லை. வலியை பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறான்.அவளுக்கு உதவும் பொருட்டு  பிள்ளைமார்களிடமே உதவிகோரிச் செய்கிறான். திருப்பனந்தாள் மாணிக்கம் பிள்ளை, ராயநல்லூர் வேலாயுதம் பிள்ளை, நாகூர் வடிவேல் பிள்ளை போன்றவர்கள் ஆறுமுக நாட்டானின் பண்பை புரிந்து கொண்டவர்கள். கேட்கும்போதும் கேளாதபோதும் ஆறுமுகத்திற்கு பண உதவி செய்பவர்கள். இனத்துக்காரன், குறவன், இஸ்லாமியர் எவரும் தாராளமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவுகிறார்கள். அவரும் அவரது தந்தையும் செய்த உதவிகளை மறந்துவிடவில்லை எவரும்.

பாலியல் ஈர்ப்பில் வழிதவறிச் சென்றுவிடத் துணியும் அனைத்து இனப்பெண்களையும் மீட்டுத்தந்தவர் என்பது மேட்டுக்குடி மக்கள் அவர்மீது மதிப்பு வைக்கக் காரணம். நேர்மையும் நாணயமும் வேறுகாரணம். கதைநாயகன் பார்வையிலேயே சொல்லப்படும் கதையே பெரும்பாலாக சில இடங்களில் துணைப்பாத்திரம் மூலமாகவும் கதை சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் மனஉணர்வுகளைப் பேசுவது கவிதை தன்மை நிறைந்ததாக உள்ளது. அவை உழுகுடிச் சமுதாயத்தின் தொன்மையான பண்பாட்டுச் சித்திரங்கள். இவ்வகை கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்தும் உத்தி.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை எழுதும்போது எழுத்தாளனுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை. ஒருசில பாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பினும், அவையும் அடையாளம் காணக் கூடியவையே. பிறபாத்திரங்களின் மூன்றாம் நான்காம் தலைமுறை வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கையில் எழுத்தாளனின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கேட்டு, அனுபவித்து அவர்களுடன் உரையாடி எழுதும்போது எழுத்துக்கான சுதந்திரம் பறிபோய்விடுகிறது. தான் சொல்லவந்த காலத்தை மிகச்சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாகப் பதிய வைத்ததன் மூலம் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற விபத்திலிருந்து சுவாரசியமாக தப்பிவிடுகிறார்.

நாவல் எழுதும் போது நக்கீரனில் ஒரு கட்டுரை வருகிறது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தனது வேட்டைத் துப்பாக்கியை ஆறுமுகம் பிடுங்க முயற்சித்ததாகவும், தான் பயந்துபோய் போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் சொல்கிறார். கவிஞர் பழமலைக்குக் கூட வருத்தம் அந்நிகழ்ச்சி நாவலில் இடம்பெறவில்லையே என்று. அவர் 2009 இல் தனது 98 ஆம் வயதில் இறந்து போகும்போது அவர் பிறந்த வருடமே நாட்டார் கைது செய்யப்பட்ட காலம். நாட்டார் கொல்லப்படும் போது அவருக்கு 13 வயதுதானிருக்கும். இவ்வாறு பொருத்தமில்லாததை எவ்வாறு சேர்க்க முடியும்? வடலூரில் ஒரு பெரியவர் நாட்டார் பெருமாளை வெட்டிய கத்தியை தான்தான் வைத்திருந்ததாகக் கூறினார். அவரது வயது 79 (2008). வயதை ஒட்டிப் பார்க்கும்போது நாட்டார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே அவர் பிறந்திருக்க வேண்டும். நாட்டாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்க பலருக்கு வாய்ப்புண்டு. கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு தன்னையும் கதைக்குள் திணித்துக் கொள்ளும் கற்பனை எல்லா மனதிற்கும் உண்டு. ஒரு ஆய்வாளன் பலதையும் யோசிக்காமல் எழுதிவிட முடியாது.

தன் நிலம் பறிபோன கோபத்தில் பெருமாளை கொன்றுவிடத் துடிக்கிறார் ஆறுமுகம். அவரது முடிவை ஒன்றரையாண்டுகள் தள்ளிப்போட வைக்கிறது காசியின் பேச்சு. போ நாட்டாரே போ. உனக்கிருக்கிற ஆத்திரத்திலே பெருமாளை வெட்டிட்டு வா. அங்க ஒங்கப்பன் வீட்டு போலிசு கையக் கட்டிக்கிட்டுத்தானேயிருக்கும்? உனக்கு குறிவைச்சுட்டு ஊர்சனங்களையே அலங்க மலங்க அடிச்சிட்டிருக்கானுங்க அவங்களை இன்னும் சிரமப்பட வச்சுப்பாரு. ஒனக்கும், ஒங்க அப்பனுக்கும் நீங்க நினைக்கிறது நடக்கணும். ஊர்சனங்க என்ன நினைச்சாலும் துயரப்பட்டாலும் கவலையில்லே. அதையெல்லாம் பார்க்கிற புத்தியுடையவனாய் இருந்தா சரணடைஞ்சிருப்பியா? போ வெட்டிப்போட்டுட்டு வா. இதுவரையிலும் ஒன் சுகதுக்கத்திலே பங்குபோட்டுக்கிட்ட என்னையும் மத்தவங்களையும் காட்டிக்கொடு. அப்புறம் ஆகிறது ஆகட்டும். கௌம்புப்பா கௌம்பு. காசியின் சாதுரியமான பேச்சு கட்டிப்போடுகிறது. ஆத்திரம் அடங்க மனைவி நீலாவிடம் அனுப்பும் காசி கூறுவது மிக யதார்த்தம். ‘நம்பி வந்தவளுக்கு நீங்க வெறும் சூனியம். வீட்டிலே அமைதியிருந்தா தான், ஊருமெச்சுறதிலேயும் அர்த்தம் இருக்க முடியும். வீட்டிலே மனநிறைவு கிடைக்காதவன்தான் வெளியிலே ஆத்திரமா செயல்படத் தொடங்குவான்’  பாலியல் சம்பந்தமான ஒரு நுட்பத்தையும் கூறுகிறான்.

தான் கொல்லப்படக் கூடும் என்றுணர்ந்த பெருமாளின் நிலையையும் தெளிவாக சித்தரித்துள்ளார். ‘மனுச சென்மம் ஒரே நிலையில்  நிலைக்க முடியாது. ஏற்றமும் இறக்கமும் மாறிமாறித்தான் வரும். நாட்டான் ஒனக்கு சரிவு காலம் எப்பவோ தொடங்கிருச்சு. சினேகமும் விரோதமும், துக்கமும் சந்தோஷமும், சதிச்செயலும் மன்னிப்பது எல்லாமே மாறிமாறி நடக்கும். அது ஆட்டத்தோட விதி’.

இரண்டாவது கொலை கொளத்தூர் இராமச்சந்திரன். தன்னை போலிசில் காட்டிக் கொடுத்துவிட்டான் என்று ஆத்திரம். இராமச்சந்திரனுக்கு ஏற்படும் நெருக்கடியையும் ஆசிரியர் முன்வைக்கத் தவறுவதில்லை. கொலைக்கு முன்னால் தன்னிடம் வரும் ஆறுமுகத்திடம் குமாரசாமி கூறுவதைப் பார்ப்போம். ‘அவனை போலிஸ் மிரட்டியிருக் கலாமில்லே? ஆசை வார்த்தை காட்டியிருக்கலாம். பணம் தரக்கூடச் செய்வாங்க. தன்னாலே முடியாததை தந்திரத்தாலே முடிக்கிற சூழ்ச்சித் திறன் மிக்கவன் ஆங்கிலேயன். வெறுமனே சந்திரனை மட்டும் குறையா எண்ணக்கூடாது. என்ன நடந்ததுன்னு முழுசா விசாரிக்காம தவறான முடிவுக்கு வரக்கூடாதுப்பா என்கிறார். நாட்டார் நிதானமிழந்து செய்துவிட்ட கொலையாகவே சித்தரிக்கப்படுகிறது.

அடுத்த பட்டம் பக்கிரியின் கொலை. கொலைவெறியுடன் துரத்தும் அவனிடமிருந்து தப்பிக்கவே நண்பர்களுடன் முயற்சிக்கிறான் ஆறுமுகம். தஞ்சை கலெக்டரிடம் பணம் வாங்கியவன்தான். அவன் தனது  நண்பர்களைப் பார்த்து சுடுவது பொறுக்காமல் அவனது துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொன்றுவிடுகிறான். மனம் சோர்ந்து விசும்புகையில் ஆறுமுகம் சொல்வதைப் பார்ப்போம்.‘கலா சொன்ன கதையில வரமாதிரி தம்பி அண்ணனைக் கொன்னுட்டான். காயின் மனதிலெழுந்த பகைமை, பயங்கரம் எலும்புத்துண்டே ஆயுதமா மாறி அபெலைக் கொன்னுடுத்து. இங்கே எலும்புத்துண்டுக்கு பதிலா மரக்கட்டை. ஏனிந்த வன்மம் என்மீது கவியணும்?  சகோதரனைக் கொல்கிற வன்மம் எனக்குள்ளே எப்படி நுழைஞ்சது?’ கழிவிரக்கத்தில் கரைகிறான்.

‘அது உன்னுள்ளேயும் இருக்கு, என்னுள்ளேயும் இருக்கு. எச்சில் பால் உண்ணும்போதே வன்மமும் ஊட்டப்படுகிறது. அது வெளிப்படாமல் போயிடணும். உனக்கு இந்நேரத்திலே வெளிப்பட்டிருக்கு. நடந்தது நடந்து போச்சு எழுந்து வருவியா?’என்கிறான் காசி. சூழ்நிலையில் இறுக்கத்திலிருந்து அச்சமயம் விடுபட காசி அப்படித்தான் பேசியாக வேண்டும். அவனுக்கும் உடன்பாடில்லை. எப்படியாவது மீட்டெடுக்க முயல்கிறான். தா.பழூரைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் நிறுத்தி நிதானமாக வாசிக்கும் போது பல விஷயங்களை விளக்கும். (கள ஆய்வின்போது பல ஊர்களுக்கு ஆசிரியருடன் சென்று பலமக்களுடன் உரையாடினோம். அவர்கள் மனதில் நாட்டானைத் தெய்வமாகவேக் கருதும் மனநிலையை உரையாடும்போது அறிந்தோம்)

இந்த தர்க்கத்தின் கொடுமுடியை கொடைக்கானலில் பொன்னுத்தேவர் பேசுவதைப் பார்க்கலாம். ‘உன் முகமூடி பறக்கும். என்ன சொன்னே? பிறந்த சாதிக்கு துரோகம் செய்யுறவன் என்ன மனுசப்பிறவி. உண்மையான வார்த்தை. நானாவது சொந்த இனத்திலே திருடினேன். பொருள்தான் நஷ்டம். அவங்க சமாளித்து எழுவாங்க. நீ சொந்த சகோதரன் இரத்தத்தையில்லே குடிச்சிருக்கே… அவங்க குடும்பமே நிர்மூலமா போயிடுமே’‘தேவர் அப்படியில்லே, அவங்க எனக்கு துரோகம் செய்தாங்க’

‘என்னத் துரோகம்? ஒனக்கு மட்டும் உயிர் கெட்டியாய் இருக்கணும். அதுக்காக இனத்துக்காரனையே அழிப்பே… நாம ஒருவரில் சகோதரனைக் காண்கிறோம். இல்லே அன்னியர்கள் நிறைந்த உலகத்திலே வாழ்ந்துகிட்டிருக்கோம். அன்னியருன்னு யாருமே கெடையாது. நான் என் சகோதரனைக் காத்துவரணும். பஞ்சகாலத்திலே கஞ்சித்தொட்டி வச்சதும், இப்போ யுத்த காலத்திலே ரேஷன்கடை பிறந்ததும் அன்னியனுடைய சகோதர வாஞ்சை: மன்னிக்க முடியாததில்லே மனுஷ சுபாவம். மன்னிக்கத் தெரிஞ்சவனுக்குத்தான், மன்னிப்பின் மகத்துவம் புரியும். ஆமாம் மண்ணைவிட்டு, வேரைவிட்டு துரத்தப்படுவதற்கு அவர்களா காரணம்?’ மேலும் பொன்னுத்தேவர் கூறுவதைப் பார்க்கலாம். காயின் ஏன் அபெலைக் கொலை செய்தான்? அவன் மீது பொறாமைன்னு சொல்லிவிட முடியாது. இருவரும் மனம்திறந்து பேசிக்கலே.மனுசன் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசணும். ஒருவருக்கொருவர் உண்மையாகவும், நேர்மையாகவும், மரியாதையோடும் உரையாடிருந்தா சகோதரனைக் கொலைபண்ண மனம்வராது. எங்கு பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் விரவியிருக்கு. எல்லோருக்கும் சகோதரனாக முடியும். இன்று சகோதரனை அன்னியனாகக் கருதி கொன்னுட்டே. நாளைக்கு அவன் சிந்திய இரத்தம் விதைகளாய் மாறி, வனமாய் வளரும். சகோரத் துரோகம்தான் கோரையாய் மாறி கண்ணனை அழிச்சுது.

நாவல் இங்கே முடிந்து போயிருக்கவேண்டும். நாட்டானின் மனவெறுமையும், பாலைத்தன்மையும் தான் கானல்காடு. கானல் வீசும் பொட்டல்காடு மட்டுமே  கானல்காடல்ல. நாவலின் மையம் இங்கே நிறைவுறுகிறது. மக்கள் நினைத்துக் கொண்டுள்ள நாட்டானின் அகம் பற்றிய பிம்பம் இங்கே உடைந்து சிதறுகிறது. வரலாறு நாவல் என்றால் வெறும் சம்பவக் கோர்வையல்ல. இவ்வேளையில் தமிழ்நாடன் தன் முன்னுரையில் கூறுவதை நினைவிற்கொள்ள வேண்டும். வரலாறு நிகழ்த்தியவர்களுக்கோ நிகழும்போது இருந்தவர்களுக்கோ சொந்தம் இல்லை. வரலாறு தன்னை ஆக்கியவர்களையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. நிகழ்ந்த காலத்தவர்க்கு உரிமையற்றுப்போன வரலாறு, நிகழ்காலத்தவர் வழியாக நாளை வாழ்வார்க்குச் செல்கிறது. நிகழ்காலத்தவர் காலம் என்ன? அதன் பரிமாணம் அல்லது அளவு என்ன? நீர்க்குமிழிகளாக மறையும் நொடிகள் ஓடை நீராக ஓடும் நாட்கள். அருவி நீராக இழையும் ஆண்டுகள். உடைந்த மனதுடன் சன்னியில் பிதற்றும் ஆறுமுகத்திடம் சுந்தரவல்லி கூறுகிறாள்.

‘என்னோட ஆறுமுகம் கல்மனம் படைச்ச ஆம்பளைன்னு நெனைச்சிருந்தேண்டா. இப்படி திடீருன்னு ஒடைஞ்சுப் போயிடுவேன்னு நெனைக்கலே. பாவியாயிட்டேன்னு நீ பொலம்பலாம். ஒன்னாலே  எப்போதும் பாவம் செய்ய முடியாதுடா. அப்படியே செய்திருந்தாலும் அதுக்கு ஒரு காரணமிருக்கும். காரணமில்லாம எதையும் செய்யமாட்டான் என்கண்ணு. நீ சொல்றத நம்பறதுக்கு நான் தயாரில்லே. தூங்கு கண்ணு’ என்று ஆற்றுப்படுத்துகிறாள். இதுதான் நாட்டான் என்ற பிம்பம் மக்களின் மனதில் உறைந்து கிடக்கும் பிம்பம். உண்மை வேறு. உண்மையை நம்ப மறுப்பது கூட நமது பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடக்கிறது.

கலைப்படைப்பில் மானுடச்சித்தரிப்பு என்பதுதான் என்னவாக இருக்கும்? தனது தேர்ச்சியின் மூலம் ஆடும் மொழிவிளையாட்டுத்தான் என திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. மொழியின் வழி கலைஞன் தனது படைப்பில் உருவாக்கும் அறியப்படாத மனித அறம்தான் கலை மேதமை என்றும் சொல்லப்படுகிறது. அதிகாரமும், ஒடுக்குமுறை உணர்வும், பழிவாங்கும் வெறியும் கொண்டவர்களிடமிருந்து கலியாணி ஆச்சியை மீட்டெடுப்பது அறியப்படாத மனித அறம்தான். பிரதிபலனாக அவரிடம் பாலியல் எழுச்சி உருவாவது இயற்கை. அதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தாதது மனித அறம்.

பாலுறவு சித்தரிப்பு என்பது கலைஞர்களை கவிழ்த்துப்போடும் மலைஉச்சி. மானுட உறவும் அதன் நெகிழ்ச்சியும் பரவசமும் கொண்டது பாலுறவு அனுபவம். தனிமையும் சுயபச்சாதாபமும் நிறைந்த கலங்கும் ஆறுமுகத்திற்கு சுந்தரவல்லியிடம் ஏற்படும் முதல் தொடர்பு இவ்வகையான நெகிழ்ச்சியான தருணம்தான். மனதளவிலும் சோர்ந்தும், விடுதலையை நேசிக்கிற அதிகாரமற்ற ஏழைகளிடமும் கலவியென்பது வலி மீட்சியாகவும், ஆண் பெண் சங்கமத்தின் ஆன்மீக விடுதலையாகவும் சித்தரிக்கப்படுகிறது. தனிமனிதர்களின்  அவல வாழ்வு குறித்த சித்தரிப்பு கலவி குறித்த இந்தத் தரிசனம் மிக இயல்பாக நமக்குள், நமது வாழ்வில் ஒரு மந்திரம் போல் இறங்குகிறது. சகலவிதமான ஒடுக்கு முறைகளிலிருந்தும் ஆன்மாவும் உடலும் விடுதலை பெறவேண்டும் என்று நினைக்கிற கலைஞனால் சாத்தியமாயிருக்கிறது.

காலனியாதிக்கம் என்பது எப்போதுமே ஒரு நாட்டில் உள்ள சகோதர சக்திகளை பகைச் சக்திகளாக்கி அவர்களை மோதவிட்டுத் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும். இந்தியாவில் முன்பேயிருந்த ஆதிக்கசக்திகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு அவர்கள் மூலம் தன்னை நிலைநாட்டிக் கொண்டது. பகை சக்திகள் பெருமாள் கொலை வரையிலும் செயல்பட்டு பின் விலகிவிட்டனர். பின் அதிகார சக்திகளிடம் சென்றுவிடுகிறது. அவர்கள் விரிக்கும் தந்திரமான சூழ்ச்சி வலையில் கொலையாளிகள் இருவர் சிக்கி விடுகின்றனர். ஒரு தந்தையைபோல் கவனம் கொண்ட குமாரசாமியே கூற நேரிடுகிறது. ஐந்து வருடம் தலைமறைவா இருந்தியே அது உத்தமம். இன்னும் கொஞ்சகாலம் தலைமறைவா இருந்துடேன். யாரையும் நம்பறதை விட்டுடு. ஏன்னா நானே கூட மாறிடலாம். போலிஸ் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிஞ்சுதான் ஆகணும்.

ஆறுமுகம் தன்னிரக்கம் கொண்டு, உணர்ந்து விரக்தியோடு பக்கிரியிடம் பேசுவது தனது நிலையை உணர்த்துகிறான். நீயுள்பட என் நிலைமையை உணர முடியாது பக்கிரி.  வேலை, தூக்கம், ஓய்வு காமம் புத்துணர்வுன்னு பழகிப்போன தடத்திலேயே வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க. தனிமை, போராட்டம், ஓட்டம், ஏமாற்றம், துரோகம், பழிவாங்கல், பின்னே தன்னையே மறந்துபோன சின்னச்சின்ன ஆறுதல். அவைதான் வாழணுங்கிற வெறியை உண்டாக்கும் கணங்கள். இருமனிதர்களுக்கிடையே கவுரவத்தை காப்பாற்றிக்க ஒரு எல்லையிருக்கு. உலகத்தில் நடைமுறைக்குச் சில நியதிகள் இருக்கு. மீறிட்டுப் போகமுடியாது. சட்ட வலையிலிருந்து விடுபட ஒரு சட்டப்பூர்வமான நடத்தை வேணும். ஆனால் சட்டம் அதிகாரம் உள்ளவனுக்கு சாதகமாகவே எப்பவும் இருக்கு. இப்பேச்சு வெளிப்படும் தருணம் கூட தண்ணியில் விழும் தருணம். முதல் கொலையாளியான சின்னராமசாமியின் வாக்குமூலத்தில் பகையுணர்வு இல்லை. எல்லாமே வரம்பு மீறிப்போயிடுச்சு, அவங்களே நினைச்சாலும் திரும்பப் பெறமுடியாது. தானியமா,தவசமா கொட்டிட்டு அள்ளிக்க? மானப்பிரச்னை, தன்மானப்பிரச்சினை. நாட்டான் போராடுறான். அரசாங்கமே அவன் உயிரை எடுக்கத் துடிக்கிறது. எல்லாமே கைமீறிப்போச்சு. தூண்டிலுக்குள்ளே மாட்டிக்கிட்டாச்சு. மீனு துடிச்சு என்னவாகப்போறது? சட்டிக்குள்ளேதான் கொதிச்சு ஆகணும். ஆசை யாரை விட்டது. சொத்து மோகம் யாரை விட்டது. தனது நிலைமையையும் சேர்த்தே சொல்கிறார்.

வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் கதையை, தமிழ்தேசத்தின் வேறுவேறு பிரதேசங்களுக்கும் மொழியின் இருளடர்ந்த நுண் பரப்புகளுக்கும் ஊடே சென்று ஆசிரியரால் கொண்டுவர முடிகிறது. சமூக அமைப்பின் தோற்றுவிட்ட ஏழைத்தனிமனிதர்களின் வாழ்வின் துயரங்களிலிருந்து அவர்கள் தம்மளவில் மீட்சிபெறுவதற்கான சாத்தியங்களின் தேடலாக எழுகிறது நாவல். வரலாறும் மரபும் தம்மீது சுமத்திய அரசியல் அமைப்பின் முன் தோற்றுப்போய்க்கொண்டிருக்கும் தனிமனிதர்கள் தம்மீதான சுமைகளை உதறியபடி தமது விடுதலையை அடைவதற்கான சாத்தியங்களை மறைமுகமாகச் சுட்டிச் சொல்கிறது நாவல். எழுத்தின் எவ்வடிவமாயினும் ஒரு ஆளுமையாக கலைஞன் மலர வேண்டும். ஒரு கலைஞன் தனது தொடர்ச்சியான தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது தேடல்களை, தரிசனங்களை, தர்க்கங்களை தன்மொழிக்குள் கொண்டு வருவதன் மூலம் அம்மொழியின் ஒட்டுமொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவதன் சாத்தியமாகும். இந்நாவல் ஆளுமை நிறைந்த எழுத்தாகும். அவ்வகையில் தேர்ந்த படைப்பு கானல்காடு.

நாவலின் முன்னுரையில் தமிழ்நாடனின் தரிசனத்தோடு நிறைவு செய்யலாம். ‘மரணம் வரை நீளும் நாவலின் ஒவ்வொரு பக்கத்தை தாண்டும் போதும் ஆறுமுகம் அகப்பட்டு விடக்கூடாது என்று அங்கலாய்க்கிறது மனசு’. ஆறுமுகத்தின் அவலவாழ்க்கையை அழியா இலக்கியமாகப் படைத்திருக்கிறார் தெய்வசிகாமணி. சுலபமான எழுத்து, சந்தோஷமான வாசிப்பு என்பதே காலப்போக்கு. இதை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறார் அவர். யூத மற்றும் ஆப்பிரிக்க, அறிவு ஜீவிகள் தங்களின் வேர்கள்  பட்ட காயங்களை தங்கள் விழுதுகள் அறியவேண்டும் என்று, தேடித்திரட்டி ஆராய்ந்து தருகிறார்கள், கவிதை, நாவல், சினிமா என்று பலவடிவங்களில். அப்படி நம் இன மீட்சிக்கான இலக்கியமிது. கானல்காடு ஒவ்வொரு கிராமத்திலும் படிக்கப்பட வேண்டும், படித்துக்காட்டப்பட வேண்டும். அத்தகையதொரு வாசிப்புக்கு வாய்ப்புக் கோருகிறது மனம். எனில் நம்மக்களின் அறியாமை அகன்று அறிவு ஒளிவிடத்தொடங்கும். தமிழ்நாடனின் சொற்களை வழிமொழிவதை விட, வேறு மதிப்பீடு என்னிடம் இல்லை.

நவீன இலக்கியத்தின் படைப்பாளிகள் தங்கள் சுய அடையாளங்களை மீள் பரிசீலனை செய்வது, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவே. தங்கள் பூர்வ குடிமகனின் இன்றைய வாழ்நிலையை மேம்படுத்தவும் அவர்களின் கலாச்சாரப் பங்களிப்பை உறுதி செய்யவும், காப்பாற்றவும் போராடுவதுதான் எழுத்தாளனின் கடமை. மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து நாவலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் தனிமனித வழிபாடு கவைக்குதவாது. பிரச்சனைக்கு தீர்வை சொல்லுவது எழுத்தாளனின் வேலையில்லை. வாசகன் தான் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளனின் செயல்பாடு அரசியலில், அரசியல்வாதியின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எழுத்தாளன் அரசியலை அதன் அறவுணர்வு, அழகியல் உணர்வு போன்ற தளங்களிலிருந்து எதிர்வினை கொள்கிறான். அரசியல் எதிர்வினை என்பது கேள்விகளாகத் தொடர்ந்து படைப்பாளர்களால் வெளிப் படுத்தப்பட்டு வருகிறது.அரசியலில் கேள்விகளை விட தீர்வுதான் முக்கியம் என்ற நிலைப்பாடு இருக்கிறது. அரசியல் தீர்வுகள் பலமுறை அதிகாரத்தினை மட்டுமே உருவாக்குவதால், படைப்பாளர் தேர்ந்தெடுக்கும் தீர்வு அதுவல்ல. சமூக, பண்பாட்டு, பொருளியல் தளங்களின் இயங்க வேண்டும் என்பதே படைப்பாளனின் விருப்பம். கானல்காடு நாவல் இத்தளத்தில் இயங்கும், தனுத்தன்மை மிகுந்த படைப்பு. வாசகன் அணுகும் முறைக்கேற்ப தீர்வினை கண்டறியலாம். எழுத்தாளன் வெறும் கோஷங்களை எழுப்புவதோ அல்லது கோட்பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டு விமர்சனப் பார்வையின்றி எழுதுவதோ இல்லை. எழுத்தாளனின் அரசியல் பார்வையை  வாசகன் தான், தனது உள்வாங்கும் திறனால் கிரகிக்க வேண்டும். அனைவரும் படித்து சுய விமர்சனம் தேடும் படைப்பு கானல்காடு.
—————–

Series Navigationநான் ‘அந்த நான்’ இல்லைநிதர்சனம் – ஒரு மாயை?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *