This entry is part 18 of 32 in the series 3 பிப்ரவரி 2013

டாக்டர் எல் கைலாசம்

சமீபத்தில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் வண்ணப்படத்தை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கத்தில் பார்த்தேன். படத்தை திரையிடக்கூடாது என்று ஒருபுறமும், திரையிட்டே ஆகவேண்டும் என்று மறுபுறமும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கேரளா காவல் துறையினர் பாவம் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மீடியா உழைப்பாளிகள் கேமராவுடனும் கையில் மைக்குடனும் திரை அரங்கின் வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். உண்டு கொழுத்த மோப்பம் பிடிக்கும் நாய்களுடன் கடின முகத்துடன் சிறப்பு காவலர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். எதற்கு இத்தனை பாதுகாப்பு என்பது புரியவில்லை. தமிழ் நாட்டில் படம் இன்னும் வெளியாகாத்தால் பல இளைஞர்கள் அருகிலிருந்த தமிழக நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்து வந்திருந்தார்கள். இன்னும் ஒரிரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் திரையிடப்படலாம். அதற்குள் ஏன் இத்தனை அவசரம் என்பது புரியவில்லை.

 

ஆங்கிலப்படம் போல பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க படைகள் தேடியதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்பனைக் கதை. முழுக்கதையும் அமெரிக்காவிலும் ஆப்கானிலும் நடப்பது போன்றே அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான காட்சிகளும் திருப்பங்களும் உடைய கதை. பல முறை யோசித்தும் கமலஹாசன் வில்லனிடம் இருந்து எப்படி தப்பி அமெரிக்கா போனார்? எப்பொழுது கோழி சாப்பிடும் சின்னமாமியைத் திருமணம் செய்து கொண்டார் என்பதெல்லாம் புரியத்தான் இல்லை.

பூஜாகுமார், ஆண்டிரியா மற்றும் நடித்துள்ளனர். அருகிலிருந்த என் கேரளத்தோழி ”நாசர், நாசர் நோக்கு” என்றாள். எனக்கு ,கமலஹாசனைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியவில்லை. வேறு மொழியில் பேசுவதால் என்ன பேசுகிறார்கள் தமிழில் சப் டைட்டில் போட்டாலும் புரியத்தான் இல்லை.

 

இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பகுதி வர இருப்பதாக படத்தின் கடைசிப்பகுதியை பார்த்தபோது எனக்கு புரிந்தது. ஆனால் புரியாதது கமலஹாசன் தன்னையும் வருத்தி இத்தனை பொருட்செலவில் இதை ஏன் எடுத்தார் என்பதும், இரண்டாம் பகுதிக்கு என்ன அவசியம் என்பதும்தான்.

கிராமத்து ஜன்ங்களுக்கு மொழியும் கதையும் புரியுமா என்பது சந்தேகமே. சினிமாக்கார்கள் சொல்லும் ஸி செண்டரில் இந்தப் படம் வெற்றிமாக ஓடுமா? எனக்கு புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று.

அலுவலக தொழில் பிரச்சனைகழளிலும் வீட்டு பிரச்சனைகளிலும் பல மன வேதனைகளை அனுபவித்து கொஞ்சம் அவற்றை எல்லாம் மறந்து இருக்கலாம் என்று நினைத்தவன் ஏமாந்துதான் போனேன். மைக்கேல் மதன காமராஜன் அவ்வை சண்முகி போன்ற கமலஹாசனின் திரைப்படங்கள் மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைந்து அளித்த மகிழ்வை இந்தப் படம் ஏன் கொடுக்கவில்லை என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்.

Series Navigationசெவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)