வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்

This entry is part 11 of 29 in the series 28 ஏப்ரல் 2013

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)

அங்கம் -2 பாகம் -7

மூன்று அங்க நாடகம்

 

Cover image

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவை யோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

Fig 1 He will be thinking more of his danger

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமை யிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

Fig 2 I would better wear his own coat

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப் பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

Fig 3 yes they made a mistake

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [50 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [55 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -2 பாகம் -7

மூன்று அங்க நாடகம்

 Fig 4 It does not matter

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  பாதிரியார் இல்லம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  ஒரு நாள் இலையுதிர் காலத்து இரவு நேரம்.

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர்ப் புறத்தின் முக்கிய வீதியில் உள்ள பாதிரியார் ஆண்டர்ஸனின் இல்லம்.  டச்சியான் வேளாண்மைக் குடில் வீட்டை விட எடுப்பாய் இருக்கும்  நடுத்தரக் குடுப்பத்தினர் இல்லம்.   வீடு சற்று இருட்டாய் உள்ளது.   வெளியே மங்கலான தெரு விளக்குகள் ஜன்னல் திரை வழியே தெரிகின்றன.  மழை பெய்து கொண்டிருக்கிறது வெளியே.  ஜூலியா கையில் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்து மேஜையில் வைக்கிறாள்.   அவள் முகத்தில் பயம் காணப் படுகிறது.  ஜன்னல் வழியாக எட்டி நோக்கும் போது, அவளது கணவன் வழியில் நனைந்து,  வீடு நோக்கி விரைந்து வருவது தெரிகிறது.  பெரு மூச்செடுத்து கதவைத் திறக்கிறாள்.  மழை நீர் சொட்டச் சொட்டப் பாதிரியார் ஆண்டர்சன் உள்ளே நுழைகிறார்.   அடுத்து அழைப்பின் பேரில் ரிச்செர்டு டச்சியான் வருகிறான்.   ரிச்செர்டு உயிருக்கு ஆபத்து உள்ளதென்று ஆண்டர்சன்  எச்சரிக்கை விடுக்கிறார்.   ரிச்செர்டு தனக்கில்லையென மறுத்து ஆண்டர்சனுக்குத்தான் ஆபத்து வரப் போகுதென்று எச்சரிக்கை செய்கிறான்.  அப்போது கிரிஸ்டியான் வந்து தன் தாயிக்கு உடல் நலமில்லை, பாதிரியாரைப் பார்க்க விரும்புவதாய்ச் சொல்கிறான்.  பாதிரியார் ரிச்செர்டை வீட்டில் இருக்கும்படிச் சொல்லி விட்டுப் போகிறார்.  அவர்கள் டீ குடித்து உரையாடிக் கொண்டிருந்த போது, இராணுவக் காவலர் வரும் கால்தட அரவம் கேட்கிறது.  ஜூலியா ஜன்னல் வழியாக இராணுவப் படைகள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.  ரிச்செர்டு முகத்தில் கவலைக் குறி தெரிகிறது.  பாதிரி ஆண்டர்சனைக் கைது செய்ய வந்த இராணுவ அதிகாரி யாரென்று தெரியாமல் ரிச்செர்டைப் புரட்சிக்காரன் என்று கூறிக் கைது செய்கிறார்.  சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற பாதிரியார் வேகமாக வீட்டுக்குள் நுழைகிறார்.   அடுத்து ரிச்செர்டைத் தேடி எஸ்தர் வருகிறாள்.  பாதிரியார் ரிச்செர்டைக் காப்பாற்றப் போவதாகத் தீர்மானிக்கிறார்.

 

*******************

Fig 5 You are adamant to go

ஆண்டர்சன்:   ஜூலியா !  எனக்கொன்றும் புரியவில்லை நீ சொல்வது.

ஜூலியா:  எஸ்தர் சொல்வதுபோல் ரிச்செர்டைக் காப்பாற்ற வேண்டும்.  ஆனால் அது முடியாத காரியம்.   இப்போது உங்களைக் காக்க வேண்டும் நான்.  அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்று !   நான் வெளியே சென்று உங்களைக் காப்பாற்ற முடியாது.  ஏனெனில் நான் ஒரு பெண்.   இங்கமர்ந்து அழுது வேதனை அடைவதை விட வேறெதுவும் நான் செய்ய  இயலாது.  நீங்கள் நினைப்பதையே செய்வீர்.  உங்களைக் காப்பாற்ற முயற்சி செய்தேன் என்பதே திருப்தி அளிக்கும் எனக்கு.

ஆண்டர்சன்:  ரிச்செர்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் முயல்வான்.  என்னைப் பற்றிக் கவலைப் பட மாட்டான் !

ஜூலியா:  போதும் நிறுத்துங்கள், உங்களை அறவே நான் வெறுக்கிறேன்.

ஆண்டர்சன்:   இந்த குழப்ப நிலையில் உன்னை எப்படித் தனியே விட்டுச் செல்வேன் ஜூலியா ?  பைத்தியக்காரி போல் பேசுகிறாய் !  [எஸ்தரைப் பார்த்து]  எஸ்தர் !  வெளியே சிறிது நேரம் காத்திரு !  ஜூலியாவிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.   உன்னிடம் பிறகு பேசுகிறேன் !  ரிச்செட்டைத் தேடிப் போகிறேன் நிச்சயம் !

எஸ்தர்:  நிச்சயம் அவரைக் காக்கச் செல்வீரா ?  [மெதுவாகக் காதில்] உங்கள் மனைவி தடுக்க மாட்டாளே !

ஆண்டர்சன்:  [புன்னகையுடன்]  இல்லை, இல்லை.  நீ போ !  நீ நல்ல பெண் இல்லையா ?

[எஸ்தர் போகிறாள்,  பின்சென்று ஆண்டர்சன் கதவைத் தாழிடுகிறார்]

ஜூலியா:  [கூர்ந்து நோக்கி]   தெரிந்து கொள்ளுங்கள் !  நீங்கள் போவது உங்கள் மரணத்தை நோக்கி !

ஆண்டர்சன்:   அப்படி யானால் நான் என் அழகிய கோட்டை மாட்டிக் கொண்டு போகிறேன்.   [கோட் தொங்கும் இடத்தை நோக்கி, ஆச்சரியமுடன்]  எங்கே என் புதிய கோட்டு ?  [நடந்து சென்று நாற்காலியில் தொங்கும் ரிச்செர்டின் கோட்டைப் பார்த்து]  என்ன ?  ரிச்செர்டு தன் கோட்டை விட்டுவிட்டு என் கோட்டை மாட்டிப் போய்விட்டானா ?

Fig 6 Did he realize his danger

ஜூலியா:  ஆமாம் !

ஆண்டர்சன்:   இராணுவக் காவலர் தவறு செய்து விட்டாரா ?

ஜூலியா:   ஆம், அவர் தவறு செய்து விட்டார்.

ஆண்டர்சன்:  ரிச்செர்டு தான் யாரென்று சொல்லி இருக்கலாம் !   அப்பாவிப் பயல் !  அவனும் குழப்பம் அடைந்துதான் போயிருக்கிறான்.

ஜூலியா:   அவனும் சொல்லி இருக்கலாம், நானும் சொல்லி இருக்கலாம் ! ஆனால் இரண்டும் ஏனோ நடக்க வில்லை !

ஆண்டர்சன்:  வேடிக்கையாய் இருக்கிறது !  இந்த மாதிரி நேரங்களில் எப்படிச் சிறிய செயல்களும் பெரிய வேலை செய்கின்றன !   அவன் என் கோட்டை அணிந்து போனது போல் நானும் அவன் கோட்டை அணிந்து வெளியே செல்கிறேன்.  “பாதிரியாரின்  இந்தப் புனிதக் கோட்டை அணிந்து நான் தூக்கு மரத்தில் மரித்தால் என் ஆத்மா கடவுளை அடையும் ,” என்று ரிச்செர்டு சொல்லிச் சென்றான்.

ஜூலியா:   ஆமாம் அப்படித்தான் உன்னிடம் சொல்வான் அவன்.  அதைப் பற்றி எனக்குக் கவலை யில்லை !  இனிமேல் நான் அவனையும் காண முடியாது !   உங்களையும் மீண்டும் பார்க்க முடியாது !  [அழுகிறாள்]

ஆண்டர்சன்:  இப்படி அழுவதற்கு நீ நாணப் பட வேண்டும் ஜூலியா !   வலுவற்ற மெழுகுபோல் உருகும் நீ ஒரு பலவீன மாதல்ல !

ஜூலியா:  இப்படித்தான் இருப்பாள் இந்த ஜூலியா !   உங்கள் மனைவி ஜூலியா ஒரு கோழைதான் !   இம்மாதிரி நெருக்கடியில் என்ன செய்வ தென்று தெரியாது அவளுக்கு !   ரிச்செர்டுக்கு அளித்த வாக்கை நான் நிறைவேற்ற முடியாது ! இப்போது என் சொல்லை மீறிச் செல்ல நீங்கள்  தயாராகி விட்டீர் !

ஆண்டர்சன்:  அப்படிப் பேசாதே என் கண்மணி !   ஏதோ நீ எனக்கு வஞ்சகம் செய்தது போல் வருத்தமுடன் நடந்து கொள்கிறாய்  !  மூடத்தனமாய்ப் பேசுகிறாய் நீ !  முழு மூடத்தனமாய் உளறுகிறாய் நீ !   [மனையின் முகத்தை உற்று நோக்கி]  உன்னைப் பயமுறுத்துவது என்ன வென்று சொல் கண்மணி !  என்னால் ஊகிக்க முடிய வில்லை கண்மணி !  கைது செய்யப் படும் போது தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினானா ரிச்செர்டு ?  சண்டை இட்டானா காவலருடன் ?

Fig 7 You cannot save him.

ஜூலியா:   இல்லை !  இல்லவே இல்லை !  அவன் புன்னகை பூத்தான் !  விலங்கிடும்படிக் காவலரை வேண்டித் தன் கரங்களை நீட்டினான் !

ஆண்டர்சன்:  தனக்கு என்ன நேரப் போகுது என்று அவன் உணர்ந்தானா ?

ஜூலியா:  ஆம் தனக்கு நேரப் போவதை அவன் உணர்ந்தான் !  அதுபோல் உங்களுக்கு நேரப் போவதையும் என்னிடம் சொன்னான் !

ஆண்டர்சன்:  [கூர்ந்து நோக்கி]  எனக்கா ? என்ன நடக்கப் போவுது ?

ஜூலியா:  ஆம் !  அவன் போகும் போது என் காதருகில் வந்து உங்களை நான் காக்க வேண்டும் என்று சொன்னான் !   நீங்கள் வெகுதூரம் போக வேண்டும் என்று கூறச் சொன்னான் !  என்னிடம் வாக்கு மொழி வாங்கிக் கொண்டான்  அதற்கு !  நான்  வாக்கைக் காக்க முடியாது, உங்கள் பிடிவாதத்தால் !   “எனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை அவர் அறியச் சொல்லாதே” என்றான்.   ஆனால் இப்போது நானதை உங்களுக்குச் சொல்லி விட்டேன் !    உங்களுக்குத் தெரிந்தாலும் அவனை மரணத்தி லிருந்து நீங்கள் மீட்க முடியாது என்று சொன்னான்.   அவனைத் தூக்கில் இடுவார் !  பாதுகாக்கப் போகும் உங்களையும் விட்டுவிட மாட்டார்.  அதுதான் என்  இதயத்தைப் பிளக்கிறது !

 

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 27, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationநள்ளிரவின்பாடல்பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *