ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்

author
12
0 minutes, 1 second Read
This entry is part 8 of 32 in the series 15 டிசம்பர் 2013

சுழியம்

தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன.

அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன.

நமக்கும் ஒரு இயல்பான கடமை இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் ஊடகங்களின் நோக்கங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டிய அந்த அறிதல் எனும் கடமையை, அறிவின்பம் இயல்பாகவே உருவாக்குகிறது.

இக்கடமையின் வழி இவ்விஷயத்தில் பல்வேறு தரப்புக்கள் குறித்த புரிதலை நாம் அடையவேண்டும்.

எதிர்ப்பவர்களே இந்த விவாதத்தை உருவாக்குகிறார்கள் எனபதால், அவர்களிடம் இருந்தே ஆரம்பிப்போம். ஓரினக்கவர்ச்சி மற்றும் தற்பால்ச்சேர்க்கை குறித்த பயம் எதிர்பால் கவர்ச்சி உடைய பெரும்பான்மையினரிடம் உள்ளது. இந்தப் பயத்தின் காரணமாக, ஓரினக்கவர்ச்சி என்பது இயற்கையான ஒன்று அல்ல என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

மிகக் கடுமையான எதிர்ப்பில் இருந்து மென்மையான எதிர்ப்புகள்வரை பல தரப்புகள் வைக்கிறார்கள். மிகக் கடுமையான எதிர்ப்புத் தரப்பில் இது ஒரு மனோவியாதி, கலாச்சாரமாகத் ‘தொற்றிக்’ கொள்ளக்கூடியது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மென்மையான எதிர்ப்புத் தரப்பில் பாலுறவுக்கு வாய்ப்பு இன்மையால் ஏற்பட்டுவிடுகிற வழக்கம் இது என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த வாதிகளின் அடிப்படையான ஒற்றுமை, சமூகத்திற்கு இவ்விழைவால் என்ன நடக்கும் என்கிற கவலையே.

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான பழக்கங்களுக்காக (இவற்றை ஒழுக்கம் என்று இவர்கள் சொல்வார்கள்), தனிமனித விழைவுகள் தியாகம் செய்யப்படவேண்டும், ஒடுக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்து.

இந்த வாதங்களிலும் சாரம் உண்டு. இருப்பினும், இவை முழுமையான பார்வையால் எழவில்லை.

இதில் பல்வேறு தரப்புகளின் லாப நட்டக் கணக்குகள் செயல்படுகின்றன. அந்தக் கணக்குகளையும் கவனத்தில் கொள்வது ஓரளவு விரிந்த பார்வையை அடைய உதவும்.

இத்தகைய வாதங்களை கிறுத்துவ முகமதியர்கள் முன்வைப்பதால், அவர்களுக்குச் சற்றும் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் இந்துத்துவர்களும், ஹிந்து மதங்களின் ஆச்சாரியார்களும் இதே ஆபிரகாமியர் வாதங்களையே முன்வைக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், உண்மையின் உரைகல் என்பது ஆபிரகாமியக் கோட்பாடாகவே அமைந்துவிடுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமான கேடு.

சமூக ஒழுக்க விஷயத்தில் விக்டோரிய ப்ராட்டஸ்டண்ட் கிறுத்துவத்தின் பார்வையே அதிகார பீடங்களின் பார்வையாக இருக்கிறது. இந்தக் காலனிய அதிகார பீடங்களில் முக்கியமான நேருவிய இந்திய அரசும், இந்து மத ஆர்த்தடாக்ஸ் மத பீடங்களும் ஓரினச் சேர்க்கையை சமூகமாயை என்றோ, மனோவியாதி என்றோதான் சொல்லிவருகின்றன.

அதன் காரணமாக, ஆபிரகாமிய சட்டங்களின்படி எதிர்பால் விழைவை, செய்யப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றுகிறோம் என்று காட்சிப்படுத்துதல், அத்தாட்சி செய்தல் ஒரு குடிமகனின் வெளிப்படையாகச் சொல்லப்படாத, அடிப்படைக் கடமையாக ஆகிவிட்டன. ஆண்மையை அத்தாட்சி செய்தல் சமூக அங்கீகரிப்பின் அடிப்படையாக இருக்கிறது.

நல்லவேளையாக, இதை நிறுவ லேப் செர்ட்டிஃபிக்கேட் அவசியம் என்கிற நிலைக்குச் சமூகம் இப்போதைக்குக் கீழிறங்கவில்லை. அதனால், இந்தக் காட்சிப்படுத்துதலுக்கு, அத்தாட்சி தெரிவிப்பதற்கு, இருக்கும் ஒரே வழியாக எதிர்ப்புக் கோஷம் எழுப்புவது மட்டுமே இருக்கிறது.

நாங்கள் ஓரினக்கவர்ச்சியோ ஓரினச்சேர்க்கையோ உடையவர்கள் இல்லை என்பதை நிறுவ எதிர்ப்பு முழக்கம் எழுப்புவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. இந்தப் போதாமையும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கோஷம் எழுப்பும் நிலைக்கு இவர்களைத் தள்ளுகிறது.

சமூகம் என்ன சொல்லுமோ என்கிற பயம்தான் ஓரினச்சேர்க்கை எதிர்ப்புக்கு முக்கியமான காரணி. (வேறு காரணிகளும் உண்டு.) சமூகத்தின் மதிப்பீடுகளை நிர்ணயிப்பவராக ஆபிரகாமிய மதத்தவரே இருப்பதால், சமூக மதிப்பீடுகளை எதிர்க்க விரும்பாத இந்துத்துவர்களும், ஆர்த்தடாக்ஸ் ஆச்சாரியார்களும் தற்பால்விழைவுக்கு எதிரான ஆபிரகாமிய நிலையையே எடுக்கிறார்கள்.

பகவானை நம்பினால் வேறு பயம் வேண்டாம் என்று மேடைகளில் போதிக்கிற தற்கால ஹிந்து மதப் பெரியவர்களும்கூட இந்தச் சமூக ஆக்கிரமிப்புக்குப் பயந்து, அதற்கு உட்பட்டே செல்ல வேண்டி இருக்கிறது.

ஆக மொத்தத்தில், ஒரு புனிதவிசாரணை பயத்தில் இந்தச் சமூகம் முழுவதும் திணறிவருகிறது.

இவர்களுக்கு மாறாக, ஓரினக் கவர்ச்சியையும் ஓரினச் சேர்க்கையையும் தனிமனித சுதந்திரம் என்று வாதிடுகிற தரப்பு இருக்கிறது. இவர்களிலும், மென்மையான வாதங்களை முன்வைப்பவர்களில் இருந்து, இந்த வாதங்களை மெய்ப்பிக்க எதிர்பால்க்கவர்ச்சியினர் மேலும் ஓரினச்சேர்க்கையை திணிக்கும் வேட்கை கொண்டவர்கள் வரை பலர் அணி கட்டி நிற்கிறார்கள்.

அக்கால கிரேக்க ரோம கலாச்சாரங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இயல்பானதாக இருந்தது. ப்ளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் சாக்ரடீசும் இருபால் விழைவினர். குழந்தை பெறுவதற்கு மட்டுமே எதிர்பால் சேர்க்கை என்ற வகையில் அங்கு கலாச்சாரம் இருந்தது. இந்தக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தற்கால மேற்கத்திய நாடுகளின் ஓரினச்சேர்க்கை ஆதரவு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது.

இருப்பினும், அக்கால அந்தப் பேகன்களின் நிலைப்பாட்டில் இருந்து இக்கால ஓரினச்சேர்க்கை குறித்த புரிதல், அடிப்படையில் பலவகைகளில் வேறுபட்டது. இக்கால அடிப்படையாக இருப்பது ஆபிரகாமிய மதம் சார்ந்த பார்வையை எதிர்ப்பது என்றளவில் இருக்கிறது. அந்த நிலைப்பாட்டுடன் தனிமனித சுதந்திரம் என்கிற சமூக-அரசியல் நிலைப்பாட்டையும் கலக்கி காக்டெயில் குடிக்கிறார்கள்.

அதன்படி, சமூகம் என்கிற அமைப்பைவிடத் தனிமனிதர் என்கிற அமைப்புக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக அவர்கள் பறக்க விடுகிற பட்டங்களின் வாதச்சரடுகளின் மஞ்சாவாக, முற்றிலும் தானாக இயங்குகிற தனிமனிதச் சுதந்திரம் இருக்கிறது.

சமூகத்தில் பல்லாண்டுகளாகக் கற்றுத் துறைபோன, பட்டு சரிசெய்துகொண்ட சமூக விதிகள் அனைத்தையும் உடைத்தால் மட்டுமே மானுடம் அடுத்த பரிணாமப் படிக்கு நகரும் என்பதைத் தீவிரமாக நம்புகிறார்கள் இத்தரப்பினர்.

சமூகம்தான் முக்கியம் என்கிறவர்களுக்கும் தனிமனித சுதந்திரம்தான் முக்கியம் எனும் இவர்களுக்கும் இடையே இணக்கமாக இருக்கும் ஒரே வாதம் இந்த அடுத்த பரிணாமம் என்கிற வாதம். இத்ற்கு முற்போக்கு என்றும் ஒழுக்கம் என்றும் பல பெயர்கள் இருதரப்பாரிடையே நிலவுகின்றன.

அடிப்படையில் இந்த இரு தரப்பினரும் பின்பற்றுவது ஆபிரகாமிய முரணியங்கல் பார்வையையே.

ஒன்றை மற்றொன்று கொன்று தின்று கொழுப்பதே வாழ்வு என்ற முரணியங்கல் பார்வையை பிராண வாயுவாக, இந்த விவாதங்களின் இயங்கியல் தளமாகக் கேள்வி கேட்காமல் இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்த முரணியங்கல் பார்வைக்கு மாறான அனைத்துப் பார்வைகளும் விளிம்புநிலைப் பார்வைகளாக ஆகிவிடுகின்றன.

இவற்றில் ஒரு விளிம்புநிலைப் பார்வைத் தரப்பாக ஹிந்து மரபின் பார்வை/புரிதல்/செயல்பாடு என்ன என்பதையும் முன்வைப்பது அவசியம்.

ஹிந்து மரபு என்று சொல்வதைவிட தொழிற்மய வாழ்விற்கு முந்தைய கிழக்கத்திய மரபு என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும். அந்த வகைப் பார்வையில் ஹிந்து மதம் தாண்டிய, சீன ஜப்பான் உட்பட்ட பல்வேறு கிழக்கத்திய நாடுகளின் பார்வையும் அடங்கும். ஆபிரகாமிய ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட மேற்கத்திய பேகன்களின் பார்வையும் அரேபியக் காஃபிர்களின் பார்வையும் கிழக்கத்திய பார்வையைப் போன்ற நிலையையே எடுப்பதைக் கவனிக்க வேண்டும். ஆயினும், ஹிந்துத்துவர்களும் தற்கால இந்து மதப் பெரியோர்களும் எடுக்கும் நிலைப்பாடுகள் காலனியப் பார்வையாக இருப்பதால், ஹிந்து சமூகப் பார்வை என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஹிந்து மரபின் பார்வை “ஒத்தியக்கப் பார்வை”. அது, ஆபிரகாமிய முரணியக்கப் பார்வைக்கு முற்றிலும் எதிரானது. சமூகமும் தனிமனிதரும் ஒத்து இணக்கமாக இயங்கும் வழிமுறையை ஹிந்து மரபு முன்வைக்கிறது. அதன் தரப்பாக எப்போதும் ஒத்தியக்கப் பார்வையே இருக்கிறது.

முரணியக்கப் பார்வையின்படி, உணவுச் சங்கிலியின் மேலே செல்ல கீழே உள்ளவற்றை அழித்து மேலேறும், வெல்லுவதே வலியது, வலியதே வாழ உரிமை உள்ளது எனும் வாழ்க்கை முறை. இதை independence என்று அவர்கள் வரையறுக்கிறார்கள்.

ஹ்ந்து மத ஒத்தியக்கப் பார்வையின்படி உயிர்ச்சூழலில் உள்ள அனைத்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்து வாழ்கின்றன. இதன்படி inter-dependency is independence. இங்கே மரணம் தோல்வி கிடையாது. தோல்வி மரணம் கிடையாது. கொல்லுதல் வெற்றி கிடையாது. கொல்லப்படுதல் தோல்வி கிடையாது. வெற்றி தோல்வி என்கிற பார்வையே கிடையாது. இருத்தல் மட்டுமே. வாழ்தல் மட்டுமே.

கொல்லப்பட்ட துரியோதனின்மேல் தேவர்கள் பூமாரி பொழிவார்கள். வெற்றி பெற்ற பீமன் வெட்கித் தலைகுனிவான். ராவணன் உயிர் ஊசலாடச் செய்த ராமன், ராவணின் காலடியில் அமர்ந்து பணிவுடன் பாடம் கேட்பான். நாட்டையும் நாட்டு மக்களையும் வென்றவன், அதிகாரம் ஏதும் இல்லாத ஏழை அறிஞனின் பாதம் பணிவான்.

அவ்வகையில், ஆதிக்க உணர்வு இல்லாத ஹிந்து மரபானது ஓரினச்சேர்க்கையையும், ஓரினக்கவர்ச்சியையும் அங்கீகரிக்கிறது. ஆனால், உயிர்ச்சூழலைப் பாதிக்காதவகையில் வரையறைகள் வேண்டும் என்கிறது.

அதனால்தான், பண்டைய ஹிந்து இலக்கியங்களில் இதை ஒரு வியாதி என்று எங்கும் சொல்லவில்லை. இதைக் குணப்படுத்த வேண்டும் என்று யாரும் அல்லாடவில்லை. கோவில் சிலைகள்வரை அங்கீகாரம் கொடுத்தார்கள். புராணக்கதைகள் மூலமாக உரையாடும் தளம் திறந்தார்கள்.

அதனால், லாட்ஜுகளில் வியாதி தீர்க்கிறேன் என்று ஏமாற்று நடக்கவில்லை. நற்செய்திக் கூட்டத்தில் இந்த வியாதியைத் தீர்க்க செபம் செய்து தேவனின் ரட்சிப்பை வாங்கித் தருகிறேன் என்று யாராலும் சூதுப் பிழைப்பு நடத்த முடியவில்லை. இதைத் தடுக்க ஆண்குறி பெண்குறி வெட்டி அல்லாவைக் கண்டறியும் சிந்தனை காணவில்லை. பொலிட்பீரோ ஆட்கள் துளை நிரப்பும் தகுதி யாருக்கு உண்டு என்பதை கட்டுப்படுத்தவில்லை. ஆதரவு தெரிவிக்கிறேன் என்று சொல்லி பிழைப்பு நடத்த அரசுசாரா நிறுவனங்களுக்கு வழியும் இல்லை. இப்படிப் பலருடைய வாழ்க்கையிலும் மண்ணைப் போடுகிறது பண்டைய ஹிந்து மரபு.

மண்ணைப் போட அது செய்வது ஒன்றே ஒன்றுதான். அனைத்துவித வேறுபாடுகளின் இருப்பை அது அங்கீகரிக்கிறது.

ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. வரையறைகளும் செய்கிறது.

வேறுபாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிற ஹிந்து மனம் இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறாமல் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதன் பின்னர் ஓரினச் சேர்க்கையை முழுமையாகவே அங்கீகரிக்கிறது.

இம்மரபில் மிகக் கடுமையான தண்டனையாக இருப்பது, ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் எதிர்பாலினச் சேர்க்கையாளரின் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவதே. இதைச் சாதிவிலக்கம் என்று பண்டை ஹிந்து சட்ட நூல்கள் பெயர் தருகின்றன. பண்டைய ஹிந்து மரபின்படி சாதி விலக்கம் என்பது ஒட்டுமொத்த சமூக விலக்கம் இல்லை. அடிப்படை வாழ்வாதார மறுப்பும் இல்லை.

அதே போல, ஒருவர் தன்னுடைய பால்க்கவர்ச்சியைத் தானாகத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதிலும், மற்றவர் குழப்பி விடக்கூடாது என்பதிலும் பண்டைய ஹிந்து சமூகம் கவனமாக இருந்தது. வயதில் பெரியவர் எவரேனும் பாலுணர்வு அறியாத தற்பால் சிறுவயதினரோடு உறவு கொண்டால், அந்த வயதில் பெரியவருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தந்தது.

அதே சமயம், ஒருபால்க் கவர்ச்சி கொண்டவர் திருமணம் செய்துகொள்ளத் தடை உண்டு. அடுத்த சந்ததியினரை உருவாக்குபவருக்கு மட்டுமே சொத்து உண்டு என்பதால் ஒருபாலின விழைவோருக்கு சொத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே தரப்பட்டன. வாழ்வாதாரம் தாண்டிய மிகைச் சொத்துக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படத் தேவை இல்லை எனப் பண்டைய ஹிந்து சமூகம் கருதியது.

தற்காலத்தில் மேற்கத்திய நாடுகள் சிலவற்றில், சில இடங்களில், ஓரினவிழைவோர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது. அவர்கள் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொண்டு குடும்பம் எனும் அமைப்புக்குள் வர அவை வழிவகுக்கின்றன. அதன்காரணமாக, மிகைச்சொத்துக்களுக்கான உரிமையையும் அவர்கள் பெறுகிறார்கள்.

இருப்பினும், இந்தவகைச் செயல்பாடு பெரும்பாலான உயிரினங்களின் பயலாஜிக்கலை மீறிய ஒரு ஏற்பாடுதான். இயல்பான ஒன்று இல்லை. இருப்பினும், அக்காலத்திய சாதி போன்ற அக்காலச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு இல்லாத அந்த இடங்களில் இத்தகைய ஏற்பாடுகள் அவசியமானவையாகவும் ஆகிவிடுகின்றன.

பண்டைய ஹிந்து மரபில், சாதி விலக்கம் செய்யப்பட்ட தற்பால் விழைபவர் அவருடைய குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்டவர் இல்லை. ஓரினவிழைபவருக்குத் தரப்படவேண்டிய ஜீவனாம்ச வாழ்வாதாரங்களை வாழ்வுரிமைகளைத் தரவேண்டிய கடமை குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் உண்டு.

இப்படிப் பண்டைய ஹிந்து சமூகம் உருவாக்கிய வரையறைகளும், அங்கீகரிப்புகளும் அறியாமல் தற்காலத்திய கருப்பு வெள்ளைச் சண்டையாக இந்த விவாதங்கள் நடந்துகொண்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது. “லோகோ பின்ன ருசி” என்கிற பாமரர்வரை சென்றடைந்த இந்திய மரபின்வழிப் புரிதல் இப்போது இல்லை.

இந்த விவாதங்களின்போது பால்ய விவாகம் இது ஒரு சமூகப் பிரச்சினையாக ஆக்கிவிடாமல் தடுத்தது என்றும் சிலர் கூறிவருகின்றனர். இந்தக் கூற்று இவ்வழக்கத்தின் பின்னணிகளை ஆராய்ந்தபின்னரே சொல்லப்படுகிறதா என்பது ஐயமே.

உலகம் முழுவதும் 18ம் நூற்றாண்டுவரை ஆடவரும் பெண்டிரும் பாலுறவுக்குத் தயாராக ஆவதற்கு 18 வயது அடையவேண்டி இருந்தது. 19ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாலுறவுக்கு உடலானது தயாராகும் வயது குறைய ஆரம்பித்து விட்டது. (இதற்கு ஆபிரகாமியப் போக்கில் அமைந்த தொழில்மயமான வாழ்வுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் தானியங்களை அதிகம் உண்ண ஆரம்பித்த வாழ்வாதாரச் சீர்கேடும் இதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.)

19ம் நூற்றாண்டுக்குப் பின்னர், 11 அல்லது 12 வயதில் பாலுறவுக்கு உடல் தயாராவது தற்போது இயல்பான வழக்கம். அந்த வயதில், குழந்தைகள் வயதுக்கு வராவிட்டால் பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து, மேற்கத்திய மருத்துவரிடம் போய் ஹார்மோன் இன்ஜெக்‌ஷன் போடுகிறார்கள்.

இப்படி இயற்கையைத் தங்கள் புரிதலின்படி வளைக்கும் மனோநிலைகூட 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்த தொழிற்புரட்சிக் கலாச்சாரத்தினால்தான் மக்களுக்கு ஏற்பட்டது. வந்தாலும் வராவிட்டாலும் ஈசன் அருள் என்றிருந்த மூதாதையர் போக்கை மறைந்தது. ஈசனைத் தூக்கி ஈசான்ய மூலையில் கடாசிவிட்டு, விரும்புவதை ஈசியாகத் தொழில்நுட்பத்தால் அடைவதே அறிவெழுச்சியின் அடையாளம் என்று ஊசிக்குள் வாழ்வை உட்குவித்து விட்டார்கள்.

இந்த அறிதல் அற்ற மானுட இடையூறுகளால், பாலுறவுக்குத் தயாராக உள்ள உடல் குழந்தைப் பேறுக்குத் தயாராக இல்லை.

எனவே, பால்ய விவாகம் என்பது இக்காலத்துக்கு நிச்சயம் பொருந்தாது.

குழந்தை பேறுக்கும் பேணுதலுக்கும் தயாராக ஆனபின்னர்தான் திருமணம் என்று வைப்பது உன்னதமான ஒரு நோக்காக அமையும். ஆனால், அந்த உன்னத நோக்கம் செயல்படும் சமூகப் பொருளாதாரச் சூழலில் நாம் இல்லை. ஆகவே, இவ்விழைவு சார்ந்த வாதங்களும் குழப்பங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. சரி என்றும் தவறல்ல என்றும் வாதங்கள் தங்களைத் தாங்களே வகைப்படுத்திக் கொள்கின்றன.

இச்சூழலில் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையாக ஏற்படுவதா அல்லது பயிற்றுவிப்பால் ஏற்படுகிறதா என்பதற்குள் இந்தச் சரி தப்பு வாதங்களை அடுக்கிவிடலாம்.

இவ்விஷயத்தில், அறிவியல் என்ன சொல்லுகிறது ?

அறிவியலின்படி, பயலாஜிக்கலான காரணங்களோடு மற்ற சமூகச் சூழல்களும் சேர்ந்தே ஒருவரது பால்க்கவர்ச்சியையும் பாலுறவையும் நிர்ணயிக்கின்றன. பயலாஜிக்கலான காரணங்கள் இல்லாவிட்டால், சமூகக் காரணிகள் வலுவிழந்துவிடுகின்றன. அதாவது, இயற்கையான காரணங்கள் இல்லாவிட்டால், சமூகச் சூழலால் பயிற்றுவித்த பாலுணர்வாக ஓரினக்கவர்ச்சி இருப்பது மிகக் கடினம்.

இந்த அறிவியல் புரிதல் உள்ளதாகச் சொல்லிக் கொள்ளுகிற மேற்கத்திய நாடுகளிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான, ஆபிரகாமிய மதம் சார்ந்த எதிர்ப்பு உள்ளது.

அந்தப் போக்கிலேயே நம் நாட்டிலும் தற்போது இது சரி என்றும் இது தவறல்ல என்றும் வாதங்கள் இருபிரிவுகளாக நடந்துவருகின்றன.

சரி அல்லது தவறு என்று முடிவு செய்துகொண்டு, இவற்றில் ஒன்றை மட்டும் அனைவர் மேலும் ஒற்றைச் சட்டத்தின்படி திணிக்கும் ஆபிரகாமியப் போக்கில்தான் இந்த உரையாடல்கள் இந்தியாவில் நடந்து வருகின்றன. நேருவிய இந்திய அரசியலமைப்பும் ஒற்றைப்படுத்தும் கருவியாக பன்மைக்கு எதிரானதாக இருந்து வருகிறது. அதனால்தான், தற்பால்சேர்க்கைக்கு எதிரான நிலையை நேருவிய இந்திய உச்சநீதி மன்றம் எடுக்க வேண்டி உள்ளது.

இந்தச் சரி/தவறல்ல எனும் இருவகை வாதங்களிலும் இந்திய மரபு இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த இருவகை வாதிகளும் இந்திய மரபைத் தங்களுக்கு ஆதரவானதாகக் கருதுகிறார்கள் என்பது நவீன மானுடத்துக்கே உரித்தான முரண்நகை.

இந்திய மரபோ இந்த வாதங்களில் இருந்து, இந்த ஆபிரகாமியப் போக்கில் இருந்து, முற்றிலும் விலகி இருக்கிறது.

சமூகத்தில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் மட்டும் வழிகாட்டும் கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துவிட்டு, கலந்து சிந்தித்தல் மூலம் முடிவினை அடையும் மானுட சமூகத்தின் இயல்பான ஞானத்தின்மேல் நம்பிக்கையுடன் அது விலகிவிடுகிறது.

அந்த நம்பிக்கை சமூகத்தின் அடிமட்டத் தளங்களுக்குத் தங்களுக்கான விதிகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள, மாற்றிக்கொள்ளச் சுதந்திரம் இருக்கிறது என்கிற வேதவழி தன்னாட்சி முறையில் இருந்து எழுகிறது.

அந்த வகையில், ஒருபால்ச்சேர்க்கையாளர்களது போக்குகள் எதிர்பால்ச் சேர்க்கை உடையவர்களிடம் குழப்பத்தை உண்டு பண்ணிவிடக்கூடாது என்ற நெறியை உருவாக்கவே பண்டைய இந்துச் சட்ட நூல்கள் முயல்கின்றன. இது போன்ற வரையறைகளை உருவாக்கும் முகமாகவே இந்த விஷயம் மட்டும் அல்லாது எல்லா சமூக விஷயங்களிலும் ஹிந்துச் சட்ட நூல்கள் ஒரு வழிகாட்டிகளாக மட்டுமே இருக்கின்றன.

இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.

Series Navigationகர்ம வீரர் காமராசர்!நீங்காத நினைவுகள் – 25
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    ஷாலி says:

    .தும்பி,சிலந்தி,நண்டு,மட்டி,வெளவால் திமிங்கிலம் போன்ற விலங்கினங்களுக்கு மத்தியில் ஓரினச்சேர்க்கை இயற்கையானது.

    ஓரினச்சேர்க்கை,ஈரினச்சேர்க்கை என்பன விலங்குகளுக்குள் குரங்கில் இருந்து பூனை,நாய் பெருச்சாளி வரை விரிந்து கிடக்கின்றன.விலங்கினம் அனைத்துவகையான வாழ்வு முறைகளையும் அனுபவித்து சந்தோசமடைகின்றன. இந்த சந்தோசத்தை அடைய தடையாக இருக்கும் ஆபிரகாமிய மார்க்கங்களை புறக்கணித்து விலங்குகள் போல் இயற்கையாக வாழலாம் என்கிறது கட்டுரை.கடவுள் கொடுத்த ஆறறிவு மனிதனை கட்டுப்படுத்துகிறது.சுதந்திர வாழ்வுக்கு தடையாக உள்ளது.ஆகவே ஆறாவது பகுத்தறிவை புறக்கணித்து ஐயறிவு மிருகங்களோடு இணைந்து இயற்கையாக வாழலாம் என்கிறார் கட்டுரையாளர்.இதற்க்கு ஹிந்து ஸ்மிர்திகள் சுதந்திரம் கொடுப்பதாக கூறுகிறார்.
    // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.//

    நமது ஹிந்து தர்ம பரிபாலன காவலர் ஸ்ரீமான்.க்ருஷ்ண குமார்.என்ன உத்தரம் இதற்க்கு பகிரப்போகிறார்?

    1. Avatar
      paandiyan says:

      உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன.

      பிரச்னையின் பின்னணி இதுதான். கடந்த 2009ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம், 1860ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 14ஆவது அத்தியாயத்திலுள்ள 377ஆவது பிரிவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு, இப்போது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை விவாதித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட சட்டங்கள் தொடர வேண்டுமா, அகற்றப்பட வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு.

      ஆமாம், சட்டப் பிரிவு 377 என்ன கூறுகிறது? இயற்கைக்கு விரோதமாக ஆண், பெண், விலங்கினத்துடனான வக்கிரத்தனமான உடலுறவுகள் சட்டப்படி குற்றம் என்பதுடன், அப்படிப்பட்ட உறவுகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் பத்தாண்டு சிறைத்தண்டனையும், அபராதமும், அதிகபட்ச தண்டனையாக ஆயுள்தண்டனையும் விதிக்கப்படலாம் என்கிறது அந்தச் சட்டப் பிரிவு. இதன் மூலம் “கே’ எனப்படும் தன்பாலின உறவாளர்கள் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி தண்டனைக்கு உட்படுவார்கள்.
      /நமது ஹிந்து தர்ம பரிபாலன காவலர் ஸ்ரீமான்.க்ருஷ்ண குமார்.என்ன உத்தரம் இதற்க்கு பகிரப்போகிறார்?//
      அல்லுலேய ஷாலி அய்யோன்னு போவான்னு சொல்ல போறாரு போல ?

  2. Avatar
    ஷாலி says:


     உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன.
    பிரச்னையின் பின்னணி இதுதான். கடந்த 2009ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம், 1860ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 14ஆவது அத்தியாயத்திலுள்ள 377ஆவது பிரிவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு, இப்போது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை விவாதித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட சட்டங்கள் தொடர வேண்டுமா, அகற்றப்பட வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு.
    ஆமாம், சட்டப் பிரிவு 377 என்ன கூறுகிறது? இயற்கைக்கு விரோதமாக ஆண், பெண், விலங்கினத்துடனான வக்கிரத்தனமான உடலுறவுகள் சட்டப்படி குற்றம் என்பதுடன், அப்படிப்பட்ட உறவுகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் பத்தாண்டு சிறைத்தண்டனையும், அபராதமும், அதிகபட்ச தண்டனையாக ஆயுள்தண்டனையும் விதிக்கப்படலாம் என்கிறது அந்தச் சட்டப் பிரிவு. இதன் மூலம் “கே’ எனப்படும் தன்பாலின உறவாளர்கள் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி தண்டனைக்கு உட்படுவார்கள்.
    நன்றி: தினமணி தலையங்கம் “வக்கிரத்துக்கு வக்காலத்து”-16-12-2013.

    1. Avatar
      paandiyan says:

      உங்களுக்கும் தினமணி படிக்கும் பழக்கம் உள்ளது. சபாஷ்.
      நாளை வேறு ஒன்றின் காபீ. உங்களால் கண்டுபுடிக்க முடியாது பாருங்கள்.

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    அந்த சரத்து ஓரின சேர்க்கை, அனிமலுடன் உறவு எல்லாம் சம்பந்தப்பட்டது. இன்று இது சரியே என்பார், பின் அதுவும் சரி என்று ஒரு கும்பல் வரும். அடுத்து சித்தி பெண்ணை மணப்பது தப்பில்லை எனும் கும்பல் வாதாடும். அடுத்து பைபிளில் பாலைவனத்தில் அப்பன் இரு பெண்கள் சுருண்டு இறக்கும் முன் பரம்பரைக்காக அவர்களே புணர்தலை மேற்கோள் காட்டி அதுவும் சரியென்னும். இள வய்தில் திருமணம் செய்த இந்துமதத்தை கேலி செய்தவர்கள், ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் தான் திருமண வயது வரை நட்பாக இருக்கனும் என்பதால் வந்த கேடே இது. பையனிடம் இனி, எந்த சாதியா இருந்தாலும் பராவியில்லை ஒரு பெண்ண கட்டுறா… நம்ம சாதின்னு எவனாவது பையன இழுத்திட்டு வந்திறாதேன்னு சொல்லனும் காலத்திற்கு இவர்கள் கொண்டு போய் விடுவார்கள்…

  4. Avatar
    ஷாலி says:

    //ஆதிக்க உணர்வு இல்லாத ஹிந்து மரபானது ஓரினச்சேர்க்கையையும், ஓரினக்கவர்ச்சியையும் அங்கீகரிக்கிறது.//
    வேதங்களில் புராண கதைகளில்,சம்பவங்களில் சொல்லப்படும் செய்தி மக்களுக்கு சிலவற்றை ஏவுவதும் சிலவற்றை தடுப்பதும்தான்.பொதுவாக ஆபிரகாமிய மதங்களில் தடுக்கப்படுபவை அனேகம் உண்டு.ஹிந்து மரபில் தடை செய்யப் படுவதில்லை.கடவுளை வணங்கலாம்,அல்லது மறுக்கலாம். ஒரு மனைவியுடன் ஏக பத்தினி விரதனாக ஒரு மனிதன் வாழலாம். அல்லது பல மனைவிகளை வைத்தும் குடும்பம் நடத்தலாம்.அதே சமயம் பிற மனை நாடியும் செல்லலாம்.ஆணோடு ஆண் சேர இடமுண்டு.பெண்ணோடு பெண் சேரவும் இடமுண்டு.புராணங்கள் இதைத்தான் சொல்கின்றன.
    ஹரியும் ஹரனும் கூடி ஹரிஹரனை பெற்றெடுக்க முடியும்.ஹரிஹர ஐயப்பனை கோடானுகோடி பக்தர்கள் சேவித்து முத்தியடையவும் முடியும்.இதில் ஆணும் ஆணும் கூடி இன்பம் பெற்று அமைதி என்னும் சாந்தி அடைவதுதான் பிரதானம்,குழந்தை இன்பத்துக்கான ஒரு குறியீடு மட்டுமே. ஒருபால் கூடுதலில் கிடைக்கும் மகிழ்ச்சியே (குழந்தை.)
    ஆகாய கங்கையை மண்ணுக்கு கொண்டு வந்த பகீரதன் மன்னனைப் பற்றி அனைவரும் அறிவோம்.அவன் பிறந்தது எப்படி? மன்னன் திலீபிற்கு இரண்டு மனைவிகள் ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாமலே மன்னன் மடிந்தான். இந்நிலையில் மன்னனின் மனைவியர் கனவில் வந்த சிவன், “நீங்கள் இருவரும் கூடி உல்லாசமாக இருங்கள்.உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.”என்றார்.இதன்படி இரு பெண்களும் கூடிய உறவில் ஒரு மனைவிக்கு மகன் பிறந்தான்.ஆனால் சுக்கில சுரோணிதம் இல்லாமல் சுரோணிதம் மட்டும் இருந்ததால் பிறந்த குழந்தைக்கு எழும்புகள் இல்லை.பின்பு முனிவரின் ஆசியால் எழும்பு வந்து பலமான குழந்தை பகீரதன் ஆயிற்று. இப்படி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கூடி அமைதி என்னும் சிற்றின்பத்தின் மூலம் பேரின்பத்தை அடைவதே ஹிந்து மரபுபின் ஆன்மீக தரிசனம்.

  5. Avatar
    ஷாலி says:

     புனைப்பெயரில் says:
    December 16, 2013 at 2:28 pm
    //அந்த சரத்து ஓரின சேர்க்கை, அனிமலுடன் உறவு எல்லாம் சம்பந்தப்பட்டது. இன்று இது சரியே என்பார், பின் அதுவும் சரி என்று ஒரு கும்பல் வரும். அடுத்து சித்தி பெண்ணை மணப்பது தப்பில்லை எனும் கும்பல் வாதாடும். //
    நண்பர் புனைபெயரில் சொன்ன பெஷ்டியாலிட்டி (Bestiality) அனிமல் உறவு சமாச்சாரமெல்லாம் இங்கு முன்னமே புராண காலத்தில் சாதாரணமாக நடந்ததாக வேத நூல்கள் சொல்கின்றன.இப்போது இவையெல்லாம் மறு சுழற்சியில்( Re cycle) உயிர் பெற்று (மேலோக) மேல்நாட்டில் புத்தாக்கம் பெற்று புதுப்பொலிவாய் இறக்குமதி ஆகின்றன.
    நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்.நம்ம இப்ப பார்ப்போம். “கலைக்கோட்டு முனி ரிஷ்ய சிருங்கர் மானுக்குப் பிறந்து கொம்புகளுடன் வந்தார்.கௌசிகர் குசத்திற்க்கும், ஜம்புகர் நரிக்கும்,கௌதமர் மாட்டிற்கும்,மாண்டோவியர் தவளைக்கும்,காங்கேயர் கழுதைக்கும்,கௌனர் நாய்க்கும்,கனாதர் கோட்டானுக்கும்,சுகர் கிளிக்கும்,ஜாம்புவந்தர் கரடிக்கும் அஸ்வத்தாமன் குதிரைக்கும்,பிறந்ததாக புராணம் கூறுகிறது.காசியபர் மானுடன் கூடி வள்ளியம்மையை பெற்றார். கூடா உறவுக்கதைகளும் இங்கு தாராளமாக உள்ளது.
    “ஊரங்கண நீர் உறவு நீர் சேர்ந்தக்கால் பேரும் பெரிதாகி தீர்த்தமாம்.” என்று கூறுவதுபோல் மேல் நாட்டில் அழுகி ஓடும் ஆணாதிக்க வக்கிர கலாச்சாரத்தின் காமச் சாக்கடை எல்லாம், எதையும் ஏற்றுக்கொள்ளும் புனித இந்து மத கங்கையில் கரைக்க கட்டுரை எழுதுகிறார்கள்.அணுக்கழிவு கதிர் வீச்சு நஞ்சை ஏற்றுமதி செய்தவர்கள் இன்று ஆபாச கலாச்சார நஞ்சிக்கிற்கு ஆள் பிடிக்கிறார்கள்.ஆபிரகாமிய மதங்களில் இதற்க்கு கடும் தண்டனை.ஆனால் இந்து ஞானமரபு கேள்வி கேட்க நாதியற்ற மடம். இந்துவின் பெயரில் எதையும் செய்யலாம்.எல்லாத்திற்க்கும் இடமுண்டு என்று அறிந்ததனால் உள்ளே ஏறி ஒன்னுக்கிருக்கிறார்கள். இதை அறிந்தும் உண்மை புரிந்தும் இன்னும் மயக்கமா?
    “இதைக்காணவும் கண்டு நாணவும் மானம் உனக்கில்லை என்றால்
    அவமானம் எனக்குமுண்டோ?-
    கண்டதை சொல்லுகின்றேன்…….”-ஜெய காந்தன்.

  6. Avatar
    ஷாலி says:

    //அதனால்தான், பண்டைய ஹிந்து இலக்கியங்களில் இதை ஒரு வியாதி என்று எங்கும் சொல்லவில்லை. இதைக் குணப்படுத்த வேண்டும் என்று யாரும் அல்லாடவில்லை. கோவில் சிலைகள்வரை அங்கீகாரம் கொடுத்தார்கள். புராணக்கதைகள் மூலமாக உரையாடும் தளம் திறந்தார்கள்.//

    உண்மைதான்!மனித மனம் சிக்கலானது அது எப்போதும் தெய்வ நிலையில் இருக்க முடியாது.வக்கிர தன்மையும் அவ்வப்போது வந்து போகும் என்பதை காட்டவே ஆங்காங்கே கோயிலில் வக்கிர கூடல் சிலைகளை அமைத்துக்காட்டினார்கள்.மனித வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்ட இயற்கை வழியிலும் போகலாம்.வெறுக்கப்பட்ட அருவருப்பு வழியிலும் போகலாம்.

    மனிதனே நீ எதை தேர்வு செய்கிறாய்? முன்னால் இருக்கும் நேர் வழியா? அல்லது பின்னால் இருக்கும் ஆய் வழியா? என்பதை புரிய வைக்கவே இரண்டையும் பகிரங்கமாக்கி பாடம் கற்பித்தார்கள்.வக்கிர வாழ்வை நடப்பவர்கள் இழி பிறவியாக பிறப்பார்கள் என்பதையும் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால் ஓரினசேர்கையாளர்களுக்கு திருமணத் தேவையின் நோக்கம் தான் விளங்கவே இல்லை. சமூகம் ஒப்புக் கொள்ளாததைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி வழி வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் அதற்கு முற்றிலும் மாற்றாக சமூக அங்கீகாரத்தை கோரும் விதமாக திருமணம் என்ற சடங்கை நாடுவது வேடிக்கையாகவும் முரணாகவும் இருக்கிறது.

    திருமணம் என்ற சொல்லை நான் சமூக நலன் நோக்குடன் தான் பார்க்க முடியும். திருமணம் அதன் வழி சந்ததியைப் பெருக்கிக் கொள்வது இதுவே நடைமுறை. அப்படி ஆண் பெண் திருமணத்தில் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களும் இருக்கிறவர்கள் உண்டு, உடலியல் குறைபாட்டால் பெற முடியாதவர்களும் உண்டு, ஆனால் அவை விழுக்காட்டு அளவில் குறைவே, எனவே அதைக் கொண்டு வந்து ஓரின திருமணத்துடன் ஒப்பிடுவது சரி முரண்பாடானது,அபத்தமானது.

    இயற்கையான ஆண் பெண் திருமணத்தை நீர்த்துப்போகச் செய்து கேலிக்கூத்தாக்கி அதை துடைத்தெறியவே கூச்சலிடுகிறார்கள்.இதற்க்கு ஏற்ற தரவு ஹிந்து புராணக்கதைகளில் உள்ளதாக நம்புவதால் ஹிந்து மதத்தை வளைக்க முயற்சிக்கிறார்கள்.இவர்களின் தரகு வேலைக்கு சில கார்போரேட் சாமியார்களும் “அனைத்திற்கும் ஆசைப்படு!” என்று மந்திரித்து விடுகிறார்கள்.காமம் இவர்களுக்கு காசு கொட்டும் காமதேனு.
    இந்திய பண்பாட்டு கலாச்சார மக்களை, மாக்களாக மாற்றி மேய்ப்பதற்கு
    யுத்தம் தொடங்கி விட்டது.

  7. Avatar
    ஷாலி says:

    இந்துத்துவ பாஜக உடன் கூட்டணி வைத்த திரு.வைகோ.அவர்களின் அறிக்கை.
    வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர்களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான தீர்ப்பாகும்.
    மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புராதன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண்டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
    உலகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு ஜீவராசிகளின் படைப்பிலும் ஆண்பால், பெண்பால் என்ற இருதரப்பின் உணர்வுகளில் ஏற்படும் ஈர்ப்பு இனக் கலப்பு உயிரினங்களை உற்பத்தி செய்கின்றன. மிருகங்கள், பறவைகள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இல்லை.
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்துக்கே அறத்தைப் போதிக்கும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் அறநூல்களில் வகுக்கப்பட்ட ஒழுக்கமும், கற்பும், பண்பாடும் தான் தமிழ் இனம் பாதுகாக்க வேண்டிய கருñலமாகும். அப்பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேறோடு பிடுங்கி எறிய இன்றை காங்கிரÞ மத்திய அரசும், முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது.
    தமிழர்கள் நாகரிகத்தோடு வாழ்ந்த காலத்தில் அந்தப் பண்பாடு அறியாது வாழ்ந்து வந்த மேலை நாடுகளில் ஒழுக்கச் சிதைவுகள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஆனதால் ஓரினச் சேர்க்கை எனும் இழிவான பழக்கத்துக்கு இரகசியமாக ஆளானவர்கள், பின்னர் வெளிப்படையாகச் சங்கங்கள் அமைத்து, அதற்கு சட்ட அனுமதி நாடி ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள். அதைக் கேள்விப்பட்டு, மனம் பதை பதைத்தது.
    நல்லவேளையாக இத்தகைய ஈனத்தனமான கேடுகள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்தில் தலைகாட்ட முடியவில்லை என்று நிம்மதி ஏற்பட்டது. ஆனால், சமீப காலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவிலும், ஏன் தமிழ்நாட்டிலும் கூட சங்கம் அமைத்து ஊர்வலம் நடத்துகிற அளவுக்கு நிலைமை பாழ்பட்டதை எண்ணி மனம் வேதனையால் துடித்தது.
    தனி மனித சுதந்திரம் என்ற மாய்மால கருத்தை மத்திய அரசும், பலரும் முன் வைக்கிறார்கள். இத்தாலிய சோனியா காந்தி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். அவரது மகன் ராகுல் காந்தி ஓரினச் சேர்க்கை தனிமனித சுதந்திரம் என்கிறார். அப்படியானால், மேலை நாடுகளில் நிர்வாணச் சங்கங்கள் அமைத்து உள்ளார்கள்.
    இனிமேல் நிர்வாணமாகவே மக்கள் மத்தியில் உலவுவதும் தனிமனித சுதந்திரம் என்று இந்தப் போலி முற்போக்குவாதிகள் அதற்கும் வக்காலத்து வாங்கக்கூடும். திருமணத்துக்கு முன்பே ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு பெண்கள் கருத்தரிப்பதும், ஒருவன் ஒருத்தி என்ற தமிழர் வாழ்வு நெறியையே அழித்துவிட்டு, காமக் கேளிக்கைகளின் கூட்டமாகவே களியாட்டம் போடலாம் என்ற கேவலச் செயலைக்கூட தனி மனித சுதந்திரம் என்று இவர்கள் வாதிடக்கூடும்.
    இந்தியத் தண்டணைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவை நீக்குவதற்கும் தயாராகிவிட்ட மத்திய அரசின் நிதி அமைச்சர் சிதம்பரம் தனது அதிமேதாவித்தனத்தை அறிவிப்பதாகக் கருதிக்கொண்டு, நாம் என்ன 1860 ஆம் ஆண்டு சட்டத்துக்குப் போக முடியுமா? என்று அரைவேக்காட்டுத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அப்படியானால், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் எண்ணற்ற பிரிவுகள் ஆங்கிலேயர் ஆட்சியின்போதுதான் ஏற்படுத்தப்பட்டவை. அந்தச் சட்டப் பிரிவுகளை எல்லாம் சிதம்பரம் நீக்கச் சொல்வாரா? ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ஒருசிலர் எழுப்புகின்ற கருத்துகளை ஏடுகளும், ஊடகங்களும் பெரிதுபடுத்தி பிரசுரிப்பது பத்திரிகை தர்மத்துக்கே எதிரானது ஆகும்.
    நாட்டின் கோடான கோடி மக்களும், அறநெறியாளர்களும் ஓரினச் சேர்க்கையை கடுமையாக வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
    உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11 ஆம் தேதி தந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முற்படுவது வெட்கக்கேடான இழி செயல் என கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
    தமிழ் இந்து 13-1-2013.

  8. Avatar
    ஷாலி says:

    // இந்திய மரபோ இந்த வாதங்களில் இருந்து, இந்த ஆபிரகாமியப் போக்கில் இருந்து, முற்றிலும் விலகி இருக்கிறது.
    சமூகத்தில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் மட்டும் வழிகாட்டும் கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துவிட்டு, கலந்து சிந்தித்தல் மூலம் முடிவினை அடையும் மானுட சமூகத்தின் இயல்பான ஞானத்தின்மேல் நம்பிக்கையுடன் அது விலகிவிடுகிறது //
    இந்திய மரபுப்படி இதைப்பற்றி கலந்து சிந்திப்போம்.ஒருபால் ஈர்ப்பு சிந்தனை, உடல் ரீதியான மாற்றம் சிலருக்கு பிறவியிலேயே அப்படி அமைந்து விடுகிறது.இப்படிபட்டவர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்.வேதகாலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்.இக்குறை உள்ள மக்களை இழிவாகக் கருதாமல் சமூதாயத்தில் அவர்களும் ஓர் அங்கம் என்று அனைவரும் சரிசமாக நடத்தவேண்டும்.இக்குறை உள்ள மக்களை பல மடங்கு அதிகரிக்க,ஊக்கப்படுத்த சட்டம் இயற்றவேண்டும் என்பது மூடத்தனம்.ஒரு காலத்தில் மது குடிப்பு மக்கள் மத்தியில் கேவலமாக பார்க்கப்பட்டது.ஆங்காங்கு ஒழிந்து மறைந்து குடித்தார்கள்.குறைந்த சதவீதமே குடியில் மிதந்தது. கல்லக்“குடி” கொண்ட கருணாநிதி சாராயக்கடையை பகிரங்கமாக திறந்து விட்டதும்,இன்று என்ன நிலைமை? தமிழ்நாடே குடி முழுகி போய்விட்டது. ஓரினப்புணர்ச்சியாளர்கள் அன்றும் இன்றும் இலைமறைவு காயாக துணையுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.இந்த ஜோடிகளுக்கு சட்டபூர்வ அனுமதி கொடுத்தால், இந்தக்கூட்டமும் கூடிப்பெருகும்.குடும்ப உறவு குலையும்.எந்தத் தாயும் தந்தையும் தன் மகனோ,மகளோ,ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவதை விரும்புவாரா? அறிவியல்,ஆய்வு ரீதியாக பார்த்தாலும் ஓரினப்புணர்ச்சியாளர்களே எய்ட்ஸ் நோயை அதிகம் பெற்று முன்னணியில் உள்ளனர்.
    அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ.வி. கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையான பாதித்து பரவிக்கொண்டிருப்பது ‘சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும’ ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க்கை’யில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்’ உடலுறவை மேற்கொள்ளும் மக்களைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த புதிய ‘சிக்மா எயிட்ஸ் ஆய்வு குழுமத்தின்’ ஆய்வில் தெரியவந்துள்ளது.
    அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்” இறந்து விட்டார்கள். அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது.
    இதே போன்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்செரிக்கையால்’ , எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
    அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது.
    இதுபோன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்சேர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.
    குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

  9. Avatar
    சோனியா டய்ஸி says:

    மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லையா?

    விலங்குகளைப் போல இயற்கைக்கு எதிரான முறையில் வாழ தீயசக்தி தூண்டுகின்றது.

  10. Avatar
    டேவிட் சுந்தரம் says:

    உலகத்தின் ஒழுக்க விதிகளுக்கு எதிரான இது போன்ற பிறழ்தலான கட்டுரைகளை திண்ணை வெளியிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *