எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2

This entry is part 2 of 23 in the series 20 டிசம்பர் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து மெல்ல கடந்து போகும். ரங்கநாதன் தெரு தாண்டியதும் ஒரு நிறுத்தம் கூட உண்டு.
உஸ்மான் சாலை முழுக்க தூங்குமூஞ்சி மரங்கள் தான். அதென்ன தூங்குமூஞ்சி என்று கேட்கிறீர்களா? காலையில் சூரியன் ஒளி பட்டவுடன் விரியும் அதன் இலைகள், மாலை நெருங்க நெருங்க கூம்ப ஆரம்பித்து விடும். அதனால் தான் அந்தப் பெயர்.
அங்கிருக்கும் ஒரு பெரிய தூ.மூ. மரத்தடியில் பரவலாக நிழல் தரும் கிளைகளுக்கு அடியில் உட்கார்ந்திருப்பர் கிளி சோசியக்காரர்கள், நுங்கு விற்பவர்கள், சேமியா பாயசத்தை பித்தளைத் தூக்கில் சூடாக விற்பவர், கல்லில் தேய்த்து சவரம் செய்யும் நாவிதர். எனக்கு முடி வெட்ட இவர் வீட்டுக்கே வருவார். மாலையில் இவர்தான் சிவா விஷ்ணு கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பவர். அவரது பிள்ளைகள் இருவர் என்னோடு படித்தவர்கள். ஒருவன் பெயர் புக்கா என்று ஞாபகம் இருக்கிறது.
கிளி சோசியக்காரர் சவலையான ஒரு கிளி வைத்திருப்பார். அதன் இறகுகள் வெட்டப்பட்டு தத்தித் தத்தி தான் நடக்கும். பத்து காசுக்கு சோசியம். சீட்டை எடுக்க வெளியே வரும் கிளி, முடித்தவுடன் சமர்த்தாக சோசியர் கொடுக்கும் நெல்லை வாங்கிக் கொண்டு கூண்டிற்குள் போய்விடும்.
முருகன், காளி, சிவன், கிருஷ்ணன் என அனைத்து கடவுள்களின் படங்களும் அவரது சீட்டில் இருக்கும்.
“ கீழையின் முடிச்சு நீங்கி மேலையில் உயரம் காணும் பொற்காலமிது “ போன்ற வாசகங்கள் அச்சிட்ட வரிகள் ஒவ்வொரு அட்டையிலும் இருக்கும். அதற்கு அவர் தரும் விளக்கம் கொஞ்சம் பாமரத்தனமாக இருக்கும்.
“ முருகன் வந்திருக்கான். கஸ்டமெல்லாம் நீங்கிரும். இனிமே உனக்கு ஒசத்தியான நேரம் தான். மறக்காம காலையிலே முருகன் கோயில் துந்நூறு இட்டுக்க.. அல்லாம் சரியாயிரும்”
காளீ படம் வந்தால் “ கோபத்தை அடக்கு “ என்பார். சிவன் படம் வந்தால் “ சம்சாரம் வீட்டு பக்கம் பிரச்சினை “ என்பார். கிருஷ்ணன் படம் வந்தால் “ பொம்பளை சாவாசம் வேணாம்” என்பார். இதை அவர் சிறுவர்களுக்கும் சொல்வது தான் வேடிக்கை. பத்து பேர் கொடுக்கும் பத்து காசுகளில் அவரும் கிளியும் ஜீவிக்க வேண்டும்.
அவரது கூண்டு வித்தியாசமாக புதுசாக இருக்கும். தேக்கு மரத்தில் செய்யப்பட்டிருக்கும். பாலீஷ் ஏற்றி பளபளவென்று இருக்கும். திறந்து மூடும் கதவில் பித்தளைக் கம்பிகள் சொருகப் பட்டிருக்கும்.
இப்போது கிளி சோசியர்கள் காணாமல் போய் விட்டார்கள். சிலர் கிளிகள் கிடைக்காமல் வெள்ளை எலி சோசியம் பார்க்கீறார்கள்.
பெரும்பாலும் கிளி சோசியக்காரர்கள் கோயில்கள் அருகிலேயே இருப்பார்கள். மதியம் அந்தந்த கோயில்களில் கிடைக்கும் உண்டைக் கட்டி அவர்களுக்கு தவறாமல் உண்டு. கோயில் பூசாரிகளும் சோசியம் பார்ப்பவர்கள் தானே!
கிளிக் கூண்டின் உள்ளே சவரக் கிண்ணம் போல் இருக்கும் பித்தளைக் கிண்ணத்தில் தண்ணீர் இருக்கும். வெயில் காலங்களில் தாகம் தணிக்க கிளி அதிலிருந்து உறுஞ்சிக் கொள்ளூம். தனக்கில்லாவிட்டாலும் கிளிக்கு உணவும் நீரும் அளிக்க சோசியர்கள் தவறுவதே இல்லை.
கிளி சோசியர்கள் அதை மட்டும் நம்பி பிழைப்பை நடத்த முடியாது. சில சமயம் வீட்டு வேலைகளுக்கு ஆள் தேவைப்பட்டால் உடனே விரித்து வைத்திருந்த சீட்டுக் கட்டுகளை அடுக்கி பத்திரப்படுத்தி, அதன் கீழ் விரிக்கப்பட்டிருக்கும் ரெக்சின் துணியை சுருட்டி கிளிப் பெட்டியின் மேல் செருகி, கூண்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.
சோசியர்கள் வேலையில் இருக்கும் போது அந்த வீட்டின் குறும்புக்கார சிறுவர்கள் சீட்டுகளின் உள்ளே உள்ள வாசக அட்டைகளை மாற்றி வைத்து விடுவது உண்டு. அதை உடனே வீட்டுக்குப் போன உடன் சரி செய்து விடுவர் சோசியர்கள். ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் அவர்களுக்கு புரியக் கூடிய சங்கேத எழுத்துக்கள் இருக்கும் அதற்கான வரிகள் கொண்ட அட்டையிலும் அதே எழுத்து பொறித்திருக்கும். சோசியர்கள் உஷார் பேர்வழிகள்.

Series Navigationபுத்தகங்கள் ! புத்தகங்கள் !!பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *