இரு கவிதைகள்

This entry is part 7 of 19 in the series 31 ஜனவரி 2016

 

வழியில் போகிறவனும்

வழிப்போக்கனும்

 

 

வழியில் போகிற உனக்கு

பாதை குறுகியது.

உன் பார்வையைப் போல .

போவதும்

ஒரு சந்திலிருந்து

இன்னொன்றுக்கு .

குறுகிய வட்டம்

செக்கு மாட்டுச் சுழல் .

திராணியற்ற கால்கள்

நடையின் அனுபவம்

உணர்ந்திறாதவை .

 

உன் திறத்தால்

(திறத்தின்மையால் ?

அளக்க முயலாதே

வழிப் போக்கனை .

ஊர் விட்டு ஊர்,

நாடு விட்டு நாடு

தேடலில் முழுமை

காணும் கால்கள் –

அவை அவன் கண்கள் .

 

 

நீல வானத்தைக்

கிழித்திடும் குருவிகள் ,

அருவி இரைச்சலில்

இசை கேட்கும் செடி, கொடிகள் ,

ஓடும் காவிரியின்

உறவான நதியொன்றின்

கூடவே ஓடும்

கொக்கு.

மரத்திலிருந்து

பகலில் எழுந்து

இறகு விரித்து

எதிரியை அடிக்கும்

கூகை .

தினம் தினம் புதுத் தரிசனங்களில்

மகிழ்ந்து கூத்தாடும்

யோகி அவன்  .

 

வழிப்போக்கன்

முகத்தால் மட்டும்

அளப்பதில்லை மனிதரை.

முகங்களை மறைப்பது

திரைகள் ஆயிரம் .

எனவே

அவன்  பேசும் கண்களை

பார்க்கும் வாயை

கேட்கும் நாசியை

மூச்சிழுக்கும் செவியைத்

தீண்டிப் பார்க்கிறான்

உரசித் தடவுகிறான்

சத்திய தரிசனம்

டிக்கட்டுக்கு சிக்குவதல்ல .

 

எப்போதும் அவனை நீ

சென்றபின் பார்க்கிறாய்.

பின் புறம் அல்ல

முகத்தைக் காண

நேருக்கு நேர்

முன் புறம் போய்த்தான்

சந்திக்க  வேண்டும் .

இயலவில்லை உன்னால்

இயலாமையினால் வெதும்புவது

மனித இயற்கை.

எனவே

கற்களை நீயும்,

பீயை உன் நண்பர்களும்

எடுத்து எறிய

ஆசைப் படுவது

தப்பொன்றுமில்லை .

 

வழிப்போக்கன் போகிறான்

கவலை ஒன்றும் இல்லாமல் .

அவனுக்குப் பின்னும்

அவன் காலடித் தடங்கள்

அவனை நினைவூட்டும் .

வழியில் சந்தித்தவர்கள்

தம் வாழ்நாளில்

நினைவு கூர்வார்கள் .

அவனது உறுதியை

முனைப்பை , வலியைக்

காட்டாது இதழில்

நின்ற புன்னகையை.

 

வழியில் போகும் நீ

வழிப் போக்கனைக் கண்டு

பொறாமைப் படுவது

தப்பொன்றுமில்லை

 

 

வரும் போகும்

 

எப்போதாவது எட்டிப் பார்த்து

உள்ளே வருகிறது

சந்தோஷம் .

 

வந்தவுடன் கைகுலுக்க

முயலுமுன்னே

தொடர்ந்து கூடவே  இருக்குமா

என்று   பயம் .

 

எப்போதும் இருக்கவேண்டும்

எனும் ஆசை .

 

போய்விட்டால் ?

என்றொரு கவலை .

 

தேடி வந்தது

நம்மையா என்று

சந்தேகம் .

 

எல்லாம் களைந்து  கைநீட்ட

வாசல் வழியே போகிறது

வரவேற்பேதும்  இல்லையென

வந்திருந்த விருந்தாளி .

 

 

——————————————————————————————————————–

 

T R Natarajan

Bangalore 56077

Series Navigationகாரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *