தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 8 of 13 in the series 20 ஜூன் 2016

         Prof.Pon. Poologasingam                                                           முருகபூபதிஅவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்

 

எங்கள்  நாவலர்,   வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் “ –  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம்.

ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?

ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார்.

அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.

இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் தற்பொழுது   அவுஸ்திரேலியா,  சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு   மனிதர்  வாழ்விலும்  முதுமை  வரும்.  அந்த  முதுமை  மேலும் இரண்டு   மைகளையும்  அழைத்துக்கொண்டு  அருகிலிருந்து  உறவாடும். அவைதான்   தனிமை – இயலாமை.

அந்தத்தனிமையும்  எழுதமுடியாதிருக்கும்  இயலாமையும்தான்  இன்று அவரை  வாட்டிக்கொண்டிருக்கின்றன.

பூலோகசிங்கமும்  அங்கதச்சுவையுடன்  உரத்துச்சிரித்து  மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி  நாம்  அறியாத  பல  பக்கங்களை,  அவரது நூற்றாண்டு   காலத்தில்  தான்  பேசிய  மேடைகளில்  சொன்னவர்.

ஒரு  சமயம்  கடும்கோபத்துடன்  தமது  உறவினர்  ஒருவரை வெட்டுவதற்காக  ஒரு  வெட்டுக்கத்தியுடன்  நாவலர்  ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி,   தனது  பேச்சுக்களினால்  எங்களை  சிலிர்க்கச்செய்த சிங்கம்,  தற்போது  நான்கு  சுவர்களுக்குள்  அமர்ந்து,   தான்  கடந்தவந்த  பொற்காலங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறது.

சிலவருடங்களுக்கு   முன்னர்  சிட்னியில்  ஒரு  நாள்  வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக  தடுக்கியோ  மயங்கியோ விழுந்திருக்கிறார்.   அதனைத் தொடர்ந்து  தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  படிப்படியாக  தேறியிருந்தாலும்,  பவளவிழா நெருங்கியிருந்த   காலப்பகுதியில்  விதியானது  தன்னை  இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே   என்ற  கவலையையும்  ஐந்து  ஆண்டுகளுக்கு   முன்னர்  கடந்துவிட்டார்.

அந்த  முதியோர்  இல்லத்தில்  அவர்  தங்கியிருந்த  அறையில்,  அருகில் மற்றும்  ஒரு  கட்டிலில்  படுத்திருந்து  சிகிச்சை  பெற்றுவந்த  அவருடைய மனைவியும்  பல  மாதங்களுக்கு  முன்னர்  நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.

இன்று  தனிமையும்,  எதனையும்  எழுத முடியாத  இயலாமையும் அவரைச் சூழ்ந்திருக்கிறது.

தம்மிடமிருந்த  பெறுமதியான  நூல்கள்  பலவற்றை  சிட்னி  அறிவகம்   நூல் நிலையத்திற்கு  வழங்கிவிட்டார்.

நாமெல்லோரும்   எதிர்காலத்தில்  கடக்கவிருக்கும்  பாதையை,  இன்று  அவர்   நிதானமாக  அந்த  முதியோர்  இல்லத்தில்  நான்கு சுவர்களுக்குள்ளிருந்து    கடந்துகொண்டிருக்கிறார்.

பூலோகசிங்கம்  – கல்விமான்.  பேராசிரியர்,  பேச்சாளர்,  ஆய்வாளர் , எழுத்தாளர் , பதிப்பாசிரியர்.

1936   ஆம்  ஆண்டு   வவுனியாவில்  செட்டிக்குளத்தில்    பிறந்த  பூலோகசிங்கம்   அவர்களுக்கு  தற்பொழுது  80  வயதாகிறது.    ஈழத்து இலக்கிய   உலகில்  சிறந்த   ஆய்வாளராகவும்,  கல்வித்துறையில்  சிறந்த கல்விமானாகவும்   விளங்கிய  இவர்,  இலங்கையில்  ஆறுமுகநாவலர் சபையில்  அங்கம்  வகித்தவர்.

ஆறுமுகநாவலரின்  நூற்றாண்டு  இலங்கையில்   கொண்டாடப்பட்டபோது நாடுதழுவிய   ரீதியில்  நடைபெற்ற  பல  கருத்தரங்குகளிலும்  நாவலர் விழாக்களிலும்  கருத்துச்செறிவான  உரைகளை  நிகழ்த்தியவர்.

நாவலரின்   சமயப்பணி –  தமிழ்  உரைநடை  வீச்சு  தொடர்பாக  மட்டுமன்றி   குறிப்பிட்ட  காலகட்டத்தில்  யாழ்ப்பாணத்தில்  அவர்  மேற்கொண்ட சமுதாயப்பணிகளையும்   இன்றைய  தலைமுறையினர் அறிந்துகொள்ளத்தக்கவிதமாக  சான்றாதாரங்களுடன்  கட்டுரைகளும் எழுதிய   பேராசிரியர்   பூலோகசிங்கம்  அவர்கள்  அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த  பின்னரும்  தனது  ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தார்.

இவரிடம்  பல்கலைக்கழகங்களில்  கற்ற  பல  மாணவர்கள்  பின்னாளில் எழுத்தாளர்களாகவும்  ஆய்வாளர்களாகவும்  மிளிர்ந்திருக்கிறார்கள்.

எளிமையாகவும்   அதேசமயம்  கருத்தாழத்துடனும்  பேச  வல்லவர்.

இவரது  தமிழ்  ஆய்வுப்பணிகளுக்காக  இலங்கை  அரசின்  கலாசார  அமைச்சு  கலாகீர்த்தி  என்ற  அதிவிசேட  பட்டத்தை ( 1993 ) வழங்கி பாராட்டி   கௌரவித்துள்ளது.

2008  ஆம்  ஆண்டு  அவுஸ்திரேலிய  தமிழ்  இலக்கியக்கலைச்சங்கம் சிட்னியில்  நடத்திய  எட்டாவது  எழுத்தாளர்  விழாவில்  இவர்  அயராது மேற்கொண்ட   தமிழ்ப்பணிக்காக  பாராட்டி  விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழுக்குத்தொண்டாற்றிய  பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  வாழ்ந்த பேரறிஞர்  ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவம்  பிள்ளை  அவர்கள்   இந்தியாவிலும் இலங்கையிலும்  வாழ்ந்திருக்கும்  புலவர்பெருமக்கள்  பற்றிய  வரலாற்று நூலை   எழுதியவர்.

பாவலர்  சரித்திர  தீபகம்  என்னும்   அந்த  நூலை  தேடிஎடுத்து மீள்பதிப்புச்செய்வதற்கு  கொழும்பு  தமிழ்ச்சங்கம்  1975  ஆம்  ஆண்டில் முன்வந்தபொழுது,  அதற்காக  ஆக்கபூர்வமாக  ஆதரவும்  ஒத்துழைப்பும் தந்தவர்தான்    பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.

” அந்த  நூலை  அரிய  பல  ஆராய்ச்சிக்குறிப்புகளுடன்  பதிப்பித்து தந்தவர்தான்  பூலோகசிங்கம்  ”  என்று  தமிழ்ச்சங்கத்தின்  வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன்   வாழ்ந்து மறைந்த  க.இ.சு. கந்தசுவாமி   அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

குறிப்பிட்ட  நூல்  இரண்டு  பாகங்களாக  வெளியாகியிருக்கிறது.

பேராசிரியர்  அவர்கள்,  தமது  ஆரம்பக்கல்வியை   செட்டிகுளம்  அரசினர் தமிழ்  வித்தியாலயத்திலும்  இடைநிலைக்  கல்வியை  யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார்  கல்லூரியிலும்  கற்று,   அங்கிருந்து   பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு   அனுமதி  பெற்று –  பேராசிரியர்கள்  வி. செல்வநாயகம்,  ஆ. சதாசிவம்,  ச. தனஞ்சயராசசிங்கம்,  சு. வித்தியானந்தன் ஆகியோரின்   மாணவராக  விளங்கியவர்.

இலங்கை  அரசின்    பல்கலைக்கழகப்  புலமைப்பரிசில்  பெற்று  1963  முதல் 1965   வரை  ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தில்  திராவிட மொழியியலறிஞர்  பேராசியர்   தோமஸ்  பரோவின்  கீழ்  மொழியியல் ஆராய்ச்சி   மேற்கொண்டு  கலாநிதிப்  பட்டம்  பெற்றார்.

வவுனியாவில்  முதலாவதாக  கலாநிதிப்பட்டத்தைப்  பெற்றுக்கொண்டவரும்   இவரே  என்பது  சிறப்புக்குரியது.

கொழும்பு பல்கலைக்கழகம்,  களனி  பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம்   ஆகியவற்றில்  பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.

1997   ஆம்  ஆண்டின்  பின்னர்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்தார். பூலோகசிங்கம்  எழுதிய  நூல்களில்  தமிழ்  இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின்  பெருமுயற்சிகள்,  ஈழம்  தந்த  நாவலர்  என்பன இலங்கை  அரசின்  விருதுகளைப் பெற்றுள்ளன.

இந்துக்  கலைக்களஞ்சியம் ,  நாவலர்  பண்பாடு,   சிலப்பதிகார யாத்திரை ,  Poet Thambimuthu – a profile  ஆகிய  நூல்களையும்  வரவாக்கியிருக்கும்  பேராசிரியர்  இவை தவிர,  பல்வேறு  மலர்கள் ,  இதழ்களில்  நூற்றுக்கு மேற்பட்ட   கட்டுரைகளை  எழுதியிருக்கிறார் .   ஈழத்துத்  தமிழ்  இலக்கிய வரலாறு – சமயம் –  இலக்கணம்  பற்றியும்  எழுதியிருப்பவர்.

பண்டைத் தமிழ்  இலக்கியத்தில்  அகப்பொருள்  நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம்  நூற்றாண்டு  வரையான  ஈழத்துத்  தமிழ்  இலக்கியம்,  பத்தொன்பதாம்   நூற்றாண்டு  ஈழத்துத் தமிழ்  வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள்,  வன்னி  நாட்டின்  வரலாறு.  கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின்  தோற்றமும்  வளர்ச்சியும், தமிழ்  இலக்கண  விசாரம் முதலான  கட்டுரைகளும்  எழுதியிருக்கிறார்.

இவ்வாறு  அயற்சியின்றி  இயங்கியிருக்கும்  பேராசிரியர்,  இன்று  முதியோர்  இல்லத்தில்  நான்கு  சுவர்களுக்குள் முடங்கியிருப்பதைப் பார்க்கும்பொழுது  நெஞ்சம்  அடைக்கிறது.

அவருடைய  மாணாக்கர்கள்,  இலக்கிய  நண்பர்கள்  இந்தப்பூமிப்பந்தெங்கும் வாழ்கின்றனர்.   அவருடைய  வாழ்வையும்  பணிகளையும்  அருகிருந்து பார்த்தவர்களும்  அவர்தம்  படைப்புகளை  படித்திருப்போரும்  அவர்  வாழும்   காலத்திலேயே  தமிழ்  உலகின்  கவனத்திற்கு  சமர்ப்பிப்பதற்கு ஆவனசெய்வதே  தனிமையில்  வாடும்  அவருக்கு  வழங்கும் ஊக்கமாத்திரைகளாக   விளங்கும்.

” பேராசிரியர்   பூலோகசிங்கம்  அவர்கள்  தமிழ்  உலகில் கொண்டாடப்படவேண்டியவர் ”    என்ற   வார்த்தை  வெற்றுப்புகழாரம் அல்ல.

 

Series Navigation`ஓரியன்’ – 2காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *