Posted in

டாக்டர் அப்துல் கலாம் 87

This entry is part 6 of 10 in the series 14 அக்டோபர் 2018

தேவாலயம் திருக்கோயில்
மசூதிகளிலெல்லாம்
அமைதிப்புறாவாய் அமர்ந்தவர்

மரக்கலம் வாழ்க்கையில்
விண்கலம் கண்டவர்

மீன்பிடி ஊரில்
மின்னலைப் பிடித்தவர்

இரை கேட்கும் வயதில்
இறக்கைகள் கேட்டவர்

யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்ற
பூங்குன்றனாரைப்
பூவுலகிற்குச் சொன்னவர்

கோடிக் குழந்தைகளைக்
கூர் தீட்டியவர்

நூறு கோடி மக்கள்
இதயவீடு தந்தும்
காலடியில் வாழ்ந்தவர்

வறியோருக்காக
வாரித் தந்தவர்

பகை, சோம்பலுக்கு
அர்த்தம் அறியாதவர்

விண்ணின் உச்சியை
விண்கலத்தால் தேடியவர்

வல்லரசு வரிசையில்
இந்தியாவை இணைத்தவர்

இளையர்களுக்குள் கிடக்கும்
இமயத்தைச் சொன்னவர்

மண்வாழ மக்கள்வாழ
மரங்கள் நட்டவர்

உள்ளங்களைத் தூர்வாரி
அறிவுநீர் தந்தவர்

என்றெல்லாம்

விட்டுச் சென்ற இவர் புகழை
விண்கலங்கள் விண்ணில் எழுத
அள்ளிக் கொண்டன
நட்சத்திரங்கள்

ஒவ்வொரு இந்தியனுக்கும்
‘போஸ்டல் கோட்’
டாக்டர் அப்துல்கலாம்

அமீதாம்மாள்

Series Navigationமருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )அறுவடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *