ஜென் ஒரு புரிதல் – பகுதி-14

This entry is part 14 of 45 in the series 9 அக்டோபர் 2011

சத்யானந்தன்

இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. நதியில் ஒரு பெரிய கம்பளி நூல் மூட்டை மிதந்து சென்று கொண்டிருந்தது. மலை மேல் செம்மறி ஆடுகள் நிறைய உண்டு. யாரோ ஒரு ஆட்டுக்காரரின் நூல் மூட்டை தவ்றி நதியில் விழுந்து விட்டது என்று இருவருமே எண்ணினர். ஆனால் ஒரு கணத்துக்குள் இருவருள் ஒருவன் குதித்து மூட்டையைப் பற்றினான். இரண்டாமவன் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு கரையில் ஒரு குறுக்கு வழியில் ஓடினான். நதி ஒரு இடத்தில் வளையும். அங்கே எப்படியும் அவன் கரை சேர்ந்தாக வேண்டும். அங்கே மூட்டையை ஊர் வரை கொண்டு வர உதவுவேன் ஒரு பங்கு எனக்கும் தா என்று கேட்க முடிவு செய்தான்.

அவன் பார்த்த காட்சியில் முதலாமவன் நதி வளையும் திருப்பத்தில் நதிவரை நீண்டிருந்த ஒரு கிளையைப் பற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனது தலையும் மரக்கிளையைப் பற்றிய ஒரு கையும் மட்டுமே தண்ணீருக்கு வெளியே தென் பட்டன. மூட்டை நதி வெள்ள வேகத்தில் அவனுக்கு முன்னே இருந்து அவனை இழுத்துக் கொண்டிருந்தது. எந்தக் கணமும் அவன் மூட்டையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுவான் என்றே தோன்றியது. “அந்த மூட்டையை விட்டுவிடு. இல்லையேல் ஆபத்து” என்று கத்தி குரல் கொடுத்தான் இரண்டாமவன். ” அது கம்பளி மூட்டையில்லை. கரடி. நான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அது தான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிலளித்தான் முதலாமாவன். இரண்டாமவன் அவன்ருகே சென்று அவனைப் பிடித்து கரையில் இழுக்க முயன்றான். மறுபக்கம் கரடி இழுத்தது. இறுதியில் கரடி அவனை இழுத்துச் சென்று விட்டது.

இந்தக் கதையில் வரும் கரடி போல எண்ணங்களில் என் பிடிப்பே இல்லை. எப்போதும் அவை தானாகவே என்னை ஆக்கிரமிக்கின்றன். நேர்மறையானவையும் மாறானவையுமாக எண்ணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறிதும் பெரிதுமாக அச்சங்கள் என்னை வேறு எதிலும் கவனம் கொள்ள விடாமல் கடத்திக் கொண்டு போய் விடுகின்றன.

எண்ணங்களின் மூலம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வுகளில் தொடங்கி இன்று என் அருகில் உள்ள என்னை பாதிக்கும் நபர்கள் மற்றும் சூழல்கள் வரை நீள்கிறது. எனக்கு நிகழ்பவை என் மரபணு ரீதியான இயல்புகளின் வழியேயும் அதே சமயம் தற்காலத்தில் மற்றவர் கண்ணோட்டம் இது என்னும் அணுகுமுறையிலும் இரு விதமாக என்னால் எதிர்கொள்ளப் படுகின்றன. எண்ணங்களின் சங்கிலி என்னைக் கட்டி இழுத்துக் கொண்டே போகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த டொகென்னின் கவிதைகள் இந்த சங்கிலித் தொடரைத் தொற்றிக் கொள்ளாதே என்கின்றன

மனமே புத்தர்
—————–
மனமே புத்தர் –
விளக்குவது எளிது
வாழ்ந்து காட்டுவது கடினம்
மனமில்லையேல் புத்தரில்லை
இவ்வழி செல்வது எளிது
விளக்குவது கடினம்

அனைத்திற்கும் அப்பாற்பட்டு
எதிர்காலத்தில் புத்தராக முயலாதே
உன் முனைப்பெல்லாம்
எண்ணத்தின் பின் எண்ணம் கண்ணிகளாகும்
தொடர் சங்கிலியைத் தொற்றிக் கொண்டிருப்பதைத்
தவிர்ப்பதாக இருக்க வேண்டும்

மழைத்துளியின் சத்தம்
————————-
மனம் விடுபட்டதால்
இலைகளினின்று சிந்தும்
மழைத்துளியின் ஓசையைக்
கேட்கும் போது
அம்மழைத்துளிகள்
என்னுள் ஒன்றாயின

வருவது அல்லது போவது
——————————–
இடம் பெயரும் பறவை
எந்தத் தடயத்தையும்
விட்டுச் செல்வதில்லை
அதற்கு ஒரு வழிகாட்டியும்
தேவையில்லை

நிலையின்மை
——————-
உலகை நான் எதனோடு
ஒப்பிடவேண்டும்?
காட்டுப் பூச்செடியிலிருந்து
சிந்தும் பனித்துளியில்
பிரதிபலிக்கும்
நிலவொளியுடன்

நீரோடையில்
——————–
நீரோடையை விரைந்து
கடந்து
தூசிகள் மிகுந்த உலகை நோக்கிச்
விரையும் என் வடிவம்
எந்த பிம்பத்தையும்
வீழ்த்துவதில்லை

சிக்குண்ட தலைமுடி போல
———————————-
சிக்குண்ட தலைமுடி போல
தொடக்கமும் முடிவுமான சுழற்சி
மாயை
சிக்குகளை நேராக்கியபின்
ஒரு கனவாக இருப்பதில்லை

இந்த கனவு போன்ற நிலப்பரப்பில்
———————————————
இந்த கனவு போன்ற நிலப்பரப்பில்
என் தடங்களைத் திரும்பிப் பார்க்காது
நான் நகரும் போது
ஒரு மைனாவின் பாட்டு என்னைத்
திரும்பி வீடு வந்து சேர அழைக்கும்
என்னை அழைத்தது யார் என
நான் திரும்பிப் பார்ப்பேன்
நான் எங்கே போகிறேன் என்று
என்னைக் கேட்காதீர்கள்
எல்லையில்லா இவ்வுலகில் என்
பயணத்தில் நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் என் வீடே

உண்மையான ஒருவன் உலகின்
———————————-
பத்து பகுதியிலும் தென்படுவான்
—————————————-
உண்மையான மனிதன் ஒரு
குறிப்பிட்ட நபர் ஆகான்
முடிவற்ற வானின் ஆழ்ந்த
நீல நிறம் போல
அவன் ஒவ்வொருவராகவும்
எங்கெங்கும் தென்படுகிறான்

வியப்பளிக்கும் நிர்வாண மனம்
———————————

ஏனெனில் எங்கள் அசல் வீட்டு
மலர்கள் வாடுவதே இல்லை
வசந்தம் வரலாம் போகலாம்
ஆனால் அப்பூக்களின் நிறம்
மங்காது

வழிபாடு
———–
பனிவெளியில்
மறைந்திருக்கும்
ஒரு வெள்ளைக் கொக்கு
பனியின் கீழுள்ள புற்களும்
தென்படாது

என் வாழ்க்கை என்று தொடங்கி மனித வாழ்க்கை என்று புரிந்து பிரபஞ்ச இயங்குதல் என விரியும் கண்ணோட்டம் ஜென் வழி நமக்கு நிகழக் கூடும். மேலும் வாசிப்போம்.

Series Navigationஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமிவாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *