இந்திரனும் அருந்ததிராயும்

This entry is part 10 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இருவரின் அரசியல் தளமும் வெவ்வேறானவை. ஒருவர் கலை இலக்கிய விமர்சகங்களின் ஊடாக தன் கருத்துகளை முன்வைக்கும் எழுத்தாளர். இன்னொருவர் கலை இலக்கிய விமர்சக வட்டங்களைத் தாண்டி இன்றைய சமகால அரசியல் சமூக தளத்தில் ஊடகங்களின் மிகுந்தக் கவனத்திற்கு உரியவர். முன்னவர் இந்திரன். பின்னவர் அருந்ததிராய்.

கட்டுரை உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் கவிதை புனைவுக்கு நெருக்கமாகவும் இருப்பதாகவே நம்பப் படுகிறது. கவிதைக்குப் பொய்யழகு என்று கூட சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனாலேயே கட்டுரைகளும் கவிதைகளும் இருவேறு தளத்தில் இருவேறு உணர்வு நிலைகளில் வாச்கனை இழுத்துச் செல்கின்றன.

இந்திரன் ஆதிவாசிகளின் பாடல்களைத் திரட்டி கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துக்கொடுத்தவர். அவருடைய அந்தப் பாடல்களை மீண்டும் தன் கட்டுரைகள் மூலம் அந்த அடர்ந்தக் காடுகளின் பயணித்த அருந்ததிராய் என்னில் மீண்டும் உரக்க வாசித்தார். அந்தக் குரலின் சத்தியம் காற்றில் கலந்து இந்தப் பெருநகரத்தின் ஒவ்வொரு நாகரிக அடையாளத்தின் மீதும் ஓராயிரம் கேள்விகளை வீசிச் சென்றது.

கடவுளுக்கு முன் பிறந்த ஆதிவாசிகளின் கவிதைகளின் ஊடாக என் நட்பு வட்டத்துக்குள் அடர்ந்த வனமாய் இடம் பிடித்த கலை இலக்கிய விமர்சகரான இந்திரன்.

காங்கீரிட் காடுகளில் கூட என்னுடன் பயணம் செய்தன அந்தக் கவிதையின் வரிகள். ஆனால் அப்போதெல்லாம் கவிதையாக மட்டுமே ஆட்கொண்ட மொழியின் வீச்சு அருந்ததிராயின் கட்டுரைகளை வாசித்தப்பின் ரத்தமும் சதையுமாய் துடிக்கும் உயிரில் கலந்த இன்னதென்று விவரிக்க முடியாத ஓர் உணர்வை…. என்னவென்று சொல்வது? பாடிக்கலந்திடவே தவம் பண்ணியதில்லையடி…. என்று பாரதிப் பாடிய அந்த உணர்வு நிலையும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

பயணத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்திரனைத் தொடர்பு கொண்டு என்னவோ இப்போதுதான் வெளிவந்துள்ள அவர் எழுத்தை வாசித்தது போல நான் பேசிக்கொண்டே இருந்தேன். உங்கள் புத்தகம் அளவில் ரொம்பவும் சிறியது. ஆனால் அருந்ததிராயை வாசித்தப்பின் அதன் கனம் ரொம்பவும் கூடிவிட்டது என்று நான் சொல்லியதை அவர் எம்மாதிரியாக புரிந்து கொண்டிருப்பார் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

அருந்ததிராயின் மூன்று கட்டுரைகள் அடங்கிய புத்தகம் BROKEN REPUBLIC அருந்ததிராய் தண்டகாரண்ய காடுகளில் பயணிக்கிறார். அங்கிருக்கும் மக்களுடன் தங்கி இருக்கிறார். ஊடகங்கள் அவர்களைப் பயங்கரமானவர்களாக தீவிரவாதிகள் என்று அடைமொழியுடன் அலறிக்கொண்டிருக்கின்றன. அருந்ததிராயோ அந்த மாவோயிஸ்டுகளின் மனசுக்கு மிகவும் நெருக்கமாக பயணித்து அவர்களின் அகமும் புறமும் காயப்படுத்திய வெள்ளை வேட்டியுடன் திரியும் உண்மையான தீவிரவாதிகளை நமக்கு அடையாளம் காட்டுகிறார். அருந்ததிராய் முன்வைக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவர் கண்ட காட்சிகளும் அதன் தாக்கங்களும் உண்மையானவை. அந்த ஒவ்வொரு எழுத்துகளின் வளைவுகளில் புள்ளிகளில் நான் கண்டதெல்லாம் இந்திரன் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்த கடவுளுக்கு முன் பிறந்த ஆதிவாசிகளின் களம். அவர்கள் வாழ்க்கை, அவர்கள் சோகம், அவர்கள் வனம், அவர்கள் பெருமிதம், அவர்கள் இழப்பு . அவர்கள் ஏமாற்றப்படும் நாகரீகத்தின் வரலாறு!

கட்டுரைப் பக்கங்கள் எங்கும் ஆதிவாசிகளின் கவிதைகள் விசவரூபம் எடுத்தன. கவிதைகள் மொழியின் கட்டுடைத்து காற்றில் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆதிவாசிகளின் குரல் அந்தக் காடுகளின் பாக்சைடு சுரங்கங்களிலிருந்து அதிர்வலையாய்ப் பரவியது. காற்றுவெளியைத் தாண்டிப் பிரபஞ்சம் எங்கும் வாழ்தலின் வெளிச்சமாய் வியாபித்தது.

கவிதைகளின் ஒவ்வொரு வரிகளும் நிஜத்தின் நகல் கூட அல்ல, நிஜமேதான் .. அப்படியே ஒப்பனைகளின்றி, உண்மையின் சொரூபமாய் நிற்பதை உணர்ந்தப் போது புனைவுகளும் கனவுகளுமாய் இலக்கிய உலகமெங்கும் பவனி வந்த மொழி ஆடைகள் களைந்து நிர்வாணமாய் ஒளிர்ந்த தருணத்தில் உடலும் உயிரும் உண்மையின் முன்னால் கரைந்துப் போனது.

அருந்ததிராயின் அந்தக் கட்டுரைகளின் சாரமாக இந்திரன் தமிழில் தந்த ஒரு கவிதை …

வந்தவர்கள்
—————-

நம்மை இன்று அதிகாரம் செய்பவர்கள்
ஒரு காலத்தில்
நமக்குப் பக்கத்தில் வசிப்பதற்காக வந்தார்கள்.

நாம் அவர்களுக்குப் பழங்களையும்
கிழங்குகளையும் கொடுத்தோம்.

நமது தாய்கள்
அவர்களுக்குப் பால் கொடுத்தனர்.
நமது தந்தையர்
அவர்களுக்கு உணவு கொடுத்தனர்.

வந்தவர்கள்
வெறும் கையொடு வந்தார்கள்
இன்றைக்கு அவர்கள்
பன்னாட்டுக் கம்பேனிகளின் பங்குதாரர்கள்

அவர்களது
அரண்மனை போன்ற வீடுகளை
அலங்கரிக்க
நமது தலைகளைக் கேட்கிறார்கள்.

அவர்கள் அதைக் கேட்பது
வெறும் வாழ்தலுக்காகத்தான் என்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்போம்
பலியிடுதலின் மரியாதை தெரிந்தவர்கள்
நாங்கள் என்ற வகையில்.
அவர்களது உல்லாசத்துக்கு
நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க மாட்டோம்
………………………(அஞ்சையா, கோயா மலையினம்)…………
…………………..

Series Navigationஇரவை வென்ற விழிகள்பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *