இரு வேறு நகரங்களின் கதை

This entry is part 25 of 39 in the series 18 டிசம்பர் 2011

கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.

சரமக் கவிகள் என்கிறார் அகிலன் தன் கவிதைகளை. அவர் பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் பதுங்கு குழி நாட்கள்- ஐப் பேசுபவையாகத் தான் தந்திருக்கிறார். இப்படித் தான் ஒரு இளம் கவிஞனின் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கிற தென்றால் அங்கு மனம் குதூகலித்துக் கவிதை பாட, முகம் சிரித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாட, சக மனிதனிடம் மலர்ந்த முகம் காட்ட என்ன இருக்கக் கூடும்?.

அன்று “ தெருவோரம் நாய் முகரக் கிடந்த தன் நண்பனின் மரணம் செவிப்பட்டது. தன் நன்பண் தெருவோரம் நாய் முகரக் கிடந்தான். அது செய்தியாகத் தான் செவிப்பட்டது. ஏனெனில் அந்நாட்கள் ஊரில் மகிழந்துலாவிய நாட்கள் அல்ல. உயிர் தப்ப பதுங்கு குழியில் ஒடுங்கிக் கிடந்த நாட்கள்.

இரு தலைமுறைக் காலமாக வாழ்க்கையின் அவலங்கள் தீவிரமாகைக் கடந்து வந்து விட்டன. இன்று

பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கிறார்கள்
நாதியற்ற மக்கள்.

ஏனென்னில்

முன்னர் இங்கிருந்த கிராமமோ
முன்னர் இங்குர்ந்த வீடுகளோ

இன்றில்லை. மருத்துவக் கூடங்களில்,

காலுக்கொரு தலையும்
தலைக்கிரு கண்களும்

தான் காணக் கிடைக்கின்றன.

தமிழக மக்கள் வாழ்க்கை கவிதகளாக ஆவணப் படுத்தப் பட்ட அந்த கவிதைத் தொடக்க காலத்தில் வாளடி பட்டு வீழ்ந்து கிடக்கும் தன் மகனைத் தேடிய தாயைப் பற்றிப் பாடிய பாடல் உண்டு. அந்தத் தாய தேடிய இடம் தன் ஊரல்ல. அது தன் ஊரை விட்டு ஒதுங்கிய ஒரு போர்க்களத்தில்.

இன்று போர்க்களம் தேடிப் போகவேண்டியதில்லை.

முன்னரிங்கிருந்தன வீடுகள்
.முன்னரிங்கிருந்த கிராமம்

என்று திகைத்து நிற்கும் காலம். வாழ்ந்த ஊரே போர்க்களமாகிக் கிடக்கிறது. உயிர் காப்பாற்றும் மருத்துவ மனைகள் பிணக் கிடங்காகிக் கிடக்கும் நாட்கள் இவை.

ஊர் தேடி, வீடு தேடி வந்துவிட்ட மரணம் குவிந்து கிடக்கும் போர்க்களத்தில் கிடப்பவை

மணிக்கட்டுகள் சில்அ முழக்கைகள் சில்
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்தும் வேறு பல

ஒன்றெடுத்தேன்
பிராயம் இருபதுக்கும் மேல் ஆண்கை
முரட்டு விரல்கள்

நெடிய ஆயுள் ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறக்கிப் பார்த்தேன்
பச்சையால் குத்தியிருந்தான்

“சஞ்சுதா”

இப்படித்தான் அடையாளங்கள் காணப்படுகின்றன, சிதைந்த உடல் பாகங்களைக்கொண்டு. நாடற்றுப் போய், பேச்சற்றுப் போய், வாழ்வற்றுப் போய், கடைசியில் தன் அடையாளமுமற்றுப் போய் விட்ட நிலை.

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை
இரத்த வெடில்
சிதம்பழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

மூடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

”குவிந்த மலர்ச் சிரிப்பைக்” காட்டிய முகங்கள், ”ஆடி வரும் தேனா”யிருந்தவை இன்று “குழந்தைகள் போலும்” என்று யூகித்து மூட்டையாய்க் கட்டி ஓரமாய்க் குவிக்க வெண்டிய முண்டங்களாகி விட்டன

சொல்லிக் கொண்டே போகலாம். திரும்ப புறநானூ.ற்றுப் பாடல்கள் எழுதப்படுவதாகத் தோன்றும். தொடக்க காலத்திலேயே போர், மரணம், வாள் என்று தமிழ்க் கவிதை பேசத் தொடங்கிவிட்டது. அது வீரம் பற்றியும் பேசியது .அதுவே தமிழ்க் கவிதை எல்லாமும் அல்ல. அது ஒரு பகுதி. மாத்திரமே. வாழ்க்கை பற்றியும் காதல் பற்றியும் பேசின தமிழ்க் கவிதையின் பெரும்பகுதி..ஆனால் ,இங்கு அதற்கெல்லாம் ஒரு காலம் வரும் என்றும் தோன்றவில்லை.

வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்

இனிக்காரணமுமில்லை,
காத்திருக்க எவருமில்லை என்ற போதும்
பின்னும் கிடந்த முந்தின நாட்கள்
தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை
அவரில்லை

எவருமில்லை

பாழ்

இந்தப் பாழ் என ஏதுமிருக்கவில்லை முந்திய புறநானூற்றில்

இந்தப் பாழை உருவாக்கிய வேற்றோர் இடமுமுண்டு, மனிதக் கூட்டமுமுண்டு. இப்பாழுக்கு வழிகாட்டியதாகச் சொல்லிக் கொள்ளும் காவியுடை தரித்த புத்த பிக்குகள் தம் ”கருணை” பாலித்த பாழ் இது. அதே புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் இந்த புத்த பிக்குகள் இத்தகைய கருணை பாலித்திருக்கிறார்கள். அவர்களது கருணை ஆட்சி தயங்கும், தளரும் காலத்தில் எல்லாம் காவியுடை பிக்குகளும் அவர்தமைக் குருவாகக் கொண்ட அரசும் திரும்ப தம் கருணைக்கு வலிவூட்டியே வந்திருக்கிறார்கள். புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்., காரணம் அவன் பாழாக்கிய சக மனிதன் தன்னைப் போன்று காவியுடை தரித்திருக்கவில்லை. வியத் நாமில் தன்னையே தீயிட்டு மரித்துக் கொண்டான்.இதே போன்று காவியுடை தரித்த ஒரு பிக்கு. அது மனிதம் இழந்த ஒரு அதிகாரத்துக்கு அவன் தெரிவித்த கண்டனம் அந்த ரூபம் பெற்றது. இன்னொன்று அதுவும் அரசு அதிகாரம் தான், இரண்டாயிரம் ஆண்டு முந்திய இன்னொரு காலத்தில் போரை மறுத்தது. ஆனால் இங்கு அந்தக் காவியுடைக்குள் இருக்கும் மனிதன் வேறாகத்தான் இருந்தான். காவியுடை அவனை மாற்றவில்லை. அதிகாரம் வேண்டும், அதிகாரம் செலுத்தும் காவியுடை இது. இரு வேறு உலகங்களை, நகரங்களை உருவாக்கிவிடுகிறது. ஒன்று காவியுடை தரித்தது. இன்னொன்ரு காவியுடை அற்றது.

வேடிக்கை வாணச் சிறுமழையும்
அணிநடை யானைப் பேருலாவும்
படர் நெடும் மின் கொடிச் சரமும்
உங்களிரவை நனைக்கையில்
பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை
போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை
தூக்கத்தினால் நீங்கள் மூடிப் புரள்கையில்
சன்னங்களாலும் பீரங்கிகளாலும்
உடைத்துத் திறக்கப்படுகிறது
ஊரடங்கிய வேறோரு நகரம்
பசியும் வலியும் தீராப்பீதியும் பீடித்த நள்ளிராக்களில்
பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை
தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்
இன்னொரு தலை நகரத்து மக்கள்.

இது இன்றைய ஈழத்தமிழ் கவிஞர் அகிலன் எழுத விதிக்கப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்.

இங்கு வீரமில்லை. ஒன்று மனிதம் இழந்த அதிகாரக் கொடூரம். மனிதப் படுகொலை. இன்னொன்று சதைப் பிண்டங்களாக், அடையாளம் இழந்து மரிக்கும்

நாங்கள் இங்கு தள்ளியிருந்து மௌனித்து வேடிக்கை பார்க்கும் இன்னொரு மனிதக்கூட்டம். இரைச்சலிடும் வீர கோஷங்களே எங்களால் சாத்தியமானது. இங்கும் சரி, உங்கள் நாட்டின் நகர் ஒன்றிலும் சரி, முறுவலித்த சாந்த சொரூப புத்தன் உறைந்து சிலையாகித் தான் கிடக்கிறான். எங்களுக்கு அவன் இரண்டாயிர ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்த புத்தன். அவன் காலடிகள் எங்கள் வரலாற்றில் நீள வில்லை.

வெங்கட் சாமிநாதன்/19.11.2011

Series Navigationஎன்னின் இரண்டாமவன்மார்கழிப் பணி(பனி)

4 Comments

  1. Avatar SOMASUNDARAM

    Nehizha vaiththa nalla katturai.

  2. Avatar punai peyaril

    ம்ஹீம்… ஈழம்… வேதனையை என்ன சொல்ல… வெ.சா நன்றி…

  3. Avatar லறீனா அப்துல் ஹக்

    மிகுந்த வேதனை தரும் அருமையான பதிவு. இங்கே போர் முடிந்துவிட்டது என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அதனால் விளைந்த சிதிலங்கள்? இன்னுமே செப்பனிடப்படாமல், அப்படியப்படியேதான் கிடக்கின்றன… உயிர் தப்பி எஞ்சியிருப்போருள் அனேகமானவர்கள் தாமும் போய்ச் சேர்ந்திருக்கக்கூடாதா என்று ஏங்கும் அவலம் தொடர்கிறது… என்று முடிவுறும் இந்தத் துன்பத்தின் ஓலம்? :(

  4. Avatar சபீர்

    மனசு கனக்கிறதய்யா!

Leave a Reply to punai peyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *