உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 15 in the series 16 மே 2021
 
 
முனைவர் ம இராமச்சந்திரன்
 
கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் பல மாற்றங்களைப் பெற்று புதிய வகை உருமாறிய வைரஸாக வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நமது நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. மூன்றாவது அலை வந்து விட்டது என்றும் உருமாறிய வைரஸ் சமூகத் தொற்றாக மாறிவிட்டது என்றும் கூறப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்வியல் முறைகளைப் பயன்படுத்தி இதிலிருந்து மீள முடியும். எளிய வழிமுறைகள் சுவாசப் பாதையைச் சரிசெய்ய நம் முன்னோர்களால் பின்பற்றபட்டு வந்துள்ளன.
 
கரோனா தொற்று நமது நுரையீரல் பகுதியில் புகுந்து சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தி உடம்பில் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆகையால் நுரையீரலைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம். வாய் மற்றும் மூக்கு நுரையீரலோடு நேரடி தொடர்புடைய உறுப்புகள். இவற்றின் மூலம் தான் கரோனா வைரஸ் உள்ளே புகுந்து உயிரை எடுக்கிறது. ஆக ஒவ்வொரு வரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்கள் சுவாசப் பாதையைச் சரிசெய்ய வேண்டும். கரோனா மூக்கின் உட்பகுதியில் நுழைந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி இருக்கும் தன்மை கொண்டது. அதேபோல் வாயின் உட்புறம் மற்றும் தொண்டை வரை செல்ல கூடிய வைரஸாக இது இருக்கிறது. ஆக இந்தச் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றை முறியடித்தால் கரோனாவை வென்று விடலாம்.
 
நமது முன்னோர்கள் பல பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளைக் கூறிச் சென்றார். அவற்றில் சில இன்று கரோனாவை விரட்ட வலிமையான ஆயுதமாக விளங்குகின்றன.
 
ஆலம் விழுது
 
இன்றைய காலத்தின் நவீன பல் துலக்கும் கருவிகள் வருவதற்கு முன்பே நம் முன்னோர்களால் பின்பற்றபட்டு வந்துள்ள எளிய முறை ஆலம் விழுது கொண்டு பற்களைச் சுத்தம் செய்தல் . ஆலம் விழுதில் காணப்படும் பால் போன்ற திரவம் வாய் மற்றும் சுவாசப் பாதையில் உள்ள தொற்றை முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும். இதனைக் கொண்டு ஒவ்வொரு நாளும் பல் துலக்கி வந்தால் தொற்றை முறியடிக்க முடியும்.
 
கருவேலங் குச்சி மற்றும் நாயுருவி வேர்
 
இயற்கையில் கிடைக்கும் கருவேலங் குச்சியைக் கொண்டு பல் துலக்கி வந்தால் தொற்றை முறியடிக்க முடியும். அதேபோல் நாயுருவி வேர் சுவாசப் பாதையில் உள்ள தொற்றை முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இவை பெரும்பாலும் கிடைக்கக்கூடியவை தான். இதனைப் பயன்படுத்தி கரோனா தொற்றிலிருந்து மீள முடியும்.
 
கபசூரண கசாயம் மற்றும் நில வேம்பு கசாயம்
 
இன்று இவை அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் தொற்றை முறியடிக்க முடியும். உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலைச் சுத்தம் செய்கிறது. அமில தன்மைக்குச் செல்லாமல் உடல் காரத்தன்மை கொண்டதாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும்.
 
வேப்பங் கொழுந்து மற்றும் மிளகு
 
ஒவ்வொரு நாளும் இவற்றை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். மிளகு என்றால் ஐந்து எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவேண்டும். நன்றாக மென்று தின்ன வேண்டும்.  வேம்பின் கசப்பான தன்மையும் மிளகின் காரத்தன்மையும் உடம்பிற்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்கும் சிறப்பு வாய்ந்த பொருட்களாக இவை இருக்கின்றன. மிளகை மென்று தின்ன முடியாதவர்கள் உணவுடன் சேர்த்துத் தினந்தோறும் உட்கொள்ள வேண்டும்.
 
சுக்கு மல்லி டீ
 
பல மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது சுக்கு. சுக்கோடு மல்லி இணைத்துத் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துத் தினந்தோறும் உட்கொள்ள வேண்டும். சுவாசப் பாதையில் உள்ள தொற்றை முறியடிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 
 
இஞ்சி மற்றும் பூண்டு
 
இவை இரண்டும் காரத்தன்மை கொண்ட பொருட்கள். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடம்பு காரத்தன்மை கொண்டதாக வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு இவை இரண்டும் பயன்படுகின்றன. காலங்காலமாக இவற்றை நாம் அனைவரும் உணவில் சேர்த்துக் கொண்டே வருகிறோம். இது போன்ற பேரிடர் காலங்களில் இவற்றை உணர்ந்து பயன்படுத்தி கரோனா தொற்றிலிருந்து மீள வேண்டும்.
 
கிராம்பு
 
உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அஞ்சறைப் பெட்டி பொருட்களில் ஒன்று கிராம்பு. இன்று பற்பசை விளம்பரங்களில் கூட இதனைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்ட பொருள் இது. எத்தகைய கிருமியாக இருந்தாலும் நுரையீரல் பகுதிக்குச் சென்று விடாமல் தடுக்கும் சிறப்பு வாய்ந்த பொருளாக இது விளங்குகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது ஒரு கிராம்பை வாயில் போட்டுச் சுவைக்க வேண்டும். இதன் மூலம் பிறரிடமிருந்து வரும் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். நான்கு முதல் எட்டு மணி நேரம் இதனை வாயில் போட்டுச் சுவைக்கலாம்.
 
மஞ்சள் உப்பு தண்ணீர்
 
இவை மூன்றையும் கலந்து கொதிக்க வைத்து ஆவி பிடித்து வர வேண்டும். இதன் மூலம் மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதியில் ஏற்படும் தொற்றை முறியடிக்க முடியும். ஒவ்வொரு நாளும் தவறாமல் இதனைச் செய்து வரலாம்.
 
தேன்
 
ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சுடுநீர் அருந்த வேண்டும். உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இது. அனைவரும் உட்கொள்ளும் எளிய உணவு பொருளாக உள்ளது.
 
நிலக்கடலை
 
நிலக்கடலையைப் பச்சையாக வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் புரோட்டின் சத்து அதிகரிக்கும். உடல்நலத்திற்கு இச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் இதனைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும்.
 
தேங்காய்
 
மக்கள் அனைவரும் தவறாமல் காலையில் இரண்டு சில் தேங்காய் துண்டுகள் சாப்பிட்டு வர வேண்டும். வயிறு சார்ந்த தொந்தரவுகள் குறையும் உடல் ஆற்றல் வாய்ந்ததாக மாறும். 
 
இவ்வாறு மக்கள் அனைவரும் தவறாமல் மேற்சொன்ன வழிமுறைகளையும் உணவு முறைகளையும் பின்பற்றி கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இவை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடியவை தான். இதற்கு முன்னர் வாழ்வியல் முறையாக இவற்றைப் பின்பற்றி வந்துள்ளோம். இப்போது நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு கருதி இதனை உணர்வுபூர்வமாகப் பின்பற்றி வருகின்ற பேரிடர் காலங்களில் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
Series Navigationபாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்அன்னாரா? அண்ணாரா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *