காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்

author
8
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 32 in the series 29 மார்ச் 2015

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்

அண்மையில் பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தோ்வு நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்துச் சுவர்களில் வரிசை வரிசையாக ஏறி நின்று மாணவர்களுக்கு விடைத்துணுக்குகள் வழங்கி உள்ளனர். அப்படி வழங்கியவா்கள் அந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பா்கள்தாம். அந்தக் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின. நாளிதழ்கள் வெளியிட்டன. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஏதோ உயர்ந்தோங்கிய கட்டடத்துக்குப் பூச்சு வேலை நடைபெறுகிறது என எண்ணத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஸ்பைடர்மேன்கள் போல் சுவரில் தொற்றிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பிட் சப்ளை பண்ணி இருக்கிறார்கள். இவை அத்தனையும் அந்த மாநிலக் காவல் துறையினரின் முன்னிலையிலேயே பயமின்றி நடந்துள்ளன.

அங்குக் காப்பி அடிப்பது என்பது காப்பி குடிப்பது போன்ற ஓா் அங்கீகாரம் பெற்ற பழக்கமாகிவிட்டிருக்கிறது.
அதற்கடுத்த நாளில் தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரண்டாம் வகுப்புக் கணக்குத் தேர்வின் போது காப்பிக் கலாச்சாரத்தின் மற்றொரு படையெடுப்பு நடந்துள்ளது. தேர்வில் வினாத்தாள் வழங்கியவுடன் அந்தப் பள்ளியின் ஆசிரியா் அந்த வினாத்தாளை அப்படியே வாட்ஸ் அப்பில் படம் எடுத்து, உரிய ஆசிரியா்களுக்கு அனுப்பி இருக்கிறார். அவர்கள் அதற்குச் சரியான விடைகளை வாட்ஸ் அப் வழியாகவே அனுப்பி இருக்கிறார்கள். அந்த விடைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தேர்வு எழுத வைத்துள்ளார்கள்.
இப்படி எதற்கு பள்ளி நிர்வாகமே செய்கிறது? என்ற கேள்வி எழலாம். கல்வி என்பது கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டதால் வந்த சீரழிவு இது. தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி என்று காண்பித்து, நிறைய மாணவர்களைச் சோ்த்து வருமானம் ஈட்டத்தான் அவ்வாறு தனியார் பள்ளிகள் செய்கின்றன. அதிகாரிகளின் கெடுபிடியால் சில அரசுப் பள்ளிகளும் காப்பி அடிப்பதில் வல்லமையைக் காட்டுகின்றன. தனியார் பள்ளிகளின் தோ்வு முடிவுகளைக் காரணமாகக் காட்டி, அரசுப் பள்ளியிலும் அதே போல் தோ்வு முடிவு தேவை எனக்கூறிப் பள்ளி நிர்வாகத்தை அரசு அதிகாரிகள் விரட்டுகின்றனா். குறிப்பிட்ட பாடத்தில் மாணவா்கள் தோல்வி என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் பணிமாறுதல் செய்யப்படும் நிலையும் உள்ளது. இதைத் தவிர்க்கவே அரசுப் பள்ளி ஆசிரியா்களும் அறைக்கண்காணிப்பாளா்களைக் குளிர்வித்துக் காப்பி அடித்தலை உரம்போட்டு வளா்க்கிறார்கள். அதில் அமோக விளைச்சலையும் காண்கிறார்கள்.
ஒரு மதிப்பெண் இரு மதிப்பெண் கேள்விகளுக்கு அந்தந்தப் பள்ளி ஆசிரியா்களே தோ்வுக் கூடத்துக்குள் வந்து விடை சொல்லிக்கொடுக்கிறார்கள். இவைஎல்லாம் நாம் சிறந்த பள்ளி என்று சொல்லி, இலட்ச லட்சமாகக் கொண்டுபோய்க் கொட்டிக்கொண்டிருக்கும் பள்ளிகளில் சா்வ சாதாரணமாக நடக்கிற நிகழ்வுகளாகிவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியில் விடைகளை நகலச்சு எடுத்து மாணவா்களுக்கு வழங்கி உள்ளனா். இப்படித் தோ்வெழுத வைத்து, நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி, சாதனை விளம்பரங்களைப் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கிறார்கள்.
காப்பி அடித்தலில் பல வகைகள் உள்ளன. அதுபற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம். தொழில்நுட்ப வளர்ச்சியைக் காப்பி அடித்தலுக்குப் பயன்படுத்துவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திருட்டுத்தனமாக நடந்த காப்பி அடித்தல், இன்று விளம்பரம் செய்து கூப்பிடாத குறையாக வெட்ட வெளிச்சமாக நடந்துகொண்டிருக்கிறது.
மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வாங்கிக்கொடுப்பதற்கு, புனித ஆசிரியா்களே புரோக்கா்களாக மாறிப் பொருளீட்டுகிற கொடுமையும் அரங்கேறித்தான் வருகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளில் இந்த வியாபாரம் நல்லாத்தான் நடக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால், உயா்கல்வியின் லட்சணம் மறுபக்கம் பல்லிளிக்கிறது. கல்வியின் உயா்நிலைப் பட்டம் முனைவா் பட்டமாகும். இன்றைக்கு முனைவா் பட்டம் எப்படிப் பெறப்படுகிறது?
99 சதவீத முனைவா் பட்ட ஆய்வுகள் போலியானவை என்றும்- ஏற்கனவே செய்த ஆராய்ச்சியை அப்படியே நகலெடுத்துக் கொடுத்தவை ஆகும் என்றும் ஓா் ஆய்வு சொல்கிறது. முனைவர் பட்ட வழிகாட்டிப் பேராசிரியா்களே கணிசமாகப் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வேடுகளை அவா்களே நகலெடுத்துத் தரமாகப் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள். வைவா நடக்கும்போது, அந்த ஆய்வு சரியானதுதானா என்பதை அறிய அறிஞர்கள் கேள்வி கேட்டு அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து நெறிப்படுத்துவார்கள். அதற்கு தற்போது வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வைவா என்பது ஒரு சங்கப்பலகை போல நடக்க வேண்டும். ஆனால் வைவா என்பது விருந்து உபசரிக்கும் வைபவம் போல நடக்கிறது. சில இடங்களில் கேளிக்கைகளும் மதுவிருந்துகளும் உண்டாம். இத்தகையோர் முனைவா் பட்டம் பெற்றுக் கல்லூரியில் பேராசிரியா்களாக வருகிறார்கள். முனைவா் பட்டம் வாங்கிய பலரிடத்தில் அவா்களின் ஆய்வேட்டில் உள்ளதைப் பற்றிக் கேட்டாலே அதுபற்றி அறவே தெரியாமல் திருதிரு என்று முழிக்கிறார்கள். அவா்கள் விலைகொடுத்து வாங்கிய ஆய்வேட்டை அவா்களே படிப்பதில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் காப்பி அடிப்பதைத் தங்களின் கலாச்சார உரிமை என்று போர்க்கொடி தூக்குவார்கள் போலிருக்கிறது. புத்தகத்தைத் திறந்துவைத்துத் தோ்வு எழுதலாம் என்று சட்டம்கூட இயற்ற நம் அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். அப்படி பார்த்து எழுதுகிற தோ்வு முறையைக் கொண்டுவந்தால்கூட, அதிலும் வேறு ஆட்களை அமா்த்தித் தோ்வு எழுதுவார்கள். அதற்கு இப்போதே ஒரு சான்று உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கல்வி அமைச்சரே தனக்காக ஆள்வைத்துத் தோ்வெழுதிச் சிக்கிக்கொண்டதை மறக்க முடியுமா? தெரிந்தவை கடுகெனச் சில. தெரியாதவை கடலெனப் பல.
இப்படி எங்கும் காப்பி எதிலும் காப்பி என்றான பிறகு, கல்வியின் தரம் எப்படி இருக்கும்? இந்தக் காப்பிக் கலாச்சாரத்தால் ஒழுங்காகக் கல்வி கற்கும்- நோ்மையாகப் படிக்கும் மாணவா்கள்தாம் பின்தங்கி விடுகிறார்கள். அவா்களின் வாய்ப்பு அயோக்கிய தனத்தால் பறிக்கப்படுகிறது.
இதற்கு யாரைக் குறை சொல்வது? அரசையா? மக்களையா?
இதோ தொலைக்காட்சியில் ஒரு பாட்டு ஒலிக்கிறது…

நீங்கள் அத்தனை பேரும் உத்தமா்தானா சொல்லுங்கள்…
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்…

Series Navigationஇந்தப் பிறவியில்கோழி போடணும்.
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    வளவ. துரையன் says:

    மதிப்பெண்கள் வாங்குவதுதான் மாணவர்களின் எதிர்காலம் என்றாகி விட்டது. பெற்றோர் எப்படியாவது வேலைவாய்ப்பு கிடைக்கும் நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள். அதற்கு எதையும் செய்யத் துணிகிறார்கள். பள்ளிகளை நடத்துகிறவர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தால்தான் வரும் ஆண்டுகளில் நிறைய மாணவர்கள் சேர்வார்கள் என்று எண்ணுகிறது. இவற்றின் வெளிப்பாடுகளால்தாம் காப்பியடிக்கும் கலாச்சாரம் பெருகி வழிகிறது. தீவிர வாதிகளைப்பிடிப்பது போலத்தான் இன்று தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அறைக்குள் செல்கிறார்கள். காப்பியைத் தடுக்கும் வழி எது என்றே தெரியவில்லை. மன்றவாணன் சரியான நேரத்தில் நல்ல விழிப்பை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். பார்ப்போம்.

    1. Avatar
      mahakavi says:

      Mr. VaLava Duraiyan:
      Where were you hiding when BS was excoriating you on couple of your articles here? People like me had to go and bat for you. In my opinion, you are obligated to respond to criticisms leveled at your articles that you write here. You were AWOL (absent without leave).

  2. Avatar
    mahakavi says:

    I am aghast at this blatant and widespread malpractice. As the author says, education has become a business whose owners are filthy rich folks and politicians.When I was in high school and whenever one individual was caught looking at a slip he hid in his pocket, the proctor would escort him to the headmaster’s office and he would be disbarred from appearing at the final exam with a scarlet letter “M” (for malpractice.

  3. Avatar
    BS says:

    கட்டுரை பீஹாரையும் தமிழகத்தையும் ஒன்றாகப்பார்க்கிறது. பீஹாரை இந்தியாவில் எந்த மாநிலத்தோடும் (உ பி, ஜார்க்கண்ட் தவிர) ஒப்பிடமுடியாது. தமிழகத்தில் தேர்வு முறைகேடுகளுக்குக்காரணம் கட்டுரையே சொல்கிறது: பள்ளிகள் தேரச்சி விகிதத்தைப் பெருக்கு தங்களை விளம்பரப்படுத்தி பொருளாதாயம் பெற ஆசைப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோர் அதிக மதிப்பெண்கள் பெற ஆசைப்படுகிறார்கள். எந்த வழியென்றாலும் பரவாயில்லை. இதுதான் தமிழகம்.

    பீஹாரின் கதையே வேறு: அங்கு இப்பிரச்சினை மக்களின் ஒட்டுமொத்தத்தத்தின் சமூஹப்பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது. மாணவிகள் 10ம் வகுப்புத் தேறினால் மட்டுமே அவர்களை ஆண்கள் மணக்க விரும்புகிறார்கள். அங்கு பெற்றோர்கள் மணம் செய்ய ஒரு வாய்ப்புக்காகவே 10ம் வகுப்புவரை படிக்கவைக்கிறார்கள். அதற்கு மேல் அவர்கள் பெண்களைப்படிக்க வைப்பதில்லை.

    பள்ளிகளில் 8 வகுப்புவரை மாணாக்கர்கள் மேல்வகுப்பு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வு கிடையாது. 9 ம் வகுப்பில் அவர்கள் தேர்வில் வெற்றிபெறவியலாது. அத்தேர்வு பள்ளியாலேயே நடாத்தப்படுவதால், பள்ளி நிர்வாகம் இத்தனை வகுப்பு வந்தவனை ஏன் 9ல் தடுக்கவேண்டும். 10வது அரசுத்தேர்வு அங்கு தடுக்கபடத்தானே போகிறார்கள் என்ற நினைப்பில் 10ம் வகுப்புக்கு அனுப்பிவிடுகிறார்கள். மாணவிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மணமாகவேண்டுமென்ற அக்கறையினால்.

    ஆக, 10 வந்துவிடுகிறார்கள். 10 வகுப்புக்களையும் ஓரேயாண்டில் படித்துவிட முடியுமா? அதனால் அவர்களால் தேர்வைச் சந்திக்க முடியவில்லை. பெண்ணென்றால் மணத்திற்காக, ஆணென்றால், 10ம் வகுப்புச் சான்றிதழோடு வெளியே போவேமே என்ற மனநிலை. இதைப்பள்ளி நிர்வாகம் புரிந்து கண்டுகொள்ளாமல் விடுகிறது.

    …மேலும்

  4. Avatar
    BS says:

    கட்டடத்தில் நாம் காணும் நபர்கள் எல்லாம் மாணாக்கரின் உறவினர் அல்ல. அவர்கள் கூலிக்காக அச்செயல் செய்ய அனுப்பப்பட்டவர்கள். 10 ம் வகுப்புத் தேர்வு அனுமதிச்சீட்டுகள் வந்தவுடன் பெற்றோர்கள் அவ்வூரில் உள்ள கோச்சிங்க் நிலையத்தாரை அணுகுகிறார்கள். ஒரு தொகையைக் கொடுக்கிறார்கள். அனுமதிச்சீட்டின் நகலையும் கொடுத்துவிடுகிறார்கள். பின்னர் தேர்வு நாளில் தேர்வு மையத்துக்கு வெளியே நிற்கிறார்கள். கோச்சிங்க் நிலையத்தாரிடம் ஒரு கூலிப்படை இளைஞர்கள் உண்டு. அவர்களிடம் கூலி பேசி, மையத்துக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் மாணவரின் இடத்தை அறிந்து ஏறி, தேர்வு விடைகளை கீழே நிற்கும் நபரிடமிருந்து வாங்கி நீண்ட் கம்பு வழியாகப்பெற்று. பின்னர் உள்ளே எறிகிறார்கள். பெற்றோர் கொடுத்த கூலிக்கு வேலை நடக்கிறதா என்று பார்க்கிறார்கள். கூலி கொடுக்கமுடியா ஏழைப்பெற்றோர் தாமே செய்வதுண்டு.

    அதிக மதிப்பெண்கள் பெறவோ, பள்ளியின் தேர்வு விகித்ததைப்பெறவோ இக்காட்சிகள் அரங்கேற்றப்படவில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றாவது தேர்ச்சிபெற்றுவிடவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில்லை என்றே இவை நடப்பது எல்லாருக்குமே தெரியும்.

    எனவே இதை ஒரு சமூஹப்பிரச்சினையாக அணுக வேண்டுமென்கிறார்கள் கல்வியாளர்கள். தமிழகத்தில் நடப்பது குற்றம். பீஹாரில் நடப்பது பசிக்குத் திருடுவது போல. திருட்டு திருட்டுத்தான் என்று நியாயம் பேசும் ஆசாமிகளிடம் என் வாதம் இல்லை. சாரி.

  5. Avatar
    BS says:

    வேலைக்காகத்தான் படிக்கிறார்கள் என்றாதங்கப்படுகிறார் வளவ துரையன். கல்வி எதற்காக பின்? தமிழ் படிப்பவர்களெல்லாரும் புலவர்களாகவா படிக்கிறார்கள்? கல்வி பெறுபவர்கள் அனைவரும் அத்துறையில் நிபுணர்களாவா படிக்கிறார்கள்? முதலில் படிக்கவேண்டுமா?

    வேலைக்குத்தான் கல்வி. ஆயிரத்தில் ஒருவனே அதைத்தாண்டி செல்கிறான். இதுதான் உண்மை.

    1. Avatar
      mahakavi says:

      I agree with BS on this point. Education is a means to earn a living first and foremost. There are a few individuals ( fraction of a percent) who pursue it as a passion but that passion requires a full stomach. So a job is a prerequisite to aim higher. Take heart, the fraction of a percent of folks who follow the distant call to probe, search, and produce quality material in various fields is enough to carry the rest of humanity.

      The only problem here seems to be to get ahead of others by cheating. If you get higher marks by cheating you can get ahead of the honest guy who scores a point below you. That is awful. The world is such a morass which makes me sick.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *