டௌரி தராத கௌரி கல்யாணம் – 13

This entry is part 6 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

புதுவை.

வெகு தூரத்தில் ….கார்த்தி, லாவண்யா ….கல்யாணி இவர்களின் பிரச்சனைப் புயல் மையம் கொண்டதை அறியாத கௌரி, வசந்தியின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி கரையைக் கடந்து அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறியபடியே சுரத்தே இல்லாதா குரலில் ‘விருகம்பாக்கம் போப்பா’…என்றவள் ம்ம்ம்ம்…வசந்தி நீயும் .ஏறிக்கோ ….முதல்ல எங்க வீட்டுக்குப் போகலாம்….என்றதும் வசந்தியும் ஏறிக்கொள்ள ,ஆட்டோ விர்ரென்று கிளம்பி கௌரியின் வீடு நோக்கி வேகம் பிடித்தது .

தாங்க்ஸ் மேடம்…..வசந்தியின் குரலில் நன்றியின் எதிரொலி.

ம்ம்ம்…..பரவால்ல…..இப்ப ஒண்ணும் பேசாதே என்று கண்களால் ஜாடை செய்தவள் மெல்ல வசந்தியை தன் அருகில் சேர்த்துக் கொண்டவள் லேசாக அவளின் தோளில் சமாதானமாகும்படி மெல்லத் தட்டிக் கொடுக்கிறாள். அதில் ஒரு தாயின் பரிவு தெரிந்தது. வீடு வந்து சேரும் வரையில் இருவரின் மனதும் இரு வேறு துருவங்களில் பிரயாணம் செய்தது. ஜில்லென்ற காற்று இருவரின் இதயத்தையும் சமமாக ஆற்றியது.

வீட்டின் முன்பு ஹாரனோடு வந்து நின்ற ஆட்டோவில் வந்து இறங்கிய கௌரியைக் கண்டதும் வேகமாக வந்து கதவைத் திறந்த சித்ரா, ஆட்டோ கிளம்பியதும் ,

ஆமா…லேட்டா வருவேன்னு சொல்லிட்டுப் போனே…..சரிதான்….அதுக்காக இத்தனை லேட்டாவா… ஆகணும்…ஒரு கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணு காலாகாலத்துல வீட்டுக்கு வரலேன்னா, அக்கம் பக்கத்துல இருக்கறவா….என்ன சொல்லுவா…? அத்தனை நேரம் அந்த கார்த்தியோட பீச்சுல போய் கூத்தடிக்காட்டா என்ன வந்தது…? நான் சொன்னாக் கோவம் மட்டும் பொத்துண்டு வரும்..தான் செய்யறது மட்டும் தப்புன்னு ஒத்துக்கவே மனசு வராது….உனக்கு.

அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த பொறுமை அனைத்தும் வார்த்தைகளாக வெடித்துக் கிளம்பியது சித்ராவிடமிருந்து.

கௌரியின் பின்னால் தயங்கியபடி நின்ற வசந்தியைப் பார்த்ததும் முகத்தில் குழப்பத்தை ஏந்தியவளாக……

என்ன இத்தனை நாழி?..ரொம்ப இருட்டிடுத்து…..யாராக்கும்…இந்தப் பொண்ணு…இந்த ராத்திரி நேரத்துல இங்க அழைச்சுண்டு வந்து நிக்கற?

நினைத்ததை அப்படியே சொல்லிவிட்ட அம்மாவை பொய் கோபத்தோடு முறைத்த கௌரி….நோக்கு எப்பவுமே ஒரு இங்கிதம் இருக்காதா? மனசுக்குள்ள நினைச்சதை அப்படியேவா பேசுவா ? என்று நினைத்துக் கொண்டே…இரு வரேன்….என்று சொல்லிக் கொண்டே…உள்ளே வா வசந்தி…இது என் அம்மா தான்….ரொம்ப வெளிப்படையா பேசுவாங்க.ஆனால் மனசுக்குள்ளே ஒண்ணுமே வெச்சுக்க மாட்டாங்க. நீ தப்பா எதையும் எடுத்துக்காதே. என்று சொன்னவள்..

அம்மா…. சித்த சும்மாயிறேன்….என்று சைகை காண்பிக்கிறாள்.

இது வேறயாக்கும்….நான் எதைக் கேட்டாலும், நான் உனக்கு வாயை மூடிண்டு சும்மாயிருக்கணம்…நீதான்.என்னை ஆட்டிப் படைக்க…கண்ணுலயே ரிமோட் கண்ட்ரோல் வெச்சுண்டு இருக்கயே..!

வசந்தி தயக்கத்துடன், மேடம் நான் வேணாக் கிளம்பறேன் என்று தயங்கியபடியே சொல்லவும்.

அம்மா…இவள் வசந்தி…என்கிட்டே ஆபீஸ்ல தான் கேன்டீன் இன் சார்ஜா வேலை பார்க்கிறாள். அவள் குடும்பத்துல என்ன பிரச்சனையோ தெரியலை. திடீர்னு பெசன்ட் நகர் பீச்சுல இவளைப் பார்த்தேன்..

அதுக்காக அவள் குடும்பப் பிரச்சனையை நீ தீர்க்கப் போறியா? இது நோக்கே நன்னாருக்கா? உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து கரை சேர்க்கணமேன்னு நான் இங்க தவியா தவிக்கிறேன்…இதுல அசலாத்து சமாச்சாரம் நமக்கெதுக்கு? நூறோ…..ஐநூறோ கொடுத்து அனுப்பு..யாருக்கு யாரு ஜவாப்தாரி?

அப்படிப் பார்த்தால், நாளைக்கே நம்மாத்து வாசல்ல..நூத்துக் கணக்கா அபலைகள்னு வந்து நிப்பா.கடைசில நீ ரோட்டுக்கு வரணம் …
நான் இப்பச் சொன்னாப் புரியாது நோக்கு.

ம்ம்மா…..ப்ளீஸ் கொஞ்சம் நிறுத்தேன்…..இவளோட நிலைமையைத் தெரிஞ்சுண்டா நீ இப்படியெல்லாம் பேசமாட்டே.

என்ன பெரீய பொடலங்காப் நிலைமை….யாருக்கும் வராத நிலைமை..?

இவள் தற்கொலை பண்ணிக்க கடலுக்கே போனாள் …நோக்குத் தெரியுமா?அதான் சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்தேன்.

என்னது…..!!! தற்கொலையா? கடல்ல விழுந்தா? போச்சுடா சாமி….வேற வினையே வேண்டாம். நாளைக்கு கார்த்தால எத்தனை மீசைக்காரா வந்து நம்மாத்து வாசல்ல கல்லெறியப் போறாளோ? இதெல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் வரை போகும்…இதெல்லாம் நோக்குத் தேவையா? நமக்கே ஆயிரம் பிரச்சனை ….தீர்க்க வழியில்லை.

அம்மா…நீ என்னைக் கொஞ்சம் யோசிக்க விடேன்….இப்ப…இவள் நம்மாத்தில் இருந்துட்டுப் போகட்டும்..நாளைக்குக் கார்த்தால இவளைக் கொண்டு போய் அவாத்தில் நல்லதனமா சொல்லிச் சேர்த்துடறேன். அதுவரை…

அதை இப்பவே செய்…காலம் கெட்டுக் கெடக்கு..உலகம் இருக்கற இருப்பில் .யாரும் யாருக்கும் ஐயோ…பாவம் பார்க்க முடியாது.

ம்ம்மா…..வசந்தி இங்க தான் இருப்பா…….கெளரியின் குரலில் தீர்மானம் தெரிந்தது.

அதற்குள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த வசந்தி சடாரென்று சித்ராவின் காலடியில் விழுந்து “அம்மா…எனக்கு அடைக்கலம் தாங்க…..இல்லாட்டி நான் செத்துப் போறதத் தவிர எனக்கு வேற வழி தெரியலே..” என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

பாம்பை மிதித்து விட்டவளாக விருட்டென்று காலை இழுத்துக் கொண்டு பின்னாடி நகர்ந்த சித்ரா…”விஷயமெல்லாம் பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்காகிண்டு இருக்கு”….நான் என்ன செய்யறது…வேடிக்கை பார்க்கறேன். அதுக்குத் தானே இந்தாத்தில் இருக்கேன் ..!

எழுந்திரு வசந்தி…அப்படி உனக்கு என்ன தான் பிரச்சனை …இப்பச் சொல்லு..!

குழந்தை….!

என்னது….குழந்தையா….நீ என்ன சொல்றே?

ஆமாம்…மேடம்….எனக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் குழந்தை பொறக்கலை….புகுந்தவீட்டுல அம்புட்டு பேரும் கன்னாப் பின்னான்னு ஏசினாங்க …. இந்தக் கோளாற எப்பிடியாச்சும் மாத்தணும்டு என் தங்கச்சிய மறு கல்யாணம் நான் தான் அவருக்கு செஞ்சு வெச்சேன். அவளுக்கு கலியாணம் ஆன மறுவருஷமே குழந்தை பொறந்துச்சு.ராசாவாட்டம் பையன்…..ஆனா இப்ப….என் தங்கச்சியே அவரோட சேர்ந்து என்னிய ஏசுது. நான் வேண்டாதவளாயிட்டேன். இதே கவலையில என்னை அனாதையா விட்டுபோட்டு என் அம்மா, அப்பாவும் அடுத்தடுத்து செத்துப் போயிட்டாங்க.

அழுது கொண்டே தொடருகிறாள்..

இந்நேரம் பார்த்து நம்ப கம்பெனி கேன்டீன் கான்ட்ராக்ட் கூட முடிஞ்சி போச்சு. உனக்கு இனிமேட்டு இங்க வேலை இல்லையின்னு சொல்லிட்டாரு காண்டிராக்டரு.அது வேற வீட்டுல பிரச்சனை.என் சம்பளம் மொத்தமும் வாங்கிகிட்டு என்னிய ஒரு வேலைக்காரி மாதிரி நடத்துவா..இப்ப அந்த கொழந்தைய என் பக்கத்துல நெருங்கக் கூட விட மாட்டாக..நான் தொட்டுப்புட்டா அம்புட்டுத்தான். வாய்க்கு வந்தபடி கத்தி கூப்பாடு போடுவா. இங்கிட்டிருந்து போ வெளியன்னு சொல்லி என்னைக் களுத்தப் பிடிச்சி வெளிய துரத்தினாங்க. செத்துத் தொலை…இனிமேட்டு இந்த வீட்டு வாசப்படி மிதிக்காதே…கடல்ல விழுந்து உசுரை விட்டுத் தொலை..உன் சம்பளப் பணமும் வேணாம்…நீயும் வேணாம்னு சொல்லிட்டு ..உனக்குப் புண்ணியமாப் போகும்னு கடைசியா கையெடுத்து கும்பிட்டு கேட்டுகிடுச்சு என் கூடப்பொறந்த பொறப்பு. இப்ப நீங்களே சொல்லுங்க. நான் இனிமேட்டு ஏன் வாழணும்? தெனம் செத்து செத்து வாழறதை விட….ஒரேயடியாய்….போயரலாமுண்டு .! கேவினாள்….

இனிமேல் தான் நீ தலை நிமிர்ந்து வாழணம் …! கௌரி தெளிவாக சொன்னதைக் கேட்டு சித்ரா குறுக்கிடுகிறாள்.

வசந்தி….நீ போயி முகம் அலம்பிக்கோ…அதோ உள்ளே போனால் பாத்ரூம் இருக்கு…என்று கௌரி சொன்னதும் வசந்தி வேகமாக எழுந்து போகிறாள்.

பாவம் தான்…கேட்க மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் குடும்ப சமாச்சாரம்….இதுக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு….கோர்ட்டு இருக்கு..சட்டம் இருக்கு.இதையெல்லாம் நீ தலை நுழைக்கக் கூடாதுன்னு நோக்குத் தெரியாதா ? சித்ரா தாழ்ந்த குரலில் சொல்கிறாள்.

தெரியும்மா ….இதுக்காக ஒரு அபலைப் பெண் போலீசுக்கோ, கோர்ட்டுக்கும் போய் நின்னா…அப்பறம் என்னாகும்னும் தெரியும் .!

அதுக்காக…..?

வசந்தி பாட்டுக்கு இப்ப நம்மளோட இருக்கட்டும்.உனக்கும் ஒத்தாசையா…!

எனக்கு எந்த தோசையும் வேணாம்…! நீ சொல்றதுக்கெல்லாம் நான் வேணாத் தலையாட்டுவேன்…நாளைக்கு அந்தக் கார்த்தியை கல்யாணம் பண்ணீண்டு….!

அது….எனக்கு நடக்காது…..ஏன்னா…கார்த்திக்கு கல்யாணம் ஆயாச்சு..

என்னடி சொல்றே….? சந்தடி சாக்குல தலையில கல்லைத் தூக்கிப் போடறே…?

அவனும் இப்படித்தான் என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டான்….என்ன பண்றது….பெண்ணாகப் பிறந்துட்டால் சில கஷ்டங்கள் எல்லாருக்கும் பொது தானே…? இதுல யார் உசத்தி….யார் தாழ்த்தி..

என்னாச்சுடி…….அதான் உன் முகமே சரியில்லையா….எதையோ பறிகொடுத்தவ மாதிரி…….நான் இந்தப் பொண்ணுக்காகத்தான்னு நெனச்சேன்.

ஆமாம்…பறிகொடுத்துட்டேன்…..!

என்னடி உளர்றே…. கலக்கத்துடன் மகளின் முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.

ஒண்ணுமில்லைம்மா…..! நடந்ததெல்லாம் நாளைக்கு சொல்றேன்…அவளுக்கு முன்னால இந்த விஷயம் இப்ப வேண்டாம்.நேக்கு பசிக்கறது…ரெண்டு பேருக்கும் ஏதாவது சாப்பிடத் தரயா ?

இரு….இரு…இட்லி வாக்கறேன். ..என்று சமையலறைக்குள் ஓடியவள் சில நொடிகளில் ஓடிவந்து… சந்தேகத்தோடு மீண்டும், இந்தப் பொண்ணு நல்லவள் தானே கௌரி , உனக்கு நல்ல பழக்கம் தானே…? என்று கேட்க.

நீ கவலைப் படாதே….அதுக்கு நான் காரண்டி….என்றவள் அங்கு வந்து நின்ற வசந்தியைப் பார்த்து நீ எங்கம்மாவுக்குத் துணையா எங்க வீட்டுலயே இருந்துடு …..பார்த்துக்கலாம்….சரியா என்கிறாள்.

அம்மா…நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு தெய்வம்….கண்டிப்பா உங்கள விட்டுப் போட்டு நான் எங்கிட்டும் போயிற மாட்டேன்மா.

முகம் அலம்பிக் கொண்டு பளிச்சென்று வந்து நின்ற வசந்தியை ஒரு சிநேகமான புன்னகையோடு பார்க்கிறாள் சித்ரா….வா..வந்து சாப்பிடு..வசந்தி நீயும் வா..இட்லி ரெடி…சாப்பிட அழைத்தாள் சித்ரா.

மூவரும் அதிகம் எதுவுமே பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தனர்.

முன்புற அறையில் படுத்துக் கொண்ட வசந்தி நிம்மதியில் கண்களை மூடிக் கொண்டாள் .

வசந்தி தூங்கியாச்சோ .? என்பதை நன்கு ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட சித்ரா ஒருவித பரபரப்புடன் கௌரியின் அறைக்குள் நுழைந்து பட்டென்று கதவைச் சார்த்தி தாழ்பாளைப் போட்டவள்….கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்த கௌரியை எழுப்ப முதுகில் கை வைக்கப் போக கௌரி குலுங்கிக் குலுங்கி அழவும்,பதறிப் போனவளாக, கெளரிம்மா….என் தங்கமே….என்னாச்சுடி என் கண்ணம்மா….ஏண்டா செல்லம் அழறியா….? நீ இப்படி அழம்படியா என்னாச்சும்மா..அந்தக் கடங்காரன் உன்னை என்ன செஞ்சான்….? சொல்லித் தொலைச்சுட்டு அழு…!

வெடுக்கென்று .திரும்பிப் படுத்த கௌரி….இப்ப நீ ஏன் இப்படி கத்தறே..? இந்தாத்துல நேக்கு மனசு விட்டு அழற சுதந்திரம் கூடக் கிடையாதா? ஐ நீட் சம் ப்ரைவசி…ப்ளீஸ் லீவ் மீ அலோன் …எல்லாத்துக்கும் உன்னோட பெர்மிஷன் வேணுமா? என்னைக் கொஞ்சம் தனியா நிம்மதியா அழ விடேன்…ப்ளீஸ்…!

அதாண்டி சொல்றேன்…..கௌரி…நீ அழாதே….என் கண்ணம்மா..கம்பீரமா இரு,அதில் தான் உன் அழகும் அறிவும் நிறைஞ்சிருக்கு. எதையும் எதிர்த்து நில்…1 துவளாதே..என்னவாயிருந்தாலும் என்கிட்டே சொல்லு. நோக்கு நான் இருக்கேன்….பக்கத்துணையா….சாஞ்சுக்கத் தூணா….எழுந்திரு….கையை நீட்டிய சித்ராவின் கையைப் பிடித்து எழுந்து உட்கார்ந்து அப்படியே தோளில் சாய்ந்து கொண்ட கௌரியைப் பாசத்தோடு அணைத்துக் கொண்டு தலை கோதிவிட்டு முதுகில் அன்போடு லேசாகத் தட்டிக் கொடுக்கிறாள் சித்ரா.

அம்மாவின் ஸ்பரிசம் பட்ட அதிர்வுகள் கௌரியின் இதயத்தைச் சுற்றி பாச அரண் போல உணர்ந்தவள் இனி நான் எந்த உணர்வுகளுக்கும் என் இதயத்தை நெருங்க விடமாட்டேன்…என்ற உறுதியோடு கண்களை அம்மாவின் மார்பில் முகத்தைத் தேய்த்துக் கொண்டவள் மெல்ல விலகி முகத்தை நேருக்கு நேராக நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தவள் பலவித உணர்வுகள் போட்டி போட்டு முன் நிற்க, உதடுகள் துடிக்க….”அம்மா….நாங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்போம்னு நம்பி நான் இப்போ டெல்லி போறதுக்கு முன்னாடி கார்த்திட்ட நான் என்னை இழந்துட்டேன்……அதுக்கப்பறம் இப்பத்தான் அவனைப் பார்க்கறேன்….லாவண்யாவோட புருஷனா…! பத்தே நாள்ல நினைச்சதெல்லாம் நடக்காதுன்னு புரிஞ்சு போச்சும்மா.! இப்ப நான் என்ன பண்ணணும் ? அழுத்தம் திருத்தமாகக் கேட்கும் மகளைப் பார்த்து

திடுக்கிட்ட சித்ரா, என்னடீ சொல்றே கௌரி…….நீயா..அவன் கல்யாணம் பண்ணிப்பான்னு நம்பி இப்படிப் பண்ணினே ..? இப்படி மோசம் பண்ணிட்டு வந்து இப்ப எங்கிட்ட என்ன பண்ணணும்னு கேள்வியாக் கேட்கிறே ….? என்னமோ…யாருக்கோ….நடந்தது மாதிரின்னா கேட்கிற…?

கார்த்திக்கு அப்படி ஒரு இக்கட்டான நிலைமை வரும், அதற்காக அவன் அப்பேற்பட்ட ஒரு முடிவுக்கு போயி அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான்னு நான் நினைக்கவே இல்லைம்மா.

நான் எத்தனை சொன்னேன்…..இப்படியா பண்ணினான் அந்தக் கடங்காரன். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்..அது மாதிரி உன் மனசுல ஆசையை விதைச்சு…கல் நெஞ்சுக்காரன்…அவா குடும்பமே அப்படித்தான்.

ம்மா….அவாளை ஒண்ணும் சொல்லாதே. அந்த இக்கட்டான நேரத்தில் இதை விட்டால் அவனால வேற ஒண்ணுமே முடியாதோ என்னவோ..!

மண்ணாங்கட்டி……!

மண்ணாங்கட்டியோ….தெருப்புழுதியோ…..இதுக்கப்பறமா அவனுக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு ஆயாச்சு. என்னோட லைஃப்ல இனிமேல் கார்த்தியோட சாப்டர் க்ளோஸ்ட்….! அவனைப் பத்தி இனி எதுவும் என்கிட்டே பேசாதே. நான் இன்னும் நாலு நாள்ல லண்டன் போகணும். மூணு மாசமோ ஆறு மாசமோ…! அதுக்குப் பிறகு நான் இதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துடுவேன்.எனக்கு ஒரு சேன்ஜ் அவசியம்மா. காதல் மனசுக்குள்ள இருந்துண்டு கனக்கக் கூடாதும்மா…என்னோட இதமான…இறகுபோல லேசான மனசு தொலைஞ்சு போச்சும்மா….நானே தொலைச்சுட்டேன். என்னை நீ கொஞ்சம் எதுவும் சொல்லாதே…ப்ளீஸ். என்னை எனக்காக மட்டும் இருக்கவிடேன். என்னை மன்னிச்சுடு….! கௌரியின் கண்கள் தாழ்ந்தது.

பதில் பேச்சுக்கு இடமே இல்லாத தருணங்கள் மெல்ல நகரத் தொடங்கியது.மெல்ல மெல்ல கௌரியை விட்டு நகர்ந்து அறையை விட்டு வெளியே வந்தவள் “எங்களை இப்படி அனாதையாக்கிட்டு போயிட்டேளே …இந்த அவலத்தையெல்லாம் இருந்து பார்க்க வேண்டாம்னு தான் நீங்க இப்படி அவசரப்பட்டு போயிட்டேளா ..? நம்ப கௌரி பண்ணின காரியத்தை கேட்டேளா? எனக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற சக்தியை தாங்கோ…..அவளுக்கு இப்போ நான் தான் துணையா இருக்கணம்…மகள் படும் வேதனையை அறிந்த தாய்மனம் வேதனையோடு கணவரின் புகைப்படத்தைப் பார்த்து மனம் கலங்கி நிற்கிறாள்.கண்களில் கண்ணீர் உறைந்து காய்ந்தது.

என்னம்மா….அப்பாகிட்ட கம்ப்ளைன்டா….! அவர் புரிஞ்சுப்பார்….நீ என்னைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…..கௌரியின் குரல் முதுகுப் பக்கமாக கேட்கவும் சடக்கென்று திரும்பிய சித்ரா….

நீ இப்போ லண்டன் போகாட்டா என்னவாம்….? ஆமாம்….இப்போ இவளை…இந்த வசந்தியை கொண்டு வந்து வீட்டில் வெச்சுருக்கியே, நீ பாட்டுக்கு எல்லாத்தையும் என் தலைல கட்டீட்டு பறந்து போயிடலாம்னு பார்க்கறியா?

ம்மா…..கூல் ..! வசந்தி உனக்குத் துணை தான்…அது உனக்கு இப்பப் புரியாது. நான் லண்டன்லேர்ந்து வந்ததும் அவளுக்கு ஒரு க்ரச் வெச்சுக் கொடுத்துடறேன்…குழந்தைகளே இல்லைன்னு வாழ்க்கையை தொலைச்சவளுக்கு குழந்தைகளே வாழ்க்கை தரட்டும். நீயும்
அவளுக்கு ஒத்தாசையா இரேன். கஷ்டப் பட்டுச் சிரிக்கிறாள் கௌரி.

நீ சொல்றதை நான் கேட்கறேன்…அப்போ நான் சொல்றதை நீயும் கேட்கணும்.

நிமிர்ந்து பார்க்கிறாள் கௌரி.

ரூமுக்கு வா…என்று மகளை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள், டீ கௌரி…இந்த கார்த்தி தொலைஞ்சது நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கோ ….!.உங்கப்பாவுக்கு அந்த டெல்லி பிரசாத்துக்குத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கடைசியா ரொம்ப ஆசைப்பட்டார். அந்தப் பிரசாத் கூட அவ அம்மாவை அழைச்சுண்டு மறுபடியும் டௌரி ஒண்ணும் வேண்டாம்….ன்னு நம்மாத்துக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்க வந்தாளாக்கும் . அப்பா தான் பேசத் தெரியாமல் ஏதேதோ பேசி அவாளை அப்படியே அனுப்பி வெச்சார். இல்லாட்டா அப்பவே உனக்கும் அவருக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்திருக்குமாக்கும்..ஏன்….இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகலை…..நானே….போய்….

ஆனால்… இப்ப நானே கெட்டுப் போய் நிக்கறேன்…அதுக்கென்ன பண்ணப் போறே ..? கௌரியின் வார்த்தை அம்பாக வந்து சித்ராவைத் தாக்கியது.

(தொடரும் )

Series Navigationமெங்கின் பயணம்சூறாவளி ( தொடர்ச்சி )
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *