தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 14 of 15 in the series 5 டிசம்பர் 2021

வளவ. துரையன்

                  காத்த ஆமை ஓடும் கபாலமும்

                  கோத்த சன்ன வீரம் குலாவவே. [341]

 

[கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க]

 

முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம் எனும் வெற்றிமாலையும் மார்பில் அசையவும்,

===============

                   வந்த வந்த மாயவர்கள் மாய்தொறும்

                   தந்த சங்க நாதம் தழங்கவே. [342]

[வந்தவந்த=தோன்றிப் பின் மறைந்து தோன்றிய; மாயவர்கள்=திருமால்கள்; மாய்தல்=மடிதல்; தழங்கல்=ஒலித்தல்]

ஊழிதோறும் தோன்றி மறைந்த மாயவர்கள் மடியும்போதெல்லாம் அவர்கள் விட்டுப் போன சங்குகளை எடுத்துக் கொண்டு பூதகணங்கள் ஒலி முழக்கம் செய்யவும்,

                     திருக்கொள் மார்பன் தீர்விக்ரமம் செய்த

                     உருக்கொள் நீன்குரல் காளம் ஊதவே. [343]

திரு=இலக்குமி; உருக்கொள்=உருவுடைய எலும்பு; காளம்=ஊதுகொம்பு]

வாமனனாக வந்தபோது திருமகள் தங்கியிருந்த மார்பை உடைய திரிவிக்ரமனின் எலும்புகளை எடுத்துப் பேய்கள் எக்காளம் ஊதவும்,

                    ஓடி ஓடி வீழ் தருமர் ஊர்தியின்

                    கோடி கோடி கொம்புகள் குறிக்கவே. [345]

தருமர்=எமதருமர்; ஊர்தி=வாகனம்; குறிக்கவே=சொல்லவே]

கோடி கோடியாய் ஓடி ஓடிக் காலமெல்லாம் மறைந்த எமதருமர்கள் வாகனமாகிய எருமைக் கடாவின் கொம்புகளை எடுத்துக் கொண்டு வாயில் வைத்துப் பேய்கள் முழக்கமிடவும்,

                    கொண்ட குலவேல் விடுபொறிக் குழாம்

                    அண்ட வானமீன் நிரை மயங்கவே. [346]

[பொறி=நெருப்பொறி; அண்டம்=ஆகாயம்; நிரை=கூட்டம்]

வீர்ர்களின் சூலம், மற்றும் வேல் இவைகளிலிருந்து வெளிவரும் நெருப்புப் பொறிகள் ஆகாயத்திலிருக்கும் சந்திரமண்டலத்தையே ஒளிமங்கச் செய்யவும்,

                    வில்லின் வான் அடையவும்திருக்

                    கொற்ற வில்லின் நாண்விழி கொளுத்தவே.    [347]

அவர்கள் தம் பினாகம் எனும் அழகிய வில்லில் நாணாகப் பூட்டிய தட்சகன் என்னும் பாம்பின் கண்கள் உமிழும் நெருப்பு வானம் முழுதும் பரவி மற்ற ஒளிகள் யாவையும் மங்கச் செய்யவும்,

                     பூத நெற்றியில் புண்டரம் புகுந்து

                     யாது தானர் நெய்த்தோர் இழக்கவே.      [348]                     

                                                                                       [புண்டரம்=திருநீற்றுப் பட்டை; தானர்=அசுரர்; நெய்த்தோர்=இரத்தம்]

பூதகணங்கள் தம் நெற்றியில் திருநீற்றுப் பட்டை பூசுவதற்காக, அசுரர் உடலைக் குத்திக் கிழித்து அவர் உடலிலிருந்து வரும் இரத்தத்தை எடுக்க அவர்கள் இரத்தம் இழக்கவும்,

              ஏனையோர் இருந்து இணையது எனவே

              சேனை வல்லபம் செய்த செய்தியே.                          [350]

[ஏனையோர்=மற்றவர்கள்; வல்லபம்=வலிமை]

இப்படிப் படைகள் செல்வதைப் பார்த்த மற்றவர்கள் “ஏன், எதற்கு இப்படி” என்று வியப்படைய வீரபத்திரருடன் வந்த படைகள் யாவும்  வலிமை கொண்டிருந்தன.

Series Navigationபால்வெளிப் பாதையில்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *