தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 12 in the series 24 மே 2020

                       

                                                  

                   தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,

                  விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91]

[அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு]

      இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர்.

=====================================================================================

                  அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார்

                  நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே.            [92]

[அகம்=மனம்; வனசம்=தாமரை; குவிய= கூப்பி  வணங்க]

      தங்கள் தலையைத் தாங்களே அரிந்து கொண்ட போதும் அவர்கள் சிறிதும் அதைப்பற்றிய வலியோ, வருத்தமோ கொள்ளமாட்டார். அவர்கள் தங்கள் உள்ளத் தாமரையும், முகத்தாமரையும் மலர, நகங்களொடு கூடிய  கைகளாகிய தாமரை மலர்கள் கூப்பி வணங்கியபடித் திருக்கோயிலை வணங்கி வலம் வருவர்.

=====================================================================================  

                 கொக்கொழுங்குபட ஓடிமுகில் கூடி அனையார்

                 அக்கொழுங்குபடு கஞ்சுகம் அலம்ப உளரே.               [93]

[கஞ்சுகம்=சட்டை; அலம்ப=ஒலிக்க]

      கொக்குகள் கூட்டம் வானத்தில் வரிசையாகப் பறந்து செல்ல, அவற்றின் மேலே கரிய மேகம் படர்ந்திருப்பது போல, சங்கு மணிமாலைகள் மேல் தம் கரிய சட்டைகளைப் போர்த்திக்கொண்டு ஒலி எழுப்பி முழக்கி ஒரு சிலர் வழிபடுவர்.

=====================================================================================

                   இந்தி ராதியரும் எக்கமல யோனிகளுமே

                  சந்தி ராதியரும் அத்தலைவி சாதகர்களே.                 [94]

[கமலயோனி=தாமரை மலரிலிருந்து பிறந்த பிரமன்; சாதகர்=உபாசிப்பவர்கள்]

      இந்திரன் முதலான தேவர்களும், திக்குப்பாலகர்களும், தாமரை மலரில் பிறந்து வீற்றிருக்கும் பிரம்மாக்களும், சந்திரன் சூரியன் முதலான தேவர்களும், தேவி துர்க்கையின் திருவடியைப் பணிந்து அத்தேவியை உபாசிப்பவர்களே ஆவார்.

=====================================================================================                      

                  அடையாள முளரித் தலைவிஆதி மடவார்

                  உடையாள் திருஅகம் படியில்லோ கினிகளே          [95]

[முளரி=தேவி; ஆதி=முதலான; மடவார்=பெண்கள்; திருஅகம்படி=திருக்கோயில் உள்ளிடம்; யோகினி=பணிப்பெண்கள்]

      தாமரை மலரையே தனக்கு அடையாளமாகக் கொண்ட தேவி, மற்றும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள், முதலான தேவியர் எல்லாருமே, துர்க்கையின் திருக்கோயிலில் உள்ளிருந்து தொண்டு செய்து அருள் பெற்றவர்களே ஆவர்.

=====================================================================================                         

                   சுழல்வட்டத் துடிகொட்டத் துணைநட்டத்தினரே

                  தழல்வட்டத் தனிநெற்றித் தறுகட் கொட்பினரே.      [96]

[துடி=உடுக்கை; தழல்=நெருப்பு; தறுகண்=அஞ்சாமை; கொட்பு=சுழலுதல்]

      சிலபரிகார தேவதைகள் வட்டவடிவமான உடுக்கை எழுப்பும் ஒலிக்கேற்ப வேகமாக நடனம் ஆடுவர். சிலர் நெருப்புப் போன்ற நெற்றிக் கண்ணுடன் அஞ்சாமல் சுழன்று அத்திருக்கோயிலின் முன் ஆடுவர்.

=====================================================================================

             கழுவைப்புக்கு அறவெட்டிக் கவர் சுற்றத்தினரே

            உழுவைச் சிற்றுரிவைப்பச்  சுதிரப்பட்டினரே.               [97]

[கவர்=கவர்ந்து; உழுவை=புலி; பச்சுதிரப் பட்டு=பச்சை இரத்தம் ஒழுகும் மேலாடை]

      கழுவேலேற்றப் பட்டிருப்பவர்களை வெட்டிக் கொண்டு வந்து தின்னும் பேய்களுக்குச் சிலதேவதைகள் உறவினர்கள் ஆவர். சிலர் புலிகளின் தோலை உரித்தெடுத்து அதில் பச்சை இரத்தம் ஒழுக அதைப் பட்டாடையாக உடுத்துபவர்கள் ஆவர்.

====================================================================================

                      உகுநச்சுத் தலைநெட்டு எட்டு உரகக் கச்சினரே

                     தகுபுத்தப் புதுமக்கள் தலைமக்கட் டினரே.             [99]

[நச்சு=நஞ்சு; உரகம்=பாம்பு;

      ஒரு சிலர் நஞ்சைக் கக்குகின்ற தலை உடைய பாம்புகள் எட்டை அரைக் கச்சாகத் தம் பார்பில் அணிந்திருப்பர், சிலர் அதற்கு மேலே இறந்த மனிதர்கள் தலைகளை மாலையாக அணிந்திருப்பர்.

=====================================================================================            குடர்அட்டத்து ஒரு செக்கர்க் குருதிப் பெட்டினரே

            படர்பொற்கைச் செறிஅக்குச் சரி பப்பத்தினரே.            [100]

[அட்டுதல்=வடிதல்; செக்கர்=செந்நிறம்; செறி=நிறைந்த; அக்கு=சங்குமணி; பப்பத்து=

பத்து பத்து; நூறு]

      போர்க்களத்தில் இறந்துபட்ட வீர்ர்களின்  ஒழுகும் இரத்தத்தை எடுத்துச் சிலர் நெற்றியில் பொட்டாக இட்டுக்கொள்வார்கள்.  ஒரு சிலர் சங்கு மணிகளை தம் கைகளில் நூற்றுக்கணக்காக அணிந்திருப்பார்கள்

Series Navigationதனிமைஇன்னும் சில கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *