தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்

This entry is part 16 of 28 in the series 12 ஏப்ரல் 2015
 SilverStamp

நேர்முகத் தேர்வின் இரண்டாம் நாள்.
காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டுவிட்டேன். சரியாக காலை ஏழரை மணிக்கு உணவுக் கூடத்தில் ஒன்று கூடினோம். என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பயில இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை என்னைப்போல்தானே இருந்திருக்கும்? நான் அது கண்டு அஞ்சவில்லை. என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதோடு என்னை ஒரு பெரிய சக்தி இயக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இதுவரை நாத்திகனாக வளர்ந்து விட்ட எனக்கு இப்போது இத்தகைய கடவுள் நம்பிக்கை உண்டானது வினோதமானதுதானே!

பசியாறும் படலம் தொடர்ந்தது.சில பொதுவான பொருள்கள் பற்றி பேசிக்கொண்டே சுவையான இட்டிலி, வடையை உண்டோம். அதன் பின்பு நேற்று போலவே கல்லூரி கட்டிடத்துக்கு, செம்மண் சாலையில் நடந்து சென்றோம்.

அங்கு வகுப்பு அறைக்குள் செல்லாமல் மரம் செடி கொடிகள் நிறைந்த ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குச் சென்றோம். அங்கு சில மூங்கில் கழிகளும் கயிறுத் துண்டுகளும் கீற்றுகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றைக்கொண்டு நாங்கள் ஒரு மாட்டுக் கொட்டகை கட்டவேண்டும். பார்வையாளர்கள் இருவரும் அதை எவ்வாறு செய்து முடிக்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள் என்பது எங்கள்  அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அதை முறையாகச் செய்தோம். முதலில் தமிழ் நாட்டில் மாட்டுக் கொட்டகையைப் பார்த்துள்ளது யார் யார் என்பதைக் கேட்டறிந்தோம். நான் கிராமத்தில் இருந்துள்ளதால் அது பற்றி எனக்கு நிறையவே தெரிந்தது. அதை கூறி மாட்டுக்கொட்டகையின் அமைப்பு முறையைக் கூறினேன். அதன் நீளம், அகலம், உயரம் முதலியவற்றை குறித்துக்கொண்டோம். அதன் பின்பு வேலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ஒருவர் கடப்பாரையால்  குழிகள் தோண்டவேண்டும். ஒருவர் மண் அள்ளி வெளியில் இடவேண்டும். சிலர் தூண்களை ஊன்ற வேண்டும். அதுபோன்று கூரையில் கீற்றுகள் வைத்துப் பின்னி கட்டவேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு வேலையில் தீவிரம் காட்டினோம். யாரும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கவில்லை. அதில் காட்டும் ஈடுபாடுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது தெரியம் .பார்வையாளர்கள் இருவரும் ஏதும் சொல்லாமல் எங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் எதை வைத்து யாருக்கு அதிக மதிப்பெண்கள் தருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவாறாக அந்த மாட்டுக் கொட்டகையை கட்டி முடிக்க இரண்டு மணி நேரமாகிவிட்டது.

பத்து  மணிக்கெல்லாம் மூலைக் கடைக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரு பங்களாவின் தோட்டத்தினுள் புகுந்தோம். அங்கு இதர மாணவ மாணவியர்களும் கூடியிருந்தனர். அது உதவிக்  கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி என்பவரின் இல்லம். அங்கு கேக். சமசா, வடையுடன் தேநீரும் காப்பியும் வைக்கப்பட்டிருந்தன. திருமதி கோஷி எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.  மற்ற குழுவைச் சேர்ந்தவர்களுடன் கலந்து பேசிக்கொண்டே சிற்றுண்டியைச்  சுவைத்தோம். அப்போதும்கூட பார்வையாளர்களின் கண்கள் எங்கள்மேல்தான் இருந்தன. அங்கு ஒரு மணி நேரம் கழிந்தது.

மீண்டும் ஒரு காலியான வகுப்பறைக்குள் கூடினோம்.அங்கு எங்களுக்கு ஒரு பணி தரப்பட்டது. நாங்கள் ஒரு இந்து திருமணக் காட்சியை நடித்துக்காட்டவேண்டும். அதை தயார் செய்ய அரை மணி நேரம் தரப்பட்டது.நாங்கள் எப்படி பொறுப்பைப்  பகிர்ந்துகொள்கிறோம், எப்படி தலைமைத்துவம் ஏற்கிறோம்,என்பதையெல்லாம் அவர்கள் கவனிப்பார்கள் என்பது எனக்குக் தெரியும்.எங்களில் ஒருவர்  நாடக இயக்குனராகவும், இரண்டு பேர்கள் மணத் தம்பதியராகவும், ஒருவர்  புரோகிதராகவும், ஒருவர்  நாதஸ்வர வித்வானாகவும், ஒருவர்  மேளக்காரராகவும் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டோம். மீதமுள்ள நால்வரும் மணத் தம்பதியரின் பெற்றோர் என்று தேர்வு பெற்றனர். இந்த சிறு ” நாடகக் குழுவுடன் ” சிறப்பாகவே இந்து திருமணக் காட்சியை மிகவும் தத்ரூபமாக நடித்துக் காட்டினோம்.

மதிய உணவுக்கு மீண்டும் ஆண்கள் விடுதிக்குத் திரும்பினோம். ஓய்வுக்குப் பிறகு மாலை மூன்று மணிக்கு மீண்டும் ஒரு வகுப்பறையில் கூடினோம்.

இப்போது தனிப்பட்ட வகையில் சோதனைகள் நடந்தன.இதற்கு ” இண்டெலிஜண்ட் டெஸ்ட்  ” என்று பெயர். இரு பார்வையாளர்களும் எங்களை ஒவ்வொருவராக அழைத்து சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

” மூன்று நண்பர்கள் மலை ஏறுகிறீர்கள் . உங்களில் ஒருவர் ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து மயக்க நிலையில் உள்ளார். அவரைக் காப்பாற்ற மீதமுள்ள இருவரும் என்ன செய்வீர்கள்? ” என்பதுதான் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி. பத்து நிமிடத்தில் பதிலைச் சொல்லிவிட வேண்டும்.

நான் சிந்தித்தேன். பள்ளத்தில் விழுந்துவிட்ட நண்பனின் உயிர்தான் முக்கியம். மலை ஏறும்போது கைவசம் கயிறு கொண்டு செல்வது வழக்கம். அதைப் பயன்படுத்தி ஒரு நண்பர் பள்ளத்தில் இறங்கி  மயக்கமுற்ற நண்பனுக்கு முதலுதவி செய்யவேண்டும். அடுத்த நண்பன் வேகமாக ஓடி ஆட்களை அழைத்து வரவேண்டும்.கயிற்றின் உதவியுடன் மயக்கமுற்றவரை வெளியில் கொண்டு வந்தபின்பு அடுத்த நண்பன் கயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்துவிடலாம். நான் சொன்ன பதில் இதுதான். இது போன்று மற்ற மாணவர்களிடம் வேறு விதமான சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டன.

          அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் ஒரு குவளை நிறைய அரிசி தரப்பட்டது.. அதில் எத்தனை அரிசிகள் உள்ளன என்பதை எண்ணிப்பார்த்துச்  சொல்லவேண்டும். குறித்த நேரத்தில் அதை செய்து முடிக்கவேண்டும்.பார்வையாளர்கள் இருவரும் தங்களின் எதிரே கடிகாரம் வைத்திருந்தனர். நேரம் முடிந்ததும் ஒலி எழுப்பும். ஒவ்வொரு அரிசியாக எண்ணினால் நேரம் ஆகும். அதோடு எண்ணிக்கையில் தவறு எழலாம். நான்  அப்படிச் செய்யாமல் அரிசி மணிகளை பத்து  பத்தாக பிரித்து வைத்து மொத்தத்தை வெகு எளிதாக கணக்கிட்டேன்.குறித்த நேரத்திற்குள் எண்ணி முடித்தேன்.
          அடுத்து ஊசியில் நூல் கோக்க வேண்டும். இது சுலபம் என்றாலும் சில வினாடிகளுக்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும். இதுபோன்று இன்னும் சில துரிதமாக செய்யவேண்டிய பணிகள் தரப்பட்டன.நான் அனைத்தையுமே குறித்த நேரத்தில் செய்து முடித்தேன்.
          இரண்டாம் நாள் நேர்காணல் சுலபமாக முடிந்தது. அன்று மாலை மீண்டும் விளையாட்டு மைதானத்தில் ஒரு மணி நேரம் கழித்துவிட்டு விடுதி திரும்பினோம். அண்ணனும் ரூபனும் வந்திருந்தனர். தேர்வுகள் பற்றி கேட்டனர். நான் சுலபமாகத்தான் இருந்தன என்றும் நன்றாகவே செய்துள்ளேன் என்று அவர்களிடம் கூறினேன். இரவு உணவை ஆர்தர் செல்வராஜுடன் சேர்ந்து உண்டோம். அதன் பின்பு அண்ணனும் ரூபனும் மறுநாள் வருதாகக் கூறி விடை பெற்றனர்.
          வழக்கம்போலவே ஆர்தருடன் பேசிக்கொண்டே உறங்கிவிட்டேன்.
          மூன்றாம் நாள் நேர்காணல். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொண்டு கம்பீரத்துடன் புறப்பட்டேன். இன்று தேர்வின் இறுதி நாள். இன்று மாலையில் முடிவு தெரிந்துவிடும்.தேர்வு  பெற்றால் இன்றிலிருந்தே நான் ஒரு மருத்தவ மாணவன் ! என்னுடைய சிறு வயது கனவும், அப்பாவின் நெடுநாளைய கனவும் நிறைவேறிவிடும்! நான் தமிழகம் வந்ததின் பயனையும் பெற்றவனாவேன்! என்னை ஒரு மாபெரும் சக்தி உண்மையாக இயக்குகிறதா என்பதும் தெரிந்துவிடும்!
          அனால் ஒருவேளை இடம் கிடைக்காவிடில் அன்று இரவே ஊருக்குப் புறப்பட நேரிடும். அதை நினைக்கவே அச்சமாக இருந்தது. அத்தகைய நினைவை அடியோடு அகற்றிவிட்டு இடம் நிச்சயம் கிடைக்கபோகிறது என்ற நம்பிக்கையுடன் உணவுக் கூடத்துக்குச் சென்றேன்.
          காலைப் பசியாறிய பின்னர் கல்லூரி நோக்கி செம்மண் பாதையில் சென்றோம். என்னைப்போலவே மற்ற மாணவர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர். பார்வையாளர்கள் இருவரும் எவ்வித சலனமுமின்றி எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமலேயே வந்தனர். எங்களில் யார் அந்த ஐந்து பேர் என்பது அவர்களுக்கு ஏறக்குறைய இந்நேரம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் இருவரும்  எப்போதும்போல் அமைதியாகவே எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
          வகுப்பறையில்தான் கூடினோம். இன்று அனைத்தும் எழுதும் தேர்வுகள்தான். முதலில் , ” நான் ஏன் ஒரு மருத்துவராக விரும்புகிறேன் . ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் தரப்பட்டது.
          அதன் பின்பு இன்னொரு எழுதும் தேர்வு நடந்தது. அது கொஞ்சம் சிக்கலானது. அதில் இரண்டு வகையான பொருள்கள் பற்றி எழுத வேண்டும்.
முதலாவதாக,” உங்களில் யார் சிறந்த மருத்துவராக முடியும் என்று கருதுகிறீர்கள்? அதற்கான காரணங்கள் என்ன? ” என்ற தலைப்பில் எழுதவேண்டும். அது முடிந்தபின்பு இரண்டவதாக, ” உங்களில் யார் மிகவும் மோசமான மருத்துவராக முடியும் என்று கருதுகிறீர்கள் ? அதற்கான காரணங்கள் என்ன? ” என்ற சிக்கலான தலைப்பில் எழுதவேண்டும். இதில் நானே சிறந்த மருத்துவராவேன் என்று எழுதினால் அது தற்பெருமையாகும். அதே  வேளையில் அப்படி எழுதுவது திட நம்பிக்கையையும் கூறும். அதுபோலவே எங்களில் யார் மோசமான மருத்துவர் என்ற கேள்விக்கும் கட்டாயமாக யாரைப்பற்றியாவது எழுதினால் அது நம்பிக்கைத் துரோகமாகவும் ஆகும். அனால் எழுதியே ஆகவேண்டும்! வேறு வழியில்லாமல் இரண்டையும் அரை மனதுடன் எழுதித் தந்தேன்.
          தேர்வுகள் முடிவுக்கு வந்து விட்டன! பார்வையாளர்கள் எங்கள் அனைவரையும் பாராட்டினார்கள். தேர்வு பெறுபவர்களை மீண்டும் சந்திப்பதாகக் கூறினார்கள். தேர்வு பெறாதவர்கள் மனம்  உடைந்து போகாமல் மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று தைரியமூட்டினர். அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறினோம். தேர்வுகள் பற்றி எங்களுடைய கருத்துகளைக் கேட்டனர். இவை மிகவும் புதுமையானைவை என்றும் ஒருவரைப் பற்றி முழுதுமாக அறிந்து கொள்ளும் வகையிலானது இந்த நேர்முகத் தேர்வு என்று நான் புகழாரம் சூட்டினேன்.
          மதிய உணவுக்குப் பின் விடுதி அறைக்குச் சென்று நன்றாகத் தூங்கினேன். மாலை நான்கு மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
          மூன்றரை மணிக்கு எழுந்து தேர்வு முடிவு அறிய புறப்பட்டேன். அப்போது அண்ணனும் ரூபனும் வந்தனர். ஆர்தரும் புறப்பட்டுவிட்டார். கல்லூரி நோக்கி அந்த செம்மண் பாதையில் நாங்கள் நடந்து சென்றோம்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமூன்றாவது விழிபழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *