நிவிக்குட்டிக்கான கவிதைகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

இவள் பாரதி

திசைக்கொன்றாய்
சுமத்தப்படும்
என் மீதான பழிகளைத்
துடைத்தெறியவும்
துயரம் பீறிடவும்
தளர்ந்த கால்களுடன்
நடக்கும் என் இரவுகளின் மீது
ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை

குழந்தையின் மென்தொடுதலில்
என் பழிகள் ஒவ்வொன்றாய்
பலவீனமடைய
விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன்
என்னருகில் குழந்தை
உறங்கிக் கொண்டிருந்தது
உதட்டோரம் இன்னும்காயாத
துளிபாலுடன்

————

அலுவலகம் கிளம்பும்போதெல்லாம்
அழுது அடம்பிடிக்கும் குழந்தை
பீறிட்டழும்போது
உள்ளபடியே கலங்கிப்போகுமென் மனம்

வரும் வழியெங்கும்
அழுதமுகமே நினைவிலிருக்க
வேலையும் ஓடாது
மீண்டும் கூட்டையடைந்து
அறைக்கதவை திறந்து பார்த்தால்
அழுத கண்ணீரின் சுவடு
அப்படியே இருக்க
தூங்கிப் போயிருக்கிறது குழந்தை

கைதொட்டு தூக்கியதும்
காம்புதேடி உறிஞ்சிக் குடிக்கிறது
நாள் முழுதும் சேமிக்கப்பட்ட எனது கண்ணீரை

Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *