மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு

This entry is part 3 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்
           நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை, பரபரப்பு காரணமாகவும் இது ஏற்படலாம்.           சாதாரணமாக நமது இருதயத் துடிப்பை நாம் அறிவதில்லை. சில வேளைகளில் இருதயம் வேகமாகத் துடிப்பதை நம்மால் உணரமுடியும். இதையே நெஞ்சு படபடப்பு என்கிறோம்.அதிகமான மது , புகைத்தல் , தேநீர் காப்பி , போன்றவையும், தைராய்டு சுரப்பி கோளாறினாலும் இதயப் படபடப்பு ஏற்படலாம்.

நாம் அனைவருமே எப்போதாவது இதுபோன்று நெஞ்சு படபடப்பு உண்டானதை உணர்ந்திருப்போம். இது அடிக்கடி ஏற்பட்டால் அது இருதய வியாதியின் அறிகுறியாகக் கொள்ளலாம். இதய படபடப்புடன் வியர்வை, மயக்கம், தலைவலி, தலை சுற்றல், நெஞ்சு வலி போன்ற இதர அறிகுறிகள் உண்டானால் நிச்சயமாக இருதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நெஞ்சு படபடப்பு சில மனக் கோளாறுகளிலும் உண்டாகும். அத்துடன் அதிகமான இரத்தம் இழத்தல், கடுமையான வலி , பிராணவாயு பற்றாக்குறை போன்றவற்றாலும் இது உண்டாகும்.

நான்கு வகைகளில் இருதயம் படபடக்கலாம்.

* Extra Cardiac Stimulation இருதயம் புறம்பாகத் தூண்டப்படுதல்.

இதில் இருதயத்திற்குப் புறம்பான பகுதியில் தூண்டுதல் உண்டாகி அதன் துடிப்பை அதிகரிக்கச் செய்வதாகும்.

இணைப்பரிவு நரம்பு மண்டலம் ( parasympathetic nervous system ) இருதயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டி அதன் மூலமாக இருதய துடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.

அத்துடன் வயிறு குடல் பகுதிக்கு செல்லும் வேகஸ் நரம்பு மன உளைச்சல் காரணமாக தூண்டப்பட்டு இருதய துடிப்பை அதிகரிக்கச் செய்யும்.

* Sympathetic Overdrive – பரிவு நரம்பு மண்டல துரித செயல்பாடு.

பரிவு நரம்பு மண்டலம் என்பது சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது. பயம், அதிர்ச்சி, இரத்தத்தில் குறைவான இனிப்பு, பிராணவாயு குறைவு , இரத்தச் சோகை, இருதயச் செயலிழப்பு, போன்றவை இந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன.

* Hyperdynamic Circulation – அதி வேகமான இரத்தவோட்டம்

இருதய வால்வு கோளாறு, தைராய்டு சுரப்பி துரித செயல்பாடு, காய்ச்சல், இரத்தச் சோகை, கர்ப்பம் போன்றவற்றில் இருதயம் வேகமாகத் துடிப்பதால் நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

* Cardiac Dysrhythmias – ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

இதில் இதயத் துடிப்பு சீராக இல்லாமல் போவதால் அந்த ஒழுங்கற்றத் துடிப்பு நெஞ்சு படபடப்பாக உணரப்படும்.

பரபரப்பும், மன உளைச்சலும் கார்ட்டிசால், அட்ரினேளின் எனும் ஹார்மோன்களின் அளவை உயர்த்தி இணைப்பரிவு நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை தாக்கி இருதயத்தின் வேகஸ் நரம்பை அதிகமாக தூண்டி விடுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து படபடப்பு உண்டாகிறது.

இதே வெகஸ் நரம்புதான் வயிறு கூடல் பகுதிக்கும் கிளைகள் விடுவதால், வயிறு உப்பல், ஏப்பம் போன்றவை ஏற்படும்போது கூட நெஞ்சு படபடப்பும் உண்டாகலாம்.

  நோய் அறிதல் ( Diagnosis )

நெஞ்சு படபடப்பு சாதாரணமானதா அல்லது இருதயத் தொடர்புடையதா என்பதை அறிந்துகொள்ள நோயாளியின் வயது, படபடப்பு வரும் நேரம், அது குறையும் அல்லது மறையும் விதம் காப்பி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் போன்றவற்றை மருத்துவர் கேட்டு அறிந்து கொள்வார்.

இரத்தப் பரிசோதனையின் மூலமாக தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் தெரிந்து கொள்வார்.

இருதயத்தின் நிலையை ஈ,சீ.ஜி. பரிசோதனை மூலம் கண்டறிவார்.

சிகிச்சை முறைகள்

நெஞ்சு படபடப்பு உண்டானால் அதன் காரணத்தைப் பொருத்தே சிகிச்சையும் அமையும். இருதயத் தொடர்பு உள்ளதென்றால் இருதய சிறப்பியல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். அவர் இருதய நோயின் தன்மை கண்டு அதற்கேற்ப சிகிச்சை தருவார்.

இருதயத்தின் புறம்பான காரணமாக இருப்பின் , வயிறு தொடர்பான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

மன அழுத்தம், மன உளைச்சல் தொடர்பான நெஞ்சு படபடப்புக்கு மனோவீயல் முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

( முடிந்தது )

.

Series Navigationமேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்சிலை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *