முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

 

 

வடித்த கவிதைகளை

வரலாறுகண்ட

ஒரு வாரஇதழுக்கு

அனுப்பினேன்

தேரவில்லை

 

நூலாக்கினேன்

 

கவிக்கோவின்

கட்டைவிரலாம் நான்

அணிந்துரை சொன்னது

 

என் கவிதைகள்

குறிஞ்சி மலர்களாம்

குற்றாலச் சாரலாம்

ஒரு திரைக்கவி மெச்சினார்

 

பைரனின் நகலாம் நான்

ஒரு பேராசிரியர் புகழ்ந்தார்

 

மின்சாரம் எனக்குள்

மிருதங்கம் இசைத்தது

 

விழாவில்

கொஞ்சம் விற்றது

மிச்சம் தோற்றது

இன்றுவரை

கேட்பார் எவருமில்லை

 

என் கவிதைகளை

தேர்வு செய்யாத

அந்த வாரஇதழ்களின்

வாசகர் கவிதையை

நட்சத்திரக் கதைகளை

வாசிக்கிறேன்

 

தம்பட்டமில்லாத

‘தம்டிரைவ்’ அமைதியில்

யாரிந்த எழுத்தாளர்கள்

வாசகர்களின் இதயத்தால்

இவர்கள் துடிப்பது

படிப்பதில் புரிகிறது

 

‘உன்னையே நீ அறிவாய்’ என்ற

உலகஞானியே வாழ்க

என்னை நான் அறிய

முயல்கிறேன்

 

தொட்டிச் செடிகளைத்தான்

நான் நந்தவனம் என்கிறேன்

குளத்தங்கரையில்

மொண்டு குளிக்கிறேன்

 

இப்போது புரிகிறது

முகப்புகழ்ச்சிகள்

முகவரியல்ல

ஓர் உவமையே முகவரியாய்

‘செம்புலப் பெயல்நீரார்’

 

நான் நம்புகிறேன்

எனக்குள் உதிப்பார்

இன்னொரு ‘நீரார்’

 

அமீதாம்மாள்

Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *