ராசி

This entry is part 8 of 27 in the series 6 செப்டம்பர் 2015

-எஸ்ஸார்சி

.அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.
அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான். பி பி இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.
ஒரு சிலர் போனில் அவனிடம் வாடகைக்கு விடும் அந்த வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வந்துவிடவில்லை. ஒரு வீடு யாரும் குடி இருந்தால் மட்டுமே வீடாக இருக்கிறது.அது சும்மா பூட்டிக்கிடக்க வாடகை மட்டுமா இழப்பு.
அவன் மனைவி சைவ உண்வு சாப்பிடுவோரை மட்டுமே அந்த வீட்டில் குடி வைக்க வேண்டும் என அடம் பிடித்தாள். யாரும் அப்படி வரத்தானே இல்லை.
திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து ‘வீடு வாடகைக்கு வேண்டும்’ என்றான்.
‘யாருக்கு’
‘என் நண்பர் ஒருவருக்கு’ வந்தவன் பதில் சொன்னான்.
வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ‘ நீங்கள் சொன்னால் சரிதான்’ என்று முடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.
‘மாதம் ஆயிரம் வாடகை’ சொல்லியாயிற்று.
ஆயிரமே பெரியதொகைதான். சிறியது வீடுதானே..ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.’வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா’ அவள் கேள்வி வைத்தாள்.’சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா’ அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.
இரண்டு வாரம் சென்றது.அவன் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டான். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினான். வாடகைக்கு விட்ட அந்த வீடு முதுகுன்றம் புற நகரில் இருந்தது. அவன் பைய நடந்தான்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு பெரியவர் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.
‘சார் நான்தான் வீட்டு சொந்தக்காரன் வந்துருக்கன்’ அவன் கொஞ்சம் உரத்துக்குரலில் ஆரம்பித்தான்.’யாரு அது வூட்டுக்காரரு’ அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
‘நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு’
‘அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு’
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
‘யாரு யாரு’
‘நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க’
‘வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்’
‘இது என்னா புது சேதி’
. வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனுக்குச் சங்கடமாக இருந்தது..
‘ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர அந்த தண்ணியும் வூட்டுக்கு உள்ள ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ளார அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு கொண்டாறணும்.வேல இருக்கு’
‘இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது’
‘அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது’
‘ரொம்ப செலவு வரும்போல’ அவன் அச்சத்தோடு சொன்னான். அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது.அமைதியாகவே இருந்தான்.
‘ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க’
‘அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?’
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி’
‘என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க’
‘வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா”.
‘காசி குடுக்குணுமுல்ல’
‘குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே’ அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேராகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
‘சாருக்கு என்ன வேணும்’
அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
‘நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்’
‘சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க’
‘நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்’
‘எதுல’
‘டெலிபோன்ல’
‘கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.போலிசோ இல்ல தாலுக்கா ஆபிசோன்னு பாத்தன்.’
‘ அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்’
‘ உங்க வூடு எங்கன்னு சாரு சொன்னிங்க’
திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பரு 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு’
‘ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஒரு ஆசாமி குடிவந்தாரு’
‘அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு படுத்துகிணு இருந்தாரு’
‘ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே.ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் பெரிய சாதிக்காரன்னு கேழ்வி.. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா ஆசைப்பட்ட பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்’
‘யாரு அந்த பையன் சாரு’
‘அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன்.’
‘அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாயில தண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன’
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆசாமி தெருவுக்கு வந்தார்.
‘வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்’
‘ நீங்க தான் குடியிருக்குறதா’ அவனிடம் கேட்டு முடித்தான்..
துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் வைத்து விட்டுப்போனது காணவில்லை.மனம் சற்று அவனுக்குக் கனத்துப்போனது.
‘ மொட்டை மாடியில் ஏறிப்பார்த்தான். எப்போதும் அது அவனுக்கு பழக்கம்தான். உப்பில் தோய்ந்த மீன்கள் மொட்டைமாடி தரைமுழுவதும் விரவி க்காய்ந்துகொன்டிருந்தன. அவனுக்கு வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. மாடிப்படியிலேயே நின்று பார்த்துவிட்டு கீழ் இறங்கினான்.
‘சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வூடு நல்ல ராசியான வூடுதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வூடும் தே இருக்குதே பின் வூீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.’ மீன் கூடையை இறுக்கி கட்டிக்கொண்டே அவனிடம் சொல்லிக்கொண்டார்.
‘கெளம்பறேன் நேரம் ஆவுது’ என்றான் அவன்.
‘முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்’
‘அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப புடிச்சிருக்குது சாரு’ மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.யாரும் அவனைப்புகழ்ந்துவிட்டால் அப்புறம் கொஞ்சம் அழகு கூடித்தான் தெரிகிறார்கள்.
வீட்டு வாசலில் இருந்த பெரியவர் ‘புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராச வம்ஷம்’ என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை..
‘ வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்கணும்னு’ அவன் மனைவி என்றோ சொன்னது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. …
———

Series Navigationசுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரிகோணல் மன(ர)ங்கள்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    வீட்டுச் சொந்தக்காரருக்கு ஒரு வீடுதான். ஆனால் வாடகைக்கு வருபவர்களுக்குப் பலவீடுகள். வீடு வாடகைக்கு விடும் அனுபவங்கள் பற்றி பல கதைகள் எழுதலாம். இதில் கூட வீடு கட்டும்போது ஏற்படும் சிரமங்கள், மற்றும் தள வருணனைகள் குறிப்பிட்டிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *