’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

author
0 minutes, 5 seconds Read

கவிமன வேதியியல் மாற்றங்கள்

Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே

யிருப்பவர்கள்

முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று

பண்ணிசைக்கிறார்கள்….

பின்னவராக மாறி காது கூசுவதாய்

தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து

விடுகிறார்கள்.

கொன்றழிக்கத்தோதாய் சொற்களின் கூர்நுனியில்

நஞ்சுதோய்த்து

அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி

வெடிகுண்டு வகையறாக்கள்

வேகமாய் துடிக்கவைக்கின்றன ஏற்கெனவே

எதனாலெல்லாமோ

எந்நேரமும் படபடப்பாக உணரும் பாழ் இதயத்தை.

முன்னவராக எண்ணி

நட்புபாராட்டிக்கொண்டிருந்தவர்கள்

காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து

மூர்ச்சையாகிவிழும் தருணம்

மீண்டும் Dr. Jekyll முன்னால் வந்து

காசுவாங்காமல் மருந்துமாத்திரைகளை அத்தனை அன்போடு

ஒரு கவிதையில் பொதிந்து கையில் தந்துவிடுகிறார்.

நம்பிக்கையிழப்பின் கொடும் அசதியிலிருந்து

மெல்ல எழ முயலும் மனதில்

பேயறை அறைகிறது நாராசக் கெக்கலிப்பொலியும்

நாக்கூசா அவதூறுகளும்.

அத்தனை மனிதநேயத்தோடு கவியெழுதும் மனம்

இத்தனை மூர்க்கமாய் வெறுப்பைக்

கக்கவே கக்காது என்ற நம்பிக்கையை

சுக்குநூறாக்குவதாய்

அதே மனதிலிருந்து அந்த அளவே வெறுப்பைக் கக்கும்

அதே வார்த்தைகள்

அதைவிட மோசமாகவும் எதிரொலித்தவண்ணம்.

ஒரே செயல் ஒருவரின் அளவில் வெறுப்பைக்

கக்கவைப்பதும்

இன்னொருவரின் அளவில் விருப்புக்குரியதாகவும்

மாறும்

மருத்துவத்திற்கப்பாலான விந்தை

புரியாமல் Dr. Jekyll தன் மருத்துவப்பட்டத்தைத் துறக்க

முடிவுசெய்யும் நாளில்

Mr.Hyde தன்னையோ அவரையோ அல்லது

தங்களிருவரையும் கவிதையில் இனங்கண்டு

கொள்பவரையோ

எதுவும் செய்துவிடாமலிருக்க வேண்டும்.

Dr. Jekyll Mr.Hyde ஆக மாற உதவும் வேதியியல் சாறு

தரும்

அருவக்கைகளால் அவர்களுடையதோ அடுத்தவரு

டையதோ_

அதைவிட முக்கியம்

Mr.Hyde களை Dr. Jekyll களாக மாற்றும் சாறு

கண்டுபிடிக்கப்படவேண்டியது.

 

 

 

  •  

 

 

  1. சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்

    (
    )

தீதும் நன்றும் பிறர் தர வாரா


தீதும்அவரவருக்குள்ளிருக்கும் நிலக்கிழார்கள்
சக மனிதர்களை அடிமைகளாக பாவித்து
அவர்களது வாய்களை அச்சுறுத்தல்களாலும்
அசிங்க வார்த்தைகளாலும்
அடைமொழிகளாலும் அடைத்துவைத்து
அவர்களுக்காகப் பேசுவதாக செய்யும்
பாவனையில்
அடுத்தவரின் பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை
எல்லாவற்றையும் கொத்துபரோட்டாவாக்கிக் கொடுத்தவண்ணம்
தங்களுடைய குடும்பத்தோடு சர்வதேச தரத்திலிருக்கும் ஐம்பது நட்சத்திர ஹோட்டல்களில்
ஐரோப்பிய ஸ்பானிய ஜப்பானிய
அயர்லாந்து நெதர்லாந்து ஆஸ்திரேலிய அமெரிக்க ஜெர்மானிய உணவு தின்பண்ட வகையறாக்களை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ருசித்துக்கொண்டிருக்க
அவர்களுடைய அக்கறையின் இலக்காக ’சும்மனாங்காட்டிக்கு’ அடையாளங்காட்டப்படுவோர் கலாச்சாரக் காவலர்களாய் கூழையும் களியையும் உண்டவாறே
படகுவீட்டுப் புரவலர்களுக்காய் கையிலும் எழுத்திலுமாய் கொடியுயர்த்திப் பிடித்தபடி
அவர்கள் கைகாட்டும் இடத்தில் காறித்துப்பியபடி….
அறஞ்சார் விசுவாசத்தை யல்லாமல்
அரச விசுவாசத்தைக் காட்டுவதே புலவர்பெருமக்களின்
வேலையாகிவிட்டால்
வாழ்ந்துவிடுமா மொழி
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ தமிழில் எழுதப்பட்ட
தென்றாலும்
அது உலகப் பொது வழி.

 

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *