ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

This entry is part 7 of 7 in the series 25 டிசம்பர் 2022

வெனிஸ்  கரு மூர்க்கன்
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

அங்கம் – 1 காட்சி – 2,  பாகம் -1

தாழ்மை காயப் படுத்திச் சீர்குலைந்த ஆத்மா, 
ஓல மிட்டால் உடனே வாயை மூட  முயல்வார் !
வலித்துயர்  மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்
புலம்புவோம்  மிகையாய் அன்றி இணையாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்கு
உதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்.
ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்,
தான் இழந்ததை என்னிடம் களவாடி
என்னை வறியன் ஆக்குவ துண்மை. 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

ஷேக்ஸ்பிரின் ஒத்தல்லோ

வெனிஸ் கருமூர்க்கன் நாடகம்

அங்கம் -1 காட்சி -1 பாகம் : 2

++++++++++++++++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

இடம் :  வெனிஸ் நகரத் தெரு

நேரம் : இரவு வேளை

பங்கு கொள்வோர் : சிசாரோ குடும்பத்தார், ஷைலக், புரூனோ

சிசாரோ :  என்னை விளித்தது யார் ? என்ன செய்தி ? (ஷைலக்கைப்  பார்த்து)  எதற்காக நீ வீட்டு வாசல் முன் நிற்கிறாய் ?  உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை.

ஷைலக் : மேன்மை மிகு செனட்டரே !  நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம் ! உங்கள் வீட்டுக்குள் பாருங்கள், எல்லாரும் உள்ளாரா வென்று !

புரூனோ :  உங்கள் வீட்டுக் கதவு, பலகணிகளைப் பாருங்கள் ! ஏதாவது ஒன்று திறந்துள்ளதா வென்று தேடுங்கள்.

சிசாரோ :  எதற்காக அப்படிக் கேட்கிறாய் ?

புரூனோ :  உங்கள் வீட்டில் களவு போயுள்ளது.  உங்கள் மானம் போயுள்ளது !  கருங்கடா ஒன்று வெள்ளைப் பசுவைக் கூடிச் சினையாக்க வீட்டுக்குள் திருடியுள்ளது !

ஷைலக் : விழித்துப் பாருங்கள்.  வேதாளம் வெள்ளைப் பசுவை விழுங்கப் போகிறது. பிடியுங்கள் பிசாசை !

சிசாரோ : நீ அறிவோடுதான் பேசுகிறாயா ?  குடித்து விட்டுக் கூத்தடிக்கிறாயா ?  நீ யாரடா ?  உன்னைப் பற்றிக் கூறடா ?

ஷைலக் :  என்னைத் தெரிய வில்லையா ?  நான்தான்  உங்கள் அருமைப் புதல்வி மோனிகாவை மணக்க வந்த மாப்பிள்ளை. உங்கள் வருங்கால மருமகன் !

சிசாரோ : கயவனே !  என் மகள் உனக்கில்லை என்று முன்பே நான் உன்னை விரட்டியது தெரியாதா ?  வீட்டு வாசல் முன் நில்லாதே, போடா போ !  என் புதல்வி ஒரு செனட்டர் மகள் ! நீ யார் ?  இரவில் வந்து பயமுறுத்தி எங்கள் தூக்கத்தை ஏன் கெடுக்கிறாய் ?

ஷைலக்  :   ஐயா ! ஐயா ! ஐயா ! அப்படிச் சொல்லாதீர்.  நான் இந்த வெனிஸ் நகரப் பெரும் சீமானின் ஒரே மகன் !   செனட்டர் வீட்டில் களவு போனது தெரியுமா ?

சிசாரோ :  இது வெனிஸ் நகர் மையத்தில் பாதுகாப்பாக உள்ள செங்கல் வீடு. செனட்டர் வீடு.  குப்பத்துக் குடிசையல்ல ! இப்படிப் பேசும் உன்னைத் தண்டிக்க எனக்குப் பேராற்றல் உள்ளது. நான் அரசாங்க அதிகாரி !

புரூனோ : ஐயா செனட்டரே !  உங்கள் மீது பரிவு கொண்டு களவு போன பொருளை நினைவூட்ட வந்தோம்.  கயவர் என்று நீங்கள் எம்மைத் திட்டலாமா ?  கள்வர் என்று எம்மைக் குற்றம் சாட்டலாமா ?  கருப்பன் ஒருவன், ஆப்பிரிக்க மூர்க்கன் உங்கள் புதல்வியைக் கடத்திப் போனது தெரியுமா ?

சிசாரோ :  மூடரே !  என்ன வார்த்தை சொன்னீர் !

புரூனோ :  நான் சொல்றேன்,  மூர் இனத்தைச் சேர்ந்த அந்தக் கருப்பன், இந்த இரவு நேரத்தில் உங்கள் அருமை மகளைக் கற்பழித்திருப்பான் !  கன்னிப் பெண்ணைக் கட்டி அணைத்து உடல் உறவு கொண்டிருப்பாரன் !

சிசாரோ :  நீ ஒரு அயோக்கியன் !

புரூனோ :  நீங்கள் ஒரு செனட்டர் !  மோனிகா ஒரு செனட்டர் புதல்வி ! கடத்திச் சென்ற காதலன் மூரினத்தைச் சேர்ந்த ஒரு கருப்பன் !  கரு மூர்க்கன் !

சிசாரோ :  இப்படி அவதூறு பேசியதற்கு நீவீர் பழிவாங்கப் படுவீர் !  நீவீர் யாரென்று எனக்குத் தெரியும் !

ஷைலக் :  செனட்டரே !  கேளுங்கள் !  உமக்குத் தெரியாமல் நடுராத்திரி வேளையில், உமது மகள் வீட்டை விட்டு ஓடி விட்டள் ! அவளைக் கடத்திச் சென்றவன், ஒரு நீர்ப்படகோட்டி [Gondolier] ! அவள் நாடித் தழுவச் சென்றது காமாந்தகன் ஒருவனை !  மூர் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கக் கருப்பன் அவன் !  இவை எல்லாம் உமது அனுமதியில் நடந்தவைதான் என்றால், நாங்கள் மெய்யாகவே கயவர்தான் !  உமக்குத் தெரியாமல் இவை நடந்தவை என்றால், நீவீர் எம்மீது கோபம் கொண்டது தப்பு, தவறு, தகாதது !  இவற்றை நீவீர் அனுமதிக்க வில்லை என்றால், உமது மகள் உமக்கெதிராய்க் கிளம்பி விட்டாளா ?

சிசாரோ :  [கோபத்துடன்]  தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வாரீர் ! தேட வேண்டும் அந்த மூர்க்கனை !  பிடிக்க வேண்டும் என் புதல்வியை.  எல்லாம் கனவில் நடப்பது போல் காணுது.  இவை உண்மை போல் தோனுது !  தீப்பந்தம் கொண்டுவா !

[சிசாரோ பரபரப்போடு குடும்பத்தாருடன் வெளியேறுகிறார்]

புரூனோ :  [ஷைலக்கைப் பார்த்து]  நான் மூட்டிய தீ பற்றிக் கொண்டது !  நான் போய் வருகிறேன் ஷைலக் !   மூர் இனத்தோன் முன் நான் காணப்படுவது ஆபத்தாய் முடியும். வெனிஸ் அரசாங்கம் கருப்பனுக்கு கடிந்துரை அனுப்பும். தண்டிக்கும். ஆனால் அரசாங்கம் அவனை விலக்கி வெளியே தள்ளாது ! ஏனென்றால் வரப்போகும் சைப்பிரஸ் போருக்கு அவன் உதவி அவசரத் தேவை.  படை வீரரை முன்னின்று நடத்திச் செல்ல அவனைப் போல் பேராற்றல் படைத்த வேறொரு ஜெனரல் கிடைப்பது அரிது.  கருப்பனை நான் வெறுக்கிறேன் எனக்கவன் தளபதி ஆயினும் !  ஆனால் பாசாங்கு செய்தாலும் நானவன் ஆணைக்கு அடங்கி நடக்கும் நம்பிக்கையான சேவகன் ! அவனை நீ காண வேண்டு மென்றால், சாகிட்டேரியஸ் விடுதியில் இருப்பான்.  நானும் அங்குதான் படை வீரர் கூட இருப்பேன். போய் வருகிறேன் ஷைலக்.

[புரூனோ வெளியேறுகிறான்]

[சிசாரோ தீப்பந்தங்கள் தூக்கிய தன் வேலையாட்களுடன் கோபத்துடன் மீண்டும் வருகிறார்]

சிசாரோ : [பதட்டமுடன்]  உண்மைதான் மகள் ஓடிவிட்டாள் ! செனட்டர் குடும்பப் பேரைக் கெடுத்து விட்டாள்.  எஞ்சிய எனது முதிய வாழ்வில் நஞ்சைக்  கலந்து விட்டாள்.  ஷைலக் ! எங்கே நீ அவளைப் பார்த்தாய் ?  கட்டறுந்து, மதியிழந்த காதகி, கருப்பனுடன்  ஓடியதைக் கண்டாயா ?  யார் அவளுக்குத் தந்தையாய் இருப்பான் ?  அவள் என் மகள்தான் என்று நீ அறிவாயா ?  எளிதில் என்னை ஏமாற்றி விட்டாளே !  உன்னிடம் ஏதாவது உரைத்தாளா ?   எழுப்புங்கள் என் உறவினரை. இன்னும் தீப்பந்தங்கள் எடுத்து வாரீர்.  ஷைலக் !  அவள் கருப்பனைத் திருமணம் செய்து கொண்டாளா ?  அது  நிச்சயமாய் உனக்குத் தெரியுமா ?

ஷைலக் :  ஆம்,  கருப்பனை உமது மகள் திருமணம் செய்து கொண்டாள்.  இன்று காலையில்தான் திருமணம் நடந்தது.

சிசாரோ :  ஐயோ தெய்வமே !  வீட்டிலிருந்து எப்போது வெளியேறினாள் ?  என் உதிரம் கொதிக்குதே ! என் இதயம் துடிக்குதே !  என் தலை வெடிக்குதே !  தந்தைமார்களே ! தாய்மார்களே !  உமது புதல்வியரை எப்போதும் நம்பாதீர் ! குனிந்து கொண்டு, பணிந்து கொண்டு, பரிவுடன், பாசாங்கு செய்யும் பாவை என்னை ஏமாற்றினாள் !  உம்மையும் ஏமாற்றுவாள் !  ஷைலக் ! கன்னிப் பெண்ணை மயக்கிக் கைக்கொள்ளும் மாய வித்தை ஏதும் இருக்கிறதா ?  அதைப் பற்றி உனக்குத் தெரியுமா ?

ஷைலக் : ஆம் செனட்டரே !  எனக்குத் தெரியும்.

சிசாரோ :  அழைத்துவா என் தம்பியை.  இப்போது எனக்குத் தெரியுது , நானுனக்கு முன்பே அவளைத் திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.  உனக்குத் தெரியுமா ?  எங்கே பார்க்க முடியும் என் மகளையும் அந்தக் கருப்பனையும் ?

ஷைலக் :  மேதகு செனட்டரே !  அவர்கள் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆயுதம் ஏந்திய காவற்படை வீரர் சிலரோடு  என் பின்னால் வாருங்கள் !

[ஷைலக் பின்னால் சிசாரோ தன் ஆட்களுடன் போகிறார்]

+++++++++++++++++

Edit

[தொடரும்]

++++++++++++

Series Navigationநவீன விருட்சம் 121  ஒரு பார்வை   
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *