Posted in

ஸ்பரிஸம்

This entry is part 8 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

 

நான்

சிந்தனையில்

இருந்து மீண்ட​ போது

அந்தப் படகு

இல்லை

 

என்

பார்வையின் வீச்சுக்கு

அப்பால்

அது

போய் விட்டது

 

எழுந்து நின்று

கரையோரம் நீள​ நடந்து

அந்த​ மேட்டில் ஏறி

படகைத் தேடலாம்

கவனத்தைக் கடலின்

ஆர்ப்பரிப்பு

கலைக்கிறது

 

ஆக​ உயரமாய்

எழும்பும் அலை

வந்து மோதி

ஈரமணலை விரித்து

மறைகிறது

 

மேகங்கள்

பறவைகள்

கவியும் மாலை

நட்சத்திரங்கள்

எதிலிருந்தும்

தடம் மாற்றி விடும்

ஆர்ப்பரித்து

ஓங்கி வரும் அலைகள்

 

ஆர்ப்பரிப்பவர்கள்

என் தடங்களை

மறிக்கும் மாற்றும்

நெருக்கடிக்களுக்கு

இடைப்பட்டு

கனவுகள் மட்டுமே

சாத்தியம்

 

காலையில்

கண்ணாமூச்சியாய்

கைநழுவும் அவற்றின்

ஸ்பரிஸம்

ஒரு நாள்

சிறுவர்கள்

எடுத்துப் போடச் சொன்ன​

ஈரப்பந்தின் மீது கிடைத்தது

மணற் துகள்களாய்

Series Navigationதொடுவானம் 83. இறை நம்பிக்கைமின்னல் கீறிய வடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *