உயிர்த் தீண்டல்

This entry is part 7 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

மலையுச்சியில் அந்த

மங்கைக் குரங்கு

மலையடியில் அந்த

மன்மதக் குரங்கு

 

ஒரு நாள் மன்மதன்

மலைக்குச் சென்றான்

கண்களிலெல்லாம்

காதல் பொறியாய்

மங்கையிடம் வீழ்ந்தான்

மன்மதன்

 

மலையடியின்

சுளைகளையும்

கனிகளையும்

மங்கையிடம்

கொட்டினான்

தழைகளால்

பந்தல் செய்தான்

கொடிகளால்

ஊஞ்சல் செய்தான்

ராணியானாள்  மங்கை

சேவகனானான் மன்மதன்

 

கருவுற்றாள் மங்கை

ஒன்று இரண்டு மூன்று

 

அடிக்கடி

மலையடி செல்லும் மன்மதன்

அப்பா முதுகு சொறிவான்

அம்மாவுக்குப் பேன் பார்ப்பான்

பாட்டி தாத்தாவின்

வால்கள் நீவுவான்

சகோதரங்களிடம்

பாசம் சுகிப்பான்

மீண்டும்

மலையேறும் போது

சில குட்டிக் குரங்குகள்

முதுகில் ஆடின

கன்னிக் குரங்குகள்

பல்லி ளித்தன

 

மங்கையிடம் வரும்போது

சில சமயம் பின்னிரவும் ஆகும்

 

மங்கைக்குள்

மலை வெடித்தது

பந்தலைக் கிழித்தாள்

ஊஞ்சலை அறுத்தாள்

பிள்ளைகளைப்

பிறாண்டினாள்

 

‘என்னையே

தந்தேன் உன்னிடம்

ஆனால் நீ

உதிரிகளை யெல்லாம்

உச்சத்தில் வைத்து

எச்சமாக்கினாய் என்னை

இனியும் வாழேன் உன்னோடு

தற்கொலை செய்வேன்

தள்ளிப் போ’

கத்தினாள் மங்கை

 

மன்மதன் சொன்னான்

 

‘பொழுதுகள்

கழியலாம் எப்படியும்

ஆனால் இரவில்தான்

நாம் அருகருகே

அந்த இடத்தில்

வைத்துப் பார்க்க

எனக்கென்றும் நீதான்

உனக்கென்றும் நான்தான்

நம் உயிர்த் தீண்டலில்தான்

விதைக்குள் வேர் முளைக்கிறது

நான் சூரியனே ஆனாலும்

உன் காலடிதான் வானம்

நீ மட்டும்தான்

நீ மட்டுமேதான்

என் உலகம் மங்கை

இதயம் கிழிக்கிறேன்

பார்த்துக் கொள்’

 

சீறித் தெறித்த அலை

சமாதானமாகி

கடலுக்குத் திரும்பியது

 

மங்கை சொன்னாள்

 

‘சூரியனுக்குப்

பாதை சொல்ல

இந்த வானத்துக்குத்

தகுதி யில்லை

இரத்த ஓட்டங்கள்

இதயத்தையா

இடம் மாற்றும்?

அலை களாலா

மாசுபடும் குளம்?

 

முகம் புதைத்தாள் மங்கை

மங்கை முதுகில்

முகம் பார்த்தான் மன்மதன்

 

அந்த உயிர்த் தீண்டலில்

உருகி ஓடியது மலை

 

அமீதாம்மாள்

Series Navigationகலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்கடல் என் குழந்தை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *