This entry is part 22 of 46 in the series 26 ஜூன் 2011

பூகோள வரைபடங்கள் இல்லாமல்
திசையை அவதானித்து தேசங்களைக்
கடப்பதாய்

பறந்தும் மிதந்தும் மின்னல் வேக
இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச்
செல்வதாய்

வளாகங்களின் சாளர மேற்புறத்து
வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப்
பெருகுவதாய்

மலரினுள் நுழைந்து தேனெடுத்து
மரத்தைக் கொத்தி இரை தேடி
ஜீவிப்பதாய்

வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய்
ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு
கட்டும் திறனாளியாய்

இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின்
நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும்
காணக் கிடைப்பதில்லை

உதிர்ந்த சிறகுகளும்
சிதறிய இறகுகளும்
சில கவிதைகளும்

 
-சத்யானந்தன்

Series Navigationப.மதியழகன் கவிதைகள்ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி