This entry is part 27 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..”

”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்துரு.”

பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன் சிக்கன்தான். ஆர்ப்பாட்டமா இருக்குடா.. எங்க அம்மாவுக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும். ”

சின்னவன் நண்பர்களை அழைக்கச் சென்றிருந்தான். எல்லாரும் வந்துவிட ., ”டேய், தம்பி. இன்னும் கொஞ்சம் நேரமாகும். அந்த ஃபாண்டாவை ஊத்திக் கொடு எல்லாருக்கும்.”

சின்னவன்., ”அம்மா ஃபாண்டா வாங்கல. ஐஸ்க்ரீதான் வாங்கி வந்தேன்.”

அவசர அவசரமாக நடக்கும் சமையலை கணவர் பார்வையிட்டு..” ம்ம் சின்ன மகன்னா நீ ரொம்ப ஆடுவியே..” என்பது போல ஒரு பார்வவையோடு கடந்தார்.

”நல்லா சாப்பிடுங்கப்பா., நல்லா சாப்பிடும்மா.சரியாவே சாப்பிட மாட்டேங்கிறீங்க.” என அள்ளி வைக்க

”ஆண்டி .. இவன் இப்பத்தான் எல்லாருக்கும் இளநீர்வாங்கிக் கொடுத்தான். உடனே சாப்பிட முடியலை..”

அந்த பாசக்கார சின்னப்பயல் காமிச்சுக்கொடுத்திட்டியே என்பதுபோல தோழியை முறைத்தான்.

சின்னவன் ஃப்ரெண்ட்ஸுக்குத்தானே சமைச்சே என்பது போல கணவரும் பெரியவனும் பேருக்குக் கொறித்தார்கள்.

வந்த நண்பர்கள் கிளம்பியவுடன் சட்டி சட்டியாக மிஞ்சிய பதார்த்தங்கள் பார்த்து மயக்கம் வந்தது அவளுக்கு.

”இளநீ வாங்கி கொடுத்துட்டுத்தானாடா ஃபாண்டா வாங்காம வந்தே.. வீட்டுக்கு வாங்கி வந்தா வீட்டுல இருக்குறவங்களும் சாப்பிட்டு இருப்போம்ல.. மெதுவாவும் சமைச்சிருப்பேன். இப்ப பாருடா இன்னும் மூணு நாளைக்கு சமைக்கவே வேண்டாம் போல எல்லாம் மிஞ்சிக் கிடக்குது. ”

”அது உங்க தப்பு. சரியா எஸ்டிமேட் போட்டு சமைச்சிருக்கணும். ”என்ற சின்னமகனைப் பார்த்து கணவரும்., பெரியவனும் ஆதரிப்பதுபோல சிரிக்க., சின்னவனைப் பற்றிய தன் எஸ்டிமேட் தப்பாகிவிட்டதே என முழித்தாள் அம்மா.

Series Navigationதமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்(77) – நினைவுகளின் சுவட்டில்