This entry is part 17 of 41 in the series 13 நவம்பர் 2011

 

 

தொலைக்காட்சியில்

மழை கண்டு

அலைபேசியில் ஊரழைத்தால்

தொலைபேசியில்

சப்தமாய் மழை

 

சாளரம் வழியாக

சாரலாய் மழை

கூரையின் நுனியிலும்

குட்டிக்

குற்றாலமாய் மழை

 

கத்திக் கப்பல்களும்

காகிதக் கப்பல்களும்

கரை சேரவில்லையாம்

கனுக்கால் வரை மழை

 

மின்சாரம் வெட்டுப்பட

முட்டை விளக்கின்

மட்டுப்பட்ட வெளிச்சத்தில்

முகங்களில் மழை

 

இரவின் இருளில்

மழை பெய்வதில்லை

அதன்

பேச்சுச் சப்தம் மட்டுமே

கேட்டுக் கொண்டிருக்கும்

 

அடைமழை காலத்தில்

குடைமேல் மழை

தடைபட்ட தூரலில்

உடையெல்லாம் மழை

 

முகிழ் முயங்கி

மழை பொழிந்து

மண் ணடைந்து

மடை வழிந்து

கட லடைந்து

கலக்கும் வரையான நீரை

மழை என்றே

அழை!

 

 

Series Navigationபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்