Posted in

அமீதாம்மாள்

This entry is part 25 of 41 in the series 13 நவம்பர் 2011

வெள்ளம்

குருவிக் கூட்டோடு

சாய்ந்தது மரம்

என்ன ஆனதோ?

நேற்றுப் பொரித்த குஞ்சுகள்

 

வெள்ளத்தோடு

நகர்கிறது கூரை

சில தட்டான் பூச்சிகளுடன்

 

சங்குச் சக்கரமாய்ப் பாம்பு

அந்த ஒற்றைச் சுவரில்

சில நொடிகளில்

மரணிக்கப் போகிறது

அதோ அந்த சுவர்ப் பல்லி

 

வாக்காளர் அட்டை

ரேசன் அட்டை

வேலை தேடும் சான்றிதழ்கள்

பத்திரங்கள்

பள்ளிப் புத்தகங்கள் அத்தனையும்

ஊறுகின்றன புண்ணாக்காய்

 

இனி கோழிகூடக் கொத்தாது

இருக்கும் அரிசியை

 

இலவசங்களெல்லாம்

பயணிக்கின்றன

காயலாங் கடைகளுக்கு

 

தனலுக்கும் தண்ணீருக்கும்

குடிசைகளைத்தான்

அதிகம் பிடிக்கிறது

 

பயப்படத் தேவையில்லை

புரட்சி ஒன்றும் வெடிக்காது

 

இதோ வந்துவிட்டது

அரசாங்க அறிவிப்பு

‘அடுத்த மாதம் முதல்

கூடுதலாக ஐந்து கிலோ அரிசி’

————————————–

அமீதாம்மாள்

 

 

Series Navigationகவிதைமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *