This entry is part 11 of 45 in the series 4 மார்ச் 2012

எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் உழலும் போது வரும் தற்காலிகச் சலிப்பே எஞ்சியதே ஒழிய ஆன்மீகத்தில் நிலைப்பது அதைத் தொடர்வது வசப் படவே இல்லை. ஜென் பற்றி ஒரு புரிதல் நிகழும் என்று வாசித்தால் அவர்கள் என் விரலைப் பற்றி அழைத்துப் போகும் வாய்ப்பே இல்லை. நீயே பார்த்துக் கொள்- நீயே புரிந்து கொள்- உன் மனமே ஏணி உன் மனமே தடை என்பது போல ஏதோ சொல்கிறார்கள்.

எதற்காக ஜென்? அது எத்தகைய புரிதல்? அதற்குப் பின் எப்படி இருக்கும் என் வாழ்க்கை? அவ்வாழ்க்கை எத்தகைய அணுகு முறையை முன் வைக்கும்? இந்தச் சுழலில இருந்து விடுதலை ஆன மன நிலையில் நான் இயங்கினால் அது எந்த மாதிரியானது?

தற்போது எழுபது வயதிற்கும் மேற்பட்டவரான “ஷோடோ ஹரடா ரோஷி” யின் கவிதையில் விடை கிடைக்கிறது இக்கேள்விகளுக்கு. அமெரிக்காவில் ஜென் சிந்தனை மையமான ” தஹோமா ஒன் ட்ராப் ஜென்” னை வாஷிங்க்டனில் நிறுவியவர். “யமடா முமன் ரோஷி” என்னும் ஜப்பானிய ஜென் ஆசானின் மாணவரான இவர் மேற்கிற்கு ஜென் பற்றிய புரிதலை சம காலத்தில் நிகழ்த்திய சிந்தனையாளர்.

கடந்து செல்லும் இந்நொடியில்
__________________

கடந்து செல்லும் இந்நொடியில்
‘கர்மா’ முதிர்ந்து
அனைத்தும் நடப்பாகத் துவங்குகின்றன
சபதம் செய்வேன் என் தேர்வு-
விலையிருந்தால் செலுத்துவதே என் தேர்வு
தேவையிருந்தால் கொடுப்பதே என் தேர்வு
வலியிருந்தால் உணர்வதே என் தேர்வு
துக்கம் இருந்தால் சோகமே என் தேர்வு
தீ எரிகிறதென்றால் – நான் சூடு செய்வதைத் தேர்ந்தெடுப்பேன்
அமைதியாயிருக்கும் போது சாந்தமே என் தேர்வு
பட்டினியாயிருக்கும் போது பசியே என் தேர்வு
மகிழ்ச்சியாயிருக்கும் போது சந்தோஷமே என் தேர்வு
யாரை எதிர் கொள்கிறேனோ அவரைச் சந்திப்பதே என் தேர்வு
எதற்குத் தோள் கொடுக்கிறேனோ அதைச் சுமப்பதே என் தேர்வு
மரண காலத்தில் மரிப்பதே என் தேர்வு
இது எங்கே என்னை இட்டுச் செல்கிறதோ
அங்கே போவதே என் தேர்வு
எது இருக்கிறதோ அதனுடன் இருப்பதில்-
நான் எது இருக்கிறதோ அதற்கு பதில் சொல்கிறேன்

இவ்வாழ்க்கை ஒரு கனவு போலவே நிஜமானது
இதை அறிந்தவரைத் தேடிக் காண்பது இயலாது
மேலும் உண்மை என்பது ஒரு பொருளல்ல
என்வே என் சபதம்
இந்த தர்மத்தின் வாயிலே என் தேர்வு!
எல்லா புத்தர்களும் மெய்யறிவாளிகளும்
இந்த சபத்தை நான் வாழ உதவுவார்களாக

Series Navigationபழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.