ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் ,
” இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் ” என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை
வித்தியாசமாகப் பேசுகிறது.
‘ கொலுசுச் சத்தத்தில் ‘ என்று தொடங்கும் கவிதை !
கொலுசுச் சத்தத்தில்
முதுகுப் பக்கத்தில்
உள்ளங்கை ஈரத்தில்
உதடுகளின் ஓரத்தில்
கன்னத்து மச்சத்தில்
கருவிழியின் ஆழத்தில்
எங்கேனும்
கிடைத்தேனா
நான் !
— அவன் இருக்கும் இடங்கள் சுட்டப்படுகின்றன். சுட்டப்படும் எல்லா இடங்களிலும் அவன் இருக்கிறான் என்பது தொனிப் பொருளாக உள்ளது. வினாவோடு முடியும் இக்கவிதை வித்தியாசமானது;
புதிய பார்வை கொண்டது.
‘ நீ ‘ என்று தொடங்கும் கவிதை , கற்பனை அழகைக் காட்டுகிறது.
நீ
ஊரிலில்லாத
நாளன்று
பெய்து கொண்டிருந்த
மழையை
நீயென நினைத்தே
நனைந்தேன் !
—- குளிர்ச்சி , இனிமை , சிலிர்ப்பு ஆகியவை காதலுக்கும் மழைக்கும் பொருந்தி வரும் இயல்புகளாகக்
காட்டப்படுகின்றன.
புதிய நோக்கில் ‘ கண்ணாடி ‘ என்று தொடங்குகிறது ஒரு கவிதை.
கண்ணாடித் தண்ணீரில்
நீந்தித் திரியும்
வண்ண மீன்களின்
கனவுகளிலெல்லாம்
கடல்
—- கூடு விட்டுக் கூடு பாயும் உத்தியில் இவர் கவிமனம் மீனுக்குள் சென்று தண்ணீர்த் தொட்டியைக்
கடலாகக் கண்டு கவிதரிசனம் கொள்கிறது.
‘ என் மகிழ்ச்சிகளால் ‘ என்று தொடங்குகிறது ஒரு தொடர் படிமக் கவிதை. விரக்தி இதில் முழு வீச்சுடன் பதிவாகியுள்ளது. புதிய சிந்தனைகள் சீறிப் பாய்கின்றன. காதலியின் கோபம் , பாராமுகத்துடன்
விரவி நிற்கிறது.
என்
மகிழ்ச்சிகளால்
ஒரு
மாலை செய்தேன்
—- என்பது தொடக்கம்.
என்
கனவுகளால்
ஒரு மாளிகை கட்டினேன்
உன் சந்தேகங்களால்
அதை
இடித்துப் போட்டாய்
—- எனத் தொடர்கிறது இந்த நீள் கவிதை.
என்
விழிகளைத் திரியாக்கி
ஒரு
விளக்கை ஏற்றினேன்
உன்
வார்த்தைகளால்
அதை
ஊதி அணைத்தாய்
— என்ற வரிகள் ஊடலை அழகான சிந்தனைகளால் தமிழ் மணம் ஊட்டுகின்றன. கருத்துகள் சரளமாக
வந்து விழுகின்றன.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ !
தனித்தனி
கூடுகளிலிருப்பவர்கள்
தாய்க் கூட்டிற்கு
வருவதை எதிர்பார்த்து
வாஞ்சையோடு
வாசலில் நிற்பார்
— என்ற வரிகள் பாசத்தின் பசுமையைப் பிறருக்கு எடுத்துக் காட்டாக முன் வைக்கின்றன.
குடும்ப மாநாட்டுத்
தலைமையேற்று
குழந்தையைப் போல்
துள்ளுவார்
—- என்பது ஒரு குடும்பத் தலைவனின் மேன்மையைத் தெளிவாக்குகிறது. இதையும் தாண்டிச் சிந்திக்கிறார் தங்கம் மூர்த்தி !
இந்த நாள்
நீளாதா என்று ஏங்குவார்
—- தந்தையின் பெருமையைச் சொல்லும் ஒரு சில கவிதைகளுள் இது நல்லிடம் பெறுகிறது.
தாத்தாவின் சிறப்பையும் ஒரு கவிதை பதிவு செய்துள்ளது.
அதிரும் பறை ஒலியும்
அதிர் வேட்டுச் சத்தங்களும்
அருகிருப்போர் புகழுரையும் கேட்டு
சரித்துக் கொண்டார்
செத்துக் கிடந்த
தாத்தா !
காதலின் ஆழத்தை ஒரு கவிதை புதுமையுடன் பேசுகிறது.
நீ இல்லாத
என் இரவு
உன்
கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
—- என்ற வரிகள் அந்தப் பெண்ணின் ஆளுகையை அழகாகப் பதிவு செய்துள்ளது.
கடந்து போன
எல்லாப் பறவைகளிடமும்
உன்
சாயலைக் கண்டேன்
— என்ற வரிகளில் காதல் , உச்சம் தொடுகிறது.
மேகத்தைப் போல்
தூரத்தில்
மிதந்து செல்கிறாய்
—- என்ற வரிகள் வியக்க வைக்கின்றன. தங்கம் மூர்த்தி கவிதைகள் எளிமை , புதிய சிந்தனை ,
வாசகனை ஈர்த்தல் ஆகிய இயல்புகளுடன் நிமிர்ந்து நிற்கின்றன.
- உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்
- இந்த வார்த்தைகளின் மீது
- கணிதன்
- ஆறாது சினம்
- தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …
- அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா
- தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
- கனவு நீங்கிய தருணங்கள்
- பால்
- “போந்தாக்குழி”
- தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “
- சொல்வது
- நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி
- செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை