‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
This entry is part 8 of 18 in the series 21 ஜூன் 2020

  1. வாசிப்பின் சுயம்

அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று
முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து
பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால்
இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம்
எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை
அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில்

புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே
உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய்
விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய்

இத்தனையத்தனை யென்றில்லாமல்
அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய்
குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை
பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய்
பித்தேறச்செய்கிறார்கள்

நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும்
குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும்
வாசிப்பில் ஆழ்ந்தாழ்ந்து அனுபவங்கொள்ளும்
நீச்சல்திறனும்.

அத்தருணம் முதல்
அவர்களுடைய எல்லைகள் விரிய ஆரம்பிக்க
அடிமுடியறிந்த முழுவிழிப்பில்
விசுவரூபங்கொள்கிறது அவர்களுடைய
வாசிப்பின் சுயம்.

***

  • விரி கதை

குக்குறுங்கதைக்குக்கூட குறைந்தபட்சம்
எட்டு முதல் பதினைந்துவரிகள் தேவைப்படும்போது
விரி கதையை ஒரு வரியில் எழுதுவதாவது
என்று சுற்றிலும் குழுமியிருந்தவர்கள் குழம்பித் தவிக்க _

கவிழ்த்துவைத்திருந்த கூடையை நேராக நிமிர்த்திய
படைப்பாளி
கீழே குவிந்துகிடந்த சொற்களிலிருந்து இரண்டேயிரண்டை யெடுத்து
ஒரு வரியாக (அன்றி ஒரு வார்த்தையாக)க் கட்டமைத்ததில் _

எல்லையற்று நீண்டுகொண்டே போன
விரிகதை யில்
கவி விதை கதை தை கரி யெனக் கிடைத்த
சொற்கள் போதாமல்
கதை யெங்கே எனக் கேட்கும்
அதிகப்பிரசங்கி வாசகரை
’நாசமாய்ப்போ’ என்று சபித்தபடி_

கால் வரியில் காவியம் போல் ஒன்றைத்
தன் ஆவி கட்டாயம் எழுதும் என்று அறிவித்து
தன் ஆத்ம வாசகர்களின் கலிதீர்க்கிறார்
(கிலிசேர்க்கிறார்) அவர்!

***

Series Navigationதவம்‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *