Posted in

இலைகள்

This entry is part 9 of 14 in the series 24 ஜனவரி 2021

ஆதி மனிதனின் ஆடை

மழையின் விதை

வேரின் விழி

பூமியின் விசிறி

புன்னகையின் பொருள்

வடிவங்களின்

வண்ணங்களின்

வாசனைகளின்

களஞ்சியம்

கோடிக்கோடி உயிர்களின்

குடை

உடை

வீடு

கூடு

மருந்து

விருந்து

இலைகள்

இல்லாதிருந்தால்

செவ்வாயாகி யிருக்கும்

பூமிப் பிரதேசம்

மொத்த உயிர்களும்

செத்துப் போயிருக்கும்

காற்றுவெளியை

கழிவாக்கும் உயிர்கள்

கழுவிப் போடும் இலைகள்

இயற்கையின்

குளிப்பிடம் இலைகள்

‘இலைகள்

உதிக்கும்

உழைக்கும்

உதிரும்’

ஓர் இலைபோல் வாழ்

ஈருலகம் உனக்கு

‘துக்கம்

ஏக்கம்

பயம்

சோகம்

அத்தனையும்

அர்த்தமற்றுப் போக’

ஓர் இலையை உற்றுப் பார்

அங்கே

கொட்டிக் கிடக்கும்

ரேகைகள் எல்லாம்

கொடை ரேகைகள்

‘மரங்கள்

பூக்கள்

கனிகள்

எல்லாமும் போற்றப்படும்

ஆனால் இலைகள்…….’

இலைகள் தியாகிகள்

இறந்த பின்னும்

வாழத் தெரியும்

இலைகளுக்கு

நம் இலக்கிய வரலாறு

இலைகள் தந்த பேறு

வள்ளுவனின்

சிலேட்டுப் பலகை

இலைகள்

அமீதாம்மாள்

Series Navigationமற்றொரு தாயின் மகன்மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *