Posted in

என்னெப் பெத்த ராசா

This entry is part 5 of 9 in the series 1 மே 2022

 

அன்னையர் தினக் கவிதை

 

 

கனவு வண்ணங்களை

கண்ணீரில் குலைத்து

கருப்பையில் என்னை

எழுதினாய்

 

என் சுருதிக்கு

நரம்புகளை மீட்டி

இசை கூட்டினாய்

 

உன் சொற்களால்

என்னைப் பேசவைத்தாய்

 

துளி எனைத் தந்த நதியே

‘என்னப்பெத்த ராசா’ என்று

என்னை நதியாக்கி

நீ துளியானதில்

தியாகம் அர்த்தம் பெற்றது

 

தூளியின் தூக்கத்தில்

கைபிசைந்த அமுதில்

பொய்யாகிப் போயின

என் எல்லா சுகங்களும்

 

என் தாகங்கள்

என் பசிகள்

உன்னைச் சுற்றியே

 

உலக அறிமுகமே

உன்னால்தான்

 

சிறகு தந்தாய் பின்

சென்றுவிட்டாய்

காற்று வெளிகளில்

உன்னைத் தேடுகிறேன்

 

என் காட்சிகளில்

கனவுகளில்

உறவுகளில்

உணர்வுகளில்

மதியில்

மாயைகளில்

எங்கோ நீ இருக்கிறாய்

 

என் கண்ணீரில்

ஏதோ ஒரு துளி

உன்னுடையது

என் சுமைகளில்

ஓதோ ஒன்றை

நீ நீக்குகிறாய்

 

என் உலகம் விரிந்தது

விதை தந்த விருட்சமே

இன்று நானும் விருட்சம்

 

உன்னைப் போலவே

இன்று என் மகள்

 

பால்நிலா பார்வை

தெற்றுப் பல்

பொத்திய புன்னகை

எல்லாமும் நீயேதான்

உண்மையில் என்மகளாக

நீதான் அம்மா

 

என்னப் பெத்த ராசா

அட!  இதுதானா?

நான் உன்னைப்

பெற்றுவிட்டேனம்மா

 

மற்றவையெல்லாம்

இருந்தென்ன?

தொலைந்தென்ன?

 

அமீதாம்மாள்

Series Navigationகூட்டுக்குள் கல்லெறிந்தவள்’மனுசங்க’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *