நிதானப் புரிதல்கள்

author
0 minutes, 34 seconds Read
This entry is part 3 of 5 in the series 1 ஜூன் 2025

          -ரவி அல்லது

    இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.  கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான்  இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது அதை எங்கு படிக்க வைப்பது என்கிற ஆலோசனைகளுக்கு  கொஞ்சமும் பஞ்சமில்லை. 

இவ்வளவிற்கும் பெருமாள் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் மனைவி மல்லிகா படித்தவர். படிக்கப்போகும் மதியரசி விவரமான பிள்ளை. இங்கு அறிவாளியாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய சுய கணிப்புகள் இருந்தாலும் சொந்த பந்தங்களின்  ஆலோசனைகள் முக்கியம். எல்லோரும் எந்த திசை நோக்கி ஓடுகிறார்களோ  அதில் ஓட வேண்டும். 

மதியரசியைவிட அவள் அண்ணன்தான் பாவம். எல்லோரையும் அனுசரித்து போகும் குணமுடையவன். அவன் படிப்பின் ஆரம்பமும் அப்படித்தான் அமைந்தது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று மக்கள் தீவிரமாக பைத்தியம் பிடித்த காலத்தில் அவன் பிறந்தது. பாவம் அவன் செய்த தவறில்லை. 

மாநிலத்தில் முதல் இடம் பிடித்து அதனால் கல்லா கட்டிய பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் தான் அவனைச் சேர்த்தார்கள். வெளி முகப்பின் அலங்காரத்திற்கும்  உள்ளே நடந்து கொண்டு இருப்பது முற்றிலும் வேறாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்ததால் அதன் நன்மைகளை  பள்ளிகள் அறுவடைகள்  செய்கிறது என்பதனை மல்லிகா கொஞ்ச நாளில் புரிந்து கொண்டார். 

“எனக்கு என்னமோ தவறான பள்ளியில சேர்த்துட்டோமோன்னு கவலையாக இருக்குங்க. “

“எப்படிச் சொல்றே. “

“குறைந்த சம்பளத்துக்கு கண்ட பேரை ஆசிரியராக போட்டு வச்சிருக்காங்க.”

“அப்படி எல்லாம் பண்ண முடியாது. அதுக்கெல்லாம் ரூல்ஸ் இருக்கு. உன் மகனை ஒழுங்காப் படிக்க வைக்கிற வேளையைப்  பாரூ. வீட்டில் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுத வச்சி. வீட்டில் படிக்கிறானான்னு கவனி.”

பெருமாள் வாத்தியார் காலையில் வயலுக்குப்போவது பள்ளி முடித்து வயல் வேலைகள் நடைபெறுவதை பார்த்து கூலி கொடுத்துவிட்டு வருவது. பிறகு சமூகநலப் பணிகள் என்று நண்பர்களோடு ஏதாவது எங்காவது கூட்டங்கள் அது தொடர்பான வேலைகள் என்று இருந்ததால் அன்பரசன் படிப்பு முழுவதும் மல்லிகாவே கவனிக்க வேண்டியதாகிவிட்டது. 

எல்லாப் பள்ளிகளும் மனப் பாடம் செய்வதற்கு பயிற்சி அளித்தது போல அன்பரசன் பள்ளியும் அதைத்தான் செய்தது. தேர்ந்த மனப்பாடம் செய்தவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றார்கள். அவனை அந்தப் பள்ளியில் சேர்த்த பிறகும் சிலர் சரியாக வாந்தி எடுத்ததில் மாநிலத்தின் முதல் இடங்களுக்குள் இருந்தார்கள். 

கல்யாணம், காட்சிகளுக்கு ‘பையன் எங்கே படிக்கிறான்’ என்ற கேள்விக்கு பள்ளியின் பெயரை சொல்வது அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பெருமையாக இருந்தது. 

விரைந்தோடி பணம் பண்ணும் உலகில் அன்பரசனைப் போன்றவர்களுக்கு தகுந்த மாதிரி சொல்லிக்கொடுக்க இங்கு யாருக்கும் நேரமும் இல்லை அதற்கான பொறுமையும் இல்லை. அவன் மத்திமத்தின் கீழேயே மதிப்பெண்கள் எடுத்தான். 

பெருமாள் வாத்தியார் அவனை மருத்துவராக்கும்  பெரும் கனவில் இருந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் படிக்கும்போது அவர்தான் வகுப்பின் முதல் மாணவன். அவர் பதினோராம் வகுப்பு படிக்கும் போது அன்றைய அரசின் கல்வியாளர்கள் பஸ்ட்  குரூப்பில் இருந்த பயாலஜியை  எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சென்ட்ரல் மெஷினிஸ்ட் என்று வைத்து பரிசோதித்து பார்த்து அடுத்த வருடமே  பழையபடி கொண்டு வந்துவிட்டார்கள். 

அப்போது அதுபோல கல்வி மாற்றம் நிகழாமல் இருந்திருந்தால் மருத்துவர் பெருமாளாக மாறி இருந்திருப்பார். 

அன்பரசன் அதற்குப் பரிகாரமாக மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். விதியை அவர் அதிகமாக நம்புவதால் தன் மகன் வாழ்க்கையில் அது சரியாக அமைந்துவிடுமென  நினைத்தார். 

விதி வினோதமாக அவர் வாழ்க்கையிலும் விளையாடியது. ஆவரேஜ்  மதிப்பெண்களில் அன்பரசன் வெற்றி பெற்று இருந்தான். நீட் எக்ஸாம் மார்க்கை கிராஸ் செக் பண்ணதில் மைனசில் போனாலும் ஆச்சரிப்படுவதிற்கில்லை. அவரால் பணம் கொடுத்துக்கூட மருத்துவராக்க முடியாத  மனவேதனை அடைந்தார். அவன்  மதிப்பெண்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கேவிக் கேவி அழுதார். 

மதியரசி, அன்பரசன் இருவருமே அப்பா அழுது இதுவரைப்  பார்த்ததில்லை. மல்லிகா ஒரு பக்கம் அழுது கொண்டு இருந்தார். அன்பரசன் அப்பா அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்தான்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் ஏதாவது பேசி எல்லோரையும் மாற்றுவது மதியரசிதான். மதியரசி ஏதாவது செய்தால் தேவலாமென்று அம்மாவும் மகனும் நினைத்தார்கள். 

“இப்ப உட்கார்ந்து அழுவுறீங்களே அப்பா. ஒரு நாளாவது அவன் என்னப் படிக்கிறான். எத்தனை மார்க் வாங்கிறான். ஸ்கூலுக்குள்ள என்ன நடக்குதுன்னு நீங்கள் பார்த்தீங்களாப்பா. “

அவர் மனைவியைப் பார்த்தார். மல்லிகா இதற்குப் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். மல்லிகா அழுகையை நிறுத்தாமல் இருந்தது அவருக்கு கடுப்பாக இருந்தது. உன்னை நம்பித்தானே  அவனை ஒப்படைச்சேன் என்று அவர் நினைத்ததாலும் அப்படி அவருக்கு தோன்றி இருக்கலாம். 

மதியரசி பேசியதில் அன்பரசனுக்கு கொஞ்சம் பயம் குறைந்தது. 

“அம்மாவை ஏம்ப்பா  பாக்கிறீங்க. பயலாஜிக்கல் பேரு எதுவும் மண்டையில நிக்க மாட்டேங்குதுன்னு என்கிட்ட எத்தனை நாள் அழுது இருக்கான் தெரியுமாப்பா. “

அவர் யார் பேசினாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தார். மதியரசி தன் தந்தையோடு அதிகம் பழகியதால் பலமுறை அவரது அப்பா பேசுவது போல மதியரசியின் பேச்சு இருப்பதாக நினைப்பார். 

“டாக்டர் படிப்பைப் பத்தி உங்களுக்கு என்னப்பா தெரியும். நீட் வேணும்ன்னு  ஒன்றிய அரசு சொல்லுது. நீட் வேண்டாம் என்று மத்திய அரசு சொல்லுது. இரண்டு பேருமே  தனக்கான சரியான நியாங்களைச் சொல்றாங்க. அதுக்குள்ள நான் போக விரும்பல.அந்த நீட் கொய்ஸ்ட்டீன் பேப்பரைப்  பார்த்தீங்களா. அதுக்கும் அவன் டாக்டராகுறதுக்கும் என்னப்பா சம்பந்தம். எல்லாமே ஹைப்போதட்டிக்கல் கொஸ்ட்டீன்ம்ப்பா. தற்கொலை செஞ்சுக்கிற தற்குறிகளை நினச்சாதான் வெறுப்பாக இருக்கு. முதல் அவுங்க அப்பா,அம்மாவை தூக்கில போடணும். அதெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது.”

“…. “

“அவன் வயசும் வாலிபமும் தொலைஞ்சுப் போயிரும்பா. இன்னைக்கு எம். பி. பி. எஸ் மட்டும் படிச்சா போதாதுப்பா. எம்.டியும் முடிக்கனும். அத முடிச்சு ப்ராக்ட்டீஸ் செய்து வெளியே வர்றதுக்குள்ள முப்பத்தி ஐந்து வயது வந்துரும். அதன் பிறகு அவன் செட்டிலாக  கொஞ்ச வருசம். நாற்பது வயசுல அவன் கல்யாணம் பண்ணா . அவன் பையன் காலேஜூக்கு போகும்போது அவனுக்கு அறுபது வயசாகும்ப்பா. பொம்புளைப்புள்ளைங்க நிலமை அதைவிட மோசம்ப்பா. பணவீக்கம் மாதிரி இது கல்வி வீக்கம்ப்பா. ஒரு துறையைத் தூக்கிப்பிடிக்கிறேன்னு மற்ற அனைத்தையும் சர்வ நாசமாக்கிக்கிட்டு வர்றாங்க. முதல்ல நீட்டுக்கு  எக்ஸ்ட்ரா ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்கனும். இருக்கின்ற பிரைவேட் நீட் ட்ரைனிங்க் சென்டரை  குளோஸ் பண்ணிட்டு பள்ளிகளில் வைக்கலாம். இல்லேன்னா இந்த நீட்டைத் ….  “

அப்போது யாரோ அன்பரசன் ரிசல்ட்ப் பற்றி கேட்கப் போன் செய்தார்கள். 

“அவன் குறைச்சலாக மார்க் எடுத்ததும் ஒரு வகையில் நல்லதுதாம்பா. ஏதாவது இஞ்சினியரிங் படிச்சிட்டு. அவன் வாழ்க்கையை ஜாலியாக ஓட்டட்டும்பா. “

ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு ஆசுவாசத்துக்குள் போனது. 

“அப்பா… போனைக் குடுங்க. அம்மா மூட் அவுட்டாக இருக்காங்க. வெளியில் புட் ஆர்டர் பண்ணலாம். “

போனை எடுத்துக்கொண்டு போகும்போது

“கிரேட்… எஸ்கேப் ப்ரோ. ” மதியரசி. 

‘தின்னிக்கோழி’ என்று மல்லிகா சிரித்தார். 

“டேய்… இங்க வாடா. நமக்கு என்ன மார்க் வாங்க முடியுமோ அதான்டா. தூக்கிப்போட்டுட்டு  ஜாலியாக இரு. டாக்டரைவிட அதிகமாக சம்பாதிக்கனும்ன்னு ஒரு ஆசை வை. இல்லை எதிர்காலத்தில் சாதிக்கனும்ன்னு ஒரு வெறியை வச்சுக்க. ” என்றார் பெருமாள் வாத்தியார்.

“மார்க்கை  கொஞ்சம் சேர்த்து சொல்வோமாங்க. ” மல்லிகா. 

” இல்லை. அப்படியே சொல்வோம். அது நம்மல கூச வைக்கும் பார்த்தியா. அதுதான் அவனுக்கு வெற்றியடைனும்ங்கிற வெறியைக்  கொடுக்கும். “

மதியரசன் இதற்கிடையே அவனாகவே ஒரு மார்க்கை மனதிற்குள் ரெடி செய்து அதன் கூட்டுத்தொகை போட்டு வைத்தது வீணாகிப்போனதே என்று கவலைப்பட்டான். அப்பா இந்தப் பிரச்சினையை இதோடு விட்டாரே என்பதே அவனுக்கு இப்போது பெரிய நிம்மதியாக இருந்தது.

அவர்கள் அவர்களுக்குள் எப்போதும் ஒரு சந்தோசத்தை ஒரு மகிழ்ச்சியை ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஊரோடு  பயணிப்பது தான் சிரமத்திலும் சிரமம். 

இப்படியாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையின் போக்கில் வந்த இந்த வருடத்தில் ஐநூறுக்கு நானூற்றி தொன்னூற்றி ஐந்து மதிப்பெண் பத்தாம் வகுப்பில் எடுத்திருக்கும் மதியரசி பெரும் மன நெருக்கடியில் சிக்கித் தவித்தாள்.

அன்பரசனுக்கு பிறகு ஐந்து, ஆறு ஆண்டுகள் கழித்துதான் மதியரசி பிறந்தாள். மதியரசி பள்ளியில் சேர்க்கும் வயதில் மல்லிகா உடல் சுவாதீனத்தில் சிக்கிக் கொண்டதால் அவளை பெருமாள் வாத்தியாரின் அப்பாவுடன் அவளை இருக்க வைக்க வேண்டியதாகிவிட்டது பெருமாள் வாத்தியாரின் அப்பா நேர்மைக்குப் பேர் போனவர். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர். 

‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்’ என்ற சிவவாக்கியர் பாடலை சொல்லி தன் நண்பர்களிடம் கிண்டலாகக் கேட்பார். காட்டுக்குள்ள சிவனேன்னு இருந்த சித்தர்களை யாருப்பா கோயிலுக்குள்ள அடச்சது என்பார்.  இதே அவரின் இஸ்லாமிய நண்பர்களிடம் ‘தொழுகை மூமீன்களின் மெஹ்ராஜ்’ என்கிறது நபி மொழி. நீங்கள் எப்பொழுதாவது மெஹ்ராஜ் சென்று இருக்கிறீர்களா என்பார். 

இவர்களின் குடும்ப நண்பர் வீட்டிற்கு வரும் பாதர் ஒருவரிடம் ஏற்பட்ட விவாதம் அந்த பாதரின் வாழ்க்கையில் மறக்க முடியாது. ‘உங்கள் மற்றாட்டங்களில் பரலோக இராஜ்யத்திற்குள் ஏன் பிரவேசிக்கமாட்டேங்கிறீர்கள் ‘ என்று ஆரம்பித்த விவாதத்தில் பாதர் மிரண்டு போனார். பெருமாள் வாத்தியாரின் அப்பா பைபிளை இந்தளவுக்கு நுணுக்கமாக ஆராய்ந்து வைத்திருப்பார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. பாதர் ‘கர்தரிடம் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ‘ என்றதும் அப்போது கூட இருந்த மதியரசி வாய்விட்டு பயங்கரமாக சிரித்து இருக்கிறாள். 

எழுந்து நின்ற பாதரை பெருமாள் வாத்தியாரின் அப்பா கட்டியணைத்து கொஞ்ச நேரம் கண் மூடி அமருங்கள் என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அவர் கொஞ்ச நேரத்தில் அழ ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு இவரின் நெருங்கிய நண்பராகிவிட்டார். 

ஓஷோ ஆசிரமத்தில் பலமுறை தங்கி இருந்தாலும் ‘லைப் ஈஸ் செலிபிரேசன்’ என்பதை அவரின் சீடர்கள் மிகவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பார். அங்கு இருக்கும் பல சீடர்களுக்கு அவர் சமாதி எங்கு இருக்கிறதென்றே தெரியவில்லை என்று ஒரு முறை மதியரசியிடம் சொல்லி இருக்கிறார். கடவுள் மறுப்பார்கள், காம்ரேட்கள், புத்திஸ்ட்டுகள் இப்படி பற்பல நண்பர்கள் அவருக்கு உண்டு. அவர்கள் எல்லோரிடமும் அவர்களின் கொள்கையின் எதார்த்தத்தை எளிய கேள்விகளால் ஆதி எதார்த்தப் புரிதலுகுள் தள்ளிவிடுவதில் வல்லவராகவும் ஆகச்சிறந்த புரிதலுடைவராகவும் அவர் இருந்தார். அவரைப்போலவே மதியரசி பேசுவது பெருமாள் வாத்தியாருக்கு பெருமையாக இருக்கும். இப்போது அவர் இருந்தால் இந்தக் கதையே வேறு தளத்தில் கூட நடந்திருக்கலாம். அதுவும் பெருமாள் வாத்தியாருக்கு தெரியும்.

இடைவிடாது வந்த போன் கால்களுக்கு சிரித்து பதில் சொல்லியபடியே இருந்தார் பெருமாள் வாத்தியார். மல்லிகாவும் மார்க்கை சொல்லியபடி இருந்தார்.’எல்லாத்திலையும் செண்டம் மார்க் எடுத்து அவ ஸ்டேட் பர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்த்தேன்’ என்று  அவருடைய தோழி புதுக்கோட்டை கார்த்திகா கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்தப்பக்கம் மல்லிகாவின் கல்லூரி தோழி  கோயம்புத்தூரில் இருக்கும் ஆவுடையார் கோயில் ராதாவின் மகள் பிரியாவிடம் மதியரசி ‘நான் என் பேப்பரைக் கேட்கப்போறேன். அதோட கல்வியமைச்சருக்கு தனியா லெட்டர் போடப்போகிறேன்’ என்றதும்.

பெருமாள் வாத்தியாரும் மல்லிகாவும் பேசிய போன் கால்களை பேசி முடித்துவிட்டு மதியரசி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

“என்னம்மா… ஆச்சு.”

“வெறுப்பாக இருக்குப்பா.”

என்று அவள் அறைக்குள் சென்றது அவர்களுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. வெளியே வந்த அவள் ஒரு பையிலிருந்து ஐந்து கவர்களை எடுத்து பெருமாள் வாத்தியாரிடம் கொடுத்தாள்.

“அப்பா… இது நான் ஒவ்வொரு எக்ஸாம் நான் எழுதிட்டு  அன்னைக்கு வீட்டிற்கு வந்து அதே எக்ஸாம நான் வீட்டில் எழுதியது. அதை அன்றே ரிஜிஸ்டர் போஸ்ட் தாத்தாவிற்கு செய்து  நான் வாங்கி வைத்து இருப்பது. நான் என் பேப்பரை வாங்கி. அதை இந்த கவர்ல இருக்கிற பேப்பரோட ஒப்பிடச் சொல்லப்போறேன். ஒரு ஒரு மார்க் எப்படி குறைச்சதுன்னு எனக்குத் தெரியும். நான் இந்த கவர்களை பிரிக்காமல்  கல்வி அமைச்சருக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேம்பா. ஒரு விசயத்தை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்ம்ப்பா. ஒவ்வொரு எக்ஸாம் பேப்பர்ல கால் சூப்பர் வைசர் கையெழுத்து போடும்போது நேரத்தையும் போடச் சொன்னேன். அதே மாதிரி நான் எக்ஸாம் எழுதி முடித்த கடைசி பக்கத்துலையும் கையெழுத்து போட்டு நேரத்தையும் போடச்சொன்னேன். ஒவ்வொரு எக்ஸாமையும் இருபது நிமிடம்,இருபத்தி எட்டு நிமிடம், மேத்ஸ் எக்ஸாமை முத்தி இரண்டு நிமிடம் என்று அவர்கள் அனுமதித்த நேரத்தைவிட நான் முன்பாகவே முடித்திருக்கிறேன். நான் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என்பது எனக்குத் தெரியும். இந்த நேர மேலாண்மை பேசு பொருளாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்டேம்ப்பா.”

பெருமாள் வாத்தியார் மனைவியைப் பார்த்தார். ஒவ்வொரு எக்ஸாம் முடிந்து ரூமை பூட்டிக்கொண்டது பிறகு சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே போனது இதற்குத்தான் என்பது இப்போதுதான் மல்லிகாவிற்கே புரிந்தது.

“அதோட இல்லைப்பா.வீட்டில் நம்ம வீட்டில் நான் எழுதிய எக்ஸாம்ஸை அப்படியே அன்னன்னைக்கே  டைமோட வீடியோவை மெயில்ல அப்லோட் பண்ணி வச்சிருக்கேப்பா.”

உண்மையிலையே பெருமாள் வாத்தியார் பயந்துதான் போய் இருந்தார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார். அப்பாவிடம் வளர விட்டிருக்கக் கூடாதோ என்றும் யோசித்தார். மல்லிகா பேச ஆரம்பித்தது அவருக்கு கொஞ்சம் மன அழுத்தத்தை குறைத்தது.

“அண்ணனுக்கு போன் பண்ணி கேட்போம். மாமா ஊரிலிருந்து வரட்டும். அதன் பிறகு நாம் முடிவெடுக்கலாம்.”

“லூசாம்மா நீங்க. டீவிக்காரங்க எல்லாம் உங்க வீட்டு முன்னாடி இப்போ நிக்கனும்மா. என் உழைப்பப் பூராங் கொட்டி இருக்கேம்மா. தாத்தா எப்ப வருவாருன்னு அவருக்கேத் தெரியாதும்மா. அவர் இமய மலையிலேர்ந்து ஜெய்ப்பூர் போறதா சொன்னார்ம்மா. அவர் வர்ற வரையும் இவைகளை நாம் காத்திருந்து செய்ய முடியாது.”

அப்போது அன்பரசன் அவன் அம்மாவிற்கு போன் செய்து

‘புள்ளை என்ன குரூப் எடுக்குது’ என்றான். அவன் பேசியது வெளியேக் கேட்டதால்

“அடே…முட்டாப்பயளே…இங்கே என்ன நடக்குதுன்னு தெரியுதாடா.”

அவன் போனைக் கட் பண்ணிவிட்டான்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பெருமாள் வாத்தியார்.

“அவன் கேட்கிறதுல என்னம்மா தப்பு இருக்கு. நாம என்ன குரூப் எடுக்கிறதுங்கிறத யோசிக்கலாம். நீ சொல்லறதுக்கு என்ன ப்ரசிசர்ன்னு கேட்போம்.”

“உங்களுக்கு உங்க பிரச்சினைப்பா.”

ஹாலில் இருந்த வாஸ்பேஷனில் முகத்தைக் கழுவிவிட்டு மதியரசி தெளிவாக பேசினாள்.

“உங்கள் ஒட்டு மொத்த கனவும் நான் தான் நிறைவேத்தனும்ன்னு எனக்கு நல்லாத் தெரியுது. அது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு முதல்ல டாக்டர் ஃபீல்ட் பிடிக்காது. அந்த இரத்தம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.”

“அதெல்லாம் பழகினா சரியாகும்மா.”

“கொஞ்சம் நேரம் நான் பேசும் போது இடையில் எதுவும் பேசாதீங்கப்பா. போனை இரண்டு பேரும் சைலண்ட்ல போடுங்கள்.”

அப்பாவின் அதே குணம்.அதே வார்த்தைகள். அதே ஸ்டைல்.

“டாக்டரைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்குப்பா. ஒருத்தர் லேசா நேவு கொண்டாலே கலங்குற ஆள் நான். என்னால அதில் உட்கார்ந்துக்கிட்டு பண அறுவடை பண்ண முடியாது. அதுக்காக வயதைத் தொலைஞ்சுப் படிச்சுட்டு சர்வீஸ் பண்ணிக்கிட்டும் என்னால உட்கார்ந்திருக்க முடியாது. அதைவிட சிறப்பான அதைவிட பல மடங்கு பணம் சம்பாதிக்கிற பல துறைகள் இருக்கு.”

‘இன்ஜினியருக்காவது படிக்கலாமே’ என்று நினைத்த மல்லிகா வெறுப்பாக அது என்ன என்றுக் கேட்டார்.

“நெறைய இருக்கு. நான் எடுக்கப்போறது காமர்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ். பிளஸ் டூ முடிச்சிட்டு சென்னையில் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கில் இருக்கிற சிஏ கோட்சிங் சென்டர்ல சேரலாம்ன்னு இருக்கேம்பா. ஒரே அட்டம்ட்ல எப்படி பாஸ் பண்ணலாம்ன்னு நான் ஒரு பிளான்  வச்சிருக்கேன்ம்ப்பா.”

“எல்லா கழுசடையும் இருக்கிற குரூப்புல்ல அது.”

“ஆமாப்பா. எல்லா ஸ்கூல்லையும். அரசு பள்ளிகளிலும் சரி தனியார் பள்ளிகளிலும் சரி. முதல் இரண்டு குரூப்பைத்தான் கவனிப்பாங்க. ஏன் அந்த டிபார்ட்மெண்ட் ஆசிரியரைக்கூட யாரும் மதிக்கமாட்டாங்க. அது எனக்குத்தெரியும். அந்த வகுப்புல ஆடிட்டர் ஆகனும்ன்னு ஒரு ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ அய்யர் வீட்டு பசங்க. அதே மாதிரி அய்யர் வீட்டு  பசங்க மாதிரி சில பேரும் இருப்பாங்க அவுங்க கூட நான் இருந்து படிச்சுக்கிறேன்ம்ப்பா. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கேன்.”

இவ்வளவு தெளிவாக பேசும் பிள்ளையிடம்  அவருக்கு பேசுவது கொஞ்சம் அசௌகரியாக இருந்தது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்களோ என்ற பயம் மல்லிகாவுக்கு இருந்தது.

“டாக்டர் துறை நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லைப்பா. ஒரு விசயத்தை சொல்லவா. என்னைக்கு உலகின் பெரு முதலாளிகள் மருத்துவத்தை விட வேறு துறையில் சிறப்பான வருமானம் இருக்கிறதென்று நினைக்கிறார்களோ அப்போதுதான் இந்த மனித வியாபாரம் ஒழியும். நீங்கள் கவனித்தீர்களா என்னன்னு எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை பெருகிக்கிட்டே இருக்கு. இப்போது உடல் உழைப்பாளிகளை அதிகமாக காண முடியுது. அதற்கு காரணம் காப்பீட்டு திட்டங்கள். இந்த ஸ்கேம். நமக்கு சரிவராதுப்பா.நம்ம குடும்பத்துக்கும் சரி வராதுப்பா. தாத்தாவைப் பார்த்தீங்களா. செம ஜாலியாக வாழ்றாருப்பா. குடும்பம்,பேரன்,பேத்தி ஞானம் . நான் வாழனும்ப்பா.”

மகளை நெஞ்சில் அணைத்து தலையை தடவினார் மல்லிகா. பெருமாள் வாத்தியார் அறைக்குள் சென்றார். முகம், கை,கால்களைக் கழுவி கண்களை மூடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். அவரின் அப்பா அவருக்கு சொல்லிக் கொடுத்தது. பல முறை அவருக்கு இது பேருதவியாக இருந்திருக்கிறது. பிறகு அவர் அறையை விட்டு வெளியே போனுடன் வந்தார்.

“தின்னிக் கோழி. உனக்கு சிக்ஸ்டி ஃபைவ் பிரியாணி அதோட சிக்கன் லாலி பாப். அண்ணன் ஒரு அய்ட்டம் முன்னாடி வாங்கிட்டு வந்தான். அது ரொம்ப நல்லா இருந்தது. மதுரை மல்லி மட்டன். மூனு பேருக்கும் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவும் செஞ்சிருக்கேன். நாம் சாப்பிடும் போது யாராவது வந்தால் கொடுக்கனும் இல்லையா.”

மூவரும் சந்தோஷத்திற்கு வெகு இயல்பாக மாறிவிட்டார்கள். 

‘மாநிலத்தின் டாப்பர்களில் ஒருத்தர் காமர்ஸ் குரூப் எடுக்கனுமா.’ 

‘அதுக்குப் பேசாம ஜஸ்ட் பாஸ் பண்ணி இருக்கலாமே.’ ‘உங்கள் அப்பா உங்க மகளை கெடுத்து வச்சிருக்கார்.’ போன்ற கேள்விகளுக்கு அவரிடம் சிறப்பான பதில் தயாராகவே இருந்தது.

மகளின் மார்க் மறுபரிசீலனை தான் அவரின் மண்டையைக் குடைந்தது. அதுபற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாமென அவர் இப்போது ப்ரியாகிவிட்டார். 

எந்த செய்திகளிலும் மதியரசியின் மதிப்பெண்கள் பற்றிய செய்திகள் வரவில்லை. ஒரு வேளை இனி வரலாம். வரவில்லை என்றால் அதற்கும் மதியரசியிடம் ஏதாவது சிறப்பானக் காரணம் இருக்கலாம்.

****

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com 

***

Series Navigationகவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவைமுயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *