புரிபடாதவைகள் ஆயிரம்
புரிந்தவைகள் சொற்பம்
புரிந்தும் புரியாமலும் கடந்து கொண்டிருக்கிறோம்
காதல் கொண்ட இரு உடல் எந்திரங்கள்
விடுதலைக்கான யுத்தகளத்தில் நிற்கின்றன
ஆழ்ந்த மானுடப் புரிதலை ஆயுதங்களாய் ஏந்தியிருக்கின்றன
கனவு காண்பது மனசுக்கு நிம்மதி
கவிதையில் கரைவது உயிருக்கு சந்தோஷம்
கடும் வெயிலில் காலத்தைக் கடந்தாகணும்
பறவை மனசுள்
மாயக் கூண்டுகள்
நிழலுள் தயங்கித் தயங்கி
நுழைய
எத்தனிக்கும் வெயில்
பூவே இதயம்
காலியாய் இருக்கிறது
காதலாய் கசிந்துருகும் கனவாய் வாழ்வு
நினைவுகள் சிறகடிக்கின்றன
அம்புகளாய் துயரங்கள் தைத்தன
வீழ்ந்து மடிந்தது இதயம்.
மிரட்டினார்கள் பணியவில்லை
கெஞ்சினார்கள் அசையவில்லை
மலையாய் நின்றது காதல்
உதைத்தவர்கள்
ஓரங்கட்டியவர்கள்
கரங் குவிக்க சூரியனாய் எழுகிறது
யோசித்தேன்
தூக்கம் வரவில்லை
நிணம் புசிக்குது மிருகம்
நீதியற்ற மதம்
நாதியற்ற ஜனம்
படுகொலைகள் தொடருகிறது தினம்
இரவில் பிசாசாய் விழித்து இருக்கிறேன்
இதயமும் மூளையும் கனலை கனியவைக்கின்றன
இரு விழிகள் சிவந்து ஒளிர்கின்றன
உள்ளம் பசித்திருக்கணும்
உடல் புசித்திருக்கணும்
எல்லாம் இன்ப மயம்.

வசந்ததீபன்