Posted in

பிறந்த மண்ணில் 

This entry is part 1 of 5 in the series 16 நவம்பர் 2025

அன்று

பிஞ்சு என்னைக்

கொஞ்சிய தஞ்சை மண்

இன்று என முதுமையை

கொஞ்சுகிறது

70 ஆண்டுகள் 

 ஊர் ஊராய்ச் சுற்றியபின் 

சொந்த மண்ணில் சங்கம்ம்

சோழனின் நாணயம் நான் 

எனக்கு மரணமில்லை

நான் வாழ்ந்த கதை 

வரலாறாகலாம்

வீட்டுக் கொல்லையில்

பன்னீரப்  பூமழை

அள்ளிக் குவித்து 

முத்தமிட்டேன்

மேகம் காகம் பார்க்க

குளிக்கிறேன்

பள்ளித்தோழனோடு

பதநீர் நுங்கு சுவைக்கிறேன்

ஆப்பக்கடை அம்மு பேரனுக்கு 

ஆயிரம் தந்தேன் 

அன்றைய காலணா கடனை 

இந்த ஆயிரம் அடைக்குமா?

சட்டை துவைத்த

பலகைக் கல்லை

கழுவி முத்தமிட்டேன் 

பால்க்கார கோனார் பேரன் 

ஆவின் பால் விற்கிறான் 

கோனாரின் மாடுகள்

எவனெவன் தப்புக்கு 

தோல்களானதோ?

வீட்டுப்பல்லி என்னை 

அந்நியனாய்ப் பார்க்கிறது

பெட்டிக்கடை குட்டையன் பேரன்

‘பிரிண்டிங்’ செய்கிறான் 

சில கவிநைகளை 

நகலெடுத்தேன் 

கொல்லுப்பட்டரை ரங்கன்வீடு 

இப்போது படக்கொட்டகை

‘தக்லைஃப்’ பார்த்தேன்

எருக்கு மொட்டு உடைத்தேன் 

சிந்துபாத்தின்  பயணம்

தினத்தந்தியில் 23737ஆம் நாள்

தலைக்குமேல் முழு நிலா

முழு வானும் என் வசம்

சைக்கிள்கடை

மாட்டுவண்டி

விறகுவண்டி

புல்லுக்கட்டு

வண்ணான்

குளம் கிணறு 

கோலி பம்பரம்

கிட்டிப்புல்லு

அம்மி ஆட்டுக்கல்

அனைத்துக்கும் என்றோ

கண்ணீர்அ்ஞ்சலி 

வாசல் கோலம் 

விடியல்  சேவல்

இன்றும் அப்படியே

வாழ்ந்தது கிடைக்காது

வாழ்ந்த நினைவுகள் வாழும்

என் கதைகளில் கவிதைகளில்

அது போதும்

அமீதாம்மாள்

Series Navigationவலைக்காட்சியில் தொலைந்த தலைமுறை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *