ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு

This entry is part 1 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

என்.செல்வராஜா
(நூலகவியலாளர், லண்டன்)

கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது.

ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஈழநாடு தன் இயக்கத்தைத் தாயக மண்ணில் நிறுத்திக் கொண்டாலும் அதன் பெயர் இன்றும் தாயகத்திலும், புலத்திலும் பத்திரிகைகளாக நின்று நிலைத்தவண்ணமே இருக்கின்றது. ஈழநாடு வளர்த்து விட்ட பத்திரிகையாளர்கள் காலத்துக்குக்காலம் தமது மலரும் நினைவுகளில் தாம் வாழ்ந்து ஊடகப் பங்களித்த ஈழநாடு காலத்தை நினைவுகூர்ந்தவண்ணமே இருக்கின்றார்கள்.

அவ்வகையில் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தற்போது தமிழகத்தில் வாழும் ஈழத்துப் பத்திரிகையாளர் திரு. கே.ஜி. மகாதேவா அவர்கள் எழுதிய “நினைவலைகள்” என்ற நூல் அண்மையில் என்னை வந்தடைந்தது.  பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா அவர்கள், தனது 30 ஆண்டுக் காலப் பத்திரிகைத் துறை அனுபவங்களை தமிழகத்திலிருந்து புத்தக உருவில் அண்மையில் கொண்டுவந்திருக்கின்றார்.  ஈழநாட்டு அனுபவங்களையும், சிறிது காலம் அதைப் பிரிந்திருந்த வேளையில் மலையகத்தில் நடத்திய “செய்தி” பத்திரிகை அனுபவங்களையும், பத்திரிகையாளராகத் தான் பெற்ற அனுபவங்களையும் இந்நூலில் விரிவாகத் தொகுத்தளித்திருக்கின்றார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மனதை விட்டகலாத சம்பவங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்கள் என்று இவர் தனது மலரும் நினைவுகளை “நினைவலைகள்” என்ற இந்நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.

இன்று தாயகத்திலும், புகலிடத்திலும் நிலைகொண்டு வெற்றிகரமாக இயங்கிவரும் பல ஈழத்துப் பத்திரிகையாளர்களை உருவாக்கிவிட்ட பெருமையைத் தன்னகத்தே கொண்ட ஈழநாடு பத்திரிகையின் வளர்ச்சி, அதன் எரியூட்டல் காலம், மீளத் தழைக்க எடுத்த முயற்சிகள், பத்திரிகைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் பணியில் அந்தப் பத்திரிகைக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள், துன்பகரமான இறுதிக்காலம் என்று ஒரு பத்திரிகையின் சிக்கல் மிக்க பூரணமான வாழ்க்கையையும் இந்த “நினைவலைகள்” நூலின் வாயிலாக ஆங்காங்கே வாசகர்கள் ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.

ஈழநாடு பத்திரிகை தமிழர் தாயகத்தில் செழிப்புற இயங்கிவந்த வேளையில், அதனை வளர்த்தெடுத்ததுடன், அதனூடாகத் தாமும் வளர்ந்த பத்திரிகையாளர்கள் பலர். இவர்கள் அனைவரும் இன்று திக்கெட்டும் பரந்து சிறப்பாக வாழ்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் பத்திரிகையாளர்களாகவே வாழ்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம். அனைவரும் தமது ஈழநாட்டு நினைவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணமே நிச்சயம் இயங்குகிறார்கள்- வாழ்கிறார்கள். இவர்களில் சிலர் திரு மகாதேவா போன்று தமது ஈழநாட்டு நினைவுகளை நூலுருவிலோ கட்டுரைத் தொடரிலோ பதிவுசெய்த வண்ணமே இன்றும் ஊடகத்துறையில் வலம்வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றினை ஆங்காங்கே பதிவுசெய்து வைத்திருக்கும் சில வெளியீடுகளை நாம் இவ்வேளையில் சற்று ஆராய்வோம்.

“ஈழநாடு 25வது ஆண்டு நிறைவுமலர்” 1984ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டதொரு ஆவணமாகும். 56 பக்கம் கொண்ட இப்பிரசுரம், ஈழநாடு பத்திரிகையின் அளவில், அதிகமான பக்கங்களுடன் தனியாகப் பிரசுரிக்கப்பட்டது. 11.2.1984 இல் யாழ்ப்பாணத்து ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப் பிரசுரம், ஈழநாடு பத்திரிகையின் சுருக்க வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், சமய, கலை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்திருந்தது. இன்றைய தினம் வரையில் ஈழநாடு பற்றிய விரிவான வரலாற்றுத் தகவல்களைத் தாங்கியதாக வேறெந்தப் பிரசுரத்தொகுப்பும் வெளிவரவில்லை என்று நம்புகின்றேன்.

இந்த மலரில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் “ஈழநாடும் அதன் தொடர்பு நிலை வலுவும்: விரிவான ஒரு ஆய்வுக்கு ஆதாரமான சில குறிப்புகள்” என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றை எழுதமுனைபவர்களுக்கு இந்தக் கட்டுரை அத்திவாரமாக அமையலாம். சி.இரத்தினசபாபதி, சி.கணபதிப்பிள்ளை, சு.சபாரத்தினம், கே.சி.தங்கராஜா, புலவர்  பார்வதிநாதசிவம், பி.எஸ்.பெருமாள், கே.ஜி.மகாதேவா, சு.வித்தியானந்தன், ஈ.கே.ராஜகோபால், எஸ்.ஆர்.ஞானசுந்தரம் போன்ற பலர் இதில் தத்தமது கட்டுரைகளை வழங்கியிருந்தார்கள்.

அடுத்ததாக நாம் அறியவருவது, “அமரதீபம்” என்ற தலைப்பில் செட்டியார் அச்சகத்தின் வாயிலாக அச்சிடப்பட்ட  மற்றொரு நூலாகும். 76 பக்கம் கொண்ட இந்நூலில், புகைப்படங்களின் துணையுடன் ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் முதலாவது தமிழ்த் தினசரியான ஈழநாடு பத்திரிகையை ஆரம்பித்துத் தமிழ் வளர்த்த பெரியார் அமரர் கே.சி.தங்கராஜா (20.6.1907- 20.7.1987) அவர்களின் வாழ்வும் பணியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பல்வேறு சமூகப் பிரமுகர்களின் இரங்கலுரைகள், நினைவஞ்சலிக் கட்டுரைகள் என்பவற்றைக் கொண்டதாக ஈழநாடு ஊழியர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த மலர், 19.08.1987 அன்று இடம்பெற்ற அமரர் கே.சி.தங்கராஜா அவர்களின் சிரார்த்த தினத்தினையொட்டி வெளியிடப்பட்டது.

“என்;னுள் என்னோடு” என்ற நூல் எஸ்.கே.காசிலிங்கம் அவர்களால் பிரான்ஸ்: முகுந்தன் வெளியீட்டகத்தின் வாயிலாக (45 யுடடநந னுர ஆழரடin டீழளைஇ 95470இ ஏநஅயசளஇ குசயnஉந) மார்ச் 2002 இல் வெளியாகியிருந்தது. 256 பக்கங்களுடனும் அரிய பல புகைப்படங்களுடனும் இந்நூல் வெளிவந்திருந்தது, பத்திரிகையாளர் திரு காசிலிங்கம் தன் அனுபவங்களை பத்திரிகை அனுபவங்கள், அரசியல், புலம்பெயர் வாழ்வியல் என்ற மூன்று பிரிவுகளில்; வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார். தனது “ஈழநாடு” பத்திரிகை அனுபவங்களை முதற்பாகத்திலும், இலங்கையில் 1948ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளின் ஆய்வை இரண்டாவது பாகத்திலும், ஐரோப்பிய நாடுகளில்; ஈழத்தமிழர் வாழ்வியல் முறைமைகளையும் வளர்ந்துவரும் தமிழெழுச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த கட்டுரைகளை மூன்றாவது பாகத்;திலும் தான்; கண்டு கேட்ட விடயங்களையும் பத்திரிகையாளரின் அனுபவத்திற்கூடாகத் தொகுத்தளித்திருந்தார்.

“பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்ற தலைப்பில் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் எழுதிய மற்றொரு நூலும் சில காலத்திற்கு முன்னர் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகத்தின் வாயிலாக நவம்பர் 2003 இல் வெளிவந்த இந்த நூலிலும், ஈழத்தில் அனுபவம் மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்ற வகையில் தனது பத்திரிகைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஈழநாடு பத்திரிகை பற்றிய ஆக்கங்கள் வேறும் சில மலர்களில் வெளிவந்திருக்கின்றன. மௌனகுரு சித்திரலேகா எழுதிய “ஈழத்தில் பத்திரிகைத்துறையும் இலக்கிய வளர்ச்சியும்” என்ற கட்டுரை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம், வைரவிழா மலரில் (1975: 2ப.) காணப்படுகின்றது. இக்கட்டுரையில் ஈழநாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உதவி நூலகராகவும் இருந்த ஆ.சிவநேசச்செல்வன், “இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், சில குறிப்புகள்”, என்ற தலைப்பில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள், (1974: 345-354) மலரில் வரைந்த மற்றொரு கட்டுரையிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு பற்றிய பின்புலங்கள் காணப்படுகின்றன.

ஈழநாடு பத்திரிகையாளர் எஸ். பெருமாள், “ஈழநாடும் பண்டிதமணி ஐயா அவர்களும்”, என்ற கட்டுரையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் ஈழநாடு பத்திரிகைக்கும் இடையே உள்ள தொடர்பினை விபரித்திருக்கிறார். இது பண்டிதமணி நினைவு மலர், (1989: 195-196) என்ற மலரில் காணப்படுகின்றது.

ஈழநாடு பத்திரிகையால் வளர்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர் தத்தம் பாணியில் தத்தமது பார்வைக் கோணத்தில், தமது வாழ்வனுபவங்களினூடாக அதை எழுதி வந்திருக்கிறார்கள், இனியும் எழுதுவார்கள். இது அவரவர் பார்வையில் எழுதப்பட்டதால் அனுபவங்கள் தாம் சார்ந்த கொள்கைகளுக்கும், அணிகளுக்கும் ஏற்ப சுயதணிக்கை செய்யப்பட்டவையாகவே காணப்படுகின்றன. புலம்பெயர்ந்து வந்து விட்ட இவர்களால் இந்த ஆலமரத்தின் இறுதிக்காலத்தை சரிவரப் பதிவாக்க இயலாமல் போயுள்ளது. மேற்கூறிய நூல்கள் ஒவ்வொன்றும் ஈழநாடு என்ற ஒரு பெருவிருட்சத்தின் ஒவ்வொரு கிளைகளின் கதைகளாகவே அமைகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேரும்போது ஒரு வேளை அந்த ஆலமரத்தின் கதை பூரணமாக வெளிவரலாம்.

இன்றைய நிலையில் ஈழநாடு பத்திரிகையின் முழுமையான கதை, அதன் பிறப்பு, எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி என்பன இன்று வரை முறையாகவும் முழுமையாகவும் தொகுக்கப்படாதது ஒரு பெரிய குறையாகும் என்று கருதுகின்றேன். தாயகத்தின் முன்னோடிப் பத்திரிகையொன்றின் தனித்துவமான வரலாறு ஆவணமாக்கப்படல் வேண்டும் என்ற சமூக அக்கறையை முன்வைத்து, ஈழநாடு வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களை முடிந்தவரை திரட்டி, அவர்களது பார்வையில் இம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று கருதினேன். தம்மை வளர்த்துவிட்டு இன்று வரலாறாகிப் போய்விட்ட நமது மண்ணின் நாழிதழுக்குச் செய்யக்கூடிய கடமை இதுவாகும் என்பதை உணரும் ஈழநாட்டுடன் தொடர்பான அனைத்து பத்திரிகையாளர்களிடமும்  இக்கட்டுரையின் வாயிலாக ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றேன்.

ஈழத் தமிழர்களுக்கென்றொரு பிராந்தியப் பத்திரிகையாக தாயகத்தில் வேரோடி விழுதெறிந்து வாழ்ந்து வரலாறு சமைத்த ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றினை பதிவுசெய்யும் வகையில் ஒரு பெருந்தொகுப்பொன்றினை  ஈழநாடு என்றொரு ஆலமரம் : ஈழநாடு பத்திரிகை -ஒரு வரலாற்றுத் தொகுப்பு
என்ற தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

இத்தொகுப்பினை எதிர்வரும் 2014 பெப்ரவரி மாதத்தில் வெளியீடுசெய்யும் வகையில் திட்டமிட்டுச் செயற்படுகின்றேன். ஈழநாடு பத்திரிகையின் இயக்கத்தில்  உங்களது பங்களிப்பும் பதிவுசெய்யப்படவேண்டியதென்றாகும்.

உங்கள் மனதில் பதிந்த ஈழநாடு பத்திரிகைப் பணிக் காலத்தில் உங்கள் அனுபவத்தை  உங்கள் நினைவுத்திரையில் மீட்டெடுத்து அதனை மூன்று பக்கங்களில் எழுதி எனக்கு அனுப்பிவைப்பீர்களாயின் அதனை இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். முடிந்தவரை இத்தகவலை எனது சார்பில் ஈழநாடு பத்திரிகைத்துறையுடன் தொடர்புள்ள அனைவரிடமும்  தெரிவித்து எனது தொகுப்பு முயற்சியை முடிந்தவரை பூரணத்துவத்தை நாடியதாக ஆக்க உங்கள் உதவியையும் நாடுகின்றேன்.

தயவுசெய்து எதிர்வரும் 28.9.2013க்கு முன்னதாக (இம்மாத இறுதிக்குள்) எனக்குக் கிடைக்கத்தக்கதாக உங்கள் ஆக்கத்தை அனுப்பிவைக்கவும்.
தொடர்பு முகவரி:

……………………………………..
N. Selvarajah
Bibliographer
Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
0044-7817402704
noolthettam.ns@gmail.com
www.Noolthettam.com

Series Navigationஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *