உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்

This entry is part 11 of 42 in the series 22 மே 2011

இறுதி யுத்தத்தின்

இறுதி போராளியை

விழுங்கிய வாளில்

இன்னமும் ரத்தக் கறை

காய்ந்திருக்கவில்லை.

 

வெந்தழல் மேகங்களில்

நீதித்தேவதைகளைக் கண்டதாக

வாக்குமூலம் அளித்தவர்கள்

கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.

 

பிசாசெழுதும் வரலாற்றினில்

நம்பிக்கையின் பெயரால்

சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு

கோமாளிகளின் முகமூடி

அணிவிக்கப் படுகிறது.

 

ஓராயிரம் நூற்றாண்டுகளாக

மண்ணுக்கடியில்

புதையுண்டிருந்த புரட்சியின்

சொல்லை விடுவித்த

கவிஞன், தானெழுதிய

கவிதைகளை கிழித்தெறிகிறான்.

 

கோப்பைகளில் நிரம்பிய

அழுகுரல்களை பருகும்

அரக்கனுக்கு தெரியவேயில்லை

தான் சுவைப்பது

தீரா மௌனத்தினையே என்பது.

 

இங்கே,

இனியொரு போதும்

புழுக்கள் ஊர்ந்து செல்ல போவதில்லை

விதைகள் துளிர்விட போவதில்லை

துப்பாக்கிகள் இயங்க போவதில்லை.

அன்பின் சாட்சியாக

நல்லுறவின் சாட்சியாக

இறையாண்மையின் சாட்சியாக

இங்கே,அமைதி நிலைநாட்டப் பட்டுவிட்டது.

 

இவ்வுலகின் கடைசி தினத்தில்,

சிதைந்தவர்களின் உதிரமெழுதும்

தீர்ப்பின் பிரதிகள்

வாசிக்கப்படும் போது

கருணையின் தெய்வங்கள்

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளக் கூடும்.

 

–                                   துரோணா

*************

 

Series Navigationதிரிநது போன தருணங்கள்சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *